Thursday, June 28, 2007

மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் நினைவுநாள்

மண்டைதீவு படைத்தளத்தின்மீது விடுதலைப்புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நிகழ்த்தி சிறிலங்கா படைத்தரப்புக்குப் பாரிய ஆள் - ஆயுத இழப்பை ஏற்படுத்தியதன் பன்னிரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும் - குடாநாடு மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' நடவடிக்கையின்பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.
திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான்.
இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான 'இதயபூமி' தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

************************
தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ்.குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

Labels: , ,


Sunday, June 10, 2007

தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.

இன்று தாண்டிக்குளச் சண்டையின் வெற்றிநாள்.

கண்டிவீதியைக் கைப்பற்றவென 'வெற்றி நிச்சயம்" (ஜெயசிக்குறு) என்று பெயரிட்டுத் தொடங்கப்பட்ட படைநடவடிக்கைக்கு எதிராக புலிகளால் 10.06.1997 அன்று நடத்தப்பட்ட ஓர் அதிரடித் தாக்குதலே இது.

13.05.1997 அன்று சிறிலங்கா படைத்தரப்பால் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டது. படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவிலிருந்து ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி வரையான வன்னி நெடுஞ்சாலையை (A-9)க் கைப்பற்றுவதே இந்நடவடிக்கையின் நோக்கம். படைத்தரப்பால் நடவடிக்கை தொடங்கப்பட்ட கையோடு தாண்டிக்குளம் என்ற புலிகளின் முன்னணி எல்லைப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டது. பின் சிலநாட்களில் அதற்கு அடுத்த பகுதியான ஓமந்தையும் படையிரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் நடவடிக்கை தொடங்கிய ஒருமாத காலத்துள் எதிரிமீது பெரியதொரு வலிந்த தாக்குதலைப் புலிகள் நடத்தினர். எதிரியின் முக்கிய தளமான தாண்டிக்குளம் மீது நடத்தப்பட்ட அத்தாக்குதல் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மீது நடத்தப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல்.

முன்னணிப்பகுதியான ஓமந்தையை அப்படியே விட்டுவிட்டு, பின்தளமான தாண்டிக்குளத்தின் மீது புலிகள் புலிகள் தாக்குதலை நடத்தினர். ஓரிரவு மட்டுமே நடத்தப்பட்ட இவ்வதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதோடு, படையினரில் வினியோகத்துக்கான ஆயுதக்களஞ்சியமொன்று வெடித்துச் சிதறியிருந்தது. புலிகளால் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அரசவான்படையின் MI-25 தாக்குதல் உலங்குவானூர்தியொன்று புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.

இத்தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை அதன் தொடக்கத்தின்போதே ஆட்டம்காணத் தொடங்கியது. மூர்க்கமான முன்னேற்ற முயற்சிகள் சிறிதுகாலம் பிற்போடப்பட்டன. அதன்பின் சீரான இடைவெளிகளில் அவ்வப்போது ஜெயசிக்குறு இராணுவத்தினர் மீது புலிகளின் வலிந்த அதிரடித்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதலில் மூன்று கரும்புலிகள் வீரச்சாவடைந்திருந்தனர். புலிகளால் உரிமைகோரப்பட்டதன் அடிப்படையில் முதலாவது பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி இத்தாக்குதலில்தான் வீரச்சாவடைந்தார். அவருடனிணைந்து மேஜர் நிதன், கப்டன் சாதுரியன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

கரும்புலிகள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலை 'ஈழப்பாடல்கள்' வலைப்பதிவில் கேட்கலாம்.
திருவுடலில் வெடிசுமந்து

இத்தாக்குதலில் அம்மூன்று கரும்புலிகளோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.
கரும்புலிகளின் புகைப்படங்கள்




படங்கள்: அருசு்சுனா

Labels: , , , , ,


சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்

இன்று சுதந்திரபுரப் படுகொலையின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள்.

10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.


அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.

இன்னொரு விதத்திலும் இந்நாள் முக்கியமானது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990 ஆம் ஆண்டு இதேநாளி்ல் தொடங்கியது.

Labels: , , ,


Wednesday, June 06, 2007

தொண்டரமைப்புக்கள் மீதான அரச பயங்கரவாதம்

நான்கு நாட்களின் முன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர் இருவர் கொல்லப்பட்டனர். இவர்கள் கொழும்பில் வைத்துக் கடத்தப்பட்டு பின்னர் கொலைசெய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்கள். இச்சம்பவம் வழமைபோலவே உடனடி அதிர்ச்சியலைகளைக் கிழப்பி பின் படிப்படியாக அமுங்கிக்கொண்டிருக்கிறது.

இக்கொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை அமைப்பை அழைப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். பன்னாட்டுக் குழு பற்றிய பேச்சு வருவது இதுதான் முதற்றடவையன்று. ஏற்கனவே தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர்' ரவிராஜ் கொலை, மூதூரில் பன்னாட்டு நிறுவனப் பணியாளர் கொலை என்பவற்றிலெல்லாம் இதே கூத்துத்தான் நடந்தது. வந்தவர்களும் புதைத்த பிணங்களை மீளத் தொண்டியெடுத்து ஏதோ செய்துவிட்டு, இறுதியில் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையென்றுவிட்டுப் போனவர்கள்தாம். இப்போது மீண்டும் பன்னாட்டுக்குழு விசாரணை என்ற கண்துடைப்பு. 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதுபோல வெளிப்படையான உண்மைகளை மறைக்க விசாரணைக்குழு என்ற பித்தலாட்டம் காட்டுவது 'அரசுகளுக்கே' உரிய பொதுமையான தந்திரம்.

இங்கு, பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது தொடர்பில் எமக்கு மாற்றுக்கருத்தும் மிகக்கடுமையான விமர்சனமும் உண்டு. அவை மிகத்திட்டமிட்ட முறையில் தீவிரமான ஓர் அரசியலோடு பணியாற்றுபவை. பெரும்பாலான நேரங்களில் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமான செயற்பாடுகளையே செய்பவை. உலகின் வேறுசில பகுதிகளில் நடந்தது, நடப்பது போல் இவர்களின் வாகனங்கள் வருவதைக்கண்டதும், தேவனின் தூதர்களைக்கண்டதைப்போல் பின்னாலே கத்திக்கொண்டு ஓடுவதும், தெண்டனிட்டுப் பொருட்கள் வாங்குவதும் ஈழத்தில் என்றும் நடந்ததில்லை. அப்படியொரு மயக்கம் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மேல் இல்லாமலிருந்ததற்கு முக்கிய காரணம் "தமிழர் புனர்வாழ்வுக் கழகம்". எல்லா நேரத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிக்கொண்டிருப்பது இவ்வமைப்புத்தான்.

இடப்பெயர்வு நேரங்களில் சில பிளாஸ்ரிக் வாளிகள், பாய்கள், தற்காலிகக் கூடாரங்கள் என்பவற்றை வாங்கியதைவிட, ஈழத்தமிழர்கள் மனமார பன்னாட்டு அமைப்புக்களுக்கு நன்றி சொல்லவேண்டிய ஒரு கடமைப்பாடு உண்டென்றால், அது பொதுமக்கள் கொல்லப்படுவதையும் கொல்லப்பட்ட எண்ணிக்கையையும் உலகுக்கு உறுதிப்படுத்த எங்கள் பகுதியிலிருக்கும் ஒரே சக்தி இவர்கள் என்பதுதான். தமிழர்களின் அவலங்களை இந்த அமைப்புக்கள் சொல்லும்போதுதான் ஓரளவாவது நம்பத் தலைப்பட்டார்கள். ஆனால் அந்தப்பணியைக்கூடச் செய்ய விடாமல் தடுத்துவருகிறது இப்போதைய சிங்கள அரசு. வாகரையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியற்றுப் பட்டினியால் வாடியபோதும், தொடர்ந்த எறிகணைவீச்சில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வசதியற்றுத் தவித்தபோதும், கொத்துக்கொத்தாக குண்டுவீச்சில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், அப்பகுதிக்கான வினியோகத்தைத் தடுத்தது மட்டுமன்றி பன்னாட்டுத் தொண்டுநிறுவனங்களின் செயற்பாடுகளையும் அப்பகுதியில் முடக்கி வைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம். தொண்டுநிறுவனங்களுக்கான முழுமையான செயற்பாட்டுத் தடையை விதித்திருந்தது அரசு. இவர்களும் தங்களுக்கு அங்குச் செல்ல அனுமதியில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருந்துவிட்டார்கள்.

அதேபோல் நீண்டகாலம் தமிழர்பகுதியில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொண்டர்கள் சிலரை கட்டாயப்படுத்தி நாடுகடத்தியது தற்போதைய அரசாங்கம். இதில் மருத்துவக்குழுவொன்றும் அடங்கும். போரினால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஒரு சிறு உதவிதன்னும் கிடைக்கக்கூடாதென்பதில், அங்குள்ள அவலங்கள் வெளியுலகத்துக்குத் தெரியக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இயங்கியது ராஜபக்ஷ அரசு. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தமிழர்புனர்வாழ்வுக் கழகம் மீதும் கைவைத்தது. புனர்வாழ்வுக் கழகத்துக்குரிய அலுவலகங்கள், களஞ்சியங்கள் என்பன அடிக்கடி தாக்கிச் சேதமாக்கப்பட்டதோது அங்கிருந்த பொருட்களும் அரசபடையால் கொள்ளையிடப்பட்டன. வங்கிக் கணக்கிலிருந்த புனர்வாழ்வுக் கழகத்துக்கான இலட்சக்கணக்கான ரூபாய் நிதியைச் சூறையாடியது அரசு. இலட்சம் பேரைப் பராமரித்துக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்துக்கான நிதியைச் சூறையாடியது மூலம் மிகப்பெரும் அவலமொன்றைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது அரசு.

இன்றும் பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களுக்குச் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்படவில்லை. என்னேரமும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை அரசாலும் அரசிலுள்ள கட்சிகளாலும் வெளிப்படையாகவே விடுக்கப்படுகின்றன. பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்கள் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். கடந்தவருடம் மூதூரில் பதினேழு பணியாளர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமுட்பட நிறைய நடந்துவிட்டன. உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசகூலிப்படையான கருணா கும்பலால் தமிழர்புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் பலர் கடத்தப்பட்டு, பின் சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில் மிகுதி அனைவரும் கொல்லப்பட்டனர். அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் யாருமே பணியாற்ற முடியாதபடி உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு எதுவுமே தெரியாதமாதிரி அரசு நடித்துக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஏராளமான சம்பவங்களின் தொடர்ச்சியாக நான்கு நாட்களின்முன் கொழும்பில் வைத்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப்பணியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இக்கொலைகளிலும், சூத்திரதாரிகள் யாரென எல்லோருக்கும் தெரியும். இக்கொலைகள் நீண்டதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமே. கல்வியாளர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், மாணவர்கள் என பலரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரும் கொலைப்பட்டியலோடு அரச இயந்திரம் செயற்படுகிறது. கடந்த ஆவணியில் காணாமற்போன அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தை கொலைசெய்யப்பட்டுவிட்டாரென்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல தமிழரின் சுயநிர்ணயத்துக்காகக் குரல் கொடுத்த பெளத்த பிக்கு ஒருவர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெயர் விவரங்களோடு வெளிப்படையாகவே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்கள். உயிர் ரீதியான மிகப்பெரும் அச்சுறுத்தலை அரசகட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் என்ற ஒரு காரணத்தாலேயே தனது பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் மறைக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறது. அதே காரணத்தைக்கொண்டு சில முட்டாள்களால் அரசாங்கத்தை நல்லதோர் அமைப்பாகச் சித்தரிக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறதோடு, போராடும் தரப்புக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஆயுதத்தைக் கீழே போடுங்கள்; பேசித் தீருங்கள்; அகிம்சை வழிக்கு வாருங்கள்; என்று உபதேசம் செய்யவும் முடிகிறது.


பின்னிணைப்பு:
Tamilnet: ICRC pays homage to slain employees

தொடர்புடையதாக மலைநாடான் எழுதிய இடுகை:

தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..

தன் நண்பன் கொல்லப்பட்டதைக் குறித்து சந்திரன் எழுதிய இடுகை:
மலிந்து போன இறப்புக்கள்........

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]