Wednesday, August 01, 2007

ஈழத்துப்பாடகன் மேஜர் சிட்டு

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டு.
இன்று அவரின் பத்தாம் ஆண்டு நினைவுநாள்.
போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் "கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்" என்ற அப்பாடலே. சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான "கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?" என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.



போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் 'உயிர்ப்பூ'.
இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.
ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.
"சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்"
சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.
'சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?'
என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.


[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.
அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

"சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை" என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.
________________________________________________
ஈழப்பாடல்கள் வலைப்பதிவில் சிட்டண்ணன் பாடிய பல பாடல்கள் உள்ளன. இங்கும் சில பாடல்களைத் தருகிறேன்.

சிட்டண்ணன் முதன்முதல் பாடிய பாடலை இங்குக் கேளுங்கள்.




கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
ஓட்டிகளே படகோட்டிகளே
நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று

புலியொரு காலமும் பணியாது
சின்ன சின்ன கூடுகட்டி
குனியாது கடல்வேங்கை ஒருநாளும்
கடலின் அலைவந்து கரையில் விளையாடும்

விழியில் சொரியும் அருவிகள்

Labels: , , ,


Monday, January 01, 2007

"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்

தொலைந்துபோன வன்னி ஆளுமைகள்

கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.

ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.

1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.


தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.

இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.

'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.

அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.


கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.

இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.


நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்

2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.

மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.

யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.

இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.

__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.

இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.

___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.


________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"

தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.

Labels: , , , ,


Sunday, December 31, 2006

தீர்ப்பெழுதும் திடத்தை அருள்வீராக

"சலிக்காமல் வழிநடக்கும்
சக்தியினை எமக்கருளும்;
செல்லும் வழிகளை
செம்மைப்படுத்தி வையும்;
பாய்ச்சல் நிகழ்கையிலே
பக்கத்தில் துணையிருந்து
காற்றுச் சங்கூதும்;
வெற்றியோடு மீளும்போது
எம்மைப் பெருமைப்படுத்தும்"



என்று வீரரை வேண்டியவர் பொன்.கணேசமூர்த்தி.

_____________________________________________

Labels: , , ,


Saturday, April 22, 2006

டப்பாங்கூத்துப் பாடல்கள்

************நட்சத்திரப் பதிவு -12************
ஜெயசிக்குறு தொடங்கப்பட்டதின் பின்பு வன்னியில் தெருக்கூத்து அல்லது வீதிநாடகங்கள் எனப்படும் கலை மிகப்பரந்தளவில் எழுச்சி பெற்றது. புலிகளின் மிகமுக்கிய பரப்புரை ஊடகமாக அது இருந்தது. மக்கள் கலைஞர்களாலும், போராளிக் கலைஞர்களாலும் இவை அரங்கேற்றப்பட்டன. ஒலிபெருக்கிகள் ஏதுமின்றி நேரடியாகவே மக்களுடன் பேசும் நாடகங்கள் இவை.
இவை பற்றி சிறியதொரு பதிவை நட்சத்திரக் கிழமையில் எழுதலாமென்று நினைத்திருந்தாலும் முடியவில்லை.

இவ்வாறான வீதி நாடகங்களின் போது சில பாடல்கள் பாடப்பட்டன. அவைகள் பின் ஒலித்தொகுப்பாகவும் வெளியிடப்பட்டன.
அப்படி வந்த பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.

"டப்பாங்கூத்து பாட்டுத்தான்"
இப்பாடலைப் பாடியவர் 'குட்டிக்கண்ணன்' என்ற இளங்கலைஞர். அப்போது பத்தோ பதினொன்றோ தான் அவரது வயது.வன்னியெங்கும் சுழன்று திரிந்து பாடல்களைப் பாடுவார். நல்ல குரல் வளமுடையவர்.


"புலியாட்டம் ஆடு
பூபாளம் பாடு"

இதுவும் வீதி நாடகங்களில் பாடப்பட்டு மிகப்பிரபல்யமான பாடல்.
பாடியவரின் பெயர் சரியாக ஞாபகம் வரவில்லை. ஆளை நன்றாக ஞாபகம் இருக்கிறது.



புலம்பெயர்ந்தவர்கள் சிலருக்குக்கூட இப்பாடலை நேரடியாகக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

Labels: , ,


Friday, April 21, 2006

போராளிகளின் குறிப்புக்கள்.

********நட்சத்திரப் பதிவு -08********

உலக மட்டத்தில் போர்வீரர்களின் குறிப்புக்களுக்கிருக்கும் மரியாதையும் பெறுமதியும் உயர்வானவை. காலங்கடந்தும் வாழ்பவை. அவ்வீரர்களின் நாட்டிலோ சமூகத்திலோ மட்டுமன்றி உலகம் முழுதும் போற்றப்படும் போர்விரர்களின் எழுத்துக்கள் நிறைய உள்ளன. "ஸ்டாலின் கிராட்" போன்ற படைப்புக்கள் நிகழ்த்திய தாக்கம் யாவரும் அறிந்ததே.

இவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்தவையல்ல ஈழப்போராட்ட அனுபவங்கள். அவர்களுக்கு "ஸ்டாலின் கிராட்", எங்களுக்கு 'இத்தாவில்'.
ஆனால் அவற்றை ஆவணப்படுத்துவதுதான் முக்கியம்.

புலிகளின் மிகப்பெரிய தரையிறக்கம் 'மாமுனைத் தரையிறக்கம்'. ஏறத்தாழ 1200 போராளிகளை, பல மைல்கள் நீளமான - எதிரியின் வலிமையான கடற்கரையரணைத் தாண்டி எதிரியின் பகுதிக்குள்ளேயே தரையிறக்கியது அந்நிகழ்வு. முழுப்பலத்துடனான எதிரியின் கடற்படையுடனான கடுமையான கடற்சண்டையின் மத்தியில் அவர்களுக்கான விநியோகத்தையும் செய்தது தமிழரின் கடற்படை. தரையிறங்கிய அணிகள் கண்டிவீதியை மறித்து சிறியதொரு கட்டுப்பாட்டுப் பகுதியை ஏற்படுத்தி ஒரு மாதத்துக்கும் மேலாக சண்டைபிடித்து அப்பகுதியைக் காப்பாற்றி வைத்திருந்தன. இத்தாவில் என்ற அப்பகுதியில் புலிகளின் அணி இருக்கும்வரை ஆனையிறவுக்கு ஆபத்து என்தையுணர்ந்த எதிரியின் மூர்க்கத்தனமான தொடர்தாக்குதல்களின் மத்தியிலும் அச்சிறுபகுதியை எதிரியிடம் இழக்கவில்லை. எதிரி இழந்ததோ அதிகம். இரட்டை இலக்கத்தில் இராணுவ டாங்கிகளை இழந்தது அரசபடை.

ஒரு சதுர மீற்றருக்கு ஓர் எறிகணை என்ற வீதத்தில் அச்சிறு பகுதி குண்டுகளால் துவைத்தெடுக்கப்பட்டது. இன்றும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் இத்தாவில் என்ற குறிப்பிட்ட பகுதியைக் கடந்துசெல்லும்போது அச்சண்டைக்குச் சாட்சியாக தலைதறிக்கப்பட்டபடி நிற்கும் தென்னைகளையும், வீதிக்கரையில் புலிகளால் தகர்க்கப்பட்ட டாங்கிகள் ஒன்றிரண்டையும் காணாமற் செல்ல முடியாது. தளபதி கேணல் பால்றாஜ் நேரடியாகவே தரையிறக்க அணியுடன் நின்று அவர்களை வழிநடத்தினார். மகிளிரணித் தளபதிகள் கேணல் துர்க்கா, கேணல் விதுசா போன்றோரும் நேரடியாக நின்ற களமது. இதோ பால்றாஜ் உயிரோடு பிடிபட்டாரென்று முழக்கமிட்டுக் கொக்கரித்தபடி செய்திக்காகக் காத்திருந்த கொழும்புக் கட்டளையகம் ஆனையிறவு பறிபோனதைத் தான் செய்தியாகப் பெற்றது. இதுபற்றி இக்பால் அத்தாஸ் விரிவாக எழுதியுள்ளாரென்று நினைக்கிறேன்.

இவ்விதத்தில், ஒப்பிட்டுச் சொல்லமுடியாத மாபெரும் சமர்க்களத்தையும் அதன் வெற்றியையும் பற்றி முறையான நூலொன்று இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறிப்புக்களாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவைதாம் உள்ளன. அதுவும் இத்தாவில் களத்தில் களமாடிய எல்லைப்படை வீரர்களைப் பதிவாக்கும்போது வெளிவந்த தகவல்களே கணிசமானவை.

அதன்பின்னரான காலங்களில் அக்களத்திலிருந்த முக்கியமானவர்கள் - தளபதிகள் உட்பட பலர் களச்சாவடைந்துவிட்டனர். லெப்.கேணல் இராசசிங்கன் என்ற தளபதி அச்சமரில் மிகமிக முக்கியமானவர். பின்னொரு நாள் இரணைமடுக் குளத்தில் தவறுதலாக மூழ்கி இறந்துபோனார். அவரோடு இத்தாவில் சமர்க்களத்தின் பெரியதொரு வரலாறும் மூழ்கிப்போனது.

பெரிய தொகுப்புக்கள் வராவிட்டாலும் தனிப்பட்டவர்களின் குறிப்புக்கள் ஆங்காங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் வெளிவந்தவற்றில் மிகமிக முக்கியப் படைப்பாக கப்டன் மலரவனின் "போர் உலா" என்ற புத்தகத்தைச் சொல்லலாம். முழுக்க முழுக்க அவரது கள அனுபவத்தைச் சொல்லும் படைப்பு அது. மாங்குளம் படைமுகாம் தகர்ப்புக்காக மணலாற்றுக்காட்டிலிருந்து "உருப்படி"யுடன் புறப்பட்டதிலிருந்து, அத்தாக்குதல் முடிந்து அடுத்த தாக்குதலான சிலாவத்தை புறப்படும் வரையான பதிவு அது. 'உருப்படி' என்பது அந்த நேரத்தில் சிங்கள இராணுவத்துக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த 'பசீலன் 2000' என்ற புலிகளின் சொந்தத் தயாரிப்பு எறிகணை செலுத்தி. மலரவன் அந்த எறிகணை செலுத்தி அணிக்குப் பொறுப்பாளனாகச் செயற்பட்டவர். அவர் எழுதி வைத்ததை அவர் வீரச்சாவடைந்த பின்பு (1992 இல் வளளாய்க் காவலரண் தகர்ப்பில்) வெளியிட்டார்கள். மிக இயல்பாகச் சொல்லப்பட்ட படைப்பு அது. இப்படைப்பு தொடர்பான எனது ஒரே விமர்சனம், "அந்தந்தப் பகுதி மக்களின் வட்டாரச் சொல்லாடலை அப்படியே பதிவு செய்திருக்கலாம்" என்பதுதான். அருமையான நாவல் போன்ற வாசக அனுபவத்தைத் தரக்கூடியது.

இவற்றைப் போல் நிறையப் படைப்புக்கள் வெளிவர வேண்டும். முக்கியமாக தாக்குதலணித் தலைவர்களும் தளபதிகளும் நிறைய எழுத வேண்டும். இங்கிருக்கும் முக்கிய பிரச்சினை புலிகளின் தளபதிகள், அணித்தலைவர்கள் எல்லோருமே பாடசாலைக் கல்வியில் நிறைவானவர்களில்லையென்பது. அதாவது அரச இராணுவக்கட்டமைப்பில் அணித்தலைமைக்கு கல்வித்தகமை முக்கியமானது. ஆனால் புலிகளின் அணித்தலைவர்கள், பொறுப்பாளர்கள், ஏன் மூத்த தளபதிகள் என்று பார்த்தாற்கூட பெரும்பான்மையானோர் பாடசாலைக் கல்வியறிவில் முதிர்ச்சியானவர்களில்லை. தேர்ந்த, கவர்ச்சியான எழுத்துநடையுடன் அவர்களால் சம்பவங்களைக் கொண்டுவர முடியாதநிலையுண்டு. இது, ஏனைய நாட்டுப் போர்வீரர்களுடனும் அவர்களின் எழுத்துக்களுடனும் ஒப்பிடும்போது தெரியும் வித்தியாசப் பண்பென்று நினைக்கிறேன். ஆனால் இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே எழுதக்கூடியவர்கள் என்ற நிலையில், இலக்கியத்திறம், கவர்ச்சி என்பவற்றைக் கருத்திற்கொள்ளாமல் குறிப்புக்களைத் தொகுக்க முடியும்.

இதைவிட்டுப்பார்த்தால், எழுதுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லையென்பதுதான் முக்கிய சிக்கலென்பது என் கருத்து. பொட்டம்மான் மிகமிக அருந்தலாக எழுதிய வெகுசில ஆக்கங்கள் மிகமிகக் காத்திரமான படைப்புக்கள். லெப்.கேணல் இராஜன் பற்றிய 'குருதிச்சுவடுகள்', வெளிச்சம் பவழ இதழில் வெளிவந்த இரு ஆக்கங்கள் என்பவை நானறிந்தவை. அதிகம் பேசாமல், அதிகம் எழுதாமல் இருப்பதே தன்பணிக்குச் சிறந்ததென்று இருக்கிறாரோ என்னவோ?

புலிகளின் மூத்த தளபதி லெப்.கேணல் புலேந்திரன் அவர்கள் 1984, 85 காலப்பகுதியில் வெறும் 25 பேருடன் திருமலைக் காடுகளில் அலைந்துதிரிந்து பணியாற்றிய நேரத்தில் காட்டுவாழ்க்கையை ஒளிப்பதிவாக ஆவணப்படுத்தியதை அறிந்தபோது ஆச்சரியமாயிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்துடன் ஒளிப்பதிவுக் கருவிக்கான மின்கலங்களையும் காவித்திரிந்து ஆவணப்படுத்தியுள்ளார். அருவியில் குளிப்பது, கொக்குச் சுட்டு வாட்டுவது, காட்டுக்குள் பாட்டுப்பாடி கும்மாளமடிப்பது, தடிவெட்டிப் பரணமைப்பது, கொட்டில் போடுவது, தேன் எடுப்பது என்பதுட்பட அழகான இயற்கைக் காட்சிகள், பறவைகள், மிருகங்கள் என்வற்றையும் காட்சிப்படுத்தியதோடு தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்துவது, தாக்குதல் நடத்துவது என்பவற்றையும் வீடியோப் பதிவாக்கியுள்ளார். ஆனால் எழுத்தில் எதுவும் செய்யவில்லையென்பது கவனிக்கப்பட வேண்டியது.
*************************************

போராளிகளின் குறிப்புக்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன. ஈழநாதம் பத்திரிகையிலும், புலிகளின்குரல் வானொலியிலும் இவை வெளிவருவதுண்டு (நான் இவர்கள் படைக்கும் கவிதை, சிறுகதை நாடகம் போன்ற ஆக்கங்களைச் சொல்லவில்லை.) கரும்புலிகளிற் சிலர் இப்படி சம்பவக் குறிப்புக்களை எழுதியுள்ளதாக அறிகிறோம். எப்போதாவது அவை வெளிவருமென்ற நம்பிக்கையுண்டு.

வெளிவருகிறதோ இல்லையோ, போராளிகள் தங்களின் குறிப்புக்களை எழுதவேண்டும். என்றோ ஒருநாள் அவை உதவக்கூடும். முறையான தணிக்கையொன்றினூடாக அவை வெளியிடப்படவேண்டும்.
*************************************

இவ்வாறு, ஒருதாக்குதல் சம்பவம் பற்றி எழுதப்பட்ட போராளியின் குறிப்பொன்று இணையத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிறப்புக் கனரக ஆயுதமொன்றுடன் சென்று தாக்குதல் நடத்திவிட்டு வந்த சம்பவத்தைப்பற்றிய பதிவிது. சில எழுத்துப்பிழைகளுடன் இருந்தாலும் எனக்கு வாசிக்க அலுக்கவில்லை. சில போரியற் சொற்கள் சிலருக்குப் புரிபடாமற் போகலாம்.

Labels: , , , , ,


Wednesday, March 22, 2006

கப்டன் வாமகாந்தின் கவிதைகள் - 1.

"கப்டன் வாமகாந்த்" என்ற தென்தமிழீழப் போராளிக் கலைஞனின் கவிதைகள் "வீழுமுன் சில வரிகள்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. காலொன்றைச் சமர்க்களத்தில் இழந்தாலும் அயராது பணிசெய்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி சிலகாலமே ஆன நிலையில் மட்டக்களப்பில் பண்ணையொன்றில் தோழர்களுடன் இருந்போது எதிரிகளால் கொல்லப்பட்டவர்.
**********************************
வீழுமுன் சிலவரி..

என் கால்கள் வலியன.
நான்
வாழ்வையிழக்கலாம்.
என் பாதம் பதித்த சுவடுகள்
இந்த மண்ணில் நிலைக்கும்.

நாளைய தூண்களில்
நல்வழிகாட்டலாய்....
என் பாதம் பதித்த சுவடுகள்
தேசத்தின் நிலையாக
தீ சுமந்து நிற்கும்
புதியவேதமாய்.
புழுதி சுமந்த காற்றில்
மூச்சுக் கலந்துபோக
வலிய என் பாதங்களாக
முளைத்த இனமொன்று
முட்டி மோதியெழுந்து
தடையாக எழும்
கரங்களைத் தகர்க்கும்.
***
வாமகாந்தன், சமர்க்களமொன்றில் தனது காலை இழந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
****************

மனிதப்புதையல்கள்

அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள்
என்றும்போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறு கொண்ட
குழந்தைகள் தடுமாறும்.

நகர்க்கிணற்றில்,
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.

அடையாளம் இருக்காது
அவளவன் தானென
இனங்காடட
எதைக் காண்பிப்பாள்?
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.
********************
இதை வாசித்தபோது, கிளிநொச்சி நகரம் புலிகளால் மீட்கப்பட்டபின் நாளாந்தம் அங்கிங்கென்று கண்டுபிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காணவெனக் காத்திருந்தவர்களைத்தான் ஞாபகம் வந்தது. நூற்றுக்குமதிகமான பொதுமக்கள் கிளிநொச்சி இராணுவத்தினரால் காணாமற்போகச் செய்யப்பட்டரென்பதும் அவர்களிற் பெருமளவானோரின் எலும்புக்கூடும் பின் மலசல கூடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டனவென்பதும் அனுபவங்கள்.


Labels: ,


Friday, July 01, 2005

கால்கள் பற்றி ஆதவனின் 3 கவிதைகள்

அந்த நிலவும் அவளும்...

தெளிந்த நிலவில்
நட்சத்திரங்கள் கூடிய ஒரு பொன்னிரவில்
உண்மையில்-
'வா ஓடிப்போவோம்'
என்றாள் என் மைதிலி.

வருகிறேன் செல்லமே!
காலம் பூராவும்
இதற்காகத்தானே காத்துக் கிடந்தேன்.
என் மைதிலியே!
ஒரேயொரு திருத்தம்

என்னால் ஓட முடியாது.
ஏற்பாயா?


கால்கள் பற்றி மேலும் சில வரிகள்...

நண்பனே!
நினைவு கொள்கிறாயா
நாம் கிளித்தட்டு விளையாடியதை?

ஒரு கோட்டில்...
சமாந்தரமாய் இருகால்களும் நிற்கவேண்டும்
அப்போதுதான் 'அடி' சரி.

இப்போது நிற்க முடிகிறதா உன்னால்?

உணர்வு எங்கோ போகிறது.
கால்கள் எங்கோ போகிறது.
எனது கால்கள் எனக்கே சொந்தமில்லை.
யாரோ வைத்தகால்; அப்படித்தானே?

இருக்கட்டுமேன்...
அதனாலென்ன?
இதயத்தையும் உணர்வையுமா
இழந்து தொலைத்தேன் நான்?

ஒரு கோட்டில் சமாந்தரமாய்
என்னுடைய 'எல்லாமுமே' நிற்கும்.
நான் அடிக்கிற 'அடி' சரிதான்.


ஓசையின் உறுதி

செவ்வரத்தம் பூவுக்கும்
காலடிகளின் சத்தம் கேட்கிறதாம்...
ஆரோ ஒரு அயல்நாட்டு விஞ்ஞானி
ஆய்வுசெய்து சொல்கிறான்.

என் காலடியோசை
என் நிலமெங்கும் கேட்கும் என்பதற்கு
விஞ்ஞானிகளின்
ஆய்வு ஒன்றும் தேவையில்லை.

நீ புதைத்த மிதிவெடியில்
போகவில்லையடா என் கால்கள்
நான் வரிந்த
இதய உறுதியில் போயிற்று.
இதய அடிகளின் சத்தம் இருக்கும்வரை
என் காலடியோசை
உன்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

க. அதவன்.

நன்றி
வெள்ளி நாதம்.

Labels: ,


Thursday, June 23, 2005

குழந்தைகளின் உலகம்.


“இந்த மரத்தின்ர விளிம்புகள் பச்சை நிறமா இருக்கு. இது இங்க நிண்டபடி வானத்துக்கு உயந்துகொண்டு போகுது. காத்து கடந்துபோகேக்க அதோட ரகசியம் பேசுது.
‘எங்கெங்க போனனீயெண்டு எனக்குச் சொல்லு; என்னென்ன கண்டனீ; என்னால அரக்க ஏலாது; ஏனெண்டா என்ர வேருகள் என்னை நிலத்தோடக் கட்டிப்போட்டிருக்குதுகள்; நெடுக இஞ்சதான் நிக்கவேணும்' எண்டு அந்த மரம் காத்திட்ட கேக்குது.
அதுக்குக் காத்து மரத்தோட ரகசியமா கதைக்கும்.
‘நான் ஒரு இடத்தில நிக்கமாட்டன்; என்னால அப்படி நிக்க ஏலாது; நான் போய்.. போய்.. போய்க் கொண்டேதான் இருப்பன்; உன்னோட நிண்டு கதைக்க ஏலாது’
எண்டு சொல்லிப்போட்டு சிரிச்சுக்கொண்டே போகுது.
அதுக்கு மரம்,
‘உன்னோட வர விருப்பமாயிருக்கு; இப்பிடியே நிக்க எரிச்சலாயிருக்கு; நீ எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய்@; ஆனா நான்….ஓ’
எண்டு பெருசா அழுகுது.”

இது சிறுவனொருவனின் மரமொன்றைப்பற்றிய விவரணம். இன்று சஞ்சிகையொன்றைப் படித்தேன். அதில் “மூடுபனிக்குள் ஒரு தேடல்” என்ற பெயரில் தமிழாக்கத்தொடர் நவீனமொன்று வெளிவருகிறது. அதன் ஐம்பதாவது அத்தியாயம் தான் நான் வாசித்த பகுதி. அதில் கதைசொல்லி ஒரு சிறுவனோடு உரையாடுகிறார். வாசித்தஅளவில் அவன் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாயிருக்க வேண்டும். அவன் பெயர் ‘டிப்ஸ்’.
ஜேன், ஹெடா, ஜேக், மில்லி, போன்ற பாத்திரங்கள் வருகின்றன.

டிப்ஸ் குறிப்பிட்ட அந்த மரத்தை மிகவும் நேசிக்கிறான். தோட்டக்காரன் ஜேக் அவனுக்குச் சொல்கிறான்,
‘இது 200 வருசமா இஞ்ச நிக்குது, ஆனா ஒருத்தரும் உன்னைப்போல இந்த மரத்தை நேசிக்கேல’.
அம்மரத்தின் கிளைகள் வீட்டுச் சுவரைத் தொடுகிறது என்று அக்கிளைகளை வெட்டிவிடும்படி டிப்ஸின் தந்தை தோட்டக்காரனைக் கேட்க, அவனும் கிளைகளை வெட்டுகிறான். தன் யன்னலின் பக்கமிருக்கும் கிளையை வெட்ட வேண்டாமெனக் கெஞ்சும் டிப்சுக்காக ஜேக் (தோட்டக்காரன்) அதை வெட்டாமல் விடுகிறான். ஆனால் தந்தை விடாப்பிடியாக நிற்க, ஜேக்,
‘கிளை சுவரில் தேய்க்காதவாறு, அனால் டிப்ஸ் எட்டித் தொட்டு விளையாடக் கூடியதாக விட்டு வெட்டிவிடுவாதாகச்’ சொல்கிறான்.
ஆனால் தந்தை விடாப்பிடியாக அக்கிளையை முழுவதுமாக வெட்டுவிக்கிறார்.

அந்தக் கிளை தன்னைத் தொடுவதாலேயே (கவனிக்க: தான் கிளையைத் தொடுவதாகச் சிறுவனாற் சொல்லப்படவில்லை) தன்தந்தைக்கு எரிச்சல் என்று தனக்குள் அனுமானித்துக்கொள்கிறான். தான் டிப்சுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருப்பதாச் சொல்லி அவற்றைக் கொடுக்கிறார் தந்தை. அத்தனையும் செயற்கை விளையாட்டுப் பொம்மைகள். முதற்பார்வையிலேயே அவற்றில் வெறுப்பையும், மரக்கிளை மீதான நேசிப்பையும் சிறுவன் வெளிப்படுத்துகிறான். வெட்டப்பட்ட அக்கிளைநுனியை ஜேக் சிறுவனிடம் கொடுக்கிறான்.

இவ்வளவும் போன வருசம் நடந்ததாகவும் தான் இப்போதும் அக்கிளையை வைத்திருப்பதாகவும் அதை வேறு யாரும் தொடவிடுவதில்லையென்றும் கதைசொல்லிக்குச் சொல்கிறான் சிறுவனான டிப்ஸ். (சமயத்தில் அதைத் தொட்ட யாருக்கோ கடித்துவிட்டதாவும் சொல்கிறான்) அவன் வெளியுலகத்தையும் அம்மரத்தையும் ரசித்த அந்த யன்னலும் முற்றாகப் பூட்டப்படுகிறது.

சிறுவனின் நெருங்கிய நண்பன் தோட்டக்காரனான அந்த ஜேக் மட்டுமே. சிறுவனே சொல்கிறான்,
“ஜேக்கை விட எனக்கு நண்பர்கள் இல்லை. மற்ற மனுசரவிட எனக்கு மரங்களும் காக்கா, குருவி போல பறவையளுந்தான் சிநேகிதங்கள்.”

அத்தனையும் குழந்தை மனதொன்றில் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவன் ஒரு பாட்டை முனுமுணுக்கிறான். இது எங்க படிச்சனியள்? என்று கேட்கப்படும் கேள்வியில்தான் அனைத்தும் தொடங்குகிறது. வழமையாக குழந்தைகள் போலவே, ரீச்சர் பற்றித் தொடங்கி அப்படியே சுத்தி மரம்பற்றி, ஜேக் பற்றி, கிளை வெட்டப்பட்டது பற்றியென்று எல்லாக் கதையும் வருகிறது. இடையில் கதைசொல்லி வேறு கதைக்குத் தாவினாலும், சிறுவன் மரத்தைப்பற்றியே கதைக்கிறான்.

இது எந்தப் புத்தகத்தின் தமிழாக்கமோ தெரியவில்லை. மூலப்புத்தகத்தின் பெயர் போடப்படவில்லை. மொழி பெயர்ப்பவர், வின்சன்ட் ஜோசப். இவர்தான் எக்ஸோடஸ் எனும் இஸ்ரேலியர் பற்றிய புத்தகத்தைத் தமிழில் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்று மொழியாக்கம் செய்தவர். இவரைப்பற்றி முன்பும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த மொழியாக்கத்தில் அச்சிறுவனின் சிந்தனைகள், மொழி நடை, கதை சொல்லும் பாங்கு என்பன நன்கு பிடித்துள்ளது. தங்களுக்குள் பெரியளவு வேற்றுமைகள் இல்லையெனவும், பெரியவர்களிடத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாக உள்ளது என்பது போலவும் ஓரிடத்தில் சொல்கிறான். அவன் பாவிக்கும் வார்த்தைகள், ‘வளந்த பொம்பிளையள், வளந்த ஆம்பிளையள்’. இது ஓர் உளவியல் நவீனம் என்று தலைப்புப் போடப்படுகிறது. நவீனம் முழுவதும் குழந்தைகளின் உளவியல்தான் நிறைந்திருக்குமென்று படுகிறது.

இலையுதிர்க் காலத்தில் உதிராமல் மீதியாயிருந்த ஓர் இலை, தன்னை ஏன் ஒருத்தரும் கூட்டிக்கொண்டு போக வரேல எண்டு அழுகுதாம். காத்து வந்து அந்த இலையை உலகம் முழுக்கக் கூட்டிக்கொண்டு போகுதாம். கடசியா தன்ர முற்றத்திலயே வந்து இறக்கிவிட்டுட்டுப் போச்சுதாம். நல்லாக் களைச்சுப்போன அந்த இலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சிருக்கிறதாக கதைசொல்லிக்கு அவன் சொல்கிறான். மேலும் அந்த இலை எங்கெங்கெல்லாம் போய் வந்திருக்குமெண்டு யோசிச்சு அந்தந்த நாடுகளப்பற்றியெல்லாம் தான் அறிந்துகொள்வதாகவும் சொல்கிறான்.

குழந்தைகளின் கதையாடல் நன்றாக இருக்கிறது. ஒரு மழலை கதைக்கும் போது ஆசையாகக் கேட்டுக்கொண்டிருப்போமே, அதே சுவாரசியத்தோடு இந்தப் பகுதியைப் படித்தேன். இது அந்தத் தொடரின் ஐம்பதாவது பகுதி. முழுவதும் படிக்கக் கிடைக்காதா என்று ஏக்கமாயிருக்கு.

இது வன்னியிலிருந்து வரும் ஈழநாதத்தின் வார சஞ்சிகையான வெள்ளி நாதத்தில் வந்திருந்தது. வெள்ளி நாதத்தைப் பார்க்கும்போது மனத்துக்கு இனிமையாக இருக்கிறது. மிகத்தரமான வடிவில் வருகிறது. நிறைவான ஆக்கங்கள், எந்த வியாபார சமரசமுமில்லாமல் வெளிவருகிறது. இதுபற்றிக்கூட நேரமிருந்தால் எழுத வேண்டும்.

Labels: , , ,


Saturday, June 04, 2005

எழுத்தாளர் நந்தி காலமானார்.

முதுபெரும் தமிழறிஞர் மற்றும் எழுத்தாளர் நந்தி சி.சிவஞானசுந்தரம் (வயது 77) நேற்று சனிக்கிழமை காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தமிழ் இலக்கியத்திற்காக அவர் நந்தி எனும் புனைபெயரில் பாரிய பங்காற்றியவர்.
மருத்துவ அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் மேல்மாகாணத்திலும் யாழிலும் பணியாற்றினார். பின்னர் யாழ். பல்கலைக் கழக விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் கடமையாற்றினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தொடங்குவதற்கு பெரும் முன்முயற்சிகளை மேற்கொண்டவர் நந்தி சிவஞானசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி - புதினம்.

Labels: , ,


Thursday, April 07, 2005

வெலிக்கடை முகட்டிலிருந்து (கவிதை)

வெலிக்கடை முகட்டிலிருந்து வெள்ளை உலகத்திற்கு

நாடித் துடிப்புக்களின் விகிதம்
நாளுக்கு நாள் குறைவுற்று
என்றோ ஒருநாள்
முற்றாய்
முடங்குவது உறுதி.


வலிகளினால் அலறியலறி
வாய் உமிழ் நீரற்று
கண்ணர்ப் பெருக்கோடி
அதுவும் வற்றும்.
எனினும்
முடியாதது வதைகள்.

வதைகள்-
நாளிகை,
நாட்களெனக் கடந்து
விடாப்பிடியாயும்,
மாறா வினாக்களோடும்,
விசித்திரமாகவும்,
வித்தியாசமாகவும் தொடரும்.

காரணமற்ற கைதுக்குப் பின்னரான
காலப் பதிவுகளில்…
கலைந்து போன என் கூடு
கருகிப்போன உறவுகள்
கல்லாகிப்போன மனது.
இது ஞாபகமற்ற வருடத்து
நான்காவது தவணை நாள்.

நம்பிக்கையற்று,
நான்கு நபர்களுடன் பிணைக்கப்பட்டு
நான் போகிறேன்.

வெளியிலே...
வெலிக்கடைக் கூரையேறிக்
குரல் கொடுக்கிறான் ஒருவன்.

வெள்ளை உலகமே…
வெந்து போன இந்த உள்ளத்தையும்
வெளிறிய உடலையும்
ஒரு தடவை பாருங்கள்.

நான் மதிக்கப்படவில்லை.
நான்கு சுவருக்குள் இன்றும்
மிதிக்கப்படுகிறேன்.
ஏனெனில்,
நான் ஒரு தமிழன்.
----------------------------------------------------------------

நண்பன் நா.கானகன் எழுதிய கவிதையொன்று வெள்ளிநாதத்தில் கண்டேன். நண்பனின் கவிதையை இங்கே தந்துள்ளேன்.
நன்றி வெள்ளி நாதம்.

Labels: ,


கலைஞன் ஒருவனின் இழப்பு.

விழிசிட்டி என அறியப்பட்ட க.சிவராசா எனும் கலைஞன் காலமாகிவிட்டார். இச்செய்தியை இன்று எனக்குக் கிடைத்த வெள்ளி நாதத்தில் கண்டேன். எனக்கு அவரை வானொலி நாடகத் தயாரிப்பாளராகவே அறிமுகம். புலிகளின் குரல் வானொலியில் நாடகத்தயாரிப்பாளராகவும் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் அவர் பணிபுரிந்த காலங்களில் அவர் குரலையும் நிகழ்ச்சிகளையும் வானொலியில் கேட்டு மகிழ்ந்தேன். பின்னர் நேரே சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தபோது அவரோடு கதைத்துள்ளேன். மிகுந்த உற்சாகமான, மென்மையான மனிதர்.

வானொலி நாடகங்கள் தயாரிப்பதிலுள்ள சிக்கல்களையும் மற்றவற்றுக்கும் இவற்றுக்குமுள்ள வித்தியாசங்களையும் அழகாக விவரிப்பார். அவரும் யோகேந்திரநாதனும் சேர்ந்து செய்த தொடர் நாடகங்கள் இன்றும் மனத்தில் பசுமையாக இருக்கிறன. பின்னர் நிதர்சனத்திலும் இணைந்து பணியாற்றியவர். இவரது இழப்பு புலிகளின் குரலுக்கு நிச்சயம் பெரியதாய் இருக்கும்.பல சிறுகதைகள் வானொலி நாடகங்கள் என்று பல படைப்புக்களை உருவாக்கியிருந்தாலும் இவரது ஆக்கங்கள் எதுவும் இதுவரை நூலுருப்பெறவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. அவையும் விரைவில் நடைபெறும் என்று நம்புவோம்.அன்னாருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

Labels: , , ,


Wednesday, March 16, 2005

"பாவனை" பண்ணல்' ...பெட்டைக்குப் பின்னூட்டம்

நேற்று இரவு பெட்டைக்குப் பின்னூட்டமிட எழுதியது. ஆனால் நிறைய நேரம் செலவழித்தும் என்னால் பின்னூட்டமிட முடியவில்லை. (அதென்னவோ தெரியேல. பொடிச்சியளெண்டா என்ர கணிணிக்கு அலர்ஜி வந்திட்டுது போல. நேற்று ஷ்ரேயாவின் தமிழ் முயற்சிக்குப் பின்னூட்டமிடவும் சரியாக் கஸ்டப்பட்டனான். மொடர்ன்கேர்ள் விதிவிலக்கு) மற்றவர்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு பின்னூட்டத்தைத் தவிர வேறேதுவும் வரவில்லை. எனவே எனது பின்னூட்டத்தை என் பதிவில் இடுகிறேன். பெட்டையின் பதிவில் இட முடிகிறபோது இதை அழித்துவிடுவேன். பின்னூட்டமாக இட எழுதியதால் விரிவாக எழுதவுமில்லை; இப்போது அவசரமாகப் பதிவதால் திருத்தங்களேதும் செய்யவுமில்லை.

பொடிச்சி!

அவசியமான பதிவு. வன்னியில் பல பெயர்களில் (வின்சன்ற் ஜோசப், அருளாளன், இன்னும் பிற..) மொழிபெயர்ப்புகள், ஆக்கங்கள் எழுதும் ஒருவர் ஒருக்கிறார். குழல் என்ற பெயரில் ஆபிரிக்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் யுதர்களின் இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம், அவர்களின் போராட்டம் பற்றிய 'எக்ஸோடஸ்' (?) என்ற புத்தகத்தைத் தமிழில் "தாயகம் நோக்கிய பயணம்" என்ற பெயரில் மொழிபெயர்த்தவர். மேலும் (சிங்களம் உட்பட) 60 க்கும் மேற்பட்ட படைப்புக்கள், கையேடுகள் என்று மொழிபெயர்த்து வெளியிட்டவர். சொந்த ஆக்கமாகவும் தமிழில் சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர்.

இப்போதும் முழுநேர மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் அவரோடு எனக்குப் பழக்கமுண்டு. அவர் ஆபிரிக்கக் கவிதைத் தொகுப்பிலிருக்கும் போது சந்தித்துக் கதைத்தேன். அப்போது "ஏன் நீங்கள் தமிழில் படைப்புக்கள் எழுதுவதைக் குறைத்து விட்டீர்கள்" என்று நான் கேட்டபோது, படைப்பது என்பது என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பதைவிட இலகுவானது. எல்லாரும் அதத்தானே செய்யினம்? ஆனா எங்கட தேவை இப்ப மொழிபெயர்ப்புக்களில பெரிதும் தங்கியிருக்கு" என்று விளக்கிக் கொண்டு வந்தவர், இறுதியாகச் சொன்னார்:

'வரவேற்பு இல்லாவிட்டாலும் படைப்பாளியாக யாரும் இருந்துவிட்டுப் போகலாம்.
ஆனால் மொழிபெயர்ப்பாளனாக யாரும் "பாவனை" பண்ண முடியாது'



.

Labels: , ,


Tuesday, March 08, 2005

அவர்கள் பார்வையில்... –மகளிர் தினக் கவிதை.

வணக்கம்!

அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈழத்துப் பெண்கவிஞை ஒருத்தியின் கவிதையொன்றைப் பதிகிறேன். இது 1987 இல் பெண்கள் ஆய்வு வட்டத்தினரால் வெளியிடப்பட்ட “சொல்லாத சேதிகள்” எனும் தொகுப்பில் “அ.சங்கரி” இன் கவிதையொன்று.

அவர்கள் பார்வையில்
எனக்கு
முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவுமில்லை.

அவர்களின் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.

சமையல் செய்தல்
படுக்கை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமையாகும்.

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கு
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரை
இதுவே வழக்கம்.

Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]