Monday, June 26, 2006

எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு.

என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.

பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றும் போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.

மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (தேன்மொழி) அப்போது போராளியாக இருந்தார்.

போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவ 'ரீச்சர்'. எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.

அப்போது "யாழ்செல்லும் படையணி" என்று ஒரு படையணி இருந்தது. (அண்மையில் வன்னியில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.

அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.

இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.

இன்றைக்குச் சரியாக ஏழு ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.
ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.

பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. 'தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர்' என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,
"எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே" என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் 'மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது' என்று.

'எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்' என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

இன்றும்கூட அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.

*************************************************************
வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று. இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.

*************************************************************
லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி தமிழ்க்கவி அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும். ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று..

**************************************************************
ஏழு வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.
**************************************************************

புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான். ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.

Labels: , , , ,


Thursday, June 22, 2006

மறுபடியும் உணர்வுக்கொலை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாவீர்ர் துயிலுமில்லம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் -உடல்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் நினைவுக்கற்கள் நாட்டிவைக்கும் இடத்தொகுதிதான் 'மாவீரர் துயிலுமில்லம்'. ஈழத்தில் பல துயிலுமில்லங்கள் உள்ளன. அவற்றிற் சில இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் உள்ளன.

முன்பு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின் கோப்பாயில் அமைந்திருந்த "மாவீரர் துயிலும் இல்லத்தை" முற்றாகத் தகர்த்தெறிந்து அடையாளமே தெரியாதபடி தரைமட்டமாக்கியிருந்தது அரசபடை. கோப்பாய் மட்டுமன்றி கொடிகாமம் உட்பட வேறும் சில இடங்களும் இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தன.

2002 இல் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து இத்துயிலுமில்லங்கள் மீளவும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் மாவீரரின் கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீளவும் அரசபடை இந்நினைவாலயங்களில் கைவைக்கத் தொடங்கிவிட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துள் சென்று அங்குள்ள அலுவலகத்தைத் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர். படங்களை உடைத்துக் கொளுத்தியுள்ளனர். இதைவிட நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அரசபடையின் காட்டுமிராண்டி மனநிலை தெளிவாக வெளித்தெரிகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களைத் தாக்குவதும் சேதமாக்குவதும் சிங்களவருக்கும் உலகத்துக்கும் எப்படித் தெரிகிறதோ தெரியாது. ஆனால் ஈழத்தவருக்கு அது உணர்ச்சிமயமானது. மனிதக் கொலைகளுக்கு நிகராக -ஏன் அதைவிடவும் பாரதூரமானதாகப் பார்க்கப்படும். புலிகளையும் மக்களையும் சீண்டக்கூடிய அதிகபட்ச செயன்முறை இதுதான். இதன்மூலம் புலிகளைச் சீண்டி யுத்தத்தைத் தொடக்க எண்ணுகிறார்கள் போலுள்ளது.










படங்கள்: சங்கதி.

Labels: , , ,


Sunday, June 11, 2006

சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்

இன்று சுதந்திரபுரப் படுகொலையின் எட்டாம் ஆண்டு நினைவுநாள்.

10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.


அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.

Labels: , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]