Tuesday, November 29, 2005

மாவீரர் நாள் உரைகள்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின்
ஒலிவடிவம்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒலிவம்
பகுதி ஒன்று.
பகுதி இரண்டு.

------------------------------------
அனைத்து இணைப்புக்களும் தமிழ்நாதம் இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டவை.
தமிழ்நாதம் இணையத்தளத்துக்கு நன்றிகள்.

Labels: , , ,


Sunday, November 27, 2005

சிங்களத் தலைமையிடம் கேட்கப்படவேண்டிவை.

இன்று தமிழீழ மாவீரர் நாள்.

இந்நாளில்தான், தலைவர் பிரபாகரன் அவர்களால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கை வாசிக்கப்படும்.
வழமைபோலவே இலங்கையில் மட்டுமன்றி அதற்கு வெளியாலும் இவ்வுரைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இம்முறை இவ்வுரை சற்றுக் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.

போனதடவை, சிங்கத்தலைமையால் தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுத்திட்டமொன்றை முன்வையுங்களென்று பிரபாகரனால் கேட்கப்பட்டது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிடும் என்று பரவலாக எதிர்பார்த்த போதும் அது நடைபெறவில்லை. இதற்கு சுனாமி தான் முதற்காரணமென்று சொல்லப்பட்டது.



இம்முறையும் அதையொத்த - சிலவேளை அதைவிடவும் கடுமையான தொனியில் உரை நிகழ்த்தப்படும்.
இப்போது புதிதாக வந்துள்ள சிங்களத் தலைமை மிகவும் கடும்போக்கானது. தேர்தலுக்கு முன்பும் பின்பும் அது ஒற்றையாட்சியை வலியுறுத்திப் பேசியுள்ளது. கூட்டாட்சி உட்பட ஏனைய சாத்தியங்களை மறுத்துள்ளது. இந்நிலையில் சிங்களத்தலைமையைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்விகள் பலவுள்ளன. பேச்சுவார்த்தைக்குச் செல்வதானால் செய்யப்படவேண்டியவை என்று சில நிபந்தனைகளை விதிக்கவேண்டிய நேரமிது.

அப்படி விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகளாக நான் கருதுபவை:
1. ஒற்றையாட்சி முறைக்குள் மட்டுமே தீர்வு என்ற கோட்பாட்டை முற்றாகக் கைவிட வேண்டும்.
2.
எந்தவொரு இறுதியான தீர்வை எட்டும் வரைக்கும் ஆயுதக் களைவு பற்றிய கேள்விக்கே இடமில்லை.
3. பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் எந்த ஒப்பந்தமும் சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படக் கூடாது. அதாவது எட்டப்படும் எந்த முடிவும் நீதிமன்றங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கக்கூடாது. (இக்கோரிக்கைக்கான காரணங்கள் கடந்த 4 வருடங்களில் நிறைய உண்டு).

மேற்கூறிய மூன்று நிபந்தனைகளும் அடிப்படையானவை. இவைபற்றி பகிரங்கமாக சிங்களத் தலைமை அறிவித்த பின்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும். அல்லாத பட்சத்தில் சும்மா காலத்தை இழுத்தடிப்பதாகவும் தமிழர்கள் ஏமாற்றப்படுவதாகவுமே இருக்கும்.
அதைவிட, கடந்த வருட உரையில் கூறியதுபோல, சிங்களத் தலைமையால் தமிழர்களுக்கென அவர்கள் வழங்கத் தயாராயிருக்கும் தீர்வுத்திட்டத்தைக் கேட்டுப் பெறல்.

இவற்றைவிட சிங்களத் தலைமைக்கும் உலகத்துக்கும் சொல்ல நிறைய உண்டு.
இவையெல்லாம் சேர்ந்து தீர்க்கமான, உறுதியான உரையொன்றை எதிர்பார்க்கிறேன்.
-------------------------------------------------------

தமிழர் தீர்வு விடயத்தில் உலகநாடுகளின் மெத்தனப்போக்கு வியப்பளிக்கிறது. ராஜபக்ஷ சமஸ்டி உட்பட்ட சாத்தியக்கூறுகளை மறுத்து ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்று உறுதியாக உரையாற்றியுள்ளார். ஆனால் ஒஸ்ரேலியா அதை வரவேற்றுள்ளது. அப்படியானால் ஒற்றையாட்சியைத்தான் தமிழர்களுக்கான தீர்வாக அவர்கள் முன்மொழிகிறார்களா?
------------------------------------------------------

Labels: , ,


Friday, November 25, 2005

வாழ்த்துக்கள்.

தேவை
தமிழீழம் மட்டுமன்று,
தலைவனின் வாழ்வும்.



எழுதியது:- கடற்கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.

51 ஆவது பிறந்தநாளுக்காக ஒரு பாடல் கேளுங்கள்.




ஒலிச்செயலி இல்லாதவர்கள் இங்கே தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
------------------------------------------
பாடல் இயற்றியது: புதுவை இரத்தினதுரை.
பாடியவர்: ஜெயச்சந்திரன்
இசை: தேவேந்திரன்.
-----------------------------------------
படங்கள்: அருச்சுனா இணையத்தளம்.

Labels: ,


Wednesday, November 02, 2005

ஓயாத அலைகள் மூன்று

நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல்.

இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்



1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.

இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.

இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.


தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.


இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.

அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.


மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.

மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.

இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.

ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.

ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.

அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.

சம்பந்தமுள்ள வேறுபதிவு.

-வன்னியன்-
02.11.2005.

Labels: , , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]