Friday, September 01, 2006

மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.

மூதூர் என்றதுமே பலருக்கு ஞாபகம் வருவது முஸ்லீம்கள்தாம்.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.

இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.

என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?

இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.

இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.

பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.

அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.

அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.

இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]

இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.

ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.

இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth


_____________________________________________

Labels: , , , , ,


Comments:
முக்கியமான பதிவு. தக்க நேரத்தில் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
-Jeyan.
 
செய்திகளுடன் கூடிய பதிவு.

நன்றி!
 
எழுதிக்கொள்வது: ஈழநாதன்

சம்பூர்த் தமிழ்ச்சனம் இடம்பெயரும் படங்கள் ஏதும் இருந்தால் உந்த முன்னோடிப் பின்னோடா மூத்த முற்போக்காளர்களுக்கு அனுப்பி வையுங்கோப்பா ஓயாத அலைகள் இன அழிப்பு எண்டு படம்போடுவினமோ பாப்பம்.
வழக்கமா விழுந்தடிச்சுக் கொண்டு செய்தி போடுறவையின்ரை சிலமனையும் காணேலை ஒருவேளை சம்பூரிலை இருக்கிறது கிழக்குத் தமிழ் மக்களில்லை யாழ்ப்பாணி தானெண்டு ஆரும் சொல்லிச்சினமோ தெரியேலை


13.40 3.9.2006
 
வன்னியன்!
நியாயபூர்வமான கருத்துக்களுடன் எழுதியுள்ளீர்கள். ஆனால் இவையெல்லாவற்றையும் தெரிந்து கொண்டே மறுதலிப்பவர்களை என்ன சொல்வது?..
 
ஜெயன், தங்கமணி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
ஈழநாதன், மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]