Sunday, December 17, 2006

திருச்சித்தமிழனுக்கு அஞ்சலி

இற்றைக்குப் பதினொரு வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் செத்தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று "அப்துல் ரவூப்" என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு 'இனி' என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.
"சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா" என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது.
எம் நிலைப்பாடும் அதுவே.

ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை.

திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.

_____________________________________________

Labels: , , ,


Monday, November 27, 2006

மாவீரர்நாள் உரை- ஒலிவடிவம்

இன்று (27.11.2006) தமிழீழ மாவீரர் நாளன்று தேசியத்தலைவர் ஆற்றிய மாவீரர்நாள் உரையின் ஒலிவடிவைக் கேட்க கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

2006 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை

நன்றி: தமிழ்நாதம்

_____________________________________________

Labels: , , ,


Friday, September 01, 2006

மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.

மூதூர் என்றதுமே பலருக்கு ஞாபகம் வருவது முஸ்லீம்கள்தாம்.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.

இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.

என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?

இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.

இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.

பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.

அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.

அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.

இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]

இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.

ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.

இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth


_____________________________________________

Labels: , , , , ,


Friday, August 11, 2006

புலிகள் - ஒப்பந்தம் - சிறிலங்கா அரசு

யுத்தநிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஏட்டளவில் உள்ளது. யதார்த்தத்தில் நிறைவுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது.

நேற்று (10.08.2006) புலிகளின் நிலைகள் சிலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். புலிகள் மூதூர் மீது நடவடிக்கை செய்தபோது 'எல்லோரும் பழைய இடங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்' என்று விழுந்தடித்து அறிக்கைவிட்ட நோர்வே என்ன செய்யப்போகிறதென்று தெரியவில்லை. உண்மையில் நேற்றுத்தான் படையினர் கைப்பற்றினாலும் தாம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாக படைத்தரப்புச் சொல்லிவிட்டது. படைத்தரப்பு தாம் மாவிலாறைக் கைப்பற்றிவிட்டதாகச் சொன்ன நாளே நோர்வே இதைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எதுவுமில்லை. சிலவேளை படையினரின் கூற்றை நம்பாமல் இருந்தார்களோ என்னவோ? ஆனால் நேற்றிலிருந்து நாட்கள் எண்ணப்படுகின்றன.

மிகக்கொடூரமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை, வான் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்குமதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ளது அரசபடை. விடுதலைப்புலிகள் தரப்பிலும் சேதங்கள். ஆனால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. மக்கள் இழப்புப் பற்றிக் கேட்டால், தாம் அந்தப்பகுதிகளுக்குப் போகமுடியாது, தமக்குப் பாதுகாப்பில்லை என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு இருந்துவிடுகிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு விழுந்தடித்து ஓடுகிறார்கள்? குறைந்தபட்சம் அரசபடையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றாவது உண்மையைச் சொல்லத் துப்பில்லாத போக்கிரிக் குழுவாக இருக்கிறது இக்குழு. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை மட்டுமன்றி மற்றவர்களையும் துரத்திவிட்டு எம்வழியை நாமே பார்க்கலாம் போல உள்ளது.

அணைதிறக்கச் சென்ற கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட்ட குழுமீது அரசபடை எறிகணைத்தாக்குதல் நடத்தியது. அணை திறக்கவிடாமல் செய்ததற்கு அரசுதான் காரணம். ஆனால் அதைப்பற்றிச் சொல்லும்போது 'சிலருக்கு தண்ணீர் தேவையில்லை, யுத்தம் தான் தேவை போலுள்ளது' என்றுதான் அவரால் சொல்லமுடிந்தது. கடுமையான வார்த்தைகளில் நேரடியாகக் குற்றம்சாட்ட அவருக்கு மனசில்லை. தங்கமான மனசு.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவைக்கூட மறுத்துவருகிறது அரசபடை. இவ்வளவு கொடூரமான தாக்குதல்களுக்கிடையில் காயப்பட்டவர்களைக் கூட சரியான முறையில் அப்புறப்படுத்த முடியாத நிலை. மக்கள் போக்குவரத்து நடக்கும் வெருகலில் படகின் மீதும் குண்டுபோட்டு மக்களைச் சாகடித்துள்ளது வான்படை. மக்களுக்குச் செல்லும் அனைத்து உதவிகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவசர நோயாளர் காவுவண்டிகூட மாங்கேணி படைநிலையில் தடுத்து திருப்பி அனுப்பப்ட்டுள்ளது.
ஆனால் கண்காணிப்புக்குழுவோ, "அம்மக்களுக்கு நிறையச் சிக்கல் இருக்குமென்று நம்புகிறோம். அங்குப் போனால் தான் இதுபற்றிக் கூற முடியும்' என்று பதில் தருகிறது.
ஒன்றில் இருந்து ஒழுங்காக வேலை செய்யவேண்டும். அல்லது மூட்டை முடிச்சோடு ஓடிவிடவேண்டும்.


இன்னும் நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு
ஒப்பந்தத்தைக்காட்டி தமிழர்தரப்பை மட்டும் கட்டிப் போட்டுக்கொண்டு மறுதரப்பை சுதந்திரமாக படுகொலை செய்யவிட்டுக்கொண்டிருப்பது தான் கண்காணிப்புக்குழுவா?
இதுதான் மத்தியஸ்தமா?

புலிகளின் ஆட்லறி நிலைகளைத்தான் தாக்குகிறோம் என்று பச்சைப்பொய்யை அரசதரப்புச் சொல்லும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள்? திருமலை மாவட்டத்தின் மாவிலாற்றுக்குச் சம்பந்தமேயில்லாத மட்டக்களப்பு மாவட்ட வாகரைப்பகுதி தாக்கப்படுகிறது.

இந்தக் குழுக்களை நம்பி சிங்களவனோடு ஒரு தீர்வுக்கு இணங்குவது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கும்? இனிமேல் தனினாநாடு தவிர எந்தத் தீர்வுமே நடைமுறைச்சாத்தியற்ற நிலைக்குப் போயக்கொண்டிருக்கிறது. வேறு தீர்வுகள் பற்றிக் க்தைத்தாலும் ஆயுதக்கையளிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (அது இணைந்த நாடென்ற தீர்வானாலும்.)

இன்று மட்டக்களப்பிலும் தரவைப்பகுதியில் கடுமையான குண்டுவீச்சை அரசவான்படை செய்துள்ளது. புலிகளின் முகாம்தான் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யார் தாக்கப்பட்டால் என்ன? என்ன துணிவில் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு இப்படி தாக்குதலைச் செய்கிறது அரசபடை? இதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் கண்காணிப்பாளரை என்ன சொல்வது? இன்று யாழ்பபாணத்தின் முகமாலையிலும் கடும் எறிகணை வீச்சோடு வன்னிநோக்கி படைநகர்வு நடந்ததாகச் செய்திகள் வருகின்றன.

மாவிலாறு படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டதை வைத்து ஒப்பந்தத்தை நிரந்தர முடிவுக்குகொண்டு வந்துவிடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் நோர்வே தானாகவே வெளியேறுவது சிறந்தது. புலிகள் வலிந்த யுத்தத்தைத் தொடுக்க வேண்டும். நிலமீட்பைத் துரிதப்படுத்த வேண்டும்.
முன்னேறும் படைத்தரப்பை எதிர்கொண்டு மறிப்பதில் மட்டும் ஆள்வலுவையும் ஆயுத வலுவையும் செலவு செய்துகொண்டிருப்பது போராட்டத்துக்கு ஆபத்து.

இன்றைய நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வேலையை உடனடியாகவே செய்ய வேண்டும். ஒப்பந்தக்காலத்தைப் பயன்படுத்தி கொழுத்து திமிர் பெற்றுவிட்ட கொழும்பை அசைக்க வேண்டும். இன்னொரு கட்டுநாயக்கா வெற்றி தேவை.

திருமலையில் புலிகள் முன்னேற்ற முயற்சி மேற்கொண்டால் அது முஸ்லீம்கள், சிங்களவர் வாழும் பகுதிகளையும் உள்ளடக்கித்தான் வரும். இதைத் தவிர்க்கவே முடியாது. இம் மென்ற முதல் இனஅழிப்பு, பாசிசம் என்று தும்மும் கோமாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக எழுதிக்கொண்டிருப்பது வேலையாக இருக்கலாம். எழுத விசயமில்லாமல் யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கொடுக்கத்தானே வேண்டும்?

இந்தச் சமாதானப் பொறியிலிருந்து மீள முடியாமல் தமிழர் தரப்பு இரு்நதது உண்மை. ரணிலைத் தோற்கடித்தது பொறிமீளல் தந்திரமாகவே பார்க்கப்பட்டது. அதை மேலும் இலகுவாக்கியது ஐரோப்பிய யூனியன். இப்போது சிங்களத்தரப்பே இன்னும் இலகுவாக்கியுள்ளது. இவையனைத்தும் தந்திர வெற்றியென்று இன்னும் உறுதியாகவில்லை.
மகிந்த வெற்றியிலிருந்து இன்றுவரை நடந்தவை அனைத்தினதும் பலாபலன் இனி புலிகள் எடுக்கப்போகும் முடிவில்தான் இருக்கிறது.

Labels: , , , ,


Saturday, July 29, 2006

தொடரும் வான்தாக்குதல்: 15 புலிகள் பலி

நான்காம் நாளாக தொடர்ந்து சிறிலங்கா வான்படையால் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வன்னி, திருகோணமலை என்று நடைபெற்ற தாக்குதல்கள் இன்று மட்டக்களப்புக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு கரடியனாறில் அமைந்துள்ள 'தேனகம்' சந்திப்பரங்கம் மீது வான்படை நடத்திய தாக்குதலில் எட்டுப் போராளிகள் பலியாகினர், மேலும் சிலர் காயமடைந்தனர். நேற்று திருகோணமலையில் நடத்திய வான்தாக்குதலில் ஏழு புலிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

கரடியனாறில் அமைந்திருந்த தேனகம் என்ற மாநாட்டு மண்டபம் பிரசித்தமான சந்திப்பிடம். சர்வதேசப் பிரதிநிதிகளுடனும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனும், பத்திரிகையாளர்களுடனும் நடைபெறும் சந்திப்புக்கள் இங்குத்தான் நடைபெறும்.
கிளிநொச்சியில் சமாதானச் செயலகம் போல கிழக்கின் முக்கியமான புலிகளின் அரசியல் மையம் தான் இந்த "தேனகம்".
அதன்மீதே தாக்குதல் நடத்திவிட்டது அரசபடை.
இரு நாட்களில் பதினைந்து புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர்.

இத்தாக்குதலு்ககு முன்பாக 'நடைபெறும் வான்தாக்குதலுக்கு தகுந்தபதிலடி கொடுக்கப்படும்' என்று புலிகள் அறிவித்திருந்தனர். தேனகம் மீதான தாக்குல் நிலையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
ஏற்கனவே மக்கள் குடியிருப்புக்கள் மீதான தாக்குலி்ல் பல சொத்துக்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பாடசாலை ஒன்றும் திருகோணமலைத் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.

யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவால் முடிந்தது 'இதுவொரு ஒப்பந்த மீறல்' என்ற அறிக்கை மட்டுமே. சர்வதேசத்தால் முடிந்ததும் அதுதான். (அதைக்கூட யாரும் செய்யப்போவதில்லை) தாக்குதலுக்கான பதிலடியை கடுமையாக்குவதுதான் தமிழர் தரப்பிலுள்ள ஒரேவழி.

கொஞ்சநாளாக அடங்கிப்போய்க் கிடந்தவர்களுக்கு, இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியதைப் பார்த்ததும் குஷி வந்துவிட்டதோ என்னவோ?
புலிகளும் பொறுத்திருந்தால் நாங்களும் கவசவாகனங்களுக்குக் கல்லெறிஞ்சு கொண்டு திரியவேண்டியதுதான்.

கடுமையான பதிலடியொன்றுடன் சற்று அடங்கிப் போகலாம். அல்லது ஒரு மாதத்துள் யுத்தம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிடுமென்றே தோன்றுகிறது.

Labels: ,


Thursday, June 22, 2006

மறுபடியும் உணர்வுக்கொலை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாவீர்ர் துயிலுமில்லம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் -உடல்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் நினைவுக்கற்கள் நாட்டிவைக்கும் இடத்தொகுதிதான் 'மாவீரர் துயிலுமில்லம்'. ஈழத்தில் பல துயிலுமில்லங்கள் உள்ளன. அவற்றிற் சில இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் உள்ளன.

முன்பு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின் கோப்பாயில் அமைந்திருந்த "மாவீரர் துயிலும் இல்லத்தை" முற்றாகத் தகர்த்தெறிந்து அடையாளமே தெரியாதபடி தரைமட்டமாக்கியிருந்தது அரசபடை. கோப்பாய் மட்டுமன்றி கொடிகாமம் உட்பட வேறும் சில இடங்களும் இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தன.

2002 இல் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து இத்துயிலுமில்லங்கள் மீளவும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் மாவீரரின் கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீளவும் அரசபடை இந்நினைவாலயங்களில் கைவைக்கத் தொடங்கிவிட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துள் சென்று அங்குள்ள அலுவலகத்தைத் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர். படங்களை உடைத்துக் கொளுத்தியுள்ளனர். இதைவிட நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அரசபடையின் காட்டுமிராண்டி மனநிலை தெளிவாக வெளித்தெரிகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களைத் தாக்குவதும் சேதமாக்குவதும் சிங்களவருக்கும் உலகத்துக்கும் எப்படித் தெரிகிறதோ தெரியாது. ஆனால் ஈழத்தவருக்கு அது உணர்ச்சிமயமானது. மனிதக் கொலைகளுக்கு நிகராக -ஏன் அதைவிடவும் பாரதூரமானதாகப் பார்க்கப்படும். புலிகளையும் மக்களையும் சீண்டக்கூடிய அதிகபட்ச செயன்முறை இதுதான். இதன்மூலம் புலிகளைச் சீண்டி யுத்தத்தைத் தொடக்க எண்ணுகிறார்கள் போலுள்ளது.










படங்கள்: சங்கதி.

Labels: , , ,


Sunday, June 11, 2006

சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்

இன்று சுதந்திரபுரப் படுகொலையின் எட்டாம் ஆண்டு நினைவுநாள்.

10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.


அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.

Labels: , , ,


Wednesday, May 31, 2006

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

சிறிரங்கன் சிக்கல் குறித்த பதிவு.

இப்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு முதன்மைச் சம்பந்தமில்லாதது. எவ்விதத்திலும் அதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இது உதவாது. எனவே ஏதோ விசயமிருப்பதாக நம்பி ஏமாற வேண்டாம்.
ஓர் எதிர்ப்புப் பதிவை இடவேண்டுமென்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை. அப்பிரச்சினையைத் திசைதிருப்பும், கொச்சைப்படுத்தும் எண்ணமுமில்லை. இந்தத் தெளிவோடு மேற்கொண்டு படியுங்கள்.

"இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கண்டிக்கிறேன்".

இதுவரை நான் 'உண்மையாயிருக்கும் பட்சத்தில்" என்ற சொற்றொடரைப் பாவிக்கவில்லை. ஆனால் இப்போது பாவிக்கிறேன்.
இச்சொற்றொடர் பாவித்த சிலர் மீது பொடிச்சி போன்றவர்களிடமிருந்து விழுந்திருக்கிறது சாத்து. நான் பாவிக்கவில்லையென்றாலும் அதே நிலைதான் எனதும் என்பதாலும், எதிர்வினை இல்லாமலே விட்டால் தாங்கள் சொன்னதுதான் சரியென்று சிந்திக்கத் தலைப்படுவதோடு(ஏற்கனவே சிறிரங்கன், ஜனநாயகம், இராயகரன் போன்றவர்களுக்கு எதிர்வினை இல்லாததால் அவர்கள் சொல்வது சரியென்றும் புலி அடிவருடிகளின் ஆற்றாமையென்றும் பி.கே சிவகுமார் சொல்லித் திரிந்தது போல) தொடர்ச்சியாக இதுபோன்ற இலவச அறிவுரைகளை / கண்டனங்களை என்போன்றவர்கள் சந்திக்க வேண்டிவருமென்பதாலும்,
இச்சிறு பதிவு.

மீண்டும் சொல்கிறேன்.
சிறிரங்கனின் விசயம் "உண்மையாயிருக்கும் பட்சத்தில்" எனது கண்டனமும் அவருக்கு என் ஆதரவுமுண்டு.
மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பதிவு எழுத வந்த காரணத்தை மட்டும் பார்த்துச் செல்கிறேன்.

இந்த 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என் சொற்றொடர் சிலராற் பாவிக்கப்பட்டது சிறிரங்கனின் இரண்டாம் பதிவுக்கு முன்பு என்பதை ஒரு தகவலாகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு செல்கிறேன்.
யாரும் ஒருவர் சொல்வதை உண்மையென்று அப்படியே நம்பி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுவும் இப்படியான விசயங்களின் போது தங்களின் சந்தேகத்தைத் தெரிவிக்க குறைந்தபட்சமாக இப்படியொரு சொற்றொடரைப் பாவிப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதாலேயே அவர்கள் உண்மையில் அனுதாபம் தெரிவிக்காதவர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிச் சொல்லாமல் நேரடியாக வந்து சொல்பவர்களின் எத்தனை பேர் உண்மையில் சிறிரங்கனில் அக்கறையுள்ளவர்? புலியைச் சாட அருமையானதொரு சந்தர்ப்பமென்று வருபவர்கள் எத்தனை பேர்?

நிற்க, என்போன்றவர்கள் சிறிரங்கன் போன்றோரை எழுந்த மானத்தில் நம்ப முடியாமலிருப்பதற்கும், இப்படியான தருணங்களில் 'இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில்' என்று அடைமொழி போடுவதற்கும் வலுவான காரணங்களுண்டு. அவர் வலையுலகில் வந்தகாலம் முதல் வாசித்துவருபவன் என்ற முறையில் என் பட்டறிவு அதுதான்.

"புலிகளால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் போருக்கு வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்று சிறிரங்கன் எழுதினார். அதை விமர்சித்த போது, 'உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும். உலகம் முழுவதும் எனக்குத் தொடர்பிருக்கிறது' என்றுதான் பதில் வந்தது.
நேரே சம்பந்தப்பட்ட, அறிந்த, பழகிய விசயங்கள் மட்டில் இப்படியொரு பொய்யைச் சொன்னதையும் அதையே கேள்வியின்றி நிறுவியதையும் பார்த்துக்கொண்டு பேசாமலே இருக்க முடிந்தது. முல்லைத்தீவில் ஒரு சிறுவர் இல்லம் சுனாமியில் அகப்பட்டு அனைவருமே கொல்லப்பட்டதை, 'புலிக்காக வளர்க்கப்பட்டவர்கள் அழிந்தார்க்ள' என்று ஒருவித மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் தொடர்ச்சியாக்குமென்று நினைத்து விட்டாயிற்று.


மேற்படிச் செய்தியை உண்மையென்று நம்புவதாக நான் நினைக்கும் பொடிச்சி போன்றவர்களால் எந்தக் கேள்வியுமின்றி சிறிரங்கனின் கூற்றை நம்பமுடிவது சரியென்றால், நேரடி அனுபவத்தில் பொய்யென்று வலுவாகத் தெரிந்திருக்கும் என்போன்றவர்கள் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற அடைமொழியைப் போடக்கூடத் தகுதியில்லாமற் போயிற்றோ?

"காயடிக்கப்பட்ட போராளிகள், போராளிகளுக்குக் காயடித்தல்" என்று நானறிய இருமுறை சொல்லியுள்ளார். ஆனால் உந்த 'காயடிப்பு' எண்டதுல ஏதாவது உட்கருத்து, படிமம் எண்டு ஏதாவது கோதாரி இருக்கோ அல்லது நேரடியான அர்த்தம் தானோ எண்டு விளங்காததால (எனக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவுதான்.) அதைப்பற்றிக் கதைக்காமலே போறன்.

சிறிரங்கன் மட்டுமன்றி எந்தப் புலிவிமர்சகனையும நான் இதே கண்ணோட்டத்திற் பார்க்க வெளிக்கிட்டு பல மாதங்களாகிவிட்டன.
புலியை எதிர்த்துக் கருத்துச் சொல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதை வரவேற்கிறேன். ஆனால் ஏன் புளுகு மூட்டைகளை அவிழ்க்க வேண்டும். இது புலியெதிர்ப்புக் கருத்தாளிகளின் வங்குரோத்துத் தனத்தையல்லவா காட்டுகிறது?

தேனி போன்ற வடிகட்டின புளுகுத் தளங்களை விட வலைப்பதிவில் எழுதுபவர்களை நான் வித்தியாசப் படுத்தியே வைத்திருக்கிறேன். (தேனிக்கு எதிர்முனையில் நிதர்சனத்தை வைக்கலாமென்றாலும் நிதர்சனம் தேனியை நெருங்க முடியாதென்றே நினைக்கிறேன்)

"பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் உல்லாசமாகப் படிக்கிறார், அவருக்கு மகேஸ்வரன் தான் விசா எடுத்துக் கொடுத்தது" என்று ஒரு புளுகுப்பதிவு வருகிறது. அதில் ஒருவர், "அது பிழை, அவர் வன்னியில்தான் இருக்கிறார், போராளியாகவே இருக்கிறார்" என்று பதில் போட,
"அவர் வெளிநாடு போனாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அப்படிப் போகலாமா இல்லையா என்பதே இப்பதிவின் விவாதம்"
என்று ஒரு குத்துக்கரணம் அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

சிறிரங்கனின் பதிவிலேயே, "வன்னியன் போன்றவர்களுக்கு மூளை சுகமில்லை, அவர்களைச் சரியானபடி எங்காவது காட்டி வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும் ,சிறிரங்கனுக்கும் இராகரனுக்கும் தான் மூளை இருக்கிறது, அவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்" என்றும் ஒருவர் சொல்லிவிட்டு அதைப் பிறகும் வந்து நிறுவுவார்.

"பிரபாகரனின் மனுசி ஐரோப்பா சுற்றுகிறாள்" என்று இன்னொரு பதிவர்.
அண்மையில் கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது சம்பந்தமான பதிவொன்றில் ஒருவர்,
'சும்மா இருங்கோடாப்பா, அங்க பால்ராச்சை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம். ஆள் தப்பிறது கஸ்டம்தான்' என்ற பாணியிற் சொல்லிவிட்டுப் போகிறார். தாங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களை உண்மைபோல சிருஸ்டித்து அள்ளிவிட்டுக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் புளுகுகளை அவர்களே நம்பத் தலைப்பட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் தேனி மனோபாவத்திலிருந்து மாற்றமில்லாத பதிவுகள் வரும். தேனி மனோபாவம் என்பதற்குப் பல காட்டுக்களைக் காட்ட முடியுமென்றாலும், சுனாமி நேரத்தில் புலிகளில் 2000 பேர் கொல்லப்பட்டனர் என்று தாங்களே உருவாக்கிச் செய்தி போட்டதும் தொடர்ச்சியா அதைச் சொல்லிக்கொண்டிருந்ததும், பிரபாகரன் இறந்துவிட்டாரென்ற கதையை அரசதரப்பே பின்வாங்கிவிட்ட நிலையிலும்கூட அது உண்மையென்று தொடர்ந்து சொல்லிவந்ததும், பிரபாகரன் நோர்வேத் தூதுவரைச் சந்தித்த பின்னும், தமிழ்ப் புத்திசீவிகளைச் சந்தித்து சுனாமி மீட்புப்பணி பற்றிக் கதைத்த பின்னும், "அது பிரபாகரன் இல்லை. அவரைப்போல ஒருவரை வெளிக்கிடுத்தித்தான் புலிகள் நாடகமாடுகின்றனர்" என்று தொடர்ந்து சொல்லும் மனோபாவத்தைச் சொல்லலாம்.

இவர்களில் யாராவது சிறிரங்கன் சொன்னதைப் போல ஒரு விசயம் சொல்லியிருந்தால் கட்டாயம் என்னிடமிருந்து கண்டனமும் ஆதரவும் வந்திருக்கும். ஆனால் 'இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு அல்லது அதே உணர்வோடுதான் அது வரும்.

மேற்கண்டவர்களில் இருந்து சிறிரங்கனை ஓரளவு தனித்துப் பார்க்கலாம்.
என் பார்வையில் பலநேரங்களில் குழப்பகரமான பார்வையைத் தருவார். ஒருவர் தான் இந்தப் பேரில் எழுதுகிறாரா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பங்கள் தருவார். அதாவது வாசிக்கும் பதிவைப்பொறுத்து உடனடியாகவே அதீத உணர்ச்சிவசப்பட்டு (ஆதரவாகவோ எதிராகவோ) கருத்துச் சொல்வார்.
ஒரேயொரு காட்டு:

ஒருமுறை walkman க்கு என்ன தமிழ்ச்சொல் சரிவரும் என்று டோண்டு அவர்களோடு விவாதம் தொடங்கி சில சொற்களைப் பரிசீலித்துக் கதைத்தார். பின்வந்த ஒரு நாளில் நட்சத்திரக்கிழமையில் வசந்தன் பதிவில் தனித்தமிழ் பற்றியும் புலிகளின் தமிழ்ப்படுத்தலை முழுதாக ஆதரித்தும் (ஓரளவு பரப்புரைப் பார்வையிலும்) எழுதப்பட்ட பதிவொன்றில்
"வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்."
என்று பின்னூட்டம் போட்டிருந்தார்.
நாலோ ஐந்தோ மணித்தியாலம் தான் கழிந்திருக்கும். கறுப்பி, சொற்களைத் தமிழாக்குவதையும், புலிகளின் தமிழாக்கத்தையும் நக்கலடித்து ஒரு பதிவு போட்டிருந்தார். உடனேயே அதில் சிறிரங்கன் பின்னூட்டம் போட்டார். முழுதும் கறுப்பிக்கு ஆதரவாக. அதில் வானொலி, தொலைக்காட்சி போன்ற சொற்களே தேவையற்றவை, நேரடியாக றேடியோ, ரெலிவிஷன் என்றே பாவிக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு வசந்தன் பதவில் வந்து மதிகந்தசாமி 'றேடியோ' என்று எழுதியிருந்ததைக் குறித்துக்காட்டி, 'பார்த்தீர்களா? றேடியோ எண்டுதான் சாதாரணமாகப் பாவிக்கிறோம். எணடபடியா வானொலி எண்டு சொல்லிறது தேவையில்லை. றேடியோ எணடே பாவிப்போம்' என்றார்.

walkman க்குத் தமிழ்ச்சொல் உருவாக்க விவாதம் நடத்தியவர், புலிகளின் தமிழ்ச்சொல்லாக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டம் போட்டவர், அதுபற்றி முன்பு ஈழமுரசில் எழுதியதாகச் சொன்னவர், சில மணித்தியாலத்தில் முற்றிலும் எதிர்மாறான கருத்தை - அதுவும் பல்லாண்டுகளாக வழக்கத்துக்கு வந்துவிட்ட வானொலியையும் தொலைக்காட்சியையும் தேவையற்ற சொல்லாக்கமென்று கறுப்பியின் பதிவிற் சொல்கிறார். இரண்டு பதிவிலும் இடப்பட்டவை அவரது கருத்துக்கள் என்பதைவிட இரு பதிவுகளும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் என்றுதான் சொல்லலாம்.

இதைவிட, தமிழ்மண -நந்தவன மாற்றத்தின் போது சிறிரங்கன் அடைந்த குழப்பம்; தொட்டதுக்கெல்லாம் தன் வலைப்பதிவை முடக்குகிறார்கள், தூக்குகிறாரகள், தனக்கெதிராகச் சதி செய்கிறார்கள் என்று பதிவுகள் போட்டது; பொடியன்கள் பிரச்சினையில் எல்லோரும் கோமாளிகளாகவும் நகைச்சுவையாகவும் கருதிக்கொண்டிருக்க சிறிரங்கன் மட்டும் குய்யோ முறையோ என்று குதித்தது; பின் டக்ளஸ் - இதயவீணை - பொடியன்கள் என்று ஒரு தொடர்பைக் கொண்டுவந்தது என்று பலவற்றுக்குள்ளால் இப்புரிதலைச் சொல்லிச் செல்லலாம்.

இவை சிறிரங்கனை இழுக்காகவல்ல. மாறாக இப்படியாகவற்றுக்குள்ளால் தான் சிறிரங்கன் பற்றிய என்போன்றவர்களின் புரிதல் தொடர்கிறதென்பதைச் சுட்டவே.

இப்படியாக நான் புரிந்து வைத்திருக்கும் சிறிரங்கனிடமிருந்து, (மற்றவர்கள் அப்படித்தான் புரிந்தார்களா என்று தெரியாது) வெளிவரும் எந்தக் கருத்தையும் இரட்டிப்புக் கவனத்தோடே எதிர்கொள்வேன், அது எனக்கோ என் தரப்புக்கோ ஆதரவானதென்றாலுங்கூட.
****************************

இங்கு நானெழுதிய எதுவும் சிறிரங்கனை மட்டந்தட்டவோ, கேலி செய்யவோ இல்லை. என்போன்றவர்களின் புரிதல் எப்படியாக இருக்கிறதென்பதைச் சுட்டவே. அதுகூட 'உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற ஒற்றைவரி பாவித்தவர்கள் மேல் சடுதியாக வைக்கப்பட்ட விமர்சனத்தாலேயே.

இதில் சிறிரங்கன் பொய் சொல்கிறார் என்றுகூடச் சொல்லத் தேவையில்லை. இத்தகவலில் இருக்கக் கூடிய தவறுகள், இயல்பாகவே சிறிரங்கனுக்கிருக்கும் சடுதியாக உணர்ச்சிவசப்படும், குழப்பமடையும் தன்மையால் வந்திருக்கக் கூடிய பயம் என்பவற்றையெல்லாம் ஒரு சகவலைப்பதிவர் யோசிக்கலாம். அதைவிட இயல்பாக இருக்கக்கூடிய சந்தேகங்களும் சேரும்.

இந்த நிலையில், சிறிரங்கனின் இரண்டாவது பதிவு வருவதற்கு முன்னர் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு ஒரு பதிவர் தன் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில் என்ன பெரிய தவறைக் கண்டீர்கள்? 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒப்பாரி வேறு. இப்படிக் கேட்டதுக்கூடாக சிறிரங்கனின் கூற்றுமீது நான் சந்தேகம் கொள்ளத்தக்க காரணங்களாகக் கருதியவை மட்டில், நீங்கள் சிறிரங்கனின் கூற்றுக்களை உண்மையென்று முழுமனதாக நம்புவதாக எடுத்துக்கொண்டு, உங்களிடம் அவைபற்றிக் கேட்டு, இறுதியில் 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒரு கேள்வியோடு முடிக்கலாம். சிறிரங்கன் மட்டுமன்றி அதே வகைகுள் நான் அடக்குபவர்களின் கருத்தையும் தூக்கிக்கொண்டு கேட்கலாமோ? அப்படியென்றால்,

"அண்மைக்காலத்தில் இராணுத்தாற் கொல்லப்படுபவர்கள், புலிகளாகவோ புலிகளின் செயற்பாட்டாளராகவோ அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தெரிந்தெடுக்கப்படடே கொல்லப்படுகிறார்கள்"
என்ற கருத்து முதற்கொண்டு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
இப்படியே மாறிமாறி ஒராளை ஒராள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
****************************
இதில் சம்பந்தப்பட்டவர்கள் வலைப்பதிவுலகுக்குப் பழையவர்கள் என்றபடியால் சுட்டியெல்லாம் போட வேண்டியதாக நான் நினைக்கவில்லை.

Labels: , ,


Thursday, May 25, 2006

புலிகளின் இன்னொரு தளபதி இறப்பு.

நேற்று (24.05.06) புலிகளின் இன்னுமொரு முக்கிய தளபதி சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீரமணி எனப்படும் இவர் தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை புலிகளின் உயர்மட்ட தளபதியான கேணல் இரமணன் எதிரிகளால் பதுங்கிச் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். புலிகள் இயக்கத்தில் கேணல் நிலையில் இறந்த நான்காவது தளபதி இவராவார். எனினும் பொதுவாக ஊடகங்களில் அதிகம் பிரபலமில்லாத தளபதி இவர்.

நேற்று தவறுதலான வெடிவிபத்தில் சாவடைந்த வீரமணி புலிகளின் முக்கியமான போர்த்தளபதி. நிறைய களங்கள் கண்டவர். நிறைய களங்களை வழிநடத்தியவர். ஓரளவு பிரபலமானவர். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவிற் கடமையாற்றி லெப்.கேணல் சேகரின் வீரச்சாவின்பின் அப்படையணிச் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டவர். வடபோர் முனையில் நடந்த பல சமர்களைத் தலைமை தாங்கி நடத்தியவர். சிறிலங்கா இராணுவத்தின் இறுதிப் பெருநடவடிக்கையான தீச்சுவாலையை முறியடித்த சமரில் முக்கியமான தளபதியாகச் செயற்பட்டவர்.
பின் வடமுனைப் போரரங்கின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் இளவயதிலேயே திறமைகளை வெளிப்படுத்தி உயர் நிலையை அடைந்தவர்.

குறிப்பிட்ட சில நாட்களுள் புலிகளுக்கு இரண்டாவது பெரிய இழப்பு.

இத்தளபதிகளுக்கு வீரவணக்கம்.

*******************
புதினத்தில் வெளிவந்துள்ள விவரம்:

கேணல் வீரமணி 1990 ஆம் ஆண்டு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் கைப்பற்றப்பட்ட தாக்குதல்,

1991 இல் வவுனியா சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்கள்,

ஆகாய கடல் வெளிச்சமர், மின்னல் எதிர்த்தாக்குதல், வன்னி விக்கிரம 1,2,3 எதிர் நடவடிக்கைகள்,

1992 இல் நடந்த கட்டைக்காடு சிறிலங்கா படைமுகாம் தகர்ப்பு தாக்குதல் வேவு நடவடிக்கை,

1993 இல் நடந்த தவளை நடவடிக்கைக்காக பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கைகள்,

1995 இல் நடந்த ராம்சக்தி எதிர்நடவடிக்கை,

திருகோணமலை படை முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மீதான தாக்குதல்கள்,

சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையில் வேவுப்பணி,

1997 கிளிநொச்சி படைமுகாம் மீதான வேவு நடவடிக்கைகள்,

மன்னார் படைமுகாம்கள் மீதான தாக்குதல்கள்,

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், வேவு நடவடிக்கைகள்,

1998 இல் நடந்த பரந்தன் கிளிநொச்சி படையினர் மீதான ஊடறுப்புத்தாக்குதல்,

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை,

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை,

1999 இல் வவுனியா படைநிலைகள் மீதான வேவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

லெப். கேணல் வீரமணி ஒயாத அலைகள் - 03 இல் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட்ட பகல் நேரத்தாக்குதலில் ஊடறுப்பு அணிப்பொறுப்பாளராக விளங்கினார்.

2000 ஆம் ஆண்டில் முகாவில் முன்னரங்க நிலைப்பொறுப்பாளராக செயற்பட்டார்.

ஆனையிறவுத் தளம் வெற்றிகொள்ளப்பட்ட தாக்குதலில் அணிகளின் பொறுப்பாளராக விளங்கினார். ஓயாத அலைகள் - 04 நடவடிக்கையிலும் முனைப்பாக வீரமணி செயற்பட்டார்.

அதன்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதியாக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

தீச்சுவாலை முறியடிப்புச்சமரில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இறுதியாக நாகர்கோவில் களமுனைத்தளபதியாக லெப். கேணல் வீரமணி செயற்பட்டு வந்தார்.

Labels: , ,


Friday, May 12, 2006

கடலில் நடந்த கலவரம்

மே மாதம் பதினோராம் திகதி தமிழக சட்டசபைத் தேர்தல் ஆரவாரங்களுக்குள் தமிழீழக் கடலில் ஓர் ஆரவாரம் நடந்து முடிந்திருக்கிறது. சிறிலங்காக் கடற்படை மீது புலிகளின் தாக்குதலில் இரு டோறா படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதுகூட அவ்வளவு முக்கியமன்று. ஆனால் அதைத்தொடர்ந்து வந்த செய்திதான் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏறத்தாழ 400 பேர்வரையான (பின்னர் இது 700 பேர் என்று தகவல் வந்துள்ளது) இராணுவத்தினருடன் ஒரு கப்பலைப் புலிகள் சுற்றிவளைத்துள்ளனர் என்ற செய்தி பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களாலும் சொல்லப்பட்டன. பின்னர் அக்கப்பல் பன்னாட்டுக் கடலுற்பகுதி நேர்ககித் தப்பி விட்டதாகச் செய்திகள் வந்தன. புலிகள் தரப்புச் செய்தியும் அப்படித்தான் சொல்லிற்று.

தப்பிச் செல்லல் பற்றி வெளிவந்த செய்திகளின் படி பார்த்தால் ஏதோ உட்குத்து (நன்றி குழலி மற்றும் வலைப்பதிவுகள்) இருக்கும் போல் தெரிகிறது.
ஒன்றில் புலிகளே தப்பிச் செல்ல விட்டிருக்க வேண்டும். அல்லது உடனடியாகவே பல அழுத்தங்கள் புலிகள் மேல் பாவிக்கப்பட்டிருக்க வேண்டும். என்ன இருந்தாலும் 700 இராணுவத்தினருடன் ஒரு கப்பலைத் தகர்ப்பதென்பது உலகளவில் பாரதூரமான விசயம். யாழ்ப்பாணத்தைப் புலிகள் நெருங்கிய 2000 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நடந்தது நினைவுக்கு வருகிறது.


இதைவிட புலிகளின் சண்டைப்படகுகளினதும் அந்தக் கப்பலினதும் வேகத்தைக் கருத்திற்கொண்டால் தப்பிச் செல்லல் சாத்தியமேயற்றதென்று உணரலாம்.
அதைவிட, தம்மீது கடற்படை தாக்கியதாலேயே தாம் திருப்பித்தாக்கியதாகப் புலிகள் சொல்கின்றனர். புலிகள் தரப்பில் நாலு பேர் பலியாகியதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். அதாவது தற்காப்புத் தாக்குதலில்தான் இரு டோறாப்படகுகளும் தாக்கப்பட்டன என்பது புலிகளின் வாதம். இந்நிலையில் கப்பலைச் சுற்றிவளைப்பதோ கைப்பற்றுவதோ தகர்ப்பதோ பெரிய விசயமாகிவிடும்.

அல்லது, கப்பல் சுற்றிவளைக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். அதாவது புலிகளுடன் பாதுகாப்புக் கலங்கள் மோதும்போதே ஏனைய பாதுகாப்புக் கலங்களுடன் கப்பல் அழ்கடல் நோக்கிச் சென்றிருக்க வேண்டும். இந்நிலையில் கப்பல் சுற்றிவளைக்கப்பட்டது என்ற கதை மிகையானது. பார்க்கப்போனால் இதுதான் உண்மைபோலுள்ளது. ஆழ்கடலுகுச் சென்ற கப்பலுக்கு இந்தியப்படை உதவிக்கு வந்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இவை நடந்தபின் வழமைபோல (இது யுத்தம் நடந்த காலத்து 'வழமைபோல'. கிட்டத்தட்ட யுத்தம் தொடங்கி விட்டதை உணர்த்துகிறது) சம்பந்தமில்லாமல் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது அரசபடை. கிளிநொச்சியில் வந்து மூன்றுமுறை வான்தாக்குதலைச் செய்துள்ளதுடன் கிழக்கில் எறிகணைத்தாக்குதலையும் நடத்தியுள்ளது. இதில் கிளிநொச்சியில் வான்படைத்தாக்குதல் நடந்தது முக்கியமானது. என்னதான் போலியானதென்றாலும் உலகுக்கு கிளிநொச்சிதான் புலிகளின் தலைமையகம். ஆக, புலிகளின் தலைமையகம் மீதே அரசபடை வான்தாக்குதல் நடத்திவிட்டது. (ஏன் கிளிநொச்சியில் நடத்தாமல் திருமலையில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது என்று கொஞ்சா நாட்கள் முன் யாரோ குழம்பியது போலிருந்ததே?)



வழக்கம்போல கண்காணிப்புக்குழு புலிகளின் கடல் நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கைவிட்டுள்ளது. புலிகளும் பதில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். கடலில் கடற்படை மீதான தாக்குதலை மட்டும் கண்காணிப்புக்குழு கண்டித்ததையும், அதைத்தொடர்ந்து அரசபடை மக்கள் குடியிருப்புக்கள் மீது மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்திய வான், தரைத்தாக்குதல்கள் பற்றி எதுவுமே சொல்லவில்லையென்பதையும் சுட்டிக்காட்டிய புலிகள், கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடற்படை மீது தாக்குதல் நடந்தபோது அக்கலங்களில் கண்காணிப்புக் குழுவினரும் இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. அவர்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் கண்காணிப்புக்குழு காட்டமான அறிக்கை வெளியிட்டது. ஆனால் புலிகள் தரப்போ, ஏற்கனவே பலமுறை, கண்காணிப்புக் குழுவினரை கடற்படையினரின் கலங்களில் பயணிக்க வேண்டாமென்று அறிவுறுத்தியதாகச் சொல்கிறது, கண்காணிப்புக்குழுவும் புலிகளால் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஒத்துக்கொண்டது.

கண்காணிப்புக்குழு கடற்படையினரின் கலங்களில் பயணிப்பது அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடனே என்று சொல்லும் புலிகள், தாங்கள் கடற்பயணங்கள் மேற்கொண்டபோது அவ்வாறான பாதுகாப்பு ஏதும் கண்காணிப்புக்குழுவால் தரப்படவில்லையென்கின்றனர். எனவே படையினருக்கும் கண்காணிப்புக்குழு பாதுகாப்பு வழங்கக் கூடாதென்று சொல்லும் புலிகள், தங்கள் நடவடிக்கைகளில் கடற்படை குறுக்கிட்டால் தாக்குதல் நடத்துவோம் என்பதைப் பலமுறை தெரிவித்துள்ளனர். அப்படியான சந்தர்ப்பங்களில் சேதங்களைத் தவிர்க்கும் முகமாக கடற்படையினரின் கலங்களில் கண்காணிப்புக் குழுவினரைப் பயணிக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனாலும் கண்காணிப்புக்குழுவினர் தொடர்ந்தும் கடற்படையினரது கலங்களில் பயணம் செய்து வந்துள்ளனர்.

******************************
இவை பற்றி எனது கருத்துக்களை அடுத்த பதிவாக விரிவாக எழுதுகிறேன்.

இப்போது ஒரு பாடலைக் கேளுங்கள்.





படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,


Tuesday, April 25, 2006

தொடரும் தாக்குதல்கள்.

முப்பதாயிரம் வரையான மக்கள இடப்பெயர்வு.

திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது இரண்டாவது நாளாக அரசடையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்)மாலையும் இன்று (புதன்)காலையும் நடத்தப்பட்ட வான்தாக்குதலிலும், தொடர்ச்சியாக நடத்தப்பட் கடற்தாக்குல், மற்றும் எறிகணை வீச்சுக்களினாலும் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நிறையப்பேர் காயமடைந்துள்ளதாகவும், சம்பூர் மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களினால் முப்பதாயிரம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனரென்றும் அவர்களைப் பராமரிக்கும் பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டால், பதிலுக்குத் தற்காப்புத் தாக்குதல் நடத்தவேண்டிய நிலைவருமென புலிகள் அறிவித்துள்ளனர்.

Labels: ,


இலங்கையில் மீண்டும் போர்?

சிறிலங்கா முப்படைத் தாக்குதலில் 13 பேர் பலி.
(தரவேற்றப்பட்டது)

இன்று இலங்கை நிலைமை மோசமடைந்து விட்டது.
நண்பகல் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் (தற்கொலைத் தாக்குதல் எனச் சொல்லப்படுகிறது) இராணுவத்தினரில் எண்மர் கொல்லப்பட்டனர், இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உட்பட 27 பேர் காயமடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பின் மாலை திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது சிறிலங்காவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தியுள்ளன. சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது குண்டுவீச்சு நடத்தியுள்ளன. அத்தோடு கடற்படையினரும் பீரங்கித்தாக்குதலை இப்பகுதிகள் மீது நடத்தியுள்ளனர்.
தரையிலிருந்தும் எறிகணைத்தாக்குதல்கள் விடுதலைப்புலிகளின் பகுதி மீது நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ஒரு நிழல்யுத்தம் நடந்து வந்துகொண்டிருந்தது. டிசம்பர் அனர்த்தங்களின் பின் சற்று ஓய்ந்திருந்த பிரச்சினை கடந்த ஒரு மாதமாக மீண்டும் தொடங்கியது. படையினரின் மீதான கிளைமோர் தாக்குதல்களும், புலிகளின் மீதான கிளைமோர் தாக்குதல்களும் நடந்த அதேவேளை, படையினரால் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வந்தனர்.

கொழும்பில் நடந்த தாக்குதலும், விடுதலைப்புலிகளின் பகுதிமீது வான்தாக்குதலுட்பட நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலும் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன.
*************************

திருகோண மலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரண்டாவது நாளாகவும் புதன்கிழமை காலை வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்தாக்குதலும் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா வான்படை வீசிய குண்டொன்று முஸ்லீம் கிராமம் ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளது.

***********************
இதேவேளை செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பில் வைத்து பிரபல தமிழ் மருத்துவர் அருளானந்தம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
**********************
தொடர்புள்ள செய்திகள்:
SRI LANKA VIOLENCE ESCALATES
12 bodies of civilians recovered from Muttur east
Moulavi killed, 8 wounded in Wednesday Kfir strike

Labels: ,


Monday, April 17, 2006

மக்களின் இலக்கியக்காரன்

****நட்சத்திரப் பதிவு - 01***
நட்சத்திரக் கிழமையின் முதற்பதிவு இப்படியொரு அஞ்சலிப்பதிவாயிருக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஈழத்தின் மூத்த கவிஞர் நாவண்ணன் மரணமடைந்தார். கவிஞர் நாவண்ணன் என்ற பெயர் பெரும்பாலானோருக்குத் தெரியாமலிருக்கும். ஈழத்தைச் சார்ந்தவர்கள்கூட அனைவரும் அறிந்திருப்பரென்று நான் நினைக்கவில்லை. அவர் மறைவையொட்டி வந்த செய்தியொன்றைக் கீழே தந்து மேலும் தொடர்கிறேன்.
*******************************************
போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன்.
தமிழன் சிந்திய இரத்தம்,
கரும்புலி காவியம்,
இனிமைத் தமிழ் எமது,
ஈரமுது
உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட "வலியும் பழியும்" என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செலவிட்டார். தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காகவும், அதன் பின்னர் கரும்புலி காவியம் நூல் உருவாக்கம், கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்.

செய்தி: புலிகளின் குரல்
*********************************

லெப்.மாலதியின் உருவச்சிலை வடிவமைப்புக்காக தளபதி கேணல் ஜெயம் அவரிகளிடம் பரிசு வாங்கும் கலைஞர் நாவண்ணன்.

கவிஞர் நாவண்ணனின் இலக்கியப்பணி நீண்டது. உண்மையில் அவரைக் கவிஞர் என்றுமட்டும் சொல்வதிலும்பார்க்க, பல்துறைக் கலைஞரென்றே சொல்லவேண்டும். அவ்வளவுக்கு பலதுறைகளில் ஈடுபாட்டுடன் உழைத்த மனிதர். 1985 ஆம் ஆண்டு சிங்கள அரசபடையாற் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வங்காலைக் குருவானவர் அருட்திரு மேரிபஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலான "தீபங்கள் எரிகின்றன" என்ற நூலின் மூலம்தான் எனக்கு நாவண்ணன் அறிமுகமானார்.
பின் "புலிகளின் குரல்" வானொலியிற் பணியாற்றிய காலத்தில் மிக வீச்சுடன் செயலாற்றினார். மிக அருமையான தாயகப்பாடல்களை எழுதியுள்ளார்.

"தமிழன் சிந்திய இரத்தம்" என்ற தொடர் ஈழத்தவர்களின் அவலங்களை ஆவணப்படுத்திய முக்கிய நிகழ்ச்சி. இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றில் முக்கியமானது இத்தொகுப்புத்தானென்பேன். தனியே ஓர் இனப்படுகொலையையோ அல்லது ஒட்டுமொத்தமானவற்றையோ திரட்டிப் புள்ளிவிரவரங்களோடு தொகுப்பட்டவற்றைத்தாண்டி, தனிமனிதர்களின் அவலங்களை அவர்களின் குரலிலேயே ஆவணப்படுத்தியதும், போர் உக்கிரமடைந்தபின்னும் தனிமனிதர்கள் மேல் நடத்தப்பட்ட கொடுமைகளின் சாட்சியத்தைப் பேணியதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

"மட்டக்களப்பில் குடும்பத்தோடு சேர்த்து வீடு கொழுத்தப்பட்டபோது சிறுவயதில் தப்பிய ஒருவன், தன் குடும்பம் முழுவதுமே அதில் கொல்லப்பட்டதாக நினைத்திருந்தவன், மணலாற்றுச்சண்டையில் தன் சகோதரியைப் போராளியாகவே சந்தித்த சம்பவங்கள் (இதன்மூலம் தமிழ்ச்சினிமாவின் சில சம்பவங்கள் சாத்தியமுள்ளவையென்று நம்பத்தலைப்பட்டவன் நான்) உட்பட ஏராளமானவற்றை ஆவணப்படுத்தியவர் நாவண்ணன். உண்மையில் கிழக்கு மக்களின் அவலங்களும் போராட்டப் பங்களிப்பும் வடக்கோடு ஒரேதளத்தில் வைத்துப் பார்க்க முடியாதென்ற தெளிவை எனக்குமட்டுமன்றி நிறையப் பேருக்குத் தந்தது அந்நிகழ்ச்சி. எல்லைப்புறத் தமிழர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளும் இடங்களைப் பறிகொடுத்து அவர்கள் வெளியேறியதும் பலர் வெளியேறாமலே வீம்பாக இருந்து மாண்டதும் உட்பட எல்லைப்புறத் தமிழர்களின் சிலபாடுகளையாவது வெளிக்கொணர்ந்த தொகுப்பு அது.

ஏற்கனவே 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பெயரில் கவிஞர் நாவண்ணன் புத்தகமொன்று வெளியிட்டிருந்தார். அதில் ஆயுதப்போராட்டம் வீரியமடைய முந்திய காலப்படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தார். பின் அதே பெயரில் ஒலிவடிவில் அவர் தொகுத்த தொகுப்புத்தான் புலிகளின் குரல் வானொலி நிகழ்ச்சி. இதுவரை அது புத்தகமாக வரவில்லையென்று நினைக்கிறேன். விரைவில் வரவேண்டும். அனாலும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடிக்குரற் சாடசியங்களடங்கிய ஒலிப்பேழையும் வெளியிடப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்.

அதைவிட 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மடுத்தேவாலயப் படுகொலை பற்றியும் அவரொரு சிறந்த தொகுப்பைச் செய்திருந்தார். கையெழுத்துப்பிரதியாக இரண்டொரு பக்கங்கள் வாசித்தேன். அது இன்றுவரை வெளிவரவில்லை. வெளிவராததற்கு இருக்கும் காரணம் நியாயமானது, என்றாலும் ஒருநாள் வெளியிடப்படுவதற்காகவேனும் அவர் தொகுத்துவைத்த அப்புத்தகத்துக்காக அவருக்கு நன்றி.

கரும்புலி காவியம் என்ற பெரும்பணியைச் செய்ய முடிவெடுத்தபின் அதற்கான தரவுகளுக்காக வன்னியின் மூலைமுடுக்கெங்கும் புழுதி குடித்து அலைந்த கவிஞரின் பாடுகளை நன்கு அறிவேன். இவையெல்லாமே காசு கிடைக்காத தொழில்கள். அவரது அலைச்சலுக்கோ அந்தக் காவியத்துக்கோ ஊதியமேதுமில்லை. வரலாற்றை ஆவணப்படுத்தும் திருப்தியைத் தவிர வேறொன்றுமில்லை.

நாவண்ணனின் பாடல்கள் எனக்கு மிகப்பிடித்தமானவை. வவுனிக்குளத் தேவாலயப் படுகொலையை நினைந்து உடனடியாகவே அவர் இயற்றி, திருமலைச் சந்திரன் பாடிய பாடலைக் கேட்டு உருகாதவர் யாருமிருக்க முடியுமா?

"
கன்னங்கள் தாங்கிய காலங்கள் போதும். -எம்
சன்னங்கள் வென்றிட உம்தயை தாரும்."

(அதைத் தேடிப்பார்த்தேன். வலையிலும் இல்லை. என்னிடமிருக்கும் தொகுப்பிலுமில்லை.)

கவிஞர் நாவண்ணனின் "அக்கினிக் கரங்கள்" என்ற நூல் 01.03.2006 அன்று கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இதுதான் அவரின் கடைசி நூலென்று நினைக்கிறேன்.

சூசைநாயகம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் நாவண்ணனுக்கு ஆறு பிள்ளைகள். ஐந்துபேர் பெண்கள். அவரின் ஒரேமகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்) களத்திலே வீரச்சாவடைந்துவிட்டார்.
*******************


"
ஊர் கொடுத்தார் புலவருக்கு
உவந்தளித்தார் மிடி தீர
தேர் கொடுத்தார், திருக் கொடுத்தார்,
தெரு வெல்லாம் பவனி வர;
கார் நிறத்துக் கரி கொடுத்தார்;
காற்று விசைப் பரி கொடுத்தார்
"

என்று வியந்து தொடங்குகிறது அவரது "கரும்புலி காவியம்".

"காவியமாய் புதுப் புறம்பாடி" எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"

என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.
*****************************

கவிஞர் நாவண்ணன் அவர்களின் கவிதையொன்று.
(நன்றி நூலகம்)

இவனா என் பிள்ளை!


அம்புலியைக் காட்டி ஆவென்ன வைத்து
"அச்சாப் பிள்ளை "யென "ஆய்தந்த பிள்ளை"
கம்பால் அடித்து கண்டித்து பின்னர்
கண்­ர் துடைத்து அணைத்திட்ட பிள்ளை;
"வம்புக்குப் போகாதே வலுச்சண்டை செய்யாதே
வாய்காட்டாதே" யென்று வளர்த்திட்ட பிள்ளை;
பெம்பகைவர் படைஅழிக்கும் வீரனாம் எனக்கேட்டு
வியக்கின்றேன் இன்று, இவனா என் பிள்ளை!

இருட்டுக்கு அஞ்சியவன் இரவானால் தனியாக
இருப்பதற்கு துணைகேட்ட பயங்கொள்ளிப் பிள்ளை
விரட்டிக் கலைத்தாலும் விட்டகலாம் தாய்சேலை
வீம்போடு அவளோடு அலைகின்ற பிள்ளை;
பரட்டைத் தலைவான் படிப்புக்கு ஒளித்திடுவான்
பசியின்றி விளையாடித் திரிகின்ற பிள்ளை;
முரட்டுத் துவக்கோடு 'சென்றி'யிலே நின்று
முழிக்கின்றான் இன்று இவனா என்பிள்ளை!

விதம்விதமாய் சமைத்து விருப்பு சுவையறிந்து
வேலைக்குக் கொடுத்தாலும் " இது என்ன
இதம்இல்லை வேண்டாம் எனக்கு" என்றுகூறி
எடுத்தெறிந் தெழுகின்ற என்பிள்ளை.
பதம்பாகம் இல்லாது பசிக்கே உணவென்று
படையலாய் அவித்த எதையேனும்
நிதம் உண்கின்றானாம் நிம்மதியாம் அவனுக்கு
நினைக்கின்றேன் இன்று, இவனா என்பிள்ளை!

நாய் குரைக்க ஓடிவந்து நடுங்கிப் பதறியவன்
நாலுபேர் முன்நிற்க துணிவில்லாக் கோழை
தாய்க்கும் எனக்கும் நடுவினிலே துயிலுவதே
தனக்குச் சுகம் என்று எண்ணியவன் இரவில்
பாய் நனைப்பான், எழப்பயந்து படுப்பான் எழுப்பாது;
பட்டாசு வெடிக்கே பலகாதம் ஓடுபவன்
தாய்நாடு காக்கும் தானையிலே முன்னணியில்
திகழ்கின்றான் இன்று இவனா என்பிள்ளை?

இப்படியாய் மற்றவர்கள் இகழ்ந்துரைக்கும் குணங்களுடன்
இளப்பமாய் வாழ்ந்திட்ட என்னுடைய பிள்ளை
தப்படிகள் இல்லாது தக்கபடிதான் வளர்த்த
தத்துவத்தை வியக்கின்றேன் இவனா என்பிள்ளை!
எப்படித்தான் இவனுக்குள் இதுவெல்லாம் தோன்றியதோ?
இவர்சார்ந்த இடமே காரணமாம் என்றார்;
அப்படியாய் புதுமாற்றம் அடைந்த அவனுக்கு
அப்பன் நானன்றோ? அவனே என்பிள்ளை!

Labels: , , , , ,


Saturday, January 14, 2006

விடுதலைப்புலிகளின் தைத்திருநாள்

இன்று விடுதலைப்புலிகளின் படையணிகள் தைத்திருநாளைக் கொண்டாடின.

விடுதலைப்புலிகளின் படையணிகள் இன்று தங்களது முகாம்களில் தைத்திருநாளைக் கொண்டாடின. வழமையாக முகாம்களில் இந்நாள் கொண்டாடப்படுவதுண்டு.

இம்முறை சிறப்பு ஆயுதப்பயிற்சிக் கல்லூரியில் படையணிகள் தங்களது தைப்பொங்கலைக் கொண்டாடின.
இன்றுகாலை ஆறு மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் இந்நிழ்வு தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

அதுசம்பந்தமான படங்கள் சில:







படங்களைப் பெரிதாக்க அவற்றின் மேல் அழுத்தவும்.
------------------------------
மேலதிக செய்திக்கும் படங்களுக்கும் இங்கே அழுத்தவும்.
------------------------------
செய்தியும் படங்களும்: புதினம்.


Labels: , ,


தைத்திருநாள் திருவிழா நிகழ்ச்சிகள்.

கிளிநொச்சியில் இன்று காலை தொடங்கப்பட்ட தமிழர் திருநாள் வெகு விமரிசையாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று காலை தொடங்கப்பட்ட இவ்விழா விடுதலைப்புலிகளின் நிதித்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பண்பாட்டு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. தமிழரின் பாரம்பரிய கலைகள் இதில் இடம்பெற்றன.


தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்விழாவில் இன்று இரவு நிறையக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ஈழத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலைஞர்கள் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பிக்கின்றனர்.

-------------------------------
செய்திகள், படங்கள்: புதினம், சங்கதி.
-------------------------------
மேலதிக செய்திகளுக்கும் படங்களுக்கும் செல்ல,
புதினம்
சங்கதி


---------------------------------------------

Labels: , ,


Sunday, December 25, 2005

ஈழத்தில் நடப்பவை....

நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர். இக்கொலைக்குக் காரணமானவர்கள், சிறிலங்காவின் இராணுவப் புலனாய்வுத் துறையினரும் அவர்களின் கைக்குகூலிகளாக இயங்கிவருபவர்களுமேயெனப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இது கருணா குழுவின் வேலையென்று சொல்கின்றனர்.

இதுதொடர்பாகக் கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளனர் புலிகள். மேலும் அவருக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" விருது இன்று மாலை வழங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்ட மூன்றாவது மாமனிதர் விருதுக்குரியவர் ஜோசப் பரராசசிங்கம். ஏற்கெனவே இக்காலப்பகுதியில் பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான தராகி எனப்படும் சிவராம் மற்றும் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோர் கொல்லப்பட்டவர்களாவர்.
-----------------------------------------

மன்னாரில் அண்மையில் நடைபெற்ற கடற்படை மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பேசாலைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். நால்வர் காணாமற்போயிருந்தனர். அவ்வாறு காணாமற்போன நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் இன்று அப்பகுதி மக்களாற் கண்டுபிடிக்கப்பட்டனர்.
4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி), கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மற்றும் மாணவி அந்தோனிக்கா ஆகியோரே வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரே இக்கொலைகளுக்குக் காரணமென மக்கள் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றிவளைப்பிற் கைதுசெய்யப்பட்டவர்கள் பலத்த அடிகாயங்களோடு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பேசாலை - தலைமன்னார்ப் போக்குவரத்தை கடற்படையினர் முற்றாகத் தடைசெய்துள்ளது.
------------------------------------

யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் நேற்று நடந்த மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஐவரை தாம் சுட்டுக் கொன்றிருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தோடு ஐவரின் சடலங்களையும் இராணுவம் யாழ். மருத்துவமனையில் ஒப்படைந்திருந்தது.

ஆனால் இன்றுகாலை அச்சடலங்களில் ஒன்று தன் மகனுடையதென்று அவரின் தாயார் அடையாளம் காட்டியுள்ளார். தனது மகன் யாழ். மத்திய கல்லூரியின் இரவுக் காவலாளியாக வேலை பார்ப்பவரென்றும், மாலை இரவுணவை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்ற மகன் திரும்பி வரவில்லையென்றும் தெரிவித்துள்ளார். அவரது சடலம் யாழ் மத்திய கல்லூரிச் சுற்றாடலில் இருந்தே யாழ்.வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏனைய நால்வரும்கூட அப்பாவிகளாக இருக்கலாமென்ற ஐயம் நிலவுகிறது.

இதேவேளை யாழ்த் தாக்குதல்களுக்கு உரிமைகோரும் 'பொங்கியெழும் மக்கள் படை' இன்று எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த ஐவரும் அப்பாவிகளென்றும், அவர்களுக்கும் தாக்குலுக்கும் சம்பந்த்மில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு, அப்பாவிகளைக் கொன்று அவர்கள்மேல் பழிபோடும் இராணுவத்தின் இச்செயலுக்குப் பதிலடியாக 50 இராணுவத்தினரை தாம் கொல்லப்போவதாக அவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகவச்சேரியிலும் நேற்று இளம்பெண்ணொருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியிருந்தார்.
-----------------------------------

புரிந்துணர்வு ஒப்பந்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மோசமான நிலையில் இது மேலும் வன்முறைகளைத் தூண்டிவிடுமென்ற அச்சம் நிலவுகிறது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அலுவலகத்துள் அத்துமீறி நுழைய முற்பட்டார்கள் என்றும், வன்முறையைத் தூண்டிவிட்டார்களென்றும் கூறியுள்ள அவர்கள், அப்படிச் செய்பவர்கள் சிலரேயென்றும் அவர்களைக் கண்டறிந்து இராணுவம் கைதுசெய்ய வேண்டுமென்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.
-------------------------------------------


இதேவேளை, யாழ். இராணுவ வன்முறைகளுக்கு எதிர்ப்பு- நாளை முதல் அரச பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். அது தொடர்பான விரிவான செய்தி:

யாழில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்கள் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசியல்வாதிகளின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையானது, தமிழின அழிப்பை பல்வேறு வழிமுறைகளிலும், சமாதானம் என்ற வெற்று முழக்கத்தை எழுப்பிக்கொண்டு பேரினவாத ஒடுக்குதலின் உச்சக்கட்டமாகிய தமிழின அழிப்பிற்கான போருக்கு மிகநுட்பமாக திட்டமிட்டு தயாராகிவிட்டது.
இதன் முதற்கட்டமாக கொடுமையான வன்முறைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.


தாமே உறுதிப்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுலாக்காமல் விடுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகமான தந்திரமாகும். அத்துடன் பேரினவாத்திற்கு ஏற்ற வகையில் இராணுவ நோக்கில் தமக்கு சாதகமாக உடன்படிக்கையை வளைத்து விடவும் திட்டமிடப்படுகின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடிநாதமாக விளங்குவது மக்களது இயல்பு வாழ்க்கையே.

இதனை எவ்வகையிலும் சிதைத்து தமிழ்மக்கள் மீது வன்முறைகளையும், அச்சுறுத்தலையும் பிரயோகிப்பது தமிழ்மக்கள் மீதான போரின் முதற்கட்டமாகும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின், நிழலாகத் தொடர்ந்த தமிழின விரோதக் செயற்பாடுகள், தமிழர் தாயகமெங்கும் இராணுவ வன்முறை வெளிப்பாடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
கீழே தரப்படும் சம்பவங்கள் பேரினவாதத்தின் கொடுரத்தை தெளிவாக்குகின்றன.

  • அண்மையில் புத்தூர் கிழக்கில் குடும்பப் பெண் மீதான படையினரின் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியும் அதனைத் கண்டித்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலும்,
  • நீர்வேலியில் விவசாயிகள் இருவர் கொல்லப்பட்டமை,
  • தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட வீடியோ கடை உரிமையாளர் உட்டபட கல்லூரி அதிபர்கள் இருவர் கொல்லப்பட்டமை,
  • மிருசுவிலில் சிறுமி மீதான பாலியல் முயற்சி,
  • புங்குடுதீவில் தர்சினி என்னும் இளம்பெண் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை,
  • இப்பெண்ணின் உறவினருடன் பெற்றோருக்கு ஆதரவு கூற செல்ல முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்,
  • பல்கலைக்கழகச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு பொது மக்களும் மாணவர்களும் தாக்கப்படுதலை கண்டித்து போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவிவிடம் முறைப்பாடு செய்ய அமைதியான முறையில் ஊர்வலத்தில் சென்ற யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மீதான காட்டுமிராட்டித்தனமான தாக்குதலையும், துப்பாக்கிச்சூட்டினையும் படையினர் மேற்கொண்டமை.
  • ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் (இதே நாளன்று இனவெறி கொண்ட சிங்களத் தேசப்பற்றாளர் இயக்கம் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய வேண்டும் என்று கூறி கொழும்பில் நடாத்திய ஊர்வலத்திற்கு படையினர் ஒத்துழைப்பையும் பாதுகாப்பினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது).
  • இதற்கு அடுத்த நாள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியமை.
  • முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சாரதிகள் மீது யாழ் நகரத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதல், அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டமை.
  • தமது விளையாட்டு மைதானத்தினூடாக படையினர் பாதுகாப்பு அரணை அமைத்த போது ஹாட்லிக் கல்லுரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தபோது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள்.
  • நல்லூர் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றலின் பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் மீது தாக்குதல்.
  • தனியார் காணிகளின் ஊடாக வேலி பிரித்து சென்று வீடுகளில் உட்புகுந்து மோசமான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களை உடற்சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்துவது.
  • பரவலாக யாழ். குடாநாடெங்கும் மக்ளது சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக வழிமறிப்புக்கள், வீதித் தடைகள், உடற்சோதனை, தன்னிச்சையான கைதுகள், கண்மூடித்தமான தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்தல்.
  • பணிபுரிந்து வீடு திரும்பும் ஆண் அரச ஊழியர்கள் உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுதல்.
  • படையினரின் இத்தாக்குதல் செயற்பாடுகளின் போது குண்டர்கள் போன்று கொட்டன்கள், சைக்கிள் செயின், கத்திகள் ஆகியவற்றுடன் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு காடைத்தனம் புரிகின்றமை.
  • இராணுவ புலனாய்வுத் துறையினராலும், தேசத்துரோகக் குழுக்களாலும் திட்டமிடபட்ட வகையில் இராணுவ உயர் மட்டத்தினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுகின்ற தேசப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள்.

இவற்றில் இருந்து எமக்கு தெளிவுபடுவது என்னவெனில், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை சிறிலங்கா அரசின் சார்பில் படைத்தரப்பு கையாள்கிறது என்பதாகும்.

சிறிலங்கா அரசாங்கமும், அதன் ஏவலர்களுமாகிய இராணுவக் குண்டர்களின் இச்சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
மக்களது இயல்பு குறித்தோ அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தோ முடங்கிவிட்ட சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்தோ சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை என்பதை அனைத்துலகத்தினது கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய எமக்கு உள்ளது.


தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும், சுதந்திரமாகவும், தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா பேரினவாதம் தடையாக உள்ளது என்பதை பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு உள்ளது.
சிங்கள அரசினதும் அதன் படைகளினதும் இத்தகைய அராஜக செயற்பாடுகள் யாவும் இன்று இங்கு போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியை மக்களாகிய எம்மிடத்தில் தோற்றுவித்துவித்துள்ளது.
ஒரு சமூகத்தின் அதிஉயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு இங்கு கௌரவமும், பாதுகாப்பும் இல்லையெனில் சாதாரண மக்களின் கௌரத்திற்கும், பாதுகாப்பும் என்ன உத்தரவாதம் என்ற நியாயமான கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.


சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கும், அண்டிப்பிழைக்கும் தேசத்துரோகக் குழுக்கள் எமது மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும்.
அத்துடன் பொதுமக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு குந்தகமாக உள்ளதால் மக்களால் வெறுக்கப்படுகின்ற இராணுவக் காவலரண்கள் நீக்கப்பட வேண்டும்.
சிங்களப் படைகளின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயல்பு வாழ்க்கையையும், மனித கௌரவத்தையும் வென்றெடுக்க வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்களாகிய நாம் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்ள உள்ளோம்.
வரும் திங்கட்கிழமை 26.12.2005 முதல் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக செய்வது என்ற என்ற தீர்மானத்தை யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகிய நாம் எடுத்துள்ளோம்.
இப்புறக்கணிப்பிற்கான ஒத்துழைப்பை அரச பணியாளர்கள் மற்றும் அனைவரும் வழங்குமாறு வேண்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------------------------------------------

மேற்குறிப்பிட்டவைகள் செய்திகளாக மட்டுமே தரப்பட்டுள்ளன.

Labels: ,


Tuesday, December 20, 2005

யாழ்ப்பாணத்தில் இன்றும் இராணுவம் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து இராணுவத்தினரது வன்முறைகள் அதிகரித்தவண்ணமுள்ளன. நேற்று யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், மற்றும் மாணவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்திய இராணுவம் இன்றும் பல்கலைக்கழகத்துள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.


இதேவேளை, கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------

இதேநேரம் இன்று முச்சக்கரவாகனச் சாரதிகள்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.

ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகின.

இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
---------------------------------------------

புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணொருவர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------
செய்திகள்: புதினம், தமிழ்நெற்

Labels: ,


Monday, December 19, 2005

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இராணுவ வன்முறை

என்ன நடக்கிறது?

நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எனப் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. பதினைந்து பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தனியொரு சம்பவமாக இன்றி பல சம்பவங்களின் தொடர்ச்சியே. கடந்த 3 நாட்களுக்குள் நடந்த பலசம்பவங்களின் கோர்வையே இது.
இதுபற்றிய செய்திகள்:

இரு தினங்களின் முன் "தர்சினி" என்ற இளம்பெண் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, கிணறொன்றினுள் வீசப்பட்ட சம்பவத்துடன் இது தொடங்குகிறது. இக்கிணறு சிங்கள இராணுவத்தினரின் முகாமருகே இருக்கும் கிணறு. இப்பாலியல் வன்புணர்வுக் கொலை இராணுவத்தால் தான் செய்யப்பட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். புங்குடுதீவில் இதுதான் முதல்தடவை என்றில்லை. ஏற்கெனவே இவ்வாறான பாலியல் வன்புணர்வுக்கொலைகள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளன. 'சாரதாம்பாள்' என்ற பெண்ணின் கொலை நீதிமன்றம் வரைகூட வந்தது. அவ்வழக்கில் இராணுவத்தினருக்கெதிரான சாட்சிகள் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு இறுதியில் வழக்கு நீர்த்துப்போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது தர்சினியின் கொலை. மருத்துப்பரிசோதனையும் பாலியல்வன்புணர்வுக்கொலையை உறுதிப்படுத்துகிறது.

இக்கொலையைக் கண்டித்து மக்களால் பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர்களுடன் புங்குடுதீவில் அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரால் வழிமறித்துத் திருப்பியனுப்பப்பட்டார். அவ்விடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு 25 வரையான பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.

இச்செயலைக் கண்டித்தும், எற்கெனவே பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட அட்டூளியங்களைக் கண்டித்தும், (பல்கலைக்கழத்துள் இராணுவப் பிரவேசம், அடையாள அட்டைகளைக் கிழித்தெறிந்தது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் என்னேரமும் இராணுவக் காவல்) யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆட்சேபனை மனுவொன்றைக் கொடுப்பதற்காக மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எனப்பலரும் கண்காணிப்புக்குழுப் பணிமனையை நோக்கிச் சென்றனர். அப்போது இடைமறித்த 'சிங்கள' இராணுவம் இவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. முதலில் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், பின் இவர்களை நிலத்துக்குச் சமாந்தரமாகவும் சுட்டுள்ளார்கள். தங்களை நோக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து வந்துள்ளார்கள். இச்சம்பவத்தில் காயமடைந்த 15 பேர்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில் காயமடைந்த பேராசிரியர் பேரின்ப நாதனும் இன்னொரு மாணவரும் துப்பாக்கிச் சூட்டிலேயே காயமடைந்தனர் எனச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையிட்டு இராணுவம், 'அவர்கள் எங்கள்மேல் கல்லெறிந்தார்கள். அதனால்தான் நாம் வானைநோக்கிச் சுட்டோம்' என்கிறது.
இவர்கள் பின்னால் புலிகள் உள்ளார்கள் என்றும் சொல்கிறது.
ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக நின்ற யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாஸ், 'அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். இராணுவம் தாக்கியபோதும் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் நானும் பேசினோம். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூட்டை நிலத்திலும் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து உயிர்க்கொலைகளைத் தவிர்ப்பதற்காக நாம் கலைந்துசென்றோம்' என்கிறார்.


புங்குடுதீவில் நடந்த பாலியல்வன்புணர்வுக் கொலையையடுத்துத் தொடர்ச்சியாகப் பலசம்பவங்கள் நடந்துள்ளன. இந்நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே 'பொங்கியெழும் மக்கள்படை' என்ற பெயரில் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, இனியும் இராணுவம் எல்லை மீறினால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புக் குழுவுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இப்போது புங்குடுதீவுச்சம்பவமும் அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருட்பட மாணவர்கள், பேராசிரியர்கள, பொதுமக்கள் எனத் தொடர்ந்து இராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனிவரும் சிலநாட்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாம். (ஏற்கெனவே, நடைபெற்றுவரும் உயர்தரத் தேர்வுக்கு இடையூறு விளைவிக்காதிருக்கவே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கதைகள் கசிந்ததுண்டு)


யாழ். பாராளுமன்ற உறுப்பினருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் நடக்கும் சம்பவங்கள், அரசியல் மட்டத்தில் தெளிவாகவே ஒரு செய்தியைச் சொல்கிறது.


பேரணி சென்ற பல்கலைக்கழகச் சமூகம்.



பேரணியை "எதிர்கொண்ட" படையினர்










-----------------------------------------

படங்கள்: சங்கதி

Labels: ,


Wednesday, September 14, 2005

தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடனம்


இன்று வன்னியின் புதுக்குடியிருப்பில் "தமிழீழத் தேசிய எழுச்சிப் பிரகடன" இன்று தொடங்கி நடந்து வருகிறது.
அதன் நேரடி ஒலிபரப்பு புலிகளின் குரலூடக ஒலிபரப்புப் படுகிறது.
அதைக் கேட்க இங்கே கிளிக்கவும்.




படஉதவி: புதினம்.

Labels: , , , ,


Friday, July 29, 2005

தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழீழத் தொலைக்காட்சி.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஒளிபரப்பாகிவரும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் ஓளிபரப்புக்கள் ஆகஸ்ட் முதலாம் நாள் முதல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



முற்பகல் 10.00 மணியளவில் கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் அலைவரிசை விபரங்கள் அடங்கிய கோவையினை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா ஊடகவியலாளர்களிடம் வழங்கினார்.


"நிதர்சனம்" நிறுவனமானது 1987 பெப்ரவரி 14 இல் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலமாக இயங்கி வந்த இச்சேவை, 1987 ஒக்டோபர் 11 இல் இந்திய இராணுவத்தினரால் அழிக்கப்பட்டது.
இவ் ஒளிபரப்பு 2005ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாளிலிருந்து தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஐரோப்பிய நாடுகளில் ஒரு மணித்தியால ஒளிபரப்பாக இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட முதலாம் நாள் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தனது ஒளிபரப்புச் சேவையினை தொடக்கவுள்ளது.


இவ்வொளிபரப்புப் பற்றி இந்தியா இன்னும் கருத்து எதுவுஞ் சொல்லவில்லை. நிச்சயம் இதைக் கடுமையாக எதிர்க்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. புலிகளின்குரல் வானொலி ஒலிபரப்பு இந்தியாவை எட்டும்போதே தனது கடுமையான எதிர்ப்பை இந்தியா காட்டியது. இது தொலைக்காட்சிச் சேவை. எனவே இன்னும் கடுமையாக நடந்துகொள்ளும். ஆனால் இவற்றைத்தாண்டி இச்சேவை நடத்தப்பட வேண்டுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நன்றி:- புதினம், மட்டக்களப்பு ஈழநாதம்.

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]