Saturday, April 30, 2005

மாமனிதன் சிவராம்

வணக்கம்!

இன்று அனைத்துலகத் தொழிலாளர் நாள். இந்நாளில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுடன் நானும் இத்தினத்திற் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பத்திரிகையாளன் சிவராமுக்கு என் கண்ணீர் அஞ்சலி. உலகறியப்பட்ட ஒரு தமிழ்ப்பத்திரிகையாளன். தனக்கு ஆபத்துள்ளது என்று பல்வேறு சந்தர்ப்பங்களிற் சொல்லியிருந்தும் ஒழிந்து திரியாமல் பங்காற்றிய பத்திரிகையாளன். துணிவாகப் பல விடயங்களைக் கூறுவதுடன் ஆழமான புலமையும் கொண்ட ஆய்வாளன். முன்னாள் போராளி என்பதும் அவருக்குக் கூடுதற் பலமாயிருந்திருக்கும்.

இவரது கொலை சம்பந்தமாக தமிழகப் பத்திரிகைகள் கருத்துக் கூறிவில்லையென்ற வாதம் வந்துள்ளது. இந்துப் பத்திரிகையின் வேடம் பற்றியும் ராம் வாட்ச்சில் பேசப்பட்டுள்ளது. சிவராமின் கொலைபற்றிக் கருத்துக்கூறாதவர்களைச் சாடியும் கருத்துக்கள் வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை கருத்துக் கூறாதவர்கள் கவலையற்றவர்களென்றோ எதிரானவர்களென்றோ கருத முடியாது. இதற்குக் கவலை கொள்ளும்படி யாரையும் கெஞ்சவும் முடியாது. அவர்களுக்குச் சிவராமைப் பற்றித் தெரிந்திருக்கவும் நியாயமில்லை, எமக்குக் கீழ் வெண்மணி, திண்ணியம் இன்னும் இன்றும் நடந்துகொண்டிருக்கும் பல பிரச்சினைகள் தெரியாதது போலவே.

ஈழத்தமிழ் ஊடகங்களிற்கூட அவரின் கொலை பற்றிப் பல்வேறான கருத்துக்கள். பெரும்பாலானவை ஈடு செய்ய முடியாத இழப்பு என எழுத இந்தக் கொலையில் மகிழ்ச்சி தெரிவித்துக்கூட இணையத்திற் கட்டுரை வந்துள்ளது. அது அவர்களுக்கு மகிழ்ச்சி. பல கொலைகளுக்காக மகிழ்ந்தவன் என்ற வகையில் இவர்களின் இந்த மகிழ்ச்சியை என்னாற் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தின்போது மகிழ்ச்சியடைந்தவன் என்ற வகையில் என் துக்கத்தின்போது அவர்கள் பங்கேற்கவேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது. கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து புலிகள் தான் இவரைக் கொன்றார்கள் என்று ஆலாபனையும் தொடங்கிவிட்டது.

நிற்க, சிவராமின் பழைய சிலவற்றைத் தூக்கிப்பிடித்து அவரைப்புலிகளுக்கு எதிரானவராகவோ இரட்டை நிலைப்பாடு கொண்டவராகவோ சிலர் சித்தரிக்கிறார்கள். நிலைப்பாடு என்பது பல்வேறு காரணங்களால் மாறுபடுவது. அது புலிகளுக்கும் தெரிந்துதான் உள்ளது. இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. குமார் பொன்னம்பலம் உட்பட நிறையப்பேரின் மாற்றம் கவனிக்கத்தக்கது. அதுபோல்தான் தராகி எனும் சிவராமினதும். இப்போது அவருக்குத் தமிழீழத் தேசியத்தலைவரால் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை சிவராமின் இழப்புப் பாரியது. மொழியாளுமை மிக்க இராணுவ, அரசியல் ஆய்வாளனின் இழப்பு மிகப்பெரியதுதான். குமார் பொன்னம்பலத்தைப் போலவே முடிவு தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே கர்ஜித்தவர் சிவராம். அன்னாரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாராவது சிவராமைப் பற்றிச் ‘சலனப்படம்’ எடுங்களேன். ‘ஈழப்பிரச்சினையை ஒட்டுமொத்தமாய்’ ஒரு சலனத்துள் அடக்கிவிடுவோம்.

Labels: , , ,


Saturday, April 23, 2005

தீச்சுவாலை முறியடிப்புச் சமர்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப் படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓரு இராணுவ நகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில் ஆனையிறவு நோக்கி பயங்கர ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்த நிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி "அக்கினி கீல" அதாவது 'தீச்சுவாலை' என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. பல இராணுவ வல்லுநர்கள் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாள இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவு என்பது தான் அந்த திட்டம். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர் கொண்ட அந்த சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் முழுமையாக அவர்களின் முழுக்காவலரணையும் அவர்களால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச் சூட்டு வலிமை அரச படைக்கும் வெளியுலகுக்கும் ஏன் தமிழ் மக்களுக்கும் கூட தெரிந்தது அந்தச் சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில் எந்த நேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்ட படி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளை விட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடு கொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டு போட்டு தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப் பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு தமது இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்து விட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரனும் அதனைச் சூழ கிடந்த ஏறத்தாள இருபது இராணுவ உடல்களும். தாம் முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அந்த பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. (இதுகளைப் பற்றி எழுத வெளிக்கிட்டா எக்கச் சக்கமா எழுதலாம்.) பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போ களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது.

அந்தச் சண்டை தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. இன்றைய புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். நாளை தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் நான்காம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.

Labels: , , ,


Monday, April 18, 2005

அன்னை பூபதி

இன்று அன்னை பூபதியின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள். யார் அந்த அன்னை பூபதியென்று பலருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெளிவிக்கும் நோக்கமும் எனக்கில்லை. அவரின் தியாகம் பற்றின மிக மேலோட்டமான பதிவே இது.

இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் குடிகொண்டிருந்த நேரம். விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நேரத்தில் அன்னையர் முன்னணி எனும் அமைப்பு இந்திய இராணுவத்துக்கு எதிரான தமது சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் உச்ச வடிவமாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடங்கினர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அந்தப்போராட்டம் ஆரம்பித்தது. உண்ணாவிரதம் இருந்தவர் அன்னை பூபதி எனப்படும் பூபதி கணபதிப்பிள்ளை.

அவர் வைத்த கோரிக்கைகள் இரண்டு.
1. இந்திய இராணுவம் உடனடியாய் யுத்தத்தை நிறுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து அவர் தனது உண்ணா நோன்பை 19.03.1988 அன்று ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக வேறும் சிலர் அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இடையில் அவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டார். பூபதியம்மாவுக்கும் மிரட்டல்களும் ஆசைகாட்டல்களும் வந்தன. எனினும் மனந்தளராது அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டம் நடத்தினார் அன்னை. உணவெதுவும் உட்கொள்ளாது தண்ணீர் மட்டுமே அருந்தி 31 நாட்களின் பின் 19.04.88 அன்று உயிர் நீத்தார் அன்னை. இந்திய அரசுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து இழக்கப்பட்ட இரண்டாவது உயிர் அது. ஏற்கெனவே திலீபன் பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாது இருந்து உயிர்நீத்திருந்தான்.

இப்போராட்டம் இந்திய அரசால் செவிமடுக்கப்படும் எனும் நம்பிக்கை இல்லாதிருந்தும்கூட (ஏற்கெனவே திலீபன் விசயத்தில் நடந்தது) போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆயுதரீதியில் மட்டுமன்று, அகிம்சையிலும் பெண்களின் சம பங்களிப்பு இதன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. பொதுசனமாயிருந்து அன்னை செய்த போராட்டம் மிக முக்கியமானது; பெறுமதியானது. இந்நாளில் அத்தாயை நினைவு கூர்கிறோம்.

இந்த நாளையே தேசவிடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த நாட்டுப் பற்றாளர்களை நினைவுகூரும் நாளாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாகிய இன்று அவர்களையும் நினைவுகூர்கிறோம்.

நாட்டுப்பற்றாளரின் சேவைகள் அளவிட முடியாதவை. பல சந்தர்ப்பங்களில் போராளிகளைவிடவும் சிக்கலானதும் ஆபத்தானதும் துயரமானதுமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். நிம்மதியற்ற எத்தனையோ இரவுகளைக் கழித்தவர்கள். உணவுகளற்ற பொழுதுகளைக் கடந்தவர்கள். எனினும் ஓயாது உழைத்தவர்கள். தான் மட்டுமன்றி தமது குடும்பத்தையும் துன்பத்தை எதிர்கொள்ள வைத்தவர்கள். சித்திரவதைகளை அனுபவித்தவர்கள். வெளிச்சொல்ல முடியாத பல தியாகங்களைப் புரிந்தவர்கள்.

ஒரு போராளி தன்னிடமிருக்கும் ஆயுதத்தை நம்பியிருப்பான். பிடிபடும்போது தற்கொலை செய்ய சயனைட்டை நம்பியிருப்பான். இறந்தாலும் அது அவனோடே போய்விடும். ஆனால் பொதுமகனாயிருக்கும் ஒருவனுக்கு இவையில்லை. மாறாக குடும்பம் இருந்தது. உழைக்க வேண்டியிருந்தது. இவற்றையும்தாண்டி போராட்டத்துக்குச் சேவை செய்தனர். போராளிகளுக்குப் பசியாற்றியவர்கள் இவர்கள். ஆயதங்கள் கொண்டுவந்து தந்தவர்கள் இவர்கள். காவலிருந்தவர்கள் இவர்கள். மருந்துகட்டியவர்கள் இவர்கள். கடல்கடந்து காயம் மாற்றியவர்கள் இவர்கள். தகவல்கள் தந்து களத்திலும் உதவியவர்கள் இவர்கள். ஆக அவர்களை மறக்க முடியாது.

ஆனால் இப்படியான நிறையப்பேரின் தகவல்கள் முழுவதுமாக இல்லாமலிருக்கும். ஆரம்ப கால நாட்டுப்பற்றாளர்களில் நிறையப் பேரின் விவரங்கள் தவற விடப்பட்டிருக்கும். பட்டியலிலில்லாத அந்தப் பற்றாளருக்கும் எமது வீரவணக்கம்.

Labels: , ,


Thursday, April 07, 2005

வெலிக்கடை முகட்டிலிருந்து (கவிதை)

வெலிக்கடை முகட்டிலிருந்து வெள்ளை உலகத்திற்கு

நாடித் துடிப்புக்களின் விகிதம்
நாளுக்கு நாள் குறைவுற்று
என்றோ ஒருநாள்
முற்றாய்
முடங்குவது உறுதி.


வலிகளினால் அலறியலறி
வாய் உமிழ் நீரற்று
கண்ணர்ப் பெருக்கோடி
அதுவும் வற்றும்.
எனினும்
முடியாதது வதைகள்.

வதைகள்-
நாளிகை,
நாட்களெனக் கடந்து
விடாப்பிடியாயும்,
மாறா வினாக்களோடும்,
விசித்திரமாகவும்,
வித்தியாசமாகவும் தொடரும்.

காரணமற்ற கைதுக்குப் பின்னரான
காலப் பதிவுகளில்…
கலைந்து போன என் கூடு
கருகிப்போன உறவுகள்
கல்லாகிப்போன மனது.
இது ஞாபகமற்ற வருடத்து
நான்காவது தவணை நாள்.

நம்பிக்கையற்று,
நான்கு நபர்களுடன் பிணைக்கப்பட்டு
நான் போகிறேன்.

வெளியிலே...
வெலிக்கடைக் கூரையேறிக்
குரல் கொடுக்கிறான் ஒருவன்.

வெள்ளை உலகமே…
வெந்து போன இந்த உள்ளத்தையும்
வெளிறிய உடலையும்
ஒரு தடவை பாருங்கள்.

நான் மதிக்கப்படவில்லை.
நான்கு சுவருக்குள் இன்றும்
மிதிக்கப்படுகிறேன்.
ஏனெனில்,
நான் ஒரு தமிழன்.
----------------------------------------------------------------

நண்பன் நா.கானகன் எழுதிய கவிதையொன்று வெள்ளிநாதத்தில் கண்டேன். நண்பனின் கவிதையை இங்கே தந்துள்ளேன்.
நன்றி வெள்ளி நாதம்.

Labels: ,


கலைஞன் ஒருவனின் இழப்பு.

விழிசிட்டி என அறியப்பட்ட க.சிவராசா எனும் கலைஞன் காலமாகிவிட்டார். இச்செய்தியை இன்று எனக்குக் கிடைத்த வெள்ளி நாதத்தில் கண்டேன். எனக்கு அவரை வானொலி நாடகத் தயாரிப்பாளராகவே அறிமுகம். புலிகளின் குரல் வானொலியில் நாடகத்தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் அவர் பணிபுரிந்த காலங்களில் அவர் குரலையும் நிகழ்ச்சிகளையும் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன். பின்னர் நேரே சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அவரோடு கதைத்துள்ளேன். மிகுந்த உற்சாகமான, மென்மையான மனிதர்.

வானொலி நாடகங்கள் தயாரிப்பதிலுள்ள சிக்கல்களையும் மற்றவற்றுக்கும் இவற்றுக்குமுள்ள வித்தியாசங்களையும் அழகாக விவரிப்பார். அவரும் யோகேந்திரநாதனும் சேர்ந்து செய்த தொடர் நாடகங்கள் இன்றும் மனத்தில் பசுமையாக இருக்கிறன. பின்னர் நிதர்சனத்திலும் இணைந்து பணியாற்றியவர். இவரது இழப்பு புலிகளின் குரலுக்கு நிச்சயம் பெரியதாய் இருக்கும்.பல சிறுகதைகள் வானொலி நாடகங்கள் என்று பல படைப்புக்களை உருவாக்கியிருந்தாலும் இவரது ஆக்கங்கள் எதுவும் இதுவரை நூலுருப்பெறவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. அவையும் விரைவில் நடைபெறும் என்று நம்புவோம்.அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Labels: , , ,


Sunday, April 03, 2005

பழைய, புதிய புரட்சி.

வணக்கம்!
விடுதலைப்புலிகள் ஏட்டில் பாலகுமாரனின் கட்டுரையொன்று வந்துள்ளது. ஜே.வி.பி. இன் பண்டைய புரட்சி பற்றியும் அவர்களின் தற்கால புரட்சி பற்றியும் எழுதிச்செல்லும் இத்தொடர் சுவாரசியமாக உள்ளது (எனக்குத்தான்). அதை இங்கே தருகிறேன். தமிழ்நாதத்துக்கு நன்றி.

தம்கருவிலே தம்மையே கருவறுக்க தாமே கருக்களைக் காவுவோர்
-க.வே.பாலகுமாரன்-


வரலாற்றில் சில அபூர்வமான தருணங்கள் வாய்ப்பதுண்டு. அத்தருணங்களில் வரலாற்றின் பாய்ச்சலைத் தடுக்கும் சக்திகளே அதனை தூண்டும் கருவிகளாக மாறிவிடும். ஒரு விடுதலை அமைப்பினை அழிப்பதாகக் கருதி எதிரியே அவ்வமைப்பு மீதமாக நிறைவேறப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்வதற்கு தகுந்த வாய்ப்பினை வழங்கிவிடக்கூடும். எனவே விடுதலைப்புலிகள் தமது இலக்கினை அடைய எடுக்கும் முயற்சிகளை தாமே தடுத்து நிறுத்தி வருகின்றோம் என மார்பு தட்டும் ஜே.வி.பியே விடுதலைக்கான மிகுதி நிகழ்ச்சி நிரலையும் பூரணப்படுத்த எமக்கு உதவக்கூடும். மார்ச் மாதம் இரண்டாம் திகதி கொழும்பு விகாரமா தேவி வெளியரங்கில் ஜே.வி.பியின் முன்னணி அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய அமைப் பால் (PNM-PATRIOTIC NATIONAL MOVEMENT) பெருமெடுப்பில் எதிர்ப்பியக்கமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2005: மீள் குடியேற்றவாத எதிர்ப்பியக்க ஆண்டு என்கிற இவ்வியக்கம் வெளிநாட்டவர் மீதான கடுமையும் காழ்ப்புணர்ச்சியும் மிக்க பரப்புரையை தீவிரமாக செய்யத்தொடங்கியுள்ளது.

போர்த்துக்கேயர் வருகையின் 500வது ஆண்டு நிறைவின் ஆண்டாக 2005ஐப் பிரகடனம் செய்தது. குடியேற்றவாதம், ஏகாதிபத்தியம் என்பவற்றிற்கெதிரான எதிர்ப்பினைத் தேசியவாதமும் முற்போக்கும் கலந்த கலவையாக்கி அதனடிப்படையில் தமிழர் மீதான காழ்ப்பை, வெறுப்பினை விதைக்கும் நிகழ்ச்சியை மறைத்து ஜே.வி.பியினர் போடும் ஆட்டம் எல்லா எல்லைகளையும் தாண்டி விட்டது. இது கண்டு அம்மையாரே அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகின்றது. இன்று சிறிலங்காவிலே ஜக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எல்லா ஆயுதங்களையும் ஜே.வி.பியிடம் பறிகொடுத்து அம்மணமாக நிற்கின்றன. தொடக்கத்தில் வி.ஜே.பி இந்தியாவில் வெறித்தனமாக செயற்பட்டது போல, தலிபான்களின் அடிப்படை வாதப்போக்கின் நிழல்போல ஜே.வி.பி செயற்படுவது இப்போது பலராலும் மிகக்கவலையோடு அவதானிக்கப்பட்டு வரப்படுகின்றது. எனவே கடந்த இரண்டாம் திகதியன்று இந்நிகழ்ச்சியில் விமல் வீரவன்ச உதிர்த்த வரலாற்று வாசகங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

"1505 ஆம் ஆண்டு கடற்கொந்தழிப்புக் காரணமாக போர்த்துக்கேயரான லொறன்சோத அல்மேய்தா இலங்கை வந்தடைந்தார். இன்று கடல்கோள் காரணமாக உதவி வழங்கும் போர்வையில் எம் நாட்டினை அடிமைப்படுத்த பலர் வந்துள்ளனர்." 'இன்று சூல்கெய்ம் கண்டி சென்று மகாநாயக்கர்களை வணங்குகின்றார். சிங்களப் பிரதேசங்களுக்கு வருகை தருகின்றார். இவை யாவும் அன்பின் விளைவல்ல. இவையாவும் நஞ்சு. இதுபோலத்தான் அன்று யோன் டொய்லி என்கிற ஆங்கிலேயர் கண்டி சென்று மகாநாயக்கர்களைச் சந்தித்தார்... சிறி விக்கிரமராயசிங்கனோடு பழகி அவனை மதுவருந்தப் பழக்கினார், பின் கழுத்தறுத்தார். கண்டியை அன்று காட்டிக்கொடுத்த டொய்லியின் வேலையைத்தான் இன்று அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்து வருகின்றன." 'பௌத்த இராச்சியத்தை அழித்துவிட்டு தமிழ்க் கிறிஸ்தவ தமிழீழத்தை உருவாக்கவே சர்வதேசமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அதற்கான நிகழ்ச்சி நிரலை இங்கு செயற்படுத்தி வருகின்றன."

விமல் கூறிய இன்னொரு விடயத்தினை கவனத்தில் நாம் கொள்ளவேண்டும். 'விரைவில் மீட்கப்படாத பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும். சுனாமியின் பின் 5,6 நாட்கள் புலிகள் காணாமல் போயிருந்தார்கள். இந்த அரசாங்கம்தான் அவர்களுக்கு மூச்சு வழங்கியது." (தினக்குரல் 04-03-2005)

பிறக்கும்போதே அழிவதற்கான சாபத்தோடு பிறந்தவர்கள் என கதைகளிற்றான் வாசித்துள்ளோம். கருவிலேயே தன்னையே கருவறுப்பதற்கான கருக்களைக் கொண்டு பிறந்த ஒரு விசித்திர முற்போக்கு(?) அமைப்பொன்றினை இப்போது தான் காண்கிறோம். 1505 ஆம்; ஆண்டிற்கு முன் செல்வோம்; அழிக்கப்பட்ட 250 விகாரைகள் உட்பட அனைத்திற்கும் நட்டஈடு போர்த்துக்கேயரிடம் கோருவோம் என்கிற இக்கருத்துக்கள் உண்மையிலேயே மிக ஆழமான அருத்தங்களை கொண்டவை. உண்மையிலே எமது விடுதலையின் ஆதார நிலைப்பாடுகளும் தார்மீக வலுக்களும் இவ்வாதங்களிலுள்ளன. 1505 முன்னுள்ள நிலைக்கு சென்றால் தமிழ் இராச்சியமும் தமிழ்மக்களின் பண்பாட்டு, பொருண்மிய மரபுகளுமல்லவா முதலில் மீட்கப்படவேண்டும். போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்ட 500 ஆலயங்களுக்கும் சேர்த்து அல்லவா நட்டஈடு கோரப்படவேண்டும். கிக்கடுவை சிறி சுமங்கல தேரரின் நாட்டுப்பற்று பற்றி வீரவன்ச பேசும்போது சங்கிலி மன்னன் பற்றியும் அல்லவா அவர் பேசவேண்டும்? ஏன் இவை நிகழவில்லை? சிறிலங்காவின் முழுமையான நாசத்திற்குக்காரணமாகப் போகும் இக்காரணம் பற்றி இத்தீவில் கவலைப்படுவர் யார்?

எமது முழுக்கவனமும் நிகழ்காலத்தில் ஜே.வி.பி இழைத்து வரும் மாபெரும் தவறு பற்றியதாகவே உள்ளது. ஜே.வி.பி ஏலவே இழைத்த தொடர் தவற்றின் மூன்றாவதும் இறுதியுமாக போகும் இத்தவறு இவ்வுலகின் மனிதநேயமிக்கோரால், விடுதலையுணர்வு கொண்டோரால், முற்போக்காளரால் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாததான பெரும் அவலம் நிரம்பிய நினைவுகளாகப் போகின்றன. ஏனெனில் மிகச்சரியான, மிக நீதியான சமூகக் காரணங்களோடு ஒரு மாற்றம் நடப்பதற்கான அகப், புறச்சூழல் தோற்றம் பெற்ற காலகட்டத்திலே ஜே.வி.பி தோற்றம் பெற்றது. சுதந்திரம் பெற்ற மறுகணமே ஏழைச் சிங்கள மக்களை ஏய்த்து அவர்கள் வளமான வாழ்வைப்பறித்த சிங்கள ஆளும் மேட்டுக் குடிக்கெதிராக முழு இளைஞர் தொகையில் 76 விழுக்காடு கிராமங்களில் வாழ்ந்த ஏழை விவசாய, பாட்டாளிகளின் மைந்தர்கள் கிளர்ந்ததை எவரும் எவ்வாறு பிழையென சொல்ல முடியும்?

எனவே தனது முதலாவது கிளர்ச்சியை நடத்த முன்னரே சிறைப்பிடிக்கப்பட்ட றோகன விஜேயவீரா குற்றவியல் நீதி ஆணைக் குழுவின் முன் பேசினார். (மொன்காடா கோட்டை தாக்குதலின் பொழுது சிறையாகியிருந்த பிடல் நீதிமன்றில் வரலாறு என்னை விடுவிக்கும் எனப் பேசியதன் சாயலில்) இங்கே நடப்பது என்னவென்றால் ஒரு சமூக வருக்கத்தின் பிரதிநிதி இன்னொரு வருக்க பிரதிநிதி நோக்கி உரையாடுவதுதான். ஒடுக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் உள்ளான வருக்கத்தின் பிரதிநிதி ஒடுக்கும் சுரண்டும் வருக்கப்பிரதிநிதி நோக்கி விளிப்பதுதான். 'நானொரு மார்க்சியவாதி; நானொரு நவீன போல் சுவிச்; நானொரு பாட்டாளி வருக்கப் புரட்சியாளன்."

எத்தகைய உயரிய வார்த்தைகள்? இவற்றினை உச்சரிக்க தன்னும் இவருக்குத் தகுதியிருந்ததா. இவையாவுமே உண்மையாகவிருந்தால் இத்தீவில் இருநாடுகள் அருகருகே அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும்? றோகண உயிருடன் வாழ்ந்திருப்பார், ஒரு புரட்சியாளனாக அவர் உலகால் போற்றப்பட்டிருப்பார்?

ஆனால் நடந்ததென்ன? 1971 ஏப்பிரலில் நடைபெற்றிருக்க வேண்டிய புரட்சி கிளர்ச்சியாகியது. அரசையே கைப்பற்றத்திட்ட மிட்ட ஆயுதப்புரட்சி 53 இராணுவத்தினரை 37 பொலிசுக்காரரை கொன்று 35 காவல் நிலைகளைச் சிலமணிநேரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததோடு முடிவிற்கு வந்தது. இங்கேயொரு குறிப்பினை வாசகர்களுக்கு சொல்லவேண்டும். ஜே.வி.பியினர் நிறைவேற்றாத புரட்சி தோற்றதற்கு என்ன காரணமென்பதை ஆராய்வதோ அவர்களது இராணுவச் செயற்பாட்டினை விமர்சிப்பதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் எத்தனை மோசமான இராணுவத் திட்டமிடலடிப்படையில் செயற்பட்டுத்தோற்ற இவர்கள் இன்று எல்லாவற்றிற்கும் பிறர்மீது குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் மீதே பெரும் பழிசுமத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. புரட்சியை நடத்த வேண்டிய புரட்சித்தலைவர் புரட்சிக்கு முன்னரே கைதாகி விடுகின்றார். புரட்சிக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்ய 1971 மார்ச்சில் மாவட்டங்களுக்குப் பயணித்த ரோகண அம்பாறையில் வைத்துக் கைதாகி யாழ்ப்பாணச் சிறைக்குள் தள்ளப்படுகின்றார்.

இந்நிலையில் வித்தியோதயப் பல்கலைக்கழக விகாரையில் கூடிய ஏனைய தலைவர்கள் ஏப்ரல் 5இல் சகல காவல்நிலையங்களையும் தாக்க முடிவெடுத்தனர். அரசைக் கைப்பற்றும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. தகவல் பரிமாற கருவிகளற்ற நிலையில் தொடர்புகளை ஏற்படுத்துவதிலேற்பட்ட தவறு காரணமாக இரவு தாக்கப்பட வேண்டிய வெல்லவாய காவல்நிலையம் அதிகாலை 5.20க்கு தாக்கப்பட்டது. மொனறாகலை ஜே.வி.பியினருக்கு தாக்குதலைத் தொடங்குமாறு உத்தரவு தந்தி வழியே வழங்கப்பட்டது. புகழ்பெற்ற இத்தந்தி 'ஜே.வி.பி அப்புகாமி இறந்துவிட்டார். இறுதிச் சடங்கு 5" என்றமைந்தது. இதனை தவறுதலாக விளங்கி அதிகாலையிலேயே தாக்குதல் ஒரு பொலிசு நிலையம் மீது நிகழ்த்தப்பட்டது. எனவே பொலிஸ் தலைமைப்பீடம் விழிப்படைந்தது. இங்கு நகை என்னவென்றால் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கான முன்னறிவிப்பு கிடைத்த நிலையிலும் பொலிசுக்காரர்களால் தங்களை முற்றாகப்பாதுகாக்க முடியாமல் போனதுதான். இவ்வாறாக ஒரு தந்தியால் புரட்சி கிளர்ச்சியான கதையிது.

மிகுதிக்கதையையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திவிடுகின்றோம். கொழும்பு அரசினையும் கைப்பற்றத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன. பிரதான இராணுவ முகாமான பனாகொடையைத் தாக்க 800 மாணவர்கள் 25பேர் கொண்ட குழுக்களாகப்பிரிக்கப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தனர். பனாகொடை முகாம் பற்றிய வரைபடமும் கையில் இருந்தது. ஆனால் தாக்குதல் நிகழ்த்தப்படவேயில்லை. ஏனெனில் தாக்குதல்காரர்கள் பனாகொடைப் பக்கம் செல்லவேயில்லை. அது போலத்தான் கட்டுநாயக்கா தளம் மீதான தாக்குதலும் நடக்கவேயில்லை. அதுபோலவே கொழும்பை கைப்பற்றவும் பெருந்திட்டமொன்று வகுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சென்று விஜேவீரவை மீட்கும் திட்டமும் தோல்வி கண்டது. நாட்டின் பிரதம மந்திரியான சிறிமாவைக் கடத்துவது அல்லது கொல்வதென்றும் திட்டமிருந்தது. இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர் சோமவன்ச அமரசிங்க. நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உதவியாளரான இவர் 5ம்திகதி இரவே கைதானார். ஊடரங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் தாக்குதலுக்குப் பொறுப்பானோர் நகரமுடியவில்லை. இச் சோமவன்ச வேறு யாருமில்லை. இன்றைய ஜே.வி.பியின் தலைவர்; சவடால் மன்னன்; மார்க்சியத்தை தெருப்புழுதிக்குள் வீசி நாசமாக்கிய மன வக்கிரக்காரன். மார்க்சை இரண்டாம் தடவை கொன்றவன்.

எனவே ஜே.வி.பியினரின் முதற்புரட்சி இவ்வாறு இடை நடுவில் முடிந்தது. இதற்கு ஜே.வி.பியினரின் திறனற்ற இராணுவ மூலோபாயங்கள் உத்திகள் மட்டுமா காரணம்? விடுதலை, புரட்சி போன்ற உயரிய கருத்தமைவுகளை இவர்கள் புரிந்து கொண்டவிதம் அவர்கள் இவற்றினை அபத்தமாக கையாண்டமை எல்லாமே அவர்கள் செய்யக்கிளம்பிய புரட்சிக்கே எதிரானவை. மாற்றத்தினைக் கொண்டு வர தடையான மாறாத நிலைப்பாடுகள், இயங்கியல் என்னும் சமூக அசைவியக்கத்தினை பின்தள்ளும் காரணிகள்.

எனவே மார்க்சை, ஏங்கல்சை லெனினை, கரைத்துக்குடித்து சேயை, பிடலை மோசமாக மனதில் உருவகப்படுத்திய றோகணவிக்கு மிக மோசமாகச் சுறண்டப்பட்ட ஏழைப்பாட்டாளியான, மலையக மக்கள் இந்தியாவின் விரிவாக்கக் கைக்கூலிகளாகத் தெரிந்தனர். மலையக மக்களை முன்னனிப்படையாகக் கருதிய சண்முகதாசன் ஒரு இனவாதி. ஒடுக்குமுறைக்குட்பட்ட தமிழ்மக்கள் கிள்ளுக்கீரைகள். இவை யாவற்றினையும் விட 1970களில் தமிழ் இளைஞர் மனதிலே கனன்று கொண்டிருந்த விடுதலைத்தீயை அடையாளம் காண முடியாத அகக்குருடர்கள் இவர்கள்.

இவர்கள் எவ்வாறு புரட்சி செய்வது? ஒருபொழுதும் முடியாது என்பதற்கு நெறி கெட்டு அலங்கோலமாகிய 2வது(?) புரட்சியே இன்னொரு சான்று-

(தொடரும்)...

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]