Sunday, August 09, 2009

பத்மநாதன் கைதுக்கு யார் காரணம்?

கடந்த 05-08-2009 அன்று கே.பி எனப்படும் செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு பெரும் பின்னடைவு இது.

நீண்டகாலம் ஆயுதவழியில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை கடந்த மேமாதம் அழிக்கப்பட்டதோடு அவ்வியக்கம் தளத்தில் செயலிழந்தது. ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்ற அறிவிப்போடு அவ்வியக்கம் தமது ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டது.

இந்நிலையில் கே.பியைத் தலைமைச் செயலராகக் கொண்டு வன்முறையற்ற வழியில் தொடர்ந்தும் செயற்படும் நிலைப்பாட்டை புலிகள் அமைப்பு எடுத்தது. இது புலத்திற் செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினராலும், தொடர்ந்தும் களத்திலிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தொடக்கத்தில் மிகச்சிலரால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோதும்கூட அவை சரிப்படுத்தப்பட்டு அவ்வியக்கம் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கத்துக்கு மட்டுமன்றி, அவ்வியக்கத்தைச் சார்ந்த தமிழ்மக்களும் பேரதிர்ச்சியே.

இந்த நிலைமைக்கு யார் காரணம்?

கே.பியின் அதிகரித்த நகர்வுகள், பகிரங்கமான நடமாட்டங்கள், நேர்காணல்கள், ஏராளமான சந்திப்புக்கள் என்பவை அவருக்கு ஆபத்தானவையாக அமைந்தன. ஆனால் அவர் அப்படிச் செயற்பட வேண்டி வந்ததற்கான காரணகர்த்தாக்கள் வேறுயாருமல்ல, நாம்தாம்.

கே.பி மீதான அவதூறுகள், வசைபாடல்கள், கயமைத்தனமான விமர்சனங்களை நோக்கினால் அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய காரணிகளை அறியலாம்.
'நிழல் மனிதர்', 'அனாமதேயப் பேர்வழி' போன்ற சொற்களால் அவர் குறிப்பிடப்பட்டார். அவரது மறைப்புத்தன்மையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரது தலைமையை எதிர்க்கச் சிலர் கிளம்பினர். அது படிப்படியாகக் குறைந்தபோதும் இன்றுவரை அந்த விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாத இவரா எமக்குத் தலைமை என ஒரு கூட்டம் கிளம்பியது. இதைவிட, மக்களோடு தொடர்பிலில்லாத மர்ம மனிதர் அவர், எப்படி இவரால் ஒழுங்காகக் செயற்பட முடியுமென்ற விமர்சனம் வைக்கப்பட்டது. கே.பிக்கான ஒத்துழைப்பு சரியாக வழங்கப்படவில்லை. வீம்புக்காக அவரை எதிர்த்து நின்ற கூட்டம் தொடர்ச்சியான அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

இவ்வளவும் புலிகள் இயக்க உறுப்பினர்களால் செய்யப்பட்டவையல்ல. (ஆம், புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் சிலர் முரண்பட்டது உண்மையே! அவர்களின் எதிர்ப்பில் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. அதைவிட அவர்களுக்கு அந்த அருகதை இருந்தது. இறுதியில் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள்.) புலிகள் அமைப்பின் உறுப்பினரல்லாத, ஆனால் தாம்தான் இயக்கம் என்ற மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த நபர்கள்தாம் இதில் முக்கியமானவர்கள்.
அவர்கள் "பலர்" வியாபாரிகளாயிருந்தார்கள், ஊடகவியலாளராய் இருந்தார்கள், இராணுவ /அரசியல் ஆய்வு என்ற பேரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பவர்களாய் இருந்தார்கள், இயக்கம் தனது செயற்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திய மக்கள் அமைப்புக்களில் அங்கத்தவராய் அல்லது பொறுப்பாளராய் இருந்தார்கள், யுத்தநிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குப் போய் நாலு புகைப்படம் பிடித்துக் கொண்டு வந்தவர்களாய் இருந்தார்கள், பொறுப்புக்காகவும் நாலுபேரை மேய்க்கும் மனமகிழ்ச்சிக்காகவும் ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்களாய் இருந்தார்கள்.
இவர்கள் தமக்குத் தெரிந்த நாலுபேரையும், பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் வைத்தே இயக்கத்தை அறிந்திருந்தார்கள். கே.பி ஏதோ இவ்வளவுநாளும் ரொட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரெனத் தலைமைக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

வேறு "சிலர்" உண்மையில் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் அயோக்கியத்தனமான காரணங்களால் கே.பியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நபர்களின் திருகுதாளங்களால் மக்கள் குழப்பமடைந்தார்கள். கே.பிக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவர் தனது கூண்டுக்குள்ளிருந்து வெளிவர வேண்டியிருந்தது. மர்ம மனிதர், நிழல் மனிதர், அனாமதேயப் பேர்வழி போன்ற வசைகளை எதிர்கொள்ள அவர் ஓரளவு வெளிப்படையாகச் செயற்பட வேண்டியிருந்தது; ஊடகங்களோடு உரையாட வேண்டியிருந்தது; பலரோடு நேரடிச் சந்திப்புக்களைச் செய்ய வேண்டியிருந்தது. குழப்ப நிலையிலிருந்த பல செயற்பாட்டாளரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்ததன் மூலமே அவர் பல சிக்கல்களைத் தீர்த்து முன்னேறினார். செயற்பாட்டு மந்தநிலையைக் களைய தானே நேர்நின்று செயற்பட வேண்டுமெனத் தீர்மானித்தார்.

தான் யாரென்பதையும் தானொரு முக்கியமானவர் என்பதையும் தானே சொல்ல வேண்டிய அவலநிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். மிகச்சிலரைத் தவிர எல்லோராலும் இது வோறோர் ஆள் என்று இதுவரை காலமும் இனங்கண்டுகொண்டிருந்த புகைப்படங்களில் நிற்பது தானேதான் என்ற உண்மையை அவரே புகைப்படங்களை வெளியிட்டுச் சொல்ல வேண்டி வந்தது. (காட்டுக்குள் பாலா அண்ணை, சங்கர் அண்ணை, தலைவரோடு நிற்பது மு.வே.யோ வாஞ்சிநாதன் என்பதாகவே- கே.பியையும் வாஞ்சிநாதனையும் தெரிந்தவர்களைத் தவிர்த்து- பெரும்பாலானவர்களால் இதுவரை காலமும் நினைக்கப்பட்டு வந்தது.)

இவ்வாறான செயற்பாடுகள் தனது பாதுகாப்புக்குப் பாதகமென்பதை அவர் நன்கு அறிந்தேயிருந்தார். ஆயினும் அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து எச்சரித்தவர்களிடம், தான் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதை விசனத்தோடு குறிப்பிட்டுத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டார். தனது இயலாத உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இறுதியில் அவரும் மற்றவர்களும் பயந்தது போலவே மாட்டுப்பட்டுப் போனார்.

அவரை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை சுடுமென்று தெரியவில்லை. பலருக்கு இதுவொரு விடயமேயன்று. மூன்றாந்தரப்பாக நின்று 'அப்பிடியாம், இப்பிடியாம்' என்று விண்ணாணம் பேசிக்கொண்டு அடுத்த 'மேய்ப்பு'க்குக் கிளம்பிவிடுவார்கள்.

வழிநடத்துபவருக்கான ஆபத்தையும் அவரின் மறைப்புத்தன்மைக்கான தேவையையும் நன்கு அறிந்திருந்தும்கூட அதைக்கொண்டே அவரைச் சீண்டி மாட்டுப்பட வைத்தவர்கள் கொஞ்சநேரம் கண்களை மூடி யோசிப்பார்களாக.


===============
*இக்கட்டுரையில் கே.பி என்ற பெயர் மூலமே திரு. பத்மநாதன் குறிப்பிடப்படுவது தற்செயலானதன்று. அப்பெயருக்கான வலு உறைக்க வேண்டும். ஈழப்போராட்டத்தில் இராணுவ வெற்றிகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அழப்பரியது. அப்பங்களிப்புக்கள் யாவும் கே.பி என்ற பெயரூடாகவே சாத்தியமாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனால் இன்று அதே புலத்தில்தான் கே.பி பந்தாடப்பட்டார்.

Labels: , , , , ,


Tuesday, July 31, 2007

மறக்க முடியாத யூலைகள் - ஒரு தொகுப்பு

யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான்.

1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.

கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.

அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதிலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.

அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபலமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனாவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.



1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். இது பற்றிய பதிவு இங்கே.

அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.

1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.

1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.

1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாழ ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.

1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.

1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு "இதயபூமி-1" என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.

1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாழ 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.

1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.

1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான "லெப்.ஜெனரல் நளின் அங்கமன" கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்

1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது தொடர்பான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.

பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.

அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.

இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாழ யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்கு மட்டுமே சொந்தமானவை. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.




உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.



ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.



______________________________________________________
இதுவொரு திருத்திய மீள்பதிவு.

Labels: , , , , ,


Tuesday, April 24, 2007

தீச்சுவாலை முறியடிப்புச் சமர்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலைதான். அதைவிட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள். இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் அப்பகுதிகளில் இருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவநகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம்வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்தநிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்தநிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி "அக்கினி கீல" அதாவது 'தீச்சுவாலை' என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்தபகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரைகூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் - ஏன் தமிழ் மக்களுக்கும்கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்தற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்டமிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறிமாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளைவிட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீர்ங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல்பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது. வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொதுமக்கள்தான். வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியாநிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன். பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லாவிட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும். தாம் முற்றுமுழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

அச்சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல். இன்று தீச்சுவாலை முறியயடிப்புச் சமர் ஆரம்பித்ததன் ஆறாம் ஆண்டு நிறைவு. இந்த நேரத்தில் அம்முறியடிப்புச் சமரில் வீரகாவியமான மாவீரர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அனைவருக்கும் வீரவணக்கம்.
________________________________________

தீச்சுவாலை முறியடிப்புச்சமர் நினைவாக வெளிவந்த பாடல்களில் இருந்து ஒருபாடலை இப்போது கேளுங்கள்.
பாடலைப் பாடுபவர்களுள் ஒருவர் தமிழ்க்கவி.
பாடல் இடம்பெற்ற ஒலிப்பேழை: தீக்குளித்த நேரம்

ஊரைச்சேர்த்து_ஆடுவ...

Labels: , , , , ,


Thursday, April 19, 2007

நாட்டுப்பற்றாளர்

ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , ,


அன்னை பூபதி

இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , ,


Sunday, February 04, 2007

தியாகி திருமலை நடராஜன் நினைவு

திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் ஐம்பதாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி.

Labels: , , ,


Sunday, December 31, 2006

தீர்ப்பெழுதும் திடத்தை அருள்வீராக

"சலிக்காமல் வழிநடக்கும்
சக்தியினை எமக்கருளும்;
செல்லும் வழிகளை
செம்மைப்படுத்தி வையும்;
பாய்ச்சல் நிகழ்கையிலே
பக்கத்தில் துணையிருந்து
காற்றுச் சங்கூதும்;
வெற்றியோடு மீளும்போது
எம்மைப் பெருமைப்படுத்தும்"



என்று வீரரை வேண்டியவர் பொன்.கணேசமூர்த்தி.

_____________________________________________

Labels: , , ,


Thursday, November 23, 2006

ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்

நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல்.

இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்



1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.

இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.

இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.


தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.


இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.

அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.


மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.

மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.

இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.

ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.

ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.

அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.

சம்பந்தமுள்ள வேறுபதிவு.

-வன்னியன்-
02.11.2005.

Labels: , , , , , ,


Friday, September 29, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -4

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.


பகுதி 7


பகுதி 8


பகுதி 9 (இறுதிப்பகுதி)



முந்தைய பதிவுகள்

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1


_____________________________________________

Labels: , , ,


வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -3

வை.கோ அவர்கள் நெல்லையில் பேசிய பேச்சினை பகுதிகளாகப் பதிவாக்கி வருகிறேன்.
அவ்வகையில் முதல் நான்கு பாகங்களும் இரண்டு பதிவுகளாகப் பதியப்பட்டன.
அடுத்த இரு பாகங்களும் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

பகுதி 5



பகுதி 6



வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -1

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

_____________________________________________

Labels: , , ,


Friday, September 01, 2006

வை.கோ. பேச்சு - ஒளிப்பதிவு - பகுதி -2

நெல்லையில் நடைபெற்ற ஈழத்தமிழர் மாநாட்டில் வை.கோ பேசியவற்றிலிருந்து முதலாம் பாகம் (பதினைந்து நிமிடங்கள்) ஏற்கனவே பதிவாக்கட்டிருக்கிறது. அடுத்த இருபது நிமிடங்களைக் கொண்ட இரண்டாம் பாகம் இப்பதிவில் வருகிறது.


பகுதி - 3



பகுதி - 4

Labels: , , ,


மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.

மூதூர் என்றதுமே பலருக்கு ஞாபகம் வருவது முஸ்லீம்கள்தாம்.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.

இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.

என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?

இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.

இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.

பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.

அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.

அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.

இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]

இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.

ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.

இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth


_____________________________________________

Labels: , , , , ,


Sunday, August 27, 2006

வை.கோ பேச்சு - ஒளிப்பதிவு

திராவிடத் தமிழர்கள் வலைப்பதிவில் வை.கோ அவர்களின் ஈழஆதரவுப் பேச்சின் எழுத்துவடிவம் பதிவாக்கப்பட்டிருந்தது.
அதே கருத்தைச் சொல்லும் வை.கோவின் பேச்சின் சிறுபகுதியை ஒளிவடிவமாக இங்கே இடுகிறேன்.
திராவிடத் தமிழர்கள் வெளியிட்ட பேச்சும் இதுவும் ஒன்றுதானா என்று தெரியாது.

இது நெல்லையில் 29.12.2005 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் வை.கோ பேசியதன் முதல் 20 நமிட ஒளிப்பதிவு.
மிகுதியை பின்பு பதிவாக்குகிறேன்.

பகுதி ஒன்று.


பகுதி இரண்டு.

Labels: , , ,


Monday, July 10, 2006

மூன்று நினைவு கூரல்கள்

வயிறெரிந்து வெந்ததும், பகைவிரட்டி வென்றதும்


நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.

1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.

ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.

ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.

எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.

எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.

(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)

மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.

மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு நினைவுநாள் நேற்று.

***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.

“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.

அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
***********************************************

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் நூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.

இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.





பாடல் கேட்க முடியாவிட்டால் இங்கே தரவிறக்கிக் கேளுங்கள்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.

Labels: , , , , ,


Monday, June 26, 2006

எல்லோர்க்கும் தாயாக, தந்தையாக -ஒரு நினைவுப்பதிவு.

என்னைப் பாதித்த நாட்கள் பலவுண்டு. இன்றைய நாளும் அவற்றிலொன்று. அதுபற்றிய பதிவிது.

பொன்.தியாகம் அப்பா முழு நேரப்போராளி. எழுபதைத் தாண்டிவிட்ட வயதிலும் வன்னியெங்கும் சுழன்று திரிந்து பணியாற்றும் போராளி. புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக உள்ளார். அவரது மனைவி முன்னாள் ஆசிரியை. பிள்ளைகள் சிலர் புலம்பெயர்ந்துள்ளனர்.

மகன்களில் இருவர் ஏற்கனவே புலிகள் இயக்கத்திலிருந்து வீரச்சாவு. (கணேஸ், தினேஸ் என்று நினைக்கிறேன்). முதலாமவர் எண்பதுகளின் நடுப்பகுதியில் வீரச்சாவு. அதைவிட மருமகன் போராளி. இன்னொரு மகள் (தேன்மொழி) அப்போது போராளியாக இருந்தார்.

போராளிகள் எல்லோரும் அத்தம்பதியரை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பர் தெரிந்தவர்கள் அயலவர்க்கு அவ 'ரீச்சர்'. எந்தநேரமும் சமைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் வீடது. என்போன்ற பக்கத்து வீட்டுக்காரருக்கு அதுவொரு சாப்பாட்டுக்கடை போன்ற தோற்றத்தைத்தான் தரும்.

அப்போது "யாழ்செல்லும் படையணி" என்று ஒரு படையணி இருந்தது. (அண்மையில் வன்னியில் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட லெப்.கேணல் மகேந்தி அவர்களும் அதில் தளபதியாகச் செயற்பட்டவர்) அதில் பெண்போராளிகளும் இருந்தார்கள். யாழ்ப்பாணத்துள் அவர்களால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. லெப்.கேணல் தணிகைச்செல்வியைத் தளபதியாகக் கொண்டு பெண்கள் படையணி இருந்தது. யாழ்ப்பாணத்துள் செல்வதும் குறிப்பிட்டகாலம் தங்கியிருந்து தாக்குதல்கள் செய்வதும், மீண்டு வந்து வேறோர் அணியை அனுப்புவதுமென்று செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

பொன்.தியாகம் அப்பாவின் மகளும் அப்படையணியில்தான் இருந்தார். ஏற்கனவே தளபதி தணிகைச்செல்வி உட்பட அந்தப்படையணியில் இருக்கும் பலர் இந்தவீட்டின் நீண்டகால உறவுகள். அனைவரும் அவர்களின் பிள்ளைகள்.

அந்நேரத்தில் சிங்களப்படை மன்னாரிலிருந்து பூநகரி வழியாக (கண்டிவீதி இனி சரிவராது என்ற நிலையில்) யாழ்ப்பாணத்தை அடைவதென்று திட்டம் போட்டு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்தது. ரணசிக்குறு என்ற பெயரின்பின் தொடரிலக்கத்தில் நடவடிக்கை செய்த அவர்களைப் பள்ளமடுவில் மறித்துவைத்துச் சண்டைசெய்தனர் புலிகள். பள்ளமடுவை சிங்களப்படையாமல் தாண்ட முடியவில்லை.

இந்நிலையில் யாழ்செல்லும் படையணியை பள்ளமடு முறியடிப்புச் சமரிலும் ஈடுபடுத்துகின்றனர் புலிகள். தளபதி தணிகைச்செல்வியின் தலைமையிலேயே அணி களத்தில் நிற்கிறது.

இன்றைக்குச் சரியாக ஏழு ஆண்டுகளின் முன்னால் 26.06.1999 அன்று பள்ளமடுவில் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டான். கடும் சண்டை முண்டது. மாவீரர் பணிமனைக்குக் கிடைத்த தகவலின்படி தளபதி லெப்.கேணல் தணிகைச்செல்வி வீரச்சாவு. தனக்குக் கிடைத்த தகவலை வீட்டுக்கு மனைவியிடம் அனுப்பிவைத்துவிட்டு அலுவலகத்தில் இருக்கிறார் பொன்.தியாகம் அப்பா. சிலமணித்துளிகளின் பின் மேஜர் தேன்மொழி வீரச்சாவென்று செய்தி வருகிறது.
ஆம்! பொன்.தியாகம் அப்பாவின் பிள்ளைதான்.

பணிமனையிலிருந்து வீடுவருகிறார் தியாகம் அப்பா. வீட்டில் யாருமில்லை. 'தணிகைச்செல்வி அக்காவின்ர வீரச்சாவு கேட்டு அங்க போயிட்டா ரீச்சர்' என்று அக்கம்பக்கத்தார் சொல்கின்றனர். தணிகைச்செல்வியின் வீட்டுக்குப் போகிறார். வாசலிலேயே மனைவியின் அலறல் கேட்கிறது. இன்னும் வித்துடல் வந்திருக்கவில்லை. தியாகம் அப்பாவைக் கண்டதும்,
"எங்கட பிள்ளை எங்கள விட்டுப் போயிட்டாளே" என்று கத்திக்கொண்டு வருகிறார். தியாகம் அப்பாவோடு கூட வந்தவர், ரீச்சருக்கு அதுக்கிடையில ஆரோ தேன்மொழியின்ர செய்தியைச் சொல்லிப்போட்டினம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் தியாகத்தாருக்குத் தெயும் 'மனுசி தணிகைச்செல்வியைத்தான் சொல்லுது, இன்னும் பெத்தபிள்ளை செத்தது தெரியாது' என்று.

'எல்லாம் எங்கட பிள்ளையள் தான். ஒருக்கா வீட்ட வா போவம்' என்று கூட்டிக்கொண்டுவந்து தேன்மொழியின் செய்தியைச் சொல்கிறார். இதற்குமேல் அத்தாயின் நிலையை விளக்க முடியாது. இருவரின் உடல்களையும் ஒன்றாக வைத்து வீரச்சாவு நிகழ்வு நடந்தது.

இன்றும்கூட அம்மா, அப்பா என்று அழைத்துக்கொண்டு நிறையப் போராளிகள் வந்துபோவார்கள். அந்த வீட்டு அடுப்பு எந்த நேரமும் அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும்.

*************************************************************
வீட்டின் நடுவிறாந்தையில் நாலு மாவீர்களின் படங்கள் மாலைகளோடு இருக்கும். வெவ்வேறு காலகட்டங்களில் ஈழப்போராட்டத்தில் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்கள் இந்நால்வரும். நாலுபேருக்கும் அதிகாரபூர்வ அம்மாவாக ரீச்சர் இருக்கிறா. சுமந்து பெற்ற பிள்ளைகள் மூன்று. இவர்களையே தன் தாய்தந்தையாகப் பதிவுசெய்துகொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மாவீரின் படம் மற்றது.

*************************************************************
லெப்.கேணல் தணிகைச்செல்வியையும் அவருடன் இருந்த பெண் போராளிகளையும் மையமாக வைத்து போராளி தமிழ்க்கவி அருமையான படைப்பொன்றை எழுதியிருந்தார். அது புத்தகமாக வந்ததா தெரியவில்லை. வந்திருந்தால் இவர்களைப் பற்றிய நிறையத் தகவல்கள் கிடைக்கும். ஒரு மரபுப் படையணியிலிருந்து வேறுபட்டது இவர்களின் அனுபவங்களும் செயற்பாடுகளும். முழுக்க எதிரியால் கைப்பற்றப்பட்ட பகுதிக்குள் மறைத்துவைத்த ஆயுதத்துடன் சேலையோ சுடிதாரோ அணிந்துகொண்டு திரிவது தொடக்கம், வேவு பார்த்தல், திட்டமிடல், தாக்குதல் அனைத்தையுமே தனித்தே செய்யவேண்டிய நிலை. அப்படித்தான் செய்தார்கள். குருநகர் இடுகாலைக்கு அருகில் நடந்த காவலரண் தாக்குதல் குறிப்பிடத்தக்க ஒன்று..

**************************************************************
ஏழு வருடங்களின் முன் இதேநாளில் பள்ளமடுவில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்த சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் தணிகைச்செல்வி, மேஜர் தேன்மொழி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் எமது அஞ்சலி.
**************************************************************

புலிகளின் முக்கிய போர்த்தளபதியாயிருந்து சமர்முனைகளில் எதிரிகளைக் கலக்கிப் பெருவெற்றிகளை ஈட்டி, பின்னொரு நாளில் இரணைமடுக்குளத்துள் மூழ்கி இறந்துபோன லெப்.கேணல். இராஜசிங்கனது நினைவுநாளும் இன்றுதான். ஆனையிறவைக் கைப்பற்றும் நீண்ட சமரில், மாமுனையில் தரையிறங்கி இத்தாவிலில் கண்டிவிதியை மறித்துநின்ற புலிப்படையை கேணல் பார்றாச்சின் தலைமையின் கீழ் வழிநடத்தி அச்சமரை வென்ற திறன் மட்டுமே போதும் இராஜசிங்கனைப் பற்றிச் சொல்ல. எவரையும்விட எதிரிக்கு அதிகம் தெரிந்திருக்கும். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாயிருந்தவர். இரணைமடுக்குளத்தில் குளிக்கும் போது விளையாட்டுத்தனமாக துருசிலிருந்த நீருள் பாய்ந்தபோது மரணமடைந்தார். சண்டைக்களங்களில் சாகாத வீரன், தண்ணிரில் மாண்டுபோனான்.

Labels: , , , ,


Thursday, June 22, 2006

மறுபடியும் உணர்வுக்கொலை.

யாழ்ப்பாணத்திலிருக்கும் மாவீர்ர் துயிலுமில்லம் மீண்டும் தாக்கப்பட்டுள்ளது.
போரில் வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களை அடக்கம் செய்யும் -உடல்கள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் நினைவுக்கற்கள் நாட்டிவைக்கும் இடத்தொகுதிதான் 'மாவீரர் துயிலுமில்லம்'. ஈழத்தில் பல துயிலுமில்லங்கள் உள்ளன. அவற்றிற் சில இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளும் உள்ளன.

முன்பு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றிய பின் கோப்பாயில் அமைந்திருந்த "மாவீரர் துயிலும் இல்லத்தை" முற்றாகத் தகர்த்தெறிந்து அடையாளமே தெரியாதபடி தரைமட்டமாக்கியிருந்தது அரசபடை. கோப்பாய் மட்டுமன்றி கொடிகாமம் உட்பட வேறும் சில இடங்களும் இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தன.

2002 இல் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து இத்துயிலுமில்லங்கள் மீளவும் கட்டப்பட்டன. ஆயிரக்கணக்கில் மாவீரரின் கல்லறைகள் புதுப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இப்போது மீளவும் அரசபடை இந்நினைவாலயங்களில் கைவைக்கத் தொடங்கிவிட்டது.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்துள் சென்று அங்குள்ள அலுவலகத்தைத் தாக்கிச் சேதமாக்கியுள்ளனர். படங்களை உடைத்துக் கொளுத்தியுள்ளனர். இதைவிட நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தையும் சேதமாக்கியுள்ளனர்.
அரசபடையின் காட்டுமிராண்டி மனநிலை தெளிவாக வெளித்தெரிகிறது.

மாவீரர் துயிலுமில்லங்களைத் தாக்குவதும் சேதமாக்குவதும் சிங்களவருக்கும் உலகத்துக்கும் எப்படித் தெரிகிறதோ தெரியாது. ஆனால் ஈழத்தவருக்கு அது உணர்ச்சிமயமானது. மனிதக் கொலைகளுக்கு நிகராக -ஏன் அதைவிடவும் பாரதூரமானதாகப் பார்க்கப்படும். புலிகளையும் மக்களையும் சீண்டக்கூடிய அதிகபட்ச செயன்முறை இதுதான். இதன்மூலம் புலிகளைச் சீண்டி யுத்தத்தைத் தொடக்க எண்ணுகிறார்கள் போலுள்ளது.










படங்கள்: சங்கதி.

Labels: , , ,


Thursday, April 20, 2006

மக்களுக்கான ஆயுதப்பயிற்சி.

*******நட்சத்திரப் பதிவு -07*******

கடந்த பதிவொன்றில், வன்னியில மக்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டதையும், அதன் உடனடிப் பயனைப் பற்றியும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.
முதலில் அத்தகைய பயிற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

1997 மே 13 அன்று தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படிப்படியாக வன்னியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நூறு நாட்களுக்கும் மேலாக முயன்றும் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் பக்கவாட்டுப்பகுதியால் காடுகளிற்பரவி புதியபுதிய போர்முனைகளைத் திறந்தனர். இறுதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியதோடு ஜெயசிக்குறு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. (இதற்குள் புலிகள் கிளிநொச்சியை மீட்டிருந்தனர்.) பின் ஒட்டுசுட்டானையும் இரகசிய நகர்வொன்றின்மூலம் சண்டையின்றியே இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்நிலையில் வன்னியில் மக்களின் வாழ்விடங்கள் நெருங்கின. முக்கியமான இரு இடங்களை மையமாகக் கொண்டு மக்கள் இருந்தனர். புதுக்குடியிருப்பை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதிக்கு ஒருபுறம். மல்லாவியை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதியின் மறுபக்கம். வன்னியின் நிர்வாகம் (மக்களினதும் புலிகளினதும்) இரண்டு பகுதியாகப்பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கத்தொடங்கின. மனரீதியாக வன்னி கண்டிவீதிக்கு இருபுறமென்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் முக்கிய இரு இடங்களான புதுக்குடியிருப்பும் மல்லாவியும் எந்தநேரமும் இராணுவத்தினராற் கைப்பற்றப்படலாமென்ற நிலை வந்துவிட்டது. இரு இடங்களுமே இராணுவத்தினரிடமிருந்து சொற்ப தூரத்திலேயே இருந்தன. புலிகளின் போராட்டத்துக்கான முதன்மைத்தளம் முல்லைத்தீவுதான். அதுபோய்விட்டால் போராட்டமேயில்லை என்றநிலைதான்.


படத்தைப் பெரிதாக்க, படத்தின்மேல் அழுத்தவும்.
படம் பற்றிய விளக்கம் இறுதியாக உள்ளது.


ஒட்டுசுட்டானிலிருந்து எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

அதுபோல்தான் மல்லாவியும் மிகமிக அதிகமான ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. இனிமேல் மக்கள் இடம்பெயர இடமில்லையென்ற நிலைக்கு வன்னி இறுக்கப்பட்டது. இனி இராணுவம் முன்னேறினால் இடம்பெயர முடியாதென்ற நிலைக்குப் பெரும்பாலானவர்கள் வந்துவிட்டனர்.
அதேநேரம் களமுனையில் இராணுவத்தினரின் கை ஓங்கியிருப்பதாகப்பட்டது. உண்மையும் அதாகத்தான் இருந்தது. முக்கிய பிரச்சினை ஆட்பலம்.

எதிரி கிழக்குக் கடற்கரையான நாயாற்றிலிருந்து மேற்குக் கடற்கரையான மன்னார் வரை வளைந்துவளைந்து செல்லும் முன்னணிக் காப்பரண் வரிசையைக் கொண்டிருந்தான். எந்த இடத்திலும் அவன் முன்னேறி எதையாவது கைப்பற்றலாமென்ற நிலைதான் அப்போது இருந்தது. ஏனென்றால் இதுதான் இலக்கு என்று சிந்திக்கும் நிலையை அரசு இழந்து நீண்டநாட்களாகிவிட்டது. நாயாற்றுக்குள்ளால் முல்லைத்தீவுக்கு வருவதுமுதல் பள்ளமடுவால் பூநகரி பிடிப்பது வரை எந்த இடமென்றாலும் போதும் என்ற நிலைதான் இராணுவத்தின் நிலை. நூற்றுக்குமதிகமான மைல் நீளம் கொண்ட சமர்முனையை எதிர்கொள்வது புலிகளால் இயலாத காரியமாகவே தென்பட்டது. அதைவிட வடக்குப்பக்கமாக இருக்கவே இருக்கிறது பரந்தன் ஆனையிறவுத் தளம். அதிலிருந்தும் முன்னேற - குறிப்பாக இழந்த கிளிநொச்சியை மீட்க இராணுவம் முனைப்பாகவே இருந்தது.

இனிமேல் புலிகளால் முழுவீச்சாக எல்லா இடத்திலும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது என்பதையும், மக்களால் இனியும் இடம்பெயர முடியாது என்பதையும் கணக்கிட்டது இராணுவம். மக்களைக் கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. (அதுவரை அது இடங்களை மட்டுமே கைப்பற்றியது) புதுக்குடியிருப்பையோ மல்லாவியையோ கைப்பற்றினால் பெருந்தொகை மக்கள் இராணுவப்பிடிக்குள் வந்துவிடுவார்கள், பின் புலிகளுக்கான ஆட்பலம் மிகமிகக் குறைந்துவிடும் என்றெல்லாம் கணக்குப்போட்டது. முக்கியமான லயனல் பலகல்ல பொறுப்பெடுத்தபின் பல முனைப்பான திட்டங்களைக் கொண்டுவந்தார். நடைபெற்ற சண்டைகளின் இழப்புக்களிலிருந்து மீள புலிகளுக்கு அவகாசமில்லாமல் தாக்கவேண்டுமேன்பதும் முக்கிய திட்டம்.

அழிவு நெருங்கிவிட்டது. மல்லாவியை விடவும் புதுக்குடியிருப்பு இருதரப்புக்குமே மிகமிக முக்கியமாயிருந்தது. ஏனென்றால் முல்லைத்தீவு விடுபட்டால் புலிகளின் கதை முடிந்துவிடுமென்பது தான்.

இந்தநிலையில்தான் மக்கள் பயிற்சி தொடக்கப்பட்டது. அது தொடங்கப்பட்டதை விட மிகமிக ஆர்ப்பாட்டமாக அது வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில் பயிற்சி தொடங்கப்பட்டபோது ஆண்கள் முன்னூறு அல்லது நானூறு மீட்டர்களும் பெண்கள் இருநூறு மீட்டர்களும் ஓடுவார்கள். பின் கையைச் சுற்றி, காலைச்சுற்றி கால்மணிநேரம் ஏதாவது செய்துவிட்டு திரும்புவதுதான் நடந்தது. பயிற்சிக்கான வரவுப் பதிவு கொண்டுவரப்பட்டது. இவ்வளவும் நடக்கும்போதே மக்கள் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்ற விம்பத்தைப் புலிகள் உருவாக்கி விட்டார்கள். தேர்ந்தெடுத்த சிலரை இராணுவ உடையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கிழமையில் ஆறுநாட்கள்கூட சில இடங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால் சுழற்சி முறையாதலால் ஒருவருக்கு இருதடவைகள் முறைவரும். ஏற்கனவே அமைப்பிலிருந்து விலகியவர்களைக் கொண்டு சிறப்பணியொன்று உருவாக்கி அவர்களுக்கு முதலில் சூட்டுப்பயிற்சியைத் தொடங்கினார்கள். இவ்வளவும் ஒரு மாதத்துக்குள்ளாகவே நடந்தன. பின் படிப்படியாக மற்றவர்களுக்கும் சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டது. முதல்தரம் கொடுத்தபோது அவர்கள் சரியானமுறையில் துப்பாக்கி பிடிப்பதில் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் மக்கள் எல்லோரும் சுட்டுப்பழகிவிட்டார்கள் என்ற கதை வெளியில் போகவேண்டுமென்பது முக்கியம். மக்களும் வஞ்சகமில்லாமல் ஒன்றைப் பத்தாக்கிக் கதைத்தார்கள்.

இராணுவம் என்னென்ன திட்டங்கள் போட்டு வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டது. சிலமாதங்களாக புதுக்குடியிருப்போ மல்லாவியோ ஏனைய மக்கள் வாழ்விடங்களோ எதிரியாற் கைப்பற்றப்படாமற் காப்பாற்றப்பட்டது. இராணுவம் இவற்றை நோக்கி சிறு முன்னேற்ற முயற்சியைக்கூட எடுக்கவில்லை. ஏற்கனவே முன்னேற்ற முயற்சிக்கென்று தயார்ப்படுத்தி வைத்திருந்த படைகளையும் கனரக ஆயுதங்களையும்கூட பழையபடி பின்னிலைகளுக்கு அனுப்பிவிட்டுப் பேசாமலிருந்தது. காரணம் இதுதான். ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் கூட்டத்தைக் கைப்பற்றி, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் விரும்பவில்லை.

இந்தக் குழப்பங்களுக்குள் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்டுத்தித் தம்மைப் பலப்படுத்திக்கொண்டனர் புலிகள். கூடவே முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு துணை இராணுவக் கட்டமைப்பாக மக்களையும் தயார்படுத்திவிட்டனர். முறையானபடி பயிற்சி நிறைவு விழாக்களைச் செய்து, அதிலேயே மக்கள் படையைக் கொண்டு மாதிரி முகாம் தகர்ப்பு போன்றவற்றைச் செய்து ஒரு படைக்கட்டமைப்புத் தன்மையை ஏற்படுத்தினர். மூத்த தளபதிகள் நேரிலே கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் சிறுசிறு அணிகளுடனும் நேரடியாகக் கதைத்துக் கள யதார்த்தத்தைச் சொல்லினர்.

மக்கள் களத்தில் ஆயுதத்துடன் பங்களிப்பதற்கான சூழல் வந்தபோது எதிரி சில நடவடிக்கைகளைச் செய்தான். அதாவது மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தை முற்றாகக் கைவிட்டது இராணுவம். இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தையும் முற்றாகக் கைவிட்டது. மாறாக புலிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதலைச் செய்துவிட்டுப் பின்வாங்குவதுதான் அந்தத்திட்டம். (முன்பு புலிகள் செய்தது போல). வசந்த பெரேரா எனற தளபதி அப்போது பொறுப்பேற்று இரு நடவடிக்கைகளைச் செய்தார். அவைதாம், வோட்டர் செட் 1, 2.(watershed-1, -2)

இரண்டுமே திட்டமிட்டபடி இராணுவத்துக்கு வெற்றியளித்தன. புலிகளின் முன்னணிக் காப்பரண் வரிசையின் குறிப்பிட்ட பகுதியைத் தெரிந்தெடுத்து அதன்மீது ஆயிரக்கணக்கான ஆட்லறிக்குண்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு பின் தரைவழியால் தாக்கியழிப்பது. பின் பழையபடி தமது நிலைகளுக்கே திரும்புவதென்பது இத்திட்டம். அம்பகாமத்தில் நடத்தப்பட்ட வோர்ட்டர் செட்டின் இரு நடவடிக்கையுமே இராணுவத்துக்குப் பூரண வெற்றி. கணிசமான போராளிகள் அதில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி போராளிகளின் உடல்களை எடுத்துச் சென்று, பின் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்பி வைத்தது இராணுவம். (உடல்களை எதிரி கைப்பற்றுவதென்பது தொடக்க காலத்திலிருந்தே மிகப்பெரிய தோல்வியாக ஈழப்போராட்டத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.) தொடர்ந்தும் அப்பிடியான தாக்குதலைச் செய்வது இராணுவத்தின் திட்டம்.

அந்தநேரத்தில் மக்களிடத்திலும் குழப்பம். களத்தில் புலிகளின் கை முற்றாக விழுந்துவிட்டதானதொரு தோற்றம் தென்பட்டது.

ஆனால் புலிகள் முந்திக்கொண்டார்கள். எதிரி மூன்றாவது நடவடிக்கை செய்யமுன்பே புலிகள் ஓயாத அலைகள் - 3 ஐத் தொடங்கிவிட்டார்கள். இனி புலிகளால் எழுந்திருக்க முடியாது என்று (புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களும்) நினைத்திருந்தபோது களமுனை ஒரேநாளில் முற்றுமுழுதாக மாறியது. இரண்டரை வருடங்களாக எதிரியிடமிழந்த இடங்களை மட்டுமன்றி பதினைந்து வருடங்களின் முன் அத்துமீறிய சிங்களக்குடியேற்றத்தினால் இழந்த பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும்கூட ஐந்தே நாளில் மீட்டுவிட்டார்கள். இச்சமரிற்கூட மக்கள்படையின் பங்களிப்பு அளப்பரியது.
**************************
வன்னியும் புலிகளும் இத்தோடு முடிந்தார்களென்று எதிரி நினைத்திருந்த வேளையில் சாதுரியமாகத் தொடக்கப்பட்ட மக்கள் பயிற்சி ஈழப்போராட்டத்தில் முக்கிய மைல்கல். சண்டையேதுமின்றி, பயிற்சி கொடுத்ததன் மூலமே பெரியதொரு அழிவிலிருந்து ஈழப்போராட்டம் காப்பாற்றப்பட்டது. பின் பெரிய வெற்றிகளுக்கும் அப்பயிற்சியும் மக்கள் படையும் அளப்பரிய உதவியாயிருந்தன.
**************************
குறிப்பு: பெண்கள் பயிற்சியெடுக்கும் படங்கள் கிடைக்கவில்லை. பொறுமையாகத் தேடவில்லை.

படங்களுக்காக புதினத்துக்கு நன்றி.

***************************************
முல்லைத்தீவு வரைபடத்தில், நீலநிறத்தால் வட்டமிடப்பட்டிருப்பவைதான் புதுக்குடியிருப்பு, மல்லாவிப் பட்டினங்கள்.
சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு (மாங்குளத்திலிருந்த நாயாறுவரை) அன்றைய நேரம் இராணுவத்தினரின் முன்னணிக்காப்பரன் வரிசை.
இளஞ்சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு இராணுவக் காப்பரண் வரிசைதான். ஆனால் என்னால் சரியாக உறுதிப்படுத்த முடியாத கோடு. கிட்டத்தட்ட அவ்வாறுதான் வரும்.
இக்கோடுகளுக்கு வடக்குப்புறம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி.
இப்படம் சுனாமி சம்பந்தமான தளமொன்றிலிருந்து எடுக்கப்பட்டு என்னால் கோடுகள் கீறித் தரவேற்றப்பட்டது.
அனாமதேய அன்பரொருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்படம் சேர்க்கப்பட்டது.
இப்பதிவு சமரைப்பற்றிச் சொல்வதன்று. எனவே அதற்குள் அதிகம் செல்லவில்லை.
இவைபற்றி முன்பு எழுதிய சில பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று
வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

Labels: , , , ,


Wednesday, April 19, 2006

நாட்டுப்பற்றாளர்

******நட்சத்திரப் பதிவு -06******
ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , , , ,


Tuesday, April 18, 2006

அன்னை பூபதி.

****நட்சத்திரப் பதிவு -04 ****

"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று. தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த
அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."

************************
இன்று ஏப்ரல் பத்தொன்பதாம் நாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.
யார் இந்த அன்னைபூபதியென்று சுருக்கமாகப் பார்க்கும் பதிவிது. இப்பதிவை எழுதுவதற்கு நட்சத்திரக் கிழமையில் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி. சில சங்கடங்களைத் தாண்டி எழுதப்பட்டே ஆகவேண்டிய பதிவிது.

பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டு - அம்பாறை அன்னையர் முன்னணியின் துடிப்புள்ள முன்னணிச் செயற்பாட்டாளர்.
புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்துகொண்டிருந்த காலம். இந்தியப்படை கிட்டத்தட்ட மக்கள் வாழிடங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டிருந்த காலம். அந்த இடைபட்ட காலத்துள் நடந்த கொடுமைகளை விவரிக்கவோ விளங்கப்படுத்தவோ தேவையில்லை.

இந்நிலையில் தான் இந்தியப்படைக்கெதிராக குரல் கொடுக்க, சாத்வீக போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கையை வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
அவையாவன,
1.உடனடியாக யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும்.
2. புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தையீர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அணிதிரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய சென்ற அன்னையர் முன்னணிக் குழுவினருடன் இந்தியப் படையின் உயர் அதிகாரியான "பிரிக்கேடியர் சண்டேஸ்" பேச்சுக்கள் நடத்தினார். இந்தப் பேச்சுக்களின்போது அன்னையர் முன்வைத்த இரு கோரிக்கைகளையுமே மீளவும் நினைவூட்டினர். ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினரை இந்தியா பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைத்தது. இதற்கமைய கொழும்பு சென்ற அன்னையர் முன்னணியின் நிருவாகக் குழுவினருடன் பேச்சுக்களை மேற்கொண்ட இந்திய அதிகாரிகள் விடுதலைப் புலிகள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனைக் கடுமையாகக் கண்டித்த அன்னையர் முன்னணியினர், விடுதலைப்புலிகள் எங்கள் பாதுகாவலர்கள், நீங்கள்தான் போர் நிறுத்த உடன் பாட்டுக்கு வரவேண்டுமெனத் தெரிவித்தபோது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்தியத் தூதுவர் டிக்சீத் அன்னையர் முன்னணி மீது கடுமையாக ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துள்ளார்.


நிலமை மோசமாகிக்கொண்டே சென்ற நிலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கத் தீர்மானித்தனர். அப்போது பலர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது.முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் நாள் அன்னம்மா டேவிட் அன்னையர் முன்னணி சார்பாக உண்ணாவிரதத்தில் குதித்தார். அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலய குருந்தை மரநிழலில் அன்னம்மாவின் உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கப்பட்டது. இந்திய அரசோ, இந்தியப்படையோ அன்னம்மாவின் போராட்டத்துக்குச் செவிசாய்க்கவில்லை. மக்கள் அமிர்தகழி குருந்தை மரம் நோக்கி அணி அணியாகத் திரண்டனர். உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியப்படை திட்டமிட்டது. பல்வேறு மிரட்டல், கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்டம் தொடர்ந்தது.

இறுதியில் சதித்திட்டம் வரைந்தது இந்தியப் படை. அன்னம்மாவின் பிள்ளைகளைக் கைது செய்தனர். அவர்களை மிரட்டி 'பலாத்கார அச்சுறுத்தல் காரணமாகவே அன்னம்மா உண்ணா விரதமாயிருக்கிறார்' என்ற ஒரு கடிதத்தைக் கையொப்பத்துடன் வாங்கி, அதனைச் சாட்டாக வைத்து அன்னம்மாவைக் காப்பாற்றுவது போல் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றனர்.

இந்தநிலையில்தான் பூபதியம்மாள் தன்போராட்டத்தைத் தொடங்க எண்ணினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் 19.03.1988 அன்று மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அதேயிடத்தில் தொடங்கியது. நீர் மட்டும் அருந்தி சாகும்வரை போராட்டம்.
இடையில் பல தடங்கல்கள் வந்தன. இந்தியப்படையால் அன்னையர் முன்னணியினரிற் சிலர் வெருட்டப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி பூபதியம்மாள் வற்புறுத்தப்பட்டாள். உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய முக்கியஸ்தர்களையும் அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒருமாத்தின்பின் 19.04.1988 அன்று உயிர்நீத்தார். அவரது உடலைக் கைப்பற்ற இந்திய இராணுவம் எடுத்த முயற்சிக்கெதிராக மக்கள் கடுமையாகப்போராடி உடலைக் காத்தனர்.
*******************************

ஏற்கனவே திலீபன் இந்திய அரசுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாமல் பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து சாவடைந்தார். அதற்குப்பின்னும் உண்ணாநோன்பிருந்த பூபதியின் செயல் முட்டாள் தனமானது என்றுகூட அவர்மீது சிலர் விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால் பொதுமக்களிடமிருந்து தன்னிச்சையாக எழுந்த ஒரு போராட்டமிது. திலீபனின் சாவின் பின்னும் இந்திய அரசிடம் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்று கருதமுடியுமா என்று தெரியவில்லை. சொல்லப்போனால் திலீபனை விடவும் பூபதியம்மாவின் சாவு உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றே நினைக்கிறேன். ஆனாலும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம் அது. அன்றைய நேரத்தில் மட்டுமன்றி, பின்னாட்களிற்கூட அகிம்சை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்கமுன் யோசிக்க வைக்கும் ஓர் ஆயுதம்தான் அன்னைபூபதியுடையது.
**********************************
சாவு பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம். அதன்மீதான பார்வையும் பெறுமதியும் சூழலைப்பொறுத்து மாறுபடும். சாவைத் தேர்ந்தெடுத்தலென்பது அப்படியொன்றும் இமாலயச் சாதனையாகவோ செய்ய முடியாத தியாகமாகவோ பார்க்கும் நிலையைத்தாண்டி வந்தாயிற்று. ஆனால் அவை தெரிவுசெய்யப்படும் விதம் பற்றி இருக்கும் மதிப்பீடுகள்தான் வித்தியாசமானவை. அவ்விதத்தில் அன்னை பூபதியுடைய, திலீபனுடைய வடிவங்கள் எம்மால் நெருங்க முடியாத, செய்ய முடியாத வடிவங்களாகப் பார்க்கிறேன்.

ஒவ்வொரு முறை திலீபன் நினைவுநாளுக்கும் உண்ணாமலிருப்பது பலரது வழக்கம். அன்றைக்குத் தெரியும் உண்ணாநோன்பின் வேதனை. (சிலநேரங்களில் இரண்டுநேரம் உணவின்றி வெறும் தண்ணியோடு சைக்கிளில் திரிந்த நிலைகூட உண்டு. ஆனால் அந்தநேரங்களில் வராத துன்பம், ஓரிடத்தில் இருந்து உண்ணாநோன்பென்று செய்தால் வந்துவிடும்) பன்னிரண்டு நாட்கள் ஒருதுளி நீர்கூட அருந்தாது தன்னையொறுத்து -அணுவணுவாக என்று சொல்வார்களே- அப்படிச் செத்துப்போன திலீபனின் சாவை நினைத்துப்பார்க்கவும் முடியாது. அன்னை பூபதியின் சாவும் அப்படியே.

**************************************
அன்னை பூபதியின் நினைவுநாளே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்றும் நினைவு கூரப்படுகிறது.
இவர்களைப்பற்றியும் அதிகம் சொல்ல இருக்கிறது.
இன்னொரு பதிவிற் சொல்ல முயல்கிறேன்.
***************************************

படம்: தமிழ்நெட்

Labels: , , , , ,


Monday, April 17, 2006

திரு(க்)கோணமலை எங்கள் தலைநகர்

வணக்கம்!

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க
முடியாதநாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.

சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா –செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால்
கிழித்தெறியப்பட்டது."


இனி இன்றைய பதிவுக்கு வருவோம்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.



இதுவொரு மீள்பதிவு. ஏற்கனவே ஈழப்பாடல்கள் என்ற இதன் துணை
வலையிலிடப்பட்ட இடுகைதான். அதில் இடப்பட்டிருந்த பாடலிணைப்பு சிறிதுநாட்களிலேயே
செயலிழந்து விட்டது. இப்பேர்து புதிய பாடலிணைப்புடன் அதை மீள்பதிவாக இடுகிறேன்.
அண்மையில் நடந்த சம்பவங்கள், திருமலையின் நிலவரத்தையும், அதன் சிக்கல் தன்மையையும்
வெளிப்படுத்துகின்றன. "திருமலை எங்கள் இடம்" என்பதை இன்னுமின்னும் அழுத்திச்
சொல்லவேண்டிய காலத்துள் நிற்கிறோம். புத்தர் சிலை முளைத்தபோதே கடுமையானமுறையில்
அதை எதிர்கொள்ள வேண்டுமென்று நினைத்தவன் நான். இப்போது மாமனிதர் விக்னேஸ்வரன்
படுகொலையும் அதன்பின் அண்மைய படுகொலை-தீவைப்புச் சம்பவங்களும் என்று பல
நடந்துவிட்டன. இனி பதிவு.

* * * * * * *
*** *** *** *** *** *** ***
'திருக்கணாமலை' என்ற உச்சரிப்புடன்தான் எனக்கு திரு(க்)கோணமலையின் அறிமுகம். என் ஊரில் பொதுவாக 'திருக்கணாமலை' என்றுதான் பேச்சுவழக்கிற் சொல்வதுண்டு. (சிலவேளை 'Trinco'). எழுத்தில் 'திருகோணமலை' தான்.

பின்னர், எழுத்தில் 'திருமலை' என்ற சொற்பயன்பாடு புழக்கத்துக்கு வந்தது. இச்சொல் மனத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது, 'திருமலைச் சந்திரன்' என்ற பெயரோடு ஒருவர் இசைக்குழுக்களிற் பாடப்புறப்பட்டபோது. அதைவிட புலிகளின் பாடல்களில் இச்சொல் இடம்பெற்றது. செய்திகள், கட்டுரைகளிற்கூட 'திருமலை' என்ற சொற்பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.

அப்போது மாவட்ட ரீதியாகவே புலிகளின் படையணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதில் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'திருமலைப் படையணி' என்றே பெயரிடப்பட்டிருந்தது.

யாழ் இடப்பெயர்வின் பின் வன்னியில் 'திருகோணமலை' என்ற சொற்பாவனை குறைந்து 'திருமலை' என்ற சொல்லே அதிகளவிற் பாவிக்கப்பட்டது. கூடவே 'தலைநகர்' என்ற சொல் அறிமுகத்துக்கு வந்து பயன்படுத்தப்பட்டது.

'தமிழீழத்தின் தலைநகர் திரு(க்)கோணமலை' என்ற தரவு சிறுவயதிலேயே யாழ்ப்பாணத்தில் அறிந்துகொண்டதுதான். ஆனால் அந்நகரத்தைக் குறிப்பதற்கே 'தலைநகர்' என்ற சொல் பரவலாகப் பாவனைக்கு வந்தது யாழ் இடப்பெயர்வின் பின்தான் என்று நினைக்கிறேன்.

புலிகளின் திரு(க்)கோணமலை மாவட்டப் படையணி, 'தலைநகர்ப் படையணி' என்றே அழைக்கப்பட்டது.
அதைவிட சாதாரண பேச்சுவழக்கில் அம்மாவட்டத்தைக் குறிப்பதற்கும் 'தலைநகர்' பயன்படுத்தப்பட்டது.

"வேந்தன் அண்ணா எங்காலப்பக்கம்? ஆளைக் கனநாளாக் காணேல?"
"ஆள் இப்ப தலைநகரில"
என்ற உரையாடல்களைக் கேட்க முடியும்.

திருமலைதான் எங்கள் தலைநகரமென்ற கருத்து வன்னியில் மக்களிடையே வலுவாகப் புகுத்தப்பட்டது.

****திருமலையைத் தலைநகராக அறிவித்தது புலிகள் தானா?
அல்லது தனித்தாயகம் பற்றிய வேட்கை தோன்றிய காலத்திலேயே தலைநகர் பற்றிய கருத்துக்கள், அனுமானங்கள் இருந்தனவா?
திருமலையன்றி வேறேதாவது நகரம் தலைநகராகச் சொல்லப்பட்டதா?
புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் தலைநகர் பற்றி எக்கருத்தைக் கொண்டிருந்தன?
போன்ற வினாக்களுக்கான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன்.
*****

இதோ, தலைநகர் மீதொரு பாடல்.
பாடல் வரிகளையும் கீழே தந்துள்ளேன்.
கேட்டுவிட்டு ஒருவரி சொல்லிவிட்டுப்போங்கள்.
( சிறிரங்கன், தனக்குப் பிடித்த பாடலாக எங்கோ சொன்ன ஞாபகம்.)

பாடலைப் பாடியவர் எல்லோரினதும அபிமானத்துக்குரிய
மாவீரர் மேஜர் சிட்டு.
எழுதியது யார்? புதுவைதானே?
இசைநாடா: "இசைபாடும் திரிகோணம்"
இசை: தமிழீழ இசைக்குழு.
********************************




கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு.


கோட்டை கோணேசர் வீட்டை இழப்போமா?
கொடி படைசூழ நாட்டை இழப்போமா?
மூட்டை முடிச்சோடு ஊரைத் துறப்போமோ
முன்னர் தமிழாண்ட பேரை மறப்போமா?
கோணமலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


பாலும் தயிரோடும் வாழும் நிலைவேண்டும்.
பயிர்கள் விளைகின்ற வயல்கள் வரவேண்டும்.
மீண்டும் நாம் வாழ்ந்த ஊர்கள் பெற வேண்டும்.
மேன்மை நிலையோடு கோண மலை வேண்டும்.
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


வீரம் விளையாடும் நேரம் எழுவாயா?
வேங்கைப் படையோடு நீயும் வருவாயா?
தாயின் துயர்போக்கும் போரில் குதிப்பாயா?
தலைவன் வழிகாட்டும் திசையில் நடப்பாயா?
கோண மலையாள வேண்டும். - அந்தக்
கோட்டை கொடியேற வேண்டும்.


Labels: , , , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]