Monday, January 01, 2007

"முன்னொரு காலத்தே ஒரு தவறணை..."- விடுபட்ட குறிப்புகள்

தொலைந்துபோன வன்னி ஆளுமைகள்

கடந்துபோன 2006 ஆம் ஆண்டு ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அரசியல், இராணுவ, இலக்கியத் துறைகளில் 'ஈடுசெய்ய முடியாத' இழப்புக்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. முக்கியசரிவுகள் பற்றிச் சிலகுறிப்புக்கள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன.

ஈழத்து இலக்கியத்தில் இவ்வாண்டில் நிகழ்ந்த குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இழப்புக்களில் வன்னி சார்ந்த இரு படைப்பாளிகளும் அடங்குவர்.

1. கவிஞர் நாவண்ணன்
2006 சித்திரையில் சுகவீனம் காரணமாக வன்னியில் இறந்த படைப்பாளி.


தொடக்கத்தில் ஏதோவொரு விதத்தில் தமிழ் மிதவாதக் கட்சிகளோடும் சக்திகளோடும் தொடர்பிருந்த கவிஞர் நாவண்ணன் பின் ஆயுதப்போராட்டத்தோடும் தன்னை ஒத்திசைவாக்கியதோடு, அப்போராட்டம் தனியொரு இயக்கத்தால் சுவீகரிக்கப்ட்டபின் அவ்வியக்கத்தோடும் ஐக்கியமானார்.

இயக்கத்தோடு ஐக்கியமாக முன்பே அவரெழுதிய படைப்புக்கள் முக்கியமானவை.
'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற பேரில், 1957 ஆம் ஆண்டிலிருந்து அவ்வப்போது நடந்த தமிழர் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளின் சாட்சியங்களை நூலாக்கித் தொகுத்திருந்தார். அதைவிட மக்களுக்காக வாழ்ந்து ஆதிக்கத்தை எதிர்த்ததால் சிங்களப்படையினரால் தன் பங்குக்குரிய கோயிலடியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட மன்னார் - வங்காலைப் பங்குத்தந்தை அருட்திரு. மேரி பஸ்ரியன் அடிகளார் பற்றிய நூலை 'தீபங்கள் எரிகின்றன' என்ற பெயரில் எழுதினார்.

புலிகளின் குரல் வானொலியில் நீண்டகாலமாக - கிட்டத்தட்ட தொடக்கம் முதலே தொடர்ந்து பணியாற்றி வந்தார். தொன்னூறுகளின் இறுதியில் 'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற தொடரை வானொலியில் வழங்கினார். ஏற்கனவே அதேபெயரில் தானெழுதிய புத்தகத்தை இன்னும் விரிவாக்கி, நேரடி சாட்சியங்களின் ஒலிவடிவச் செவ்விகளைத் தொகுத்து வழங்கினார். குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சமாக, அதிகளவில் பேசப்படாத, ஆவணப்படுத்தப்படாத கிழக்கு மாகாணச் சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் நேரடிக்குரற்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தியதைக் குறிப்பிடலாம். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த காலப்பகுதியை அண்மித்து நடந்த படுகொலைகள், சித்திரவதைகள் வரை ஒலிவடிவிலேயே ஆவணப்படுத்தி அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கினார்.

'தமிழன் சிந்திய இரத்தம்' என்ற கவிஞர் நாவண்ணனின் தொகுப்பு, தனியொரு இயக்கத்தைத் தாண்டி, ஈழத் தமிழ்ச்சமூகத்திற்கெனப் படைக்கப்பட்ட முக்கிய படைப்பு.

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கரும்புலியாக வீரச்சாவடைந்தவர்களின் வரலாற்றை 'கரும்புலி காவியம்' என்ற பேரில் எழுதினார். அதன் முதற்றொகுதி முடித்த நிலையில்தான் மரணமடைந்தார்.
"காவியமாய் புதுப் புறம்பாடி" -எம்
காலத்து வரலாற்றை நான் பொறிக்க வேண்டும்
சீவியத்தை மண் மீட்கத் தந்து - சென்ற
செங்களத்து மறவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்"
என்ற அவரது கனவு முழுதாக நிறைவேறாமலேயே சென்றுவிட்டார்.

அக்காவியத்துக்கான அவரது உழைப்புப் பெரியது.
தனியொரு இயக்கம் சம்பந்தப்பட்டதென்றாலும் ஈழப்போராட்டத்தில் கரும்புலி காவியம் முக்கியமான படைப்பு மற்றும் ஆவணம்.


கவிஞர் நாவண்ணன் அவர்கள் தேர்ந்த சிற்பக்கலைஞரும்கூட.

இவரது ஒரே மகன் சூசைநாயகம் கிங்சிலி உதயன் (2ஆம் லெப்.கவியழகன்)போராட்டத்தில் இணைந்து களமொன்றில் வீரச்சாவடைந்தார்.


நாவண்ணன் பற்றி சிறிது விரிவான பதிவு:
மக்கள் இலக்கியகாரன்

2. கவிஞர் பொன்.கணேசமூர்த்தி
2006 ஆவணி மாதம் யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தன் பெரும்பாலான படைப்புக்களை விடுதலைப்போராட்டம் சார்ந்தும் - அதேசார்பில் விடுதலைப்புலிகளை மட்டும் சார்ந்தும் அமைத்துக் கொண்டவர். வாழ்க்கையை ஓட்ட, வங்கி ஊழியத்தைத் தொழிலாகக் கொண்டவர். கவிதை, பாடல் என்பவற்றாலேயே அதிகம் அறியப்பட்டாலும் அவற்றைத் தாண்டி பல கலைவடிவங்களில் கால்பதித்தவர்.

மிகவெற்றிகரமான நாடக நெறியாளர். இவரின் இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் பரவலாக அரங்கேறிய 'சந்தனக்காடு' நாடகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது. இவர் எழுதிய 'இலங்கை மண்' என்ற 'இராவணனை நாயகனாகக் கொண்ட' நாடகமும் அவ்வாறே.
பல பட்டிமன்றங்களை திறம்பட நடத்தியுள்ளார். வில்லிசைக் கலையிலும் தடம்படித்தவர்.
இவரின் கவியரங்குகள் 'குறிப்பிட்ட' மக்களிடத்து மிகப்பிரசித்தம்.

யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வன்னிக்கு ஓடிவந்த நேரத்தில்
நடத்தப்பட்ட, 'நாங்கள் பலமிழக்கவில்லை; தோல்வியுறவில்லை; இதுவொரு தந்திரோபாயப் பின்வாங்கல்;விரைவில் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்றவாறான பலதரப்பட்ட பரப்புரைகளைவிட பொன்.கணேசமூர்த்தியின் 'புலியொரு காலமும் பணியாது' என்ற ஒரேயொரு பாடல் தந்த நம்பிக்கை மிகமிக அதிகம்.

இவரது இரண்டாவது மகன் வன்னிக்குள்ளேயே இனந்தெரியாத நோயொன்றுக்குப் பலியான வேதனையை நாவலாக்கினார். மூன்றாவது மகன் போராட்டத்திலிணைந்து 1996 ஆம் ஆண்டு படையினருடன் மோதி வீரச்சாவடைந்திருந்தான்.

__________________
மேற்குறிப்பிடப்பட்ட இரு படைப்பாளிகளும் வெளிப்பார்வைக்கு குறிப்பிடத்தக்க இலக்கியங்களேதும் படைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாம் வாழ்ந்த சமூகத்தில், சுற்றத்தில் நடப்பவற்றையும் அச்சமூகத்துக்குத் தேவையானவற்றில் ஏதோ சிறுபகுதியையென்றாலும் பதிவாக்கியிருக்கிறார்கள். களத்தில் தமது மகன்களை இழந்திருக்கிறார்கள். இதுவொரு தகுதியல்லவென்றாலும் எதை எழுதினார்களோ, எந்த அரசியலைப் பேசினார்களோ அதையே செய்துகொண்டிருந்தார்கள்; எழுதுவதில் குற்றவுணர்வின்றி இருந்திருக்கிறார்கள்.

இவர்களிருவரும் வன்னியைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிட்டாலும் அச்சொல்லினூடு அடையாளப்படுத்தப்படுவதற்குக் காரணமுண்டு.

___________________
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவ ஆளுமைகளின் இழப்புக்களும் குறிப்பிடத்தக்கவை. எண்ணூற்றுச் சொச்சம் போராளிகளை இந்த ஆண்டில் இழந்திருந்தாலும் கேணல் இறமணன், லெப்.கேணல் மகேந்தி போன்ற மூத்த தளபதிகளதும், லெப்.கேணல் வீரமணி, லெப்.கேணல் குஞ்சன், லெப்.கேணல் அக்பர் போன்றவர்களதும் இழப்புக்கள் ஈடுசெய்யப்பட முடியாதவை.


________________________________
2006 இல் இழக்கப்பட்ட சில ஆளுமைகளைப் பற்றிய தொகுப்பு:
அலைஞனின் அலைகள்: குவியம்: புலம்-20: "முன்னொரு காலத்தே ஒரு தவறணை...'- குறிப்புகள்"

தலைப்பின் பெரும்பகுதி அவரிடமிருந்து கடன்பெற்றதே.

Labels: , , , ,


Comments:
குறிப்புகளுக்கு நன்றி.

பொன்.கணேசமூர்த்தி பற்றி இன்னும் விரிவாகப் பதிந்திருக்கலாம்.
 
வன்னி,
அருமையான பதிவு.
மிக்க நன்றி.
 
அனானி,
வெற்றி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
அவசியமான பதிவு
 
வன்னியன்!

மிக நல்ல தொகுப்புப் பதிவு. பாராட்டும் நன்றிகளும்.
 
கானா பிரபா,
மலைநாடான்,

வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]