Thursday, February 23, 2006

ஜெனீவாப் பேச்சு

எதிர்பார்த்தது போலதான் ஜெனீவாப் பேச்சு நடைபெறுகிறது.

அரசதரப்பு அமைச்சரின் தொடக்கப்பேச்சு பல செய்திகளைக் கூறுகிறது. அரசதரப்பின் முகம் எதிர்பார்த்ததைப் போலவே வெளிப்பட்டுள்ளது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மட்டுமே பேசவேண்டுமென்று விடாப்பிடியாக புலிகள் நிற்க, அரசதரப்பும் தவிர்க்கவியலாமல் அதை ஒத்துக்கொண்டு பேச்சுக்குச் சென்றது.
இந்நிலையில் அமைச்சர் தனதுரையில், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவர்கள் புலிகளே எனக்கூறி கண்காணிப்புக் குழுவின் புள்ளிவிவரத்தை ஒப்புவித்தார். பின் கதிர்காமர் கொலையையும் குறிப்பிட்டு அதைச் செய்தது புலிகளேயென்றும் சொன்னார்.
இறுதியில், ரணிலுக்கும் பிரபாகரனுக்குமிடையிற் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசியற்சட்டத்துக்கு முரணானதென்றும் குறிப்பிட்டார்.



அரசபடைகளாற் கொல்லப்பட்ட புலிகளினதும் பொதுமக்களினதும் எண்ணிக்கையே, கண்காணிப்புக்குழு ஒப்பந்த மீறலெனச் சொல்லும் எண்ணிக்கையைவிட அதிகமாயிருக்கிறது.
அதைவிட முதன்மைச் சிக்கலே, அரசதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லையென்பது தானே?

ஒப்பந்தச் சரத்தின்படி இராணுவம் விலகவேண்டிய பகுதிகள் ஏராளமாயுள்ளன. ஒப்பந்தப்படி தத்தமது சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டி பல்லாயிரம் மக்கள் இன்னும் அகதிகளாகவே இருக்கிறார்கள். ஒப்பந்தப்படி பொதுமக்கள் பாவனைக்கு விடப்படவேண்டி பாடசாலைகள், கோயில்கள், பொதுக்கட்டடங்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் நூற்றுக்குமதிகமானவை இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன.
ஒப்பந்தப்படி தடைவிதிக்கப்பட முடியாத மீன்பிடித்தொழிலுக்குத் தடைவிதிக்கப்பட்டதால் பல்லாயிரம் மீனவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒப்பந்தப்படி தடைசெய்யப்பட முடியாத பொருட்கள் எத்தனை தடவைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குட் தடைசெய்யப்பட்டன? குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கட்டடப்பொருட்கள் நீண்டகாலமாக தடைசெய்யப்பட்டன.

புரிந்துணர்வு ஒப்பந்தச் சரத்து தெளிவாகவே மீறலெனக்குறிப்பிடும் பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது நடைமுறையிலுள்ளது. ஒப்பந்தத்தை மீறித்தான் சுற்றிவளைப்புத் தேடுதல்கள், கைதுகள், சித்திரவதைகள் நடைபெறுகின்றன.
ஒப்பந்தப்படி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போராளிகள் அரசியல்வேலை செய்யமுடியவில்லை.
அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நடைபெற்ற போராளிகளின் மீதான தாக்குதல்களும் கொலைகளும் யாரின் ஒப்பந்த மீறல்?
ஒப்பந்தச் சரத்தின்படி இன்னும் ஆயுதம் களையப்படாமலிருக்கும் ஒட்டுக்குழுக்களினது தாக்குதல்கள் என்று சொல்லப்படுபவற்றுக்கு யார் பொறுப்பு?
கடந்த 4 ஆண்டுகாலமாக அரசு செய்துவரும் இதுபோன்ற அனைத்துச் சம்பவங்களுமே கண்காணிப்புக்குழுவின் வெறும் 163 என்ற இலக்கத்துள் அடங்கிவிடுமா?
ஜெனீவாப் பேச்சுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்ட அன்றே கிழக்கில் புலிகளின் பொறுப்பாளர் ஒருவர் கொல்லப்படுகிறார். ஜெனீவாவில் பேச்சு தொடங்கிய அன்று கிழக்கில் புலிகளின் முன்னணிக் காவலரணில் நின்ற வீரர் கொல்லப்படுகிறார். இன்று (23.02.2006) யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் எறிகணைவீச்சு நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் என்ன? யாருடைய யுத்தநிறுத்தல் மீறற்கணக்கிற்குள் வரும்?
இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம்.

உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழர் தரப்பில் அதிக நியாயங்கள் இருப்பதால்தான் அதைப்பற்றிப் பேசவேண்டுமென்று தமிழ்த்தரப்பு பிடிவாதமாக நிற்கிறது. தமது தரப்பில் நியாயத்தன்மை குறைவாக இருப்பதால்தான் அரசதரப்பு அதுபற்றிப் பேசப் பயப்படுகிறது, ஓடியொளிகிறது.

நிற்க, அவ்வமைச்சர் முக்கியமான விசயமொன்றைச் சொல்லியுள்ளார்.
"அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தங்களது
அரசியலமைப்புக்குள் அடங்காதது, எனவே அதை மாற்றியமைக்க வேண்டும்
"

என்று சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே அரசதரப்பும் இராணுவத் தரப்பும் சமீபகாலமாக இதைச் சொல்லிவந்தாலும் பேச்சுமேசையில் இதைச் சொன்னதுதான் முக்கியம். போராட்டமே அரசியலமைப்புக்கு எதிரானதுதான். பிறகு, அப்போராட்டத்துக்கான தீர்வை அதே அரசியலமைப்புக்குள் வைத்துத் தீர்க்க நினைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?

தமிழ்த்தரப்புக்கென்று பேரம்பேசவல்ல வலுவானவொரு இயக்கம் இருக்கிறது. அது பலத்தோடு இருக்கிறது. இன்னும் ஆயுதங்களைக் கீழே போடாத, முழு வலுவூட்டப்பட்ட போராட்ட இயக்கமாக இருக்கிறது.
அப்படியிருந்தும்கூட, வெறும் நான்கு வருடத்துக்குள்ளாகவே ஒரு ஒப்பந்தத்தை மறுதலிக்கவும், அது செல்லுபடியற்றதென்று சொல்லவும் சிங்களத்தரப்பால் முடிகிறது.

இவர்களை நம்பி எப்படி ஓர் இறுதித்தீர்வுக்குச் செல்வது?
சிங்களத்தரப்பின் தலைவரொருவரூடாக தீர்வொன்றை எட்டினால் இன்னொருவர் வந்து அத்தீர்வுத்திட்டம் சரிவராது, அதை நடைமுறைப்படுத்த முடியாதென்று தூக்கியெறிய மாட்டார்களா? இது வெறும் கற்பனையில்லை. வரலாறு இதுதான். ஆயுதப்போராட்டத்துக்கு முந்தின தமிழ்த்தலைமைகளுக்கும் சிங்களத்தலைமைகளுக்குமிடையிற் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இப்படித்தான் கிழித்தெறியப்பட்டன. ஏன் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பு கூட கைச்சாத்திடப்பட்டு இரண்டே நாட்களில் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது மிகச் சமீபத்திய வரலாறு.

ஆயுதங்களோடு வலுவாக இருக்கும் ஓர் இயக்கத்துக்கே இப்படி தண்ணி காட்ட நினைப்பவர்களை நம்பி எப்படி ஆயுதங்களைக் கையளித்துவிட்டு இறுதித்தீர்வுக்குச் செல்வது? (ஆயுதங்களைக் கைவிட்டு சனநாயக வழிக்குத் திரும்புதல் பற்றிக் கதையளக்கும் புத்திவீங்கிகளைக் குறித்துச் சொல்ல ஏதுமில்லை.)

புரிந்துணர்வு ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்தையும் அன்றைய நிலையில் இருதரப்பின் இராணுவ, அரசியற் சமநிலைகளையும் குறிப்பிட்டு ஏற்கெனவே இரு பதிவுகள் எழுதியுள்ளேன். ஒப்பந்த மீறல் தொடர்பான சில புள்ளிவிவரங்களுமுண்டு.
எதை வைத்துப் பேச்சுவார்த்தை?
எதை வைத்துப் பேச்சுவார்த்தை? -இரண்டாம் பாகம்

அதன்படி, அடிவாங்கி பலவீனப்பட்டுப்போயிருந்த அரசதரப்பு தன் மீள்வுக்காக ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்ட ஒப்பந்தம்தான் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம். அப்போது அவர்களிருந்த நிலையில் அந்த ஒப்பந்தச் சரத்துக்களை ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்டார்கள். அப்போதிருந்த வங்குறோத்து நிலையில் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் ஒப்பந்தம் வரையப்பட வேண்டுமென்ற சிந்தனையெல்லாம் அவர்களுக்கில்லை. இப்போது பழையவை மறந்துபோய்விட்டனவோ அல்லது புலிகள் பலமிழந்து விட்டார்களென்று கணித்தார்களோ அல்லது தாம் பலமடைந்துவிட்டதாக நினைக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை, அவ்வொப்பந்தம் செல்லாதென்கிறார்கள். உண்மையில் இப்போதைய ஜெனீவாப் பேச்சுக்கு அரசதரப்பு ஒப்புக்கொண்ட காரணம்கூட எல்லோருக்கும் தெரிந்ததே. யுத்தநிறுத்த ஒப்பந்தைத்தை அமுல்படுத்துவது சம்பந்தமாகவே பேசுவோமென்று அரசு இணங்கிவந்ததற்குக்கூட தமிழ்த்தரப்பின் பலம் ஒருமுறை காட்டப்பட்டதே காரணம்.

இன்னொரு முக்கிய விசயம் இதிலுள்ளது. ஈழத்தவர்க்கான செய்தி அதுதான்.

"பலம் தான் உரிமையைத் தீர்மானிக்கிறது. பலத்தைப் பொறுத்தே தமிழர்களுக்கு என்ன
தரப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்படுகிறது. சிங்கள தேசமும் சரி, உலகமும் சரி,
பலத்தைத்தான் கவனத்திலெடுக்கின்றன."


மேற்படிச் செய்தி இப்போது நடைபெறும் ஜெனீவாப் பேச்சில் மீண்டுமொருமுறை தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
தொடரும் காலங்களும் நிகழ்வுகளும் இதைவைத்தே இருக்கப்போகின்றன.
-------------------------
Photo from asiantribune

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]