Sunday, September 18, 2005

'ஒழுங்கை' - குரற்பதிவு.

ஒழுங்கா இருப்பது ஒழுங்கை.
ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கீழுள்ள செயலியை இயக்கிக் கேக்கலாம். செயலி தொழிற்படாவிடில் இங்கே சொடுக்கவும்.




குழைக்காட்டானின்ர படத்தைப் பாத்த உடன ஒழுங்கை ஞாபகங்கள் வந்திட்டுது.
அனேகமா சைக்கிளோ மோட்டச் சைக்கிளோ போற அளவில ஒழுங்கைகள் இருக்கும். இதுகள குச்சொழுங்கை எண்டும் சொல்லுவம். சில ஒழுங்கைகளுக்குள்ளால மாட்டுவண்டில், கார் கூடப் போய்வரலாம். அதுகள தனிய ஒழுங்கை எண்டு சொல்லுவம்.

அனேகமா ரெண்டு பக்கமும் வேலிஅடைக்கப்பட்டிருக்கும். அப்பிடி வேலியடைக்கப்பட்டிருக்கிற இடங்களில ஒழுங்கை எந்தநேரம் இணலுக்குள்ளதான் (நிழல் எண்டதின்ர பேச்சு வடிவம் தான் இணல்) இருக்கும். யாழ்ப்பாணத்தில அனேகமா பூவரசுதான் வேலிக்கதியாலா நிக்கும். அதுக்கடுத்தபடியா முள்முருக்கு அல்லது கிளுவை நிக்கும். எங்கயாவது அருந்தலா வாதனாராணி அல்லது சீமைக்கிளுவை (இதை யப்பான் மரமெண்டும் சொல்லிறானங்கள்) நிக்கும். உந்த ஒழுங்கை பிரிப்புகளில பெரிய காணிச்சண்டைகள் கூட வந்திருக்கு. சகோதரங்களுக்குள்ள வெட்டுக்குத்துகூட நடந்திருக்கு.

எங்கட ஊரில ஒழுங்கை கூட்டிற ஆக்களைக் காணலாம்.
தங்கட தங்கட வளவுகளுக்கு முன்னால இருக்கிற ஒழுங்கையின்ர பகுதிகளில கொட்டுப்பட்ட பூவரசம் அல்லது கிளுவைச் சருகுகளைக் கூட்டியள்ளுவினம். எனக்கு அப்பவே உந்தப் "பெண்டுகளின்ர" ஒழுங்கை கூட்டல் ஏனெண்டு விளங்கிறேல. கோடையில ஒழுங்கைக்குத் தண்ணிகூடத் தெளிச்சு வைப்பினம். வேலயில்லாத பிரச்சின எண்டு நான் நினைக்கிறது. பொழுது போக வேணுமெண்டு ஏதாவது செய்யிறதாத்தான் நான் நினைக்கிறது.

இப்ப யோசிச்சுப் பாக்கேக்க ஒருவிதத்தில அது நல்லதெண்டுதான் நினைக்கிறன். சும்மா வேலவெட்டியில்லாம சமைக்கிறதும் தோய்க்கிறதும் முடிஞ்சிட்டா பிள்ளையள் பள்ளிக்கூடத்தால வரும்வரைக்கும் அக்கம்பக்கத்தில சேந்து பூராயம் கதைக்கிறதெண்டுதான் கிராமங்களில பொழுதுபோறது. அப்ப எங்க உந்த தொலைக்காட்சிப்பெட்டியளும் மின்சாரமும். (அதுக்காக நானேதோ அம்பது வருசத்துக்கு முந்தின கதையக் கதைக்கிறன் எண்டு நினையாதையுங்கோ. வெறும் பதினஞ்சு வருசத்தயக் கதை) சிலவேளை அதிலயே சண்டைகள் வரும். சும்மாசும்மா கதையளக் கட்டுறதுக்கெல்லாம் எங்கட ஆக்களக் கேக்கவேணுமே? அந்தவிதத்தில இப்பிடியேதாவது செய்து வீண்வம்புகள விலைக்கு வாங்காமல் இருக்கிறது நல்லந்தானே? இண்டைக்கு எந்தநேரமும் ரி.விப் பெடடிக்கு முன்னால இருக்கிறதக்கூட உந்த விசயத்துக்காக நான் வரவேற்கிறன்.

ஆம்பிளையள் எங்கயாவது மதவடியில குந்தியிருப்பினம். இல்லாட்டி ஏதாவதொரு மரத்துக்குக்கீழ கடுதாசியோ தாயமோ விளையாடுவினம். கிராமப் பக்கங்களில அரசாங்க வேல செய்யாத ஆக்கள் வேலவெட்டியில்லாமல் ஓய்வாயிருக்கிற சந்தர்ப்பம் அதிகம்தானே. அனேகமா வெறியில்லாட்டி ஆம்பிளைகளுக்குள்ள சண்டைவாறது குறைவுதான்.

சரி எங்க விட்டன்?
ஆ.. ஒழுங்கை பற்றிக் கதைக்க வந்து என்னவோ கதைச்சுப்போட்டன். ஒழுங்கைகள் எண்டா கட்டாயம் தார் போடாமல் சாதாரணமாத்தான் இருக்கோணும். (அந்த நேரத்தில பெரிய பாதைகளே முந்தியொருக்கா தார் போட்டிருந்தது எண்ட அடையாளத்தோட மட்டுந்தான் இருந்திச்சு.) ஒழுங்கைகள் எப்பவும் நேர்ப்பாதையா இருக்கக்கூடாது. வளைஞ்சு வளைஞ்சு போகவேணும். இதில ஒரு சிக்கல் இருக்கு. வேலிய உயத்தி அடைச்சிருந்தா முடக்குகளில எதிர்ப்பக்கம் வாறவங்களைத் தெரியாது. சைக்கிளில பெல் இருக்காதபடியா முடக்குகள் வரேக்க,

"பெல் இல்ல
பிரேக் இல்ல
அடிபட்டாக்
கேள்வியில்ல"
எண்டு ஒரு ராகத்தோட கத்திக்கொண்டுதான் திரும்புவம். எங்களுக்கு முதல் எதிர்ப்பக்கத்திலயிருந்து கத்தல் வந்தா நாங்கள் உடன வேலிக்கரைக்கு சைக்கிள விட்டிடோணும். சிலநேரங்களில அப்பிடிக் கத்துறதுக்கு வெக்கமாயிருந்தா, (ஆனேகமா எங்களோட படிக்கிற, அல்லது எங்களுக்குள்ள ஏதோவொண்ட உருவாக்கிற பொம்பிளைப்பிள்ளையள் இருக்கிற வீடிருக்கிற இடமாயிருக்கும்) அப்பிடியே சைக்கிளில எழும்பிநிண்டு வேலிக்குமேலால அந்த முடக்குப் பாதையப் பாத்திட்டுத் திரும்புவம்.

அதிலயும் சிக்கல் வந்திச்சு. இப்பிடித்தான் ஒரு முடக்கில நாங்கள் பள்ளிக்கூடத்தால வரேக்க எழும்பிப்பாத்திட்டுத் திரும்பிறனாங்கள். சைக்கிளில வரிசையாப் பவனிவாறநேரத்தில முன்னுக்குப்போறவன் மட்டும் அப்பிடி பாதையக் 'கிளியர்' பண்ணிப்போட்டுப் போனாச்சரிதானே? ஆனா பின்னுக்கு வாற பரதேசியளும் எழும்பியொருக்காப் பாத்திட்டுத்தான் முடக்கால திரும்புவாங்கள். அந்தவீட்டுக்காரர் கொஞ்சநாள் பாத்திட்டு தன்ர பிள்ளையத்தான் உவங்கள் வேலிக்கு மேலால பாக்கிறாங்களெண்டு வேலிக்கு மேலால இன்னும் ரெண்டு மட்ட கிடுக வச்சு அடைச்சு விட்டார்.

அந்த முடக்கில கத்துறதும் நாகரீகக் குறைவெண்டபடியா பேசாமல்தான் முடக்கால திரும்பினம். ஆனா ஒருநாள் எதிர்ப்க்கம் வந்த ஒரு சைக்கிளோட முன்னுக்குப்போனவன் மோதி, அடுத்தடுத்து மொத்தம் ஆறு சைக்கிளுகள் விழுந்தபிறகுதான் திருந்தினம். பிறகென்ன பழையபடி அந்த முடக்கில
'பெல் இல்ல..
பிறேக் இல்ல..."

உப்பிடி ஒழுங்கை பற்றிக் கனக்க கதைச்சுக் கொண்டே போகலாம். உங்களுக்குக் கேக்கிற பொறுமை வேணுமே?
அதால இதோட நிப்பாட்டுறன்.

'பூராயம்' எண்டு பேர் வச்சது தான் வச்சன். அந்தப்பேருக்கு ஏற்றமாதிரி ஒண்டும் எழுதேல எண்டமாதிரியொரு உணர்வு. பூராயம் ஒருத்தருக்கும் விளங்கேல எண்டஉடன நானும் பெரிசா அலட்டிக்கொள்ளேல. ஆனா காருண்யன் இந்தப் பூராயம் எண்ட பேரத் தனதாக்குறதுக்கு முயற்சி செய்து நான் முதலே அதைக் கையகப்படுத்திவிட்டதால மனமொடிஞ்சு 'விண்ணாணம்' எண்டு பேர வச்சத அறிஞ்சபிறகுதான் இந்தப்பேருக்கிருக்கிற 'மவுசு' தெரிஞ்சுது.

Labels: , ,


Wednesday, September 14, 2005

தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனம்


இன்று வன்னியின் புதுக்குடியிருப்பில் "தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடன" இன்று தொடங்கி நடந்து வருகிறது.
அதன் நேரடி ஒலிபரப்பு புலிகளின் குரலூடக ஒலிபரப்புப் படுகிறது.
அதைக் கேட்க இங்கே கிளிக்கவும்.




படஉதவி: புதினம்.

Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]