Thursday, September 20, 2007

திலீபனுடன் ஆறாம் நாள் -20-09-1987

"தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து 'திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்' என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்."

அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார். சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன்.
நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம். பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது.

அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்…..

என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா? திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும்.

திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
ஏமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம்.



நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்.

ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும்? நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும் - பூரிப்பும் எப்பொழுது மலரும்?

அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.

ஆனால் நமது மண்ணில் அப்படியா?
எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தார்ப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்?

அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்?
அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை !

இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்டகளாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யதார்? சிங்களப் பேரினவாதம்தான் !

இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் !
தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சை தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

“ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி சரையும் போராடுவான்…”

போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.
உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு அன்ரன் பாலசிங்கமும், மாத்தயாவும் போயிருக்கின்றனர்…. என்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன்.

காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார்.
இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.

இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமால் விம்மி விம்மி அழுத என் நெஞ்சைத் தொட்டது.

தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர்.
அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார்.

“ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்திருந்தது. ஓரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
கிட்டண்ணா, குட்டிசிறி ஜயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர்.
திலீபனுக்கு என்ன பதில் சொல்லதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.

இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை
இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர்.
இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.

அவரின் இரத்த அழுத்தம் 85 . 60
நாடித்துடிப்பு- 120
சுவாசம் -22

பயணம் தொடரும்........
--------------------------------------------------------

பட உதவி: அருச்சுனா
பதிவுதவி: தமிழோசை

Labels: , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]