Thursday, April 19, 2007

நாட்டுப்பற்றாளர்

ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , ,


அன்னை பூபதி

இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , ,


Wednesday, February 07, 2007

கெளசல்யன், சந்திரநேரு நினைவு தினம்

விடுதலைப்புலிகளின் மட்டு - அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராயிருந்த லெப்.கேணல் கெளசல்யன் (சாள்ஸ் பாபேஜ் - மட்டக்களப்பு), மாமனிதர் சந்திரநேரு ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி பயணம் செய்துகொண்டிருந் வேளையில் சிறிலங்கா அரசபடையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று.

07.02.2005 அன்று வன்னியிலிருந்து மட்டக்களப்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த இவர்களின் வாகனம் மீது புனானைப் பகுதியில் வைத்து சிறிலங்கா இராணுவத் தரப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் கெளசல்யன், சந்திரநேரு ஆகியோரோடு மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ஆம் லெப். விதிமாறன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

லெப்.கேணல் கெளசல்யன் அவர்கள் சுனாமி அனர்த்தத்தின்பின்னான கிழக்கு மாகாண மீள் கட்டமைப்புக்கு அரும்பங்காற்றியவர். தமிழ் - முஸ்லீம் உறவைச் சீர்செய்ததில் முக்கிய பங்கு இவருக்குண்டு. மிகச்சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்த இவரைத் தீர்த்துக்கட்டுவதில் எதிரிகள் மிக மும்முரமாக இருந்தார்கள்.

இதே தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேருவுக்கு, பின்னர் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
தமிழ்த் தேசியத்துக்காக இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த அனைவருக்கும் எமது அஞ்சலி.

Labels: , , ,


Sunday, February 04, 2007

தியாகி திருமலை நடராஜன் நினைவு

திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி.

Labels: , , ,


Monday, January 01, 2007

"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்

தொலைந்துபோன வன்னி ஆளுமைகள்

கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.

ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.

1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.


தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.

இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.

'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.

அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.


கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.

இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.


நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்

2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.

மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.

யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.

இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.

__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.

இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.

___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.


________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"

தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.

Labels: , , , ,


Sunday, December 31, 2006

தீர்ப்பெழுதும் திடத்தை அருள்வீராக

"சலிக்காமல் வழிநடக்கும்
சக்தியினை எமக்கருளும்;
செல்லும் வழிகளை
செம்மைப்படுத்தி வையும்;
பாய்ச்சல் நிகழ்கையிலே
பக்கத்தில் துணையிருந்து
காற்றுச் சங்கூதும்;
வெற்றியோடு மீளும்போது
எம்மைப் பெருமைப்படுத்தும்"



என்று வீரரை வேண்டியவர் பொன்.கணேசமூர்த்தி.

_____________________________________________

Labels: , , ,


Sunday, December 17, 2006

திருச்சித்தமிழனுக்கு அஞ்சலி

இற்றைக்குப் பதினொரு வருடங்களின் முன்பு திருச்சியில் தமிழனொருவன் ஈழத்தமிழனுக்காகத் தீக்குளித்துச் செத்தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்து அல்லலுற்ற வேளையில், தொடர்நதும் ஈழத்தமிழர்கள் மேல் கடுமையான யுத்தமொன்று தொடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் 15.12.1995 அன்று "அப்துல் ரவூப்" என்ற 24 வயது இளைஞன் திருச்சியில் ஈழத்தமிழருக்காக தன்னைத் தீக்கிரையாக்கிச் சாவடைந்தான்.

இவ்வகையான சாவுகள் வரவேற்கப்படவேண்டியவையல்ல; போற்றப்பட வேண்டியவையுமல்ல. தவிர்க்கப்பட வேண்டியவை, நிறுத்தப்படவேண்டியவை.

இம்மரணத்துக்காக யாழ்ப்பாணத்தில் துக்கதினம் அனுட்டிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறது. அப்போது இச்சாவினைத் தியாகமாகக் கருதியதிலும்பார்க்க, தவிர்க்கப் பட்டிருக்க வேண்டியதாய், பயன்பாடற்றதொரு சாவாய் பார்க்கும் நிலையே இருந்தது.

இம்மரணத்தைக் குறித்து தோழர் தியாகு 'இனி' என்ற பத்திரிகையில் எழுதிய பத்தி ஞாபகம் வருகிறது.
"சாகச்செய்வானைச் சாகச்செய்யாமல் சாகின்றாய் தமிழா" என்ற கவிஞனொருவனின் வரிகளை மகுடமாக்கி எழுதப்பட்ட அப்பத்தி இவ்வகையான செயல்களைக் கண்டித்தது.
எம் நிலைப்பாடும் அதுவே.

ஆனாலும் உணர்ச்சிப் பெருக்கால் தசையாடி எரிந்த அச்சகோதரனுக்கு ஓர் அஞ்சலியைச் செலுத்துவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை.

திருச்சிச் சகோதரனுக்கு எம் அஞ்சலி.

_____________________________________________

Labels: , , ,


Friday, September 29, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


பகுதி 7


பகுதி 8


பகுதி 9 (இறுதிப்பகுதி)



முந்தைய பதிவுகள்

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1


_____________________________________________

Labels: , , ,


வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

பகுதி 5



பகுதி 6



வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

_____________________________________________

Labels: , , ,


Friday, September 01, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

நெல்லையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசியவற்றிலிருந்து முதலாம் பாகம் (பதினைந்து நிமிடங்கள்) ஏற்கனவே பதிவாக்கட்டிருக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களைக் கொண்ட இரண்டாம் பாகம் இப்பதிவில் வருகிறது.


பகுதி - 3



பகுதி - 4

Labels: , , ,


Sunday, August 27, 2006

வை.கோ பேச்சு - ஒளிப்பதிவு

திராவிடத் தமிழர்கள் வலைப்பதிவில் வை.கோ அவர்களின் ஈழஆதரவுப் பேச்சின் எழுத்துவடிவம் பதிவாக்கப்பட்டிருந்தது.
அதே கருத்தைச் சொல்லும் வை.கோவின் பேச்சின் சிறுபகுதியை ஒளிவடிவமாக இங்கே இடுகிறேன்.
திராவிடத் தமிழர்கள் வெளியிட்ட பேச்சும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியாது.

இது நெல்லையில் 29.12.2005 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வை.கோ பேசியதன் முதல் 20 நமிட ஒளிப்பதிவு.
மிகுதியை பின்பு பதிவாக்குகிறேன்.

பகுதி ஒன்று.


பகுதி இரண்டு.

Labels: , , ,


Monday, June 26, 2006

எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு.

என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.

பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றும் போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.

மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (தேன்மொழி) அப்போது போராளியாக இருந்தார்.

போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவ 'ரீச்சர்'. எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.

அப்போது "யாழ்செல்லும் படையணி" என்று ஒரு படையணி இருந்தது. (அண்மையில் வன்னியில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.

அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.

இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.

இன்றைக்குச் சரியாக ஏழு ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.
ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.

பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. 'தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர்' என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,
"எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே" என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் 'மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது' என்று.

'எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்' என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

இன்றும்கூட அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.

*************************************************************
வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று. இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.

*************************************************************
லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி தமிழ்க்கவி அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும். ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று..

**************************************************************
ஏழு வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.
**************************************************************

புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான். ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.

Labels: , , , ,


Thursday, June 22, 2006

மறுபடியும் உணர்வுக்கொலை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாவீர்ர் துயிலுமில்லம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் -உடல்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் நினைவுக்கற்கள் நாட்டிவைக்கும் இடத்தொகுதிதான் 'மாவீரர் துயிலுமில்லம்'. ஈழத்தில் பல துயிலுமில்லங்கள் உள்ளன. அவற்றிற் சில இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் உள்ளன.

முன்பு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின் கோப்பாயில் அமைந்திருந்த "மாவீரர் துயிலும் இல்லத்தை" முற்றாகத் தகர்த்தெறிந்து அடையாளமே தெரியாதபடி தரைமட்டமாக்கியிருந்தது அரசபடை. கோப்பாய் மட்டுமன்றி கொடிகாமம் உட்பட வேறும் சில இடங்களும் இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தன.

2002 இல் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து இத்துயிலுமில்லங்கள் மீளவும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் மாவீரரின் கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீளவும் அரசபடை இந்நினைவாலயங்களில் கைவைக்கத் தொடங்கிவிட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துள் சென்று அங்குள்ள அலுவலகத்தைத் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர். படங்களை உடைத்துக் கொளுத்தியுள்ளனர். இதைவிட நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அரசபடையின் காட்டுமிராண்டி மனநிலை தெளிவாக வெளித்தெரிகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களைத் தாக்குவதும் சேதமாக்குவதும் சிங்களவருக்கும் உலகத்துக்கும் எப்படித் தெரிகிறதோ தெரியாது. ஆனால் ஈழத்தவருக்கு அது உணர்ச்சிமயமானது. மனிதக் கொலைகளுக்கு நிகராக -ஏன் அதைவிடவும் பாரதூரமானதாகப் பார்க்கப்படும். புலிகளையும் மக்களையும் சீண்டக்கூடிய அதிகபட்ச செயன்முறை இதுதான். இதன்மூலம் புலிகளைச் சீண்டி யுத்தத்தைத் தொடக்க எண்ணுகிறார்கள் போலுள்ளது.










படங்கள்: சங்கதி.

Labels: , , ,


Friday, April 28, 2006

சிவராம் கொல்லப்பட்டு ஓராண்டு நினைவு.

இலங்கையிலிருந்து எழுதிய பத்திரிகையாளன் தராகி என்ற 'மாமனிதர்' சிவராம் கொழும்பில் வைத்துக்கொல்லப்பட்டு இன்றோடு ஓராண்டு நிறைவுற்றது.

அன்னாரின் எழுத்துப்பணியைக் கெளரவிக்கி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால், "மாமனிதர்' விருது வழங்கப்பட்டது.

அவரது ஓராண்டு நினைவில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அன்னாரின் குடும்பத்துக்கும் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சிவராம், தினக்குரல் பத்திரிகையுடன் நடந்த ஒரு விவாதத்தில் எழுதிய வரிகள் இவை.



" நாளை எம்மீது முழுமையான போராக பாயும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமன்றி போர் நிறுத்தம் ஏற்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசியக்கட்சியும் சரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் சரி இலங்கையின் இராணுவச் சமநிலையை
சிங்களதேசத்தின் பக்கம் சாய்ப்பதிலேயே பேரவாக் கொண்டு செயற்பட்டு வருகின்றன என்பது கண்கூடு.


நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்துமே பேசிப் பெற்றவையல்ல, அடித்துப் பெற்றவையே என போர்நிறுத்தம் ஏற்பட்ட காலத்தில் நான் திருமலையில் பேசியதை தினக்குரல் முன்பக்கத்தில் வெளியிட்டதை நான் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கால்நூற்றாண்டுக்கு மேலாக சட்டவல்லுநர்களான எமது தமிழ் அரசியல் வாதிகள் எவ்வளவோ பேசிப்பார்த்தும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டத்தை சிங்கள தேசம் இறுதியாக எமது படைபலத்தைக் கண்டு அஞ்சியே தற்காலிகமாக நீக்கவேனும் உடன்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன்.
அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடி விடமாட்டேன்.
"

சொன்ன மாதிரியே தனக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோதும் ஒழிந்து ஓடிவிடால் தொடர்ந்து எழுதி வந்த சிவராம், அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது போலவே கொல்லப்பட்டார்.
அத்தோடு உரிமைகள் பெறுதல் தொடர்பான அவரது கூற்றும் எவ்வளவு உண்மையென்று இன்றும் புலப்படுகிறது.
****************
சிவராம் கொலையுண்டபோது, அவரோடு சேர்ந்து பணியாற்றிய சகவலைப்பதிவரது பதிவுகளில் வந்த பதிவுகளிவை.
உலகறிந்த ஊடகவியலாளன் உறங்கிவிட்டான்
செய்தியாளன் செய்தியானான்

சிவராம் எழுதிய சில கட்டுரைகளுக்கான இணைப்புக்கள்.
இராணுவச் சமநிலையைப் பேணுவதாயின்
அரசியல் மயமாக்கல் தேவை

இலங்கையின் தேசிய செல்வத்தைபங்கிட மறுக்கும் சிங்கள தேசம்
ஜனாதிபதி தேர்தல் வியூகத்திற்குள் பலியாகப்போகும் சமாதானம்
சிங்கள பௌத்தத்தைப் புரிந்துகொள்வது பேச்சுவார்த்தைக்கு அவசியம்
விடிந்த பின் இராமர் சீதைக்கு என்ன முறை..? எனக்கேட்கும் சிங்கள
தேசம்
தமிழர் பிரச்சனையை சிங்கள தேசத்திற்கு விளக்க முனைவது பயனற்ற செயல்
இராணுவத் தீர்வின் மீது மீண்டும் ஆசைகொள்ளும் சிங்களதேசம்

அந்நிய இராணுவ தலையீட்டை விரும்பும் சிங்கள தேசம்

அந்தரத்தில் தொங்கும் இலங்கையின் படை வலுச் சமநிலை
சுயநிர்ணய உரிமை, ஒட்டுப்படைகள் கிழக்குத் தீமோர் தரும் பாடம்
சூடான் - தமிழ் ஈழம்; அமெரிக்கா இரட்டை வேடம் போட இயலாது
காலத்தின் தேவை அரசியல் வேலை
கருணா ஓடியது எதற்காக?
நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி
கருணாவுக்கு ஒரு கடிதம்

ISGA bashing: Much ado about nothing
Tigers dominate decades of Tamil militancy
ISGA entails concepts and structures of final solution
Strategic positioning vital for military advantage
Can the renegade Karuna deliver his Big Magic?
Karuna affair: The military connection

மேலும் பல ஆங்கிலக்கட்டுரைகளுக்கு....

நன்றி: தமிழ்நேசன்.

Labels: , ,


Thursday, April 20, 2006

மக்களுக்கான ஆயுதப்பயிற்சி.

*******நட்சத்திரப் பதிவு -07*******

கடந்த பதிவொன்றில், வன்னியில மக்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டதையும், அதன் உடனடிப் பயனைப் பற்றியும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.
முதலில் அத்தகைய பயிற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

1997 மே 13 அன்று தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படிப்படியாக வன்னியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நூறு நாட்களுக்கும் மேலாக முயன்றும் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் பக்கவாட்டுப்பகுதியால் காடுகளிற்பரவி புதியபுதிய போர்முனைகளைத் திறந்தனர். இறுதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியதோடு ஜெயசிக்குறு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. (இதற்குள் புலிகள் கிளிநொச்சியை மீட்டிருந்தனர்.) பின் ஒட்டுசுட்டானையும் இரகசிய நகர்வொன்றின்மூலம் சண்டையின்றியே இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்நிலையில் வன்னியில் மக்களின் வாழ்விடங்கள் நெருங்கின. முக்கியமான இரு இடங்களை மையமாகக் கொண்டு மக்கள் இருந்தனர். புதுக்குடியிருப்பை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதிக்கு ஒருபுறம். மல்லாவியை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதியின் மறுபக்கம். வன்னியின் நிர்வாகம் (மக்களினதும் புலிகளினதும்) இரண்டு பகுதியாகப்பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கத்தொடங்கின. மனரீதியாக வன்னி கண்டிவீதிக்கு இருபுறமென்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் முக்கிய இரு இடங்களான புதுக்குடியிருப்பும் மல்லாவியும் எந்தநேரமும் இராணுவத்தினராற் கைப்பற்றப்படலாமென்ற நிலை வந்துவிட்டது. இரு இடங்களுமே இராணுவத்தினரிடமிருந்து சொற்ப தூரத்திலேயே இருந்தன. புலிகளின் போராட்டத்துக்கான முதன்மைத்தளம் முல்லைத்தீவுதான். அதுபோய்விட்டால் போராட்டமேயில்லை என்றநிலைதான்.


படத்தைப் பெரிதாக்க, படத்தின்மேல் அழுத்தவும்.
படம் பற்றிய விளக்கம் இறுதியாக உள்ளது.


ஒட்டுசுட்டானிலிருந்து எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

அதுபோல்தான் மல்லாவியும் மிகமிக அதிகமான ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. இனிமேல் மக்கள் இடம்பெயர இடமில்லையென்ற நிலைக்கு வன்னி இறுக்கப்பட்டது. இனி இராணுவம் முன்னேறினால் இடம்பெயர முடியாதென்ற நிலைக்குப் பெரும்பாலானவர்கள் வந்துவிட்டனர்.
அதேநேரம் களமுனையில் இராணுவத்தினரின் கை ஓங்கியிருப்பதாகப்பட்டது. உண்மையும் அதாகத்தான் இருந்தது. முக்கிய பிரச்சினை ஆட்பலம்.

எதிரி கிழக்குக் கடற்கரையான நாயாற்றிலிருந்து மேற்குக் கடற்கரையான மன்னார் வரை வளைந்துவளைந்து செல்லும் முன்னணிக் காப்பரண் வரிசையைக் கொண்டிருந்தான். எந்த இடத்திலும் அவன் முன்னேறி எதையாவது கைப்பற்றலாமென்ற நிலைதான் அப்போது இருந்தது. ஏனென்றால் இதுதான் இலக்கு என்று சிந்திக்கும் நிலையை அரசு இழந்து நீண்டநாட்களாகிவிட்டது. நாயாற்றுக்குள்ளால் முல்லைத்தீவுக்கு வருவதுமுதல் பள்ளமடுவால் பூநகரி பிடிப்பது வரை எந்த இடமென்றாலும் போதும் என்ற நிலைதான் இராணுவத்தின் நிலை. நூற்றுக்குமதிகமான மைல் நீளம் கொண்ட சமர்முனையை எதிர்கொள்வது புலிகளால் இயலாத காரியமாகவே தென்பட்டது. அதைவிட வடக்குப்பக்கமாக இருக்கவே இருக்கிறது பரந்தன் ஆனையிறவுத் தளம். அதிலிருந்தும் முன்னேற - குறிப்பாக இழந்த கிளிநொச்சியை மீட்க இராணுவம் முனைப்பாகவே இருந்தது.

இனிமேல் புலிகளால் முழுவீச்சாக எல்லா இடத்திலும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது என்பதையும், மக்களால் இனியும் இடம்பெயர முடியாது என்பதையும் கணக்கிட்டது இராணுவம். மக்களைக் கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. (அதுவரை அது இடங்களை மட்டுமே கைப்பற்றியது) புதுக்குடியிருப்பையோ மல்லாவியையோ கைப்பற்றினால் பெருந்தொகை மக்கள் இராணுவப்பிடிக்குள் வந்துவிடுவார்கள், பின் புலிகளுக்கான ஆட்பலம் மிகமிகக் குறைந்துவிடும் என்றெல்லாம் கணக்குப்போட்டது. முக்கியமான லயனல் பலகல்ல பொறுப்பெடுத்தபின் பல முனைப்பான திட்டங்களைக் கொண்டுவந்தார். நடைபெற்ற சண்டைகளின் இழப்புக்களிலிருந்து மீள புலிகளுக்கு அவகாசமில்லாமல் தாக்கவேண்டுமேன்பதும் முக்கிய திட்டம்.

அழிவு நெருங்கிவிட்டது. மல்லாவியை விடவும் புதுக்குடியிருப்பு இருதரப்புக்குமே மிகமிக முக்கியமாயிருந்தது. ஏனென்றால் முல்லைத்தீவு விடுபட்டால் புலிகளின் கதை முடிந்துவிடுமென்பது தான்.

இந்தநிலையில்தான் மக்கள் பயிற்சி தொடக்கப்பட்டது. அது தொடங்கப்பட்டதை விட மிகமிக ஆர்ப்பாட்டமாக அது வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில் பயிற்சி தொடங்கப்பட்டபோது ஆண்கள் முன்னூறு அல்லது நானூறு மீட்டர்களும் பெண்கள் இருநூறு மீட்டர்களும் ஓடுவார்கள். பின் கையைச் சுற்றி, காலைச்சுற்றி கால்மணிநேரம் ஏதாவது செய்துவிட்டு திரும்புவதுதான் நடந்தது. பயிற்சிக்கான வரவுப் பதிவு கொண்டுவரப்பட்டது. இவ்வளவும் நடக்கும்போதே மக்கள் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்ற விம்பத்தைப் புலிகள் உருவாக்கி விட்டார்கள். தேர்ந்தெடுத்த சிலரை இராணுவ உடையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கிழமையில் ஆறுநாட்கள்கூட சில இடங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால் சுழற்சி முறையாதலால் ஒருவருக்கு இருதடவைகள் முறைவரும். ஏற்கனவே அமைப்பிலிருந்து விலகியவர்களைக் கொண்டு சிறப்பணியொன்று உருவாக்கி அவர்களுக்கு முதலில் சூட்டுப்பயிற்சியைத் தொடங்கினார்கள். இவ்வளவும் ஒரு மாதத்துக்குள்ளாகவே நடந்தன. பின் படிப்படியாக மற்றவர்களுக்கும் சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டது. முதல்தரம் கொடுத்தபோது அவர்கள் சரியானமுறையில் துப்பாக்கி பிடிப்பதில் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் மக்கள் எல்லோரும் சுட்டுப்பழகிவிட்டார்கள் என்ற கதை வெளியில் போகவேண்டுமென்பது முக்கியம். மக்களும் வஞ்சகமில்லாமல் ஒன்றைப் பத்தாக்கிக் கதைத்தார்கள்.

இராணுவம் என்னென்ன திட்டங்கள் போட்டு வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டது. சிலமாதங்களாக புதுக்குடியிருப்போ மல்லாவியோ ஏனைய மக்கள் வாழ்விடங்களோ எதிரியாற் கைப்பற்றப்படாமற் காப்பாற்றப்பட்டது. இராணுவம் இவற்றை நோக்கி சிறு முன்னேற்ற முயற்சியைக்கூட எடுக்கவில்லை. ஏற்கனவே முன்னேற்ற முயற்சிக்கென்று தயார்ப்படுத்தி வைத்திருந்த படைகளையும் கனரக ஆயுதங்களையும்கூட பழையபடி பின்னிலைகளுக்கு அனுப்பிவிட்டுப் பேசாமலிருந்தது. காரணம் இதுதான். ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் கூட்டத்தைக் கைப்பற்றி, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் விரும்பவில்லை.

இந்தக் குழப்பங்களுக்குள் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்டுத்தித் தம்மைப் பலப்படுத்திக்கொண்டனர் புலிகள். கூடவே முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு துணை இராணுவக் கட்டமைப்பாக மக்களையும் தயார்படுத்திவிட்டனர். முறையானபடி பயிற்சி நிறைவு விழாக்களைச் செய்து, அதிலேயே மக்கள் படையைக் கொண்டு மாதிரி முகாம் தகர்ப்பு போன்றவற்றைச் செய்து ஒரு படைக்கட்டமைப்புத் தன்மையை ஏற்படுத்தினர். மூத்த தளபதிகள் நேரிலே கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் சிறுசிறு அணிகளுடனும் நேரடியாகக் கதைத்துக் கள யதார்த்தத்தைச் சொல்லினர்.

மக்கள் களத்தில் ஆயுதத்துடன் பங்களிப்பதற்கான சூழல் வந்தபோது எதிரி சில நடவடிக்கைகளைச் செய்தான். அதாவது மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தை முற்றாகக் கைவிட்டது இராணுவம். இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தையும் முற்றாகக் கைவிட்டது. மாறாக புலிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதலைச் செய்துவிட்டுப் பின்வாங்குவதுதான் அந்தத்திட்டம். (முன்பு புலிகள் செய்தது போல). வசந்த பெரேரா எனற தளபதி அப்போது பொறுப்பேற்று இரு நடவடிக்கைகளைச் செய்தார். அவைதாம், வோட்டர் செட் 1, 2.(watershed-1, -2)

இரண்டுமே திட்டமிட்டபடி இராணுவத்துக்கு வெற்றியளித்தன. புலிகளின் முன்னணிக் காப்பரண் வரிசையின் குறிப்பிட்ட பகுதியைத் தெரிந்தெடுத்து அதன்மீது ஆயிரக்கணக்கான ஆட்லறிக்குண்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு பின் தரைவழியால் தாக்கியழிப்பது. பின் பழையபடி தமது நிலைகளுக்கே திரும்புவதென்பது இத்திட்டம். அம்பகாமத்தில் நடத்தப்பட்ட வோர்ட்டர் செட்டின் இரு நடவடிக்கையுமே இராணுவத்துக்குப் பூரண வெற்றி. கணிசமான போராளிகள் அதில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி போராளிகளின் உடல்களை எடுத்துச் சென்று, பின் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்பி வைத்தது இராணுவம். (உடல்களை எதிரி கைப்பற்றுவதென்பது தொடக்க காலத்திலிருந்தே மிகப்பெரிய தோல்வியாக ஈழப்போராட்டத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.) தொடர்ந்தும் அப்பிடியான தாக்குதலைச் செய்வது இராணுவத்தின் திட்டம்.

அந்தநேரத்தில் மக்களிடத்திலும் குழப்பம். களத்தில் புலிகளின் கை முற்றாக விழுந்துவிட்டதானதொரு தோற்றம் தென்பட்டது.

ஆனால் புலிகள் முந்திக்கொண்டார்கள். எதிரி மூன்றாவது நடவடிக்கை செய்யமுன்பே புலிகள் ஓயாத அலைகள் - 3 ஐத் தொடங்கிவிட்டார்கள். இனி புலிகளால் எழுந்திருக்க முடியாது என்று (புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களும்) நினைத்திருந்தபோது களமுனை ஒரேநாளில் முற்றுமுழுதாக மாறியது. இரண்டரை வருடங்களாக எதிரியிடமிழந்த இடங்களை மட்டுமன்றி பதினைந்து வருடங்களின் முன் அத்துமீறிய சிங்களக்குடியேற்றத்தினால் இழந்த பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும்கூட ஐந்தே நாளில் மீட்டுவிட்டார்கள். இச்சமரிற்கூட மக்கள்படையின் பங்களிப்பு அளப்பரியது.
**************************
வன்னியும் புலிகளும் இத்தோடு முடிந்தார்களென்று எதிரி நினைத்திருந்த வேளையில் சாதுரியமாகத் தொடக்கப்பட்ட மக்கள் பயிற்சி ஈழப்போராட்டத்தில் முக்கிய மைல்கல். சண்டையேதுமின்றி, பயிற்சி கொடுத்ததன் மூலமே பெரியதொரு அழிவிலிருந்து ஈழப்போராட்டம் காப்பாற்றப்பட்டது. பின் பெரிய வெற்றிகளுக்கும் அப்பயிற்சியும் மக்கள் படையும் அளப்பரிய உதவியாயிருந்தன.
**************************
குறிப்பு: பெண்கள் பயிற்சியெடுக்கும் படங்கள் கிடைக்கவில்லை. பொறுமையாகத் தேடவில்லை.

படங்களுக்காக புதினத்துக்கு நன்றி.

***************************************
முல்லைத்தீவு வரைபடத்தில், நீலநிறத்தால் வட்டமிடப்பட்டிருப்பவைதான் புதுக்குடியிருப்பு, மல்லாவிப் பட்டினங்கள்.
சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு (மாங்குளத்திலிருந்த நாயாறுவரை) அன்றைய நேரம் இராணுவத்தினரின் முன்னணிக்காப்பரன் வரிசை.
இளஞ்சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு இராணுவக் காப்பரண் வரிசைதான். ஆனால் என்னால் சரியாக உறுதிப்படுத்த முடியாத கோடு. கிட்டத்தட்ட அவ்வாறுதான் வரும்.
இக்கோடுகளுக்கு வடக்குப்புறம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி.
இப்படம் சுனாமி சம்பந்தமான தளமொன்றிலிருந்து எடுக்கப்பட்டு என்னால் கோடுகள் கீறித் தரவேற்றப்பட்டது.
அனாமதேய அன்பரொருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்படம் சேர்க்கப்பட்டது.
இப்பதிவு சமரைப்பற்றிச் சொல்வதன்று. எனவே அதற்குள் அதிகம் செல்லவில்லை.
இவைபற்றி முன்பு எழுதிய சில பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று
வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

Labels: , , , ,


Wednesday, April 19, 2006

நாட்டுப்பற்றாளர்

******நட்சத்திரப் பதிவு -06******
ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , , , ,


Tuesday, April 18, 2006

அன்னை பூபதி.

****நட்சத்திரப் பதிவு -04 ****

"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த
அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."

************************
இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
இவர்களைப்பற்றியும் அதிகம் சொல்ல இருக்கிறது.
இன்னொரு பதிவிற் சொல்ல முயல்கிறேன்.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , , ,


Saturday, April 30, 2005

மாமனிதன் சிவராம்

வணக்கம்!

இன்று அனைத்துலகத் தொழிலாளர் நாள். இந்நாளில் உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களுடன் நானும் இத்தினத்திற் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், கொல்லப்பட்ட பத்திரிகையாளன் சிவராமுக்கு என் கண்ணீர் அஞ்சலி. உலகறியப்பட்ட ஒரு தமிழ்ப்பத்திரிகையாளன். தனக்கு ஆபத்துள்ளது என்று பல்வேறு சந்தர்ப்பங்களிற் சொல்லியிருந்தும் ஒழிந்து திரியாமல் பங்காற்றிய பத்திரிகையாளன். துணிவாகப் பல விடயங்களைக் கூறுவதுடன் ஆழமான புலமையும் கொண்ட ஆய்வாளன். முன்னாள் போராளி என்பதும் அவருக்குக் கூடுதற் பலமாயிருந்திருக்கும்.

இவரது கொலை சம்பந்தமாக தமிழகப் பத்திரிகைகள் கருத்துக் கூறிவில்லையென்ற வாதம் வந்துள்ளது. இந்துப் பத்திரிகையின் வேடம் பற்றியும் ராம் வாட்ச்சில் பேசப்பட்டுள்ளது. சிவராமின் கொலைபற்றிக் கருத்துக்கூறாதவர்களைச் சாடியும் கருத்துக்கள் வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை கருத்துக் கூறாதவர்கள் கவலையற்றவர்களென்றோ எதிரானவர்களென்றோ கருத முடியாது. இதற்குக் கவலை கொள்ளும்படி யாரையும் கெஞ்சவும் முடியாது. அவர்களுக்குச் சிவராமைப் பற்றித் தெரிந்திருக்கவும் நியாயமில்லை, எமக்குக் கீழ் வெண்மணி, திண்ணியம் இன்னும் இன்றும் நடந்துகொண்டிருக்கும் பல பிரச்சினைகள் தெரியாதது போலவே.

ஈழத்தமிழ் ஊடகங்களிற்கூட அவரின் கொலை பற்றிப் பல்வேறான கருத்துக்கள். பெரும்பாலானவை ஈடு செய்ய முடியாத இழப்பு என எழுத இந்தக் கொலையில் மகிழ்ச்சி தெரிவித்துக்கூட இணையத்திற் கட்டுரை வந்துள்ளது. அது அவர்களுக்கு மகிழ்ச்சி. பல கொலைகளுக்காக மகிழ்ந்தவன் என்ற வகையில் இவர்களின் இந்த மகிழ்ச்சியை என்னாற் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் துக்கத்தின்போது மகிழ்ச்சியடைந்தவன் என்ற வகையில் என் துக்கத்தின்போது அவர்கள் பங்கேற்கவேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது. கிடைத்த சந்தர்ப்பத்தை வைத்து புலிகள் தான் இவரைக் கொன்றார்கள் என்று ஆலாபனையும் தொடங்கிவிட்டது.

நிற்க, சிவராமின் பழைய சிலவற்றைத் தூக்கிப்பிடித்து அவரைப்புலிகளுக்கு எதிரானவராகவோ இரட்டை நிலைப்பாடு கொண்டவராகவோ சிலர் சித்தரிக்கிறார்கள். நிலைப்பாடு என்பது பல்வேறு காரணங்களால் மாறுபடுவது. அது புலிகளுக்கும் தெரிந்துதான் உள்ளது. இன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. குமார் பொன்னம்பலம் உட்பட நிறையப்பேரின் மாற்றம் கவனிக்கத்தக்கது. அதுபோல்தான் தராகி எனும் சிவராமினதும். இப்போது அவருக்குத் தமிழீழத் தேசியத்தலைவரால் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கப்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை சிவராமின் இழப்புப் பாரியது. மொழியாளுமை மிக்க இராணுவ, அரசியல் ஆய்வாளனின் இழப்பு மிகப்பெரியதுதான். குமார் பொன்னம்பலத்தைப் போலவே முடிவு தெரிந்தும் சிங்கத்தின் குகைக்குள்ளேயே கர்ஜித்தவர் சிவராம். அன்னாரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

யாராவது சிவராமைப் பற்றிச் ‘சலனப்படம்’ எடுங்களேன். ‘ஈழப்பிரச்சினையை ஒட்டுமொத்தமாய்’ ஒரு சலனத்துள் அடக்கிவிடுவோம்.

Labels: , , ,


Monday, April 18, 2005

அன்னை பூபதி

இன்று அன்னை பூபதியின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள். யார் அந்த அன்னை பூபதியென்று பலருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெளிவிக்கும் நோக்கமும் எனக்கில்லை. அவரின் தியாகம் பற்றின மிக மேலோட்டமான பதிவே இது.

இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தில் குடிகொண்டிருந்த நேரம். விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலப்பகுதி. இந்த நேரத்தில் அன்னையர் முன்னணி எனும் அமைப்பு இந்திய இராணுவத்துக்கு எதிரான தமது சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். அதன் உச்ச வடிவமாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை தொடங்கினர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அந்தப்போராட்டம் ஆரம்பித்தது. உண்ணாவிரதம் இருந்தவர் அன்னை பூபதி எனப்படும் பூபதி கணபதிப்பிள்ளை.

அவர் வைத்த கோரிக்கைகள் இரண்டு.
1. இந்திய இராணுவம் உடனடியாய் யுத்தத்தை நிறுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சுவார்த்தைக்குப் போக வேண்டும்.

இந்த இரு கோரிக்கைகளையும் முன்வைத்து அவர் தனது உண்ணா நோன்பை 19.03.1988 அன்று ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக வேறும் சிலர் அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். இடையில் அவர்களில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டார். பூபதியம்மாவுக்கும் மிரட்டல்களும் ஆசைகாட்டல்களும் வந்தன. எனினும் மனந்தளராது அந்தக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து போராட்டம் நடத்தினார் அன்னை. உணவெதுவும் உட்கொள்ளாது தண்ணீர் மட்டுமே அருந்தி 31 நாட்களின் பின் 19.04.88 அன்று உயிர் நீத்தார் அன்னை. இந்திய அரசுக்கு எதிராக உண்ணாநோன்பிருந்து இழக்கப்பட்ட இரண்டாவது உயிர் அது. ஏற்கெனவே திலீபன் பன்னிரு நாட்கள் நீர் கூட அருந்தாது இருந்து உயிர்நீத்திருந்தான்.

இப்போராட்டம் இந்திய அரசால் செவிமடுக்கப்படும் எனும் நம்பிக்கை இல்லாதிருந்தும்கூட (ஏற்கெனவே திலீபன் விசயத்தில் நடந்தது) போராட்டம் நடத்தப்பட்டது. ஈழத்தமிழர் போராட்டத்தில் ஆயுதரீதியில் மட்டுமன்று, அகிம்சையிலும் பெண்களின் சம பங்களிப்பு இதன் மூலம் நிலைநிறுத்தப்பட்டது. பொதுசனமாயிருந்து அன்னை செய்த போராட்டம் மிக முக்கியமானது; பெறுமதியானது. இந்நாளில் அத்தாயை நினைவு கூர்கிறோம்.

இந்த நாளையே தேசவிடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த நாட்டுப் பற்றாளர்களை நினைவுகூரும் நாளாகவும் நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாகிய இன்று அவர்களையும் நினைவுகூர்கிறோம்.

நாட்டுப்பற்றாளரின் சேவைகள் அளவிட முடியாதவை. பல சந்தர்ப்பங்களில் போராளிகளைவிடவும் சிக்கலானதும் ஆபத்தானதும் துயரமானதுமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். நிம்மதியற்ற எத்தனையோ இரவுகளைக் கழித்தவர்கள். உணவுகளற்ற பொழுதுகளைக் கடந்தவர்கள். எனினும் ஓயாது உழைத்தவர்கள். தான் மட்டுமன்றி தமது குடும்பத்தையும் துன்பத்தை எதிர்கொள்ள வைத்தவர்கள். சித்திரவதைகளை அனுபவித்தவர்கள். வெளிச்சொல்ல முடியாத பல தியாகங்களைப் புரிந்தவர்கள்.

ஒரு போராளி தன்னிடமிருக்கும் ஆயுதத்தை நம்பியிருப்பான். பிடிபடும்போது தற்கொலை செய்ய சயனைட்டை நம்பியிருப்பான். இறந்தாலும் அது அவனோடே போய்விடும். ஆனால் பொதுமகனாயிருக்கும் ஒருவனுக்கு இவையில்லை. மாறாக குடும்பம் இருந்தது. உழைக்க வேண்டியிருந்தது. இவற்றையும்தாண்டி போராட்டத்துக்குச் சேவை செய்தனர். போராளிகளுக்குப் பசியாற்றியவர்கள் இவர்கள். ஆயதங்கள் கொண்டுவந்து தந்தவர்கள் இவர்கள். காவலிருந்தவர்கள் இவர்கள். மருந்துகட்டியவர்கள் இவர்கள். கடல்கடந்து காயம் மாற்றியவர்கள் இவர்கள். தகவல்கள் தந்து களத்திலும் உதவியவர்கள் இவர்கள். ஆக அவர்களை மறக்க முடியாது.

ஆனால் இப்படியான நிறையப்பேரின் தகவல்கள் முழுவதுமாக இல்லாமலிருக்கும். ஆரம்ப கால நாட்டுப்பற்றாளர்களில் நிறையப் பேரின் விவரங்கள் தவற விடப்பட்டிருக்கும். பட்டியலிலில்லாத அந்தப் பற்றாளருக்கும் எமது வீரவணக்கம்.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]