Tuesday, August 14, 2007
செஞ்சோலைப் படுகொலை - ஓராண்டு நினைவு
கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Sencholai air-strike killed 55, details released
Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, have informed their respective Government Agents the details of the 55 victims killed in the Sri Lanka Air Force (SLAF) bombing on Sencholai campus in Vallipunam Monday.
The final tally of those killed in the Vallipunam school camp aerial bombing (55 killed of which 51 are students and four are staff)
Names of students killed and the school they were attending from Mullaitivu district compiled by the Director of Education for Mullaitivu district, P Ariyaradnam, and sent to the Government Agent for Mullaitivu:
School: Puthukkudiyiruppu Mahavidhyalayam
Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT
School: Visuvamadu Mahavidhyalayam
Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu
School: Udayarkaddu Mahavidhyalayam
Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam
School: Mullaitivu Mahavidhyalayam
Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Rasamohan Hamsana DOB: 29-05-87, Alampil
School: Kumulamunai Mahavidhyalayam
Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai
School: Vidhyananda College, Mulliyavalai
Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai
School: Chemmalai Mahavidhyalayam
Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai
School: Oddusuddan Mahavidhyalayam
Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan
Names of students killed and the school they were attending from Kilinochchi district compiled by the Director of Education for Kilinochchi district, T Kurukularaja, and sent to the Government Agent for Kilinochchi.
School: Muruhananda Mahavidhyalayam
Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai
School: Tharmapuram Mahavidhyalayam
Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram
School: Piramanthanaru Mahavidhyalayam
Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai
Names of staff killed
Chandrasekaran Vijayakumari (Age 27)
Kandasamy Kumarasamy (Age 48)
Solomon Singarasa (Age 65)
S Jeyarubi (Age 20)
___________________________________
நன்றி: தமிழ்நெற்
Labels: ஈழ அரசியல், துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு, வன்னி
Tuesday, July 31, 2007
மறக்க முடியாத யூலைகள் - ஒரு தொகுப்பு
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.
“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.
அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதிலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.
அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபலமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனாவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.
1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். இது பற்றிய பதிவு இங்கே.
அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.
1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.
1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.
1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாழ ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.
1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.
1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு "இதயபூமி-1" என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.
1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாழ 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.
1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.
1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான "லெப்.ஜெனரல் நளின் அங்கமன" கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்
1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது தொடர்பான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.
பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.
அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாழ யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்கு மட்டுமே சொந்தமானவை. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.
ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.
______________________________________________________
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம், வரலாறு
Tuesday, July 24, 2007
கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ
1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.
உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2
-இதுவொரு மீள்பதிவு
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் துயரம், வரலாறு
Monday, July 09, 2007
மூன்று நினைவு கூரல்கள்
இன்று (09/07/2007) நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு பன்னிரண்டாம் நினைவுநாள் இன்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாட் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பிற்போடப்பட்டது.
***********************************************
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் இருநூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
Labels: அனுபவம், களவெற்றி, துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு
Sunday, June 10, 2007
சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்
10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.
அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.
இன்னொரு விதத்திலும் இந்நாள் முக்கியமானது.
இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990 ஆம் ஆண்டு இதேநாளி்ல் தொடங்கியது.
Labels: துயர் பகிர்தல், மக்கள் துயரம், வரலாறு, வன்னி
Wednesday, June 06, 2007
தொண்டரமைப்புக்கள் மீதான அரச பயங்கரவாதம்
இக்கொலை தொடர்பாக பன்னாட்டு விசாரணை அமைப்பை அழைப்பதாக சிறிலங்கா ஜனாதிபதி அறிவித்துள்ளார். பன்னாட்டுக் குழு பற்றிய பேச்சு வருவது இதுதான் முதற்றடவையன்று. ஏற்கனவே தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 'மாமனிதர்' ரவிராஜ் கொலை, மூதூரில் பன்னாட்டு நிறுவனப் பணியாளர் கொலை என்பவற்றிலெல்லாம் இதே கூத்துத்தான் நடந்தது. வந்தவர்களும் புதைத்த பிணங்களை மீளத் தொண்டியெடுத்து ஏதோ செய்துவிட்டு, இறுதியில் விசாரணைக்குப் போதிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லையென்றுவிட்டுப் போனவர்கள்தாம். இப்போது மீண்டும் பன்னாட்டுக்குழு விசாரணை என்ற கண்துடைப்பு. 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்பதுபோல வெளிப்படையான உண்மைகளை மறைக்க விசாரணைக்குழு என்ற பித்தலாட்டம் காட்டுவது 'அரசுகளுக்கே' உரிய பொதுமையான தந்திரம்.
இங்கு, பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு என்பது தொடர்பில் எமக்கு மாற்றுக்கருத்தும் மிகக்கடுமையான விமர்சனமும் உண்டு. அவை மிகத்திட்டமிட்ட முறையில் தீவிரமான ஓர் அரசியலோடு பணியாற்றுபவை. பெரும்பாலான நேரங்களில் விடுதலைப் போராட்ட அமைப்புக்குப் பாதகமான செயற்பாடுகளையே செய்பவை. உலகின் வேறுசில பகுதிகளில் நடந்தது, நடப்பது போல் இவர்களின் வாகனங்கள் வருவதைக்கண்டதும், தேவனின் தூதர்களைக்கண்டதைப்போல் பின்னாலே கத்திக்கொண்டு ஓடுவதும், தெண்டனிட்டுப் பொருட்கள் வாங்குவதும் ஈழத்தில் என்றும் நடந்ததில்லை. அப்படியொரு மயக்கம் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் மேல் இல்லாமலிருந்ததற்கு முக்கிய காரணம் "தமிழர் புனர்வாழ்வுக் கழகம்". எல்லா நேரத்திலும் மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிக்கொண்டிருப்பது இவ்வமைப்புத்தான்.
இடப்பெயர்வு நேரங்களில் சில பிளாஸ்ரிக் வாளிகள், பாய்கள், தற்காலிகக் கூடாரங்கள் என்பவற்றை வாங்கியதைவிட, ஈழத்தமிழர்கள் மனமார பன்னாட்டு அமைப்புக்களுக்கு நன்றி சொல்லவேண்டிய ஒரு கடமைப்பாடு உண்டென்றால், அது பொதுமக்கள் கொல்லப்படுவதையும் கொல்லப்பட்ட எண்ணிக்கையையும் உலகுக்கு உறுதிப்படுத்த எங்கள் பகுதியிலிருக்கும் ஒரே சக்தி இவர்கள் என்பதுதான். தமிழர்களின் அவலங்களை இந்த அமைப்புக்கள் சொல்லும்போதுதான் ஓரளவாவது நம்பத் தலைப்பட்டார்கள். ஆனால் அந்தப்பணியைக்கூடச் செய்ய விடாமல் தடுத்துவருகிறது இப்போதைய சிங்கள அரசு. வாகரையில் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியற்றுப் பட்டினியால் வாடியபோதும், தொடர்ந்த எறிகணைவீச்சில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வசதியற்றுத் தவித்தபோதும், கொத்துக்கொத்தாக குண்டுவீச்சில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், அப்பகுதிக்கான வினியோகத்தைத் தடுத்தது மட்டுமன்றி பன்னாட்டுத் தொண்டுநிறுவனங்களின் செயற்பாடுகளையும் அப்பகுதியில் முடக்கி வைத்திருந்தது சிறிலங்கா அரசாங்கம். தொண்டுநிறுவனங்களுக்கான முழுமையான செயற்பாட்டுத் தடையை விதித்திருந்தது அரசு. இவர்களும் தங்களுக்கு அங்குச் செல்ல அனுமதியில்லை என்று அறிக்கை சமர்ப்பித்துக்கொண்டிருந்துவிட்டார்கள்.
அதேபோல் நீண்டகாலம் தமிழர்பகுதியில் பணியாற்றிய வெளிநாட்டுத் தொண்டர்கள் சிலரை கட்டாயப்படுத்தி நாடுகடத்தியது தற்போதைய அரசாங்கம். இதில் மருத்துவக்குழுவொன்றும் அடங்கும். போரினால் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஒரு சிறு உதவிதன்னும் கிடைக்கக்கூடாதென்பதில், அங்குள்ள அவலங்கள் வெளியுலகத்துக்குத் தெரியக்கூடாதென்பதில் மிகத்தீவிரமாக இயங்கியது ராஜபக்ஷ அரசு. இந்நிலையில் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கையான தமிழர்புனர்வாழ்வுக் கழகம் மீதும் கைவைத்தது. புனர்வாழ்வுக் கழகத்துக்குரிய அலுவலகங்கள், களஞ்சியங்கள் என்பன அடிக்கடி தாக்கிச் சேதமாக்கப்பட்டதோது அங்கிருந்த பொருட்களும் அரசபடையால் கொள்ளையிடப்பட்டன. வங்கிக் கணக்கிலிருந்த புனர்வாழ்வுக் கழகத்துக்கான இலட்சக்கணக்கான ரூபாய் நிதியைச் சூறையாடியது அரசு. இலட்சம் பேரைப் பராமரித்துக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்துக்கான நிதியைச் சூறையாடியது மூலம் மிகப்பெரும் அவலமொன்றைத் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது அரசு.
இன்றும் பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களுக்குச் சுதந்திரமான செயற்பாடுகள் அனுமதிக்கப்படவில்லை. என்னேரமும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்ற எச்சரிக்கை அரசாலும் அரசிலுள்ள கட்சிகளாலும் வெளிப்படையாகவே விடுக்கப்படுகின்றன. பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ்ப் பணியாளர்கள் கடத்தப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். கடந்தவருடம் மூதூரில் பதினேழு பணியாளர்கள் சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமுட்பட நிறைய நடந்துவிட்டன. உலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அரசகூலிப்படையான கருணா கும்பலால் தமிழர்புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் பலர் கடத்தப்பட்டு, பின் சிலர் விடுவிக்கப்பட்ட நிலையில் மிகுதி அனைவரும் கொல்லப்பட்டனர். அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் யாருமே பணியாற்ற முடியாதபடி உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமக்கு எதுவுமே தெரியாதமாதிரி அரசு நடித்துக்கொண்டு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. ஏராளமான சம்பவங்களின் தொடர்ச்சியாக நான்கு நாட்களின்முன் கொழும்பில் வைத்து இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப்பணியாளர்கள் இருவர் கடத்தப்பட்டு பின் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைகளிலும், சூத்திரதாரிகள் யாரென எல்லோருக்கும் தெரியும். இக்கொலைகள் நீண்டதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் ஓரங்கமே. கல்வியாளர்கள், மனிதநேயச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள், மாணவர்கள் என பலரும் குறிவைக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரும் கொலைப்பட்டியலோடு அரச இயந்திரம் செயற்படுகிறது. கடந்த ஆவணியில் காணாமற்போன அல்லைப்பிட்டிப் பங்குத்தந்தை கொலைசெய்யப்பட்டுவிட்டாரென்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோல தமிழரின் சுயநிர்ணயத்துக்காகக் குரல் கொடுத்த பெளத்த பிக்கு ஒருவர் கிழக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பெயர் விவரங்களோடு வெளிப்படையாகவே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளார்கள். உயிர் ரீதியான மிகப்பெரும் அச்சுறுத்தலை அரசகட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கம் என்ற ஒரு காரணத்தாலேயே தனது பயங்கரவாதச் செயல்கள் அனைத்தையும் மறைக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறது. அதே காரணத்தைக்கொண்டு சில முட்டாள்களால் அரசாங்கத்தை நல்லதோர் அமைப்பாகச் சித்தரிக்கவும் நியாயப்படுத்தவும் முடிகிறதோடு, போராடும் தரப்புக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ஆயுதத்தைக் கீழே போடுங்கள்; பேசித் தீருங்கள்; அகிம்சை வழிக்கு வாருங்கள்; என்று உபதேசம் செய்யவும் முடிகிறது.
பின்னிணைப்பு:
Tamilnet: ICRC pays homage to slain employees
தொடர்புடையதாக மலைநாடான் எழுதிய இடுகை:
தொண்டுப் பணியாளர்களும், தொலைந்து போகும்..
தன் நண்பன் கொல்லப்பட்டதைக் குறித்து சந்திரன் எழுதிய இடுகை:
மலிந்து போன இறப்புக்கள்........
Labels: ஈழ அரசியல், துயர் பகிர்தல், மக்கள் துயரம்
Monday, January 01, 2007
கிளாலிப் படுகொலையும் அது சார்ந்தவையும்
1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர். இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும்.
முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம்.
***
யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.
முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.
இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.

[பெரிதாய்ப் பார்க்க படத்திற் சொடுக்கவும்.]
தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.
இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.
26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.


1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.
அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.
_______________________
படங்கள்: அருச்சுனா, Google
Labels: அனுபவம், ஈழ அரசியல், மக்கள் துயரம்
Friday, September 01, 2006
மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.
முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.
இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.
என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.
இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.
பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.
அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.
அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.
இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]
இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.
ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.
இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், செய்தி, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம், விமர்சனம்
Monday, July 10, 2006
மூன்று நினைவு கூரல்கள்
நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்ப்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
எவரெல்லாம் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பதினோராம் ஆண்டு நினைவுநாள் நேற்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
***********************************************
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் தாக்கம் அளவற்றது. கரும்புலித்தாக்குதல் வடிவம் தொடங்கப்பட்டது 1987 யூலை மாதம் ஐந்தாம் திகதி. கடற்கரும்புலித் தாக்குதல் முதன்முதல் அறிமுகப்படுத்தப்பட்டது 1990 யூலை பத்தாம் நாள். முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டதன் பதினாறாம் நினைவுநாள் இன்று.
காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகிய கடற்கரும்புலிகள் எதிரியின் பெரிய கட்டளைக் கப்பலைத் தகர்க்கும் முயற்சியில் வீரச்சாவடைந்தனர். அன்றிலிருந்து இன்றுவரை கடலில் மட்டும் நூற்றுக்குமதிகமான கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் ஆதரவற்ற சிறுவர்கள், குழந்தைகளின் காப்பகத்துக்கு காந்தரூபனின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. காந்தரூபனும் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, வேறு குடும்பத்தில் வளர்ந்தவர். தன் இறுதி ஆசையாக தலைவர் பிரபாகரனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதரவற்ற சிறியோர் பராமரிப்பில்லம் தொடக்கப்பட்டு அதற்கு அவரின் பெயரும் சூட்டப்பட்டது.
காந்தரூபன் இறுதியாகப் படகைக் கடலுள் இறக்கும்போது தன் வளர்ப்புத் தந்தையைக் காணுகிறார். வளர்ப்புத் தந்தைக்கும் தனது மகன்தான் அந்தத் தாக்குதலைச் செய்யப்போகிறான் என்பது முன்னமே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
பாடல் கேட்க முடியாவிட்டால் இங்கே தரவிறக்கிக் கேளுங்கள்.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு.
Labels: அனுபவம், இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர் நினைவு, மக்கள் எழுச்சி, மக்கள் துயரம்
Sunday, June 11, 2006
சுதந்திரபுரப் படுகொலையின் நினைவுநாள்
10.06.1998 அன்று வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரபுரம் என்ற கிராமத்தின்மீது சிங்களப்படையால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதுவரை அக்கிராமம் எவ்வித தாக்குதலுக்கும் ஆளாகவில்லையென்றுதான் நினைக்கிறேன். யுத்த முனையிலிருந்து நன்கு பின்னுக்குத் தள்ளியிருந்த அழகிய அமைதியான கிராமம்.
அன்று காலை சிங்கள வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் விமானங்கள் அக்கிராமத்தில் குறிப்பிட்ட இடத்தின்மீது குண்டுகள் போட்டன. அவை தாண்டவமாடி முடிந்து போனதும் அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த ஜெயசிக்குறு இராணுவம் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தின்மேல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தின.
இத்தாக்குதலில் சிறுவர்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு குடும்பத்தில் கைக்குழந்தையொன்றைத் தவிர மிகுதி ஐவரும் கொல்லப்பட்டதாக ஞாபகம். அதற்கு ஒரு கிழமைக்கு முன்புதான் கிளிநொச்சியிலிருந்து பெருமெடுப்பில் திருவையாறு வழியாக முன்னேறிய படையினரை முறியடித்தனர் புலிகள். அதில் சிங்கள அரசின் சிறப்புப் படைப்பிரிவொன்று நிர்மூலமாக்கப்பட்டது. மொத்தமாக நூற்றுக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்படுகொலை நடத்தப்பட்ட நாளுக்கு சரியாக ஒருவருடம் முன்பு 'ஜெயசிக்குறு' என்ற பேரில் நடவடிக்கை தொடங்கி வன்னியை ஆக்கிரமித்திருந்த இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நடத்தி படைத்தரப்புக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்தியிருந்தனர்.
அன்றைய சுதந்திரபுரப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு எம் அஞ்சலிகள்.
Labels: செய்தி, துயர் பகிர்தல், நினைவு, மக்கள் துயரம்
Tuesday, April 25, 2006
தொடரும் தாக்குதல்கள்.
திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது இரண்டாவது நாளாக அரசடையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்)மாலையும் இன்று (புதன்)காலையும் நடத்தப்பட்ட வான்தாக்குதலிலும், தொடர்ச்சியாக நடத்தப்பட் கடற்தாக்குல், மற்றும் எறிகணை வீச்சுக்களினாலும் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நிறையப்பேர் காயமடைந்துள்ளதாகவும், சம்பூர் மருத்துவமனையில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதல்களினால் முப்பதாயிரம் வரையான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனரென்றும் அவர்களைப் பராமரிக்கும் பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை தாக்குதல் தொடர்ந்து நடத்தப்பட்டால், பதிலுக்குத் தற்காப்புத் தாக்குதல் நடத்தவேண்டிய நிலைவருமென புலிகள் அறிவித்துள்ளனர்.
Labels: செய்தி, மக்கள் துயரம்
Friday, April 21, 2006
யாழ் - இடப்பெயர்வு
இம்மாதம் பத்தொன்பதாம் திகதியுடன் யாழ்குடாநாட்டை இராணுவம் முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 19.04.1995 அன்றுதான் சூரியக்கதிர் -02 என்ற இராணுவ நடவடிக்கையை எதிரி தொடக்கினான். ஏற்கனவே சூரியக்கதிர் -01 நடவடிக்கை மூலம் வலிகாமத்தின் சில பகுதிகளையும், யாழ் நகர்ப்பகுதியையும் கைப்பற்றி வைத்திருந்தான்.
கைப்பற்றப்ப படாத மிகுதிப்பகுதிகளையும் கைப்பற்றவே இரண்டாவதும் மூன்றாவதும் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன.
முதலாவது நடவடிக்கையில் மக்களற்ற சூனியப்பிரதேசத்தையே இராணுவம் கைப்பற்றியது. மற்ற நடவடிக்கையில் மக்களோடு சேர்த்து நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டது.
முதலாவது நடவடிக்கையில் யாழ் நகர்ப்பகுதி விடுபட்ட நேரத்தில் வெளிவந்த தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இரண்டை இப்போது கேளுங்கள்.
சின்ன சின்ன கூடு கட்டி
நாமிருந்த ஊர் பிரிந்தோம்
இன்னொரு பாடல்.
பொன்.கணேசமூர்த்தி எழுயதென்று நினைக்கிறேன்.
"புலியொரு காலமும் பணியாது -எந்த
படைவந்த போதிலும் சலியாது"
இரண்டு பாடல்களுமே மேஜர் சிட்டு வினால் பாடப்பட்டவை.
**********************
22.04 ஆகிய இன்றும்கூட மிக முக்கியநாள். ஈழப்போராட்டத்தில் முக்கியமானதொரு மைல்கல். நாம் பெருவெற்றியொன்றைப் பெற்ற நாள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.
Labels: ஈழ அரசியல், நட்சத்திரம், நினைவு, மக்கள் துயரம், வரலாறு
Wednesday, April 05, 2006
தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை.
இப்பதிவு ஒருபோதும் சிங்களக் கடற்படையின் தமிழக மீனவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தப் போவதில்லை. முக்கியமாக, கொல்லப்படுபவர்களோ கைதுசெய்யப்படுபவர்களோ கூலிக்கு மாரடிக்கும் ஏழைகள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவ்விசயத்தில் என்தரப்பு அனுதாபம் அவர்களுக்குண்டு.
இந்தச் சிக்கலை அவர்களின் அரசியல்வாதிகளோ மக்களோ தீர்க்க வேண்டும். இதுமட்டில் அம்மக்களின் தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் போக்கு வருத்தமளிக்கக்கூடியது. ஒதே உதாரணம். இவ்வளவு ஆண்டுகாலம் எத்தனையோ மீனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இரண்டொரு வருடங்களுக்கு முன் இலங்கை வந்த இந்தியக் கடற்படைத் தளபதியொருவர் (சரியாக யாரென்று மறந்துவிட்டது.) கொழும்பில் வைத்து ஒரு செவ்வி கொடுத்துவிட்டுத் திரும்பினார். அதில், "தமிழக மீனவர்களைத் தாக்குவது சிங்களக் கடற்படையன்று, மாறாக புலிகள்தான் அவர்களைத் தாக்குகின்றனர்" என்று திருவாய் மலர்ந்து விட்டுத் திரும்பினார். நானறிய வை.கோ. மட்டும்தான் இதையெதிர்த்து ஒரு அறிக்கை விட்டாரென்று நினைக்கிறேன். (பலருக்கு அப்படியொன்று நடந்தது தெரியுமா? என்னால் அதற்குரிய சுட்டிகளைத் தேட முடியாது. இது நான் தாயகத்தில் நிற்கும்போது நடந்தது.) இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக மீனவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை.
தமிழக மீனவர்களைக் கொல்வதுதான் சிங்களக் கடற்படையின் முதன்மை நோக்கமென்று சொல்வதை (என் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்) என்னால் ஒப்பவே முடியாது. அது வேறுபல அரசியல்களைக் கொண்டுள்ளது. (ஆனால் இருதரப்பு மீனவர்களுமே சிங்களக்கடற்படையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. போதை மருந்துக் கடத்தலுட்பட பலவிசயங்கள் இவற்றின் பின்னணியிலுள்ளன. அரச இயந்திரத்தின் மறைமுக - நேரடிச் சம்பந்தம் இவற்றிலுண்டு)
இன்றும்கூட மன்னார்க்கடலிலிருந்து வெறும் ஒருமைல் வரைக்கும் வந்து மீன்பிடிக்கும் தமிழகப்படகுகளை எதுவும் செய்யாமலே வேடிக்கை பார்க்கச் சிங்களக்கடற்படையால் முடிகிறது. வந்தியத்தேவன் சொல்லும் Trawlers படகுகள் வந்து வளத்தைக் கொள்ளையடிப்பதுடன் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்வதையும்கூட பல சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்த்தே வந்திருக்கிறது. அதையெதிர்த்து உண்ணாவிரதம் அது இது என்று பலகூத்தாடினால் அடுத்தமுறை சிலரைக் கைது செய்வார்கள்.
என் அவதானத்தின்படி இந்திய மீனர்வர்கள் சுட்டுக்கொல்லப்படுவது இலங்கைக் கரையோரத்திலன்று. மாறாக கச்சதீவை அண்டியோ எல்லைக்கோட்டை அண்டியோதான். மன்னார்க்கரை வரை வந்து ஆறுதலாக மீன்பிடித்துச் செல்கிறார்கள்.
சிலதடவைகள் கரையோர மீனர்வகளால் மட்டுமே சிலபடகுகளும் பல மீனவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை அடுத்தநாளே புலிகள் விடுவித்த சம்பவங்களுமுண்டு.
உண்மையில் Trawlers இல் வருபவர்கள் அதன் முதலாளிகள் கிடையாது. அவர்கள் கூலிக்கு வரும் தொழிலாளர்களே. தாங்கள் விரும்பவில்லையென்றாலும் கட்டாயம் மன்னார்க்கடலுக்குச் செல்லும்படி தம் முதலாளிகள் வற்புறுத்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள் (பிபிசி செவ்வியிலுட்பட)
இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் இரண்டொரு சந்திப்புக்கள்கூட நடந்துள்ளன. எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மன்னாரில் வைத்து "இனிமேல் உங்கள் பகுதிக்கு வரமாட்டோம்" என்று உறுதியளித்துவிட்டு நாடு திரும்பியதும், "அப்படியேதும் நாங்கள் வாக்குறுதி தரவில்லை, அவர்களின் கரைக்குப்போய்த்தான் மீன் பிடிக்க வேண்டியிருக்கிறது" என்று சொன்னார் பேச்சுக்கு வந்த பொறுப்பானவர். இது மிகுந்த சினத்தை மன்னார்க்கரை மீனவர்களிடம் ஏற்படுத்தியது. அதைவிட "இனிமேல் Trawlers பயன்படுத்த மாட்டோமெ"ன்று சொல்லிவிட்டுச் சென்றபின்னும் பலமுறை மன்னார் மீனவரின் வலைகள் அப்படகுகளால் அறுக்கப்பட்டுள்ளன. இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்று சொல்லியிருக்கிறோம், ஆனால் சிலர் அதை நடைமுறைப்படுத்துகிறார்களில்லை" என்று அந்தப் பொறுப்பானவர் பதிலளிக்கிறார்(பி.பி.சி செவ்வி).
இன்றும்கூட ஈழத்துத் தமிழ்மீனவனுக்கு ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க நிறையத் தடைகளுண்டு. நேரக்கட்டுப்பாடுகளுண்டு. குறிப்பிட்ட மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் கரையேறி விடவேண்டுமென்ற கட்டுப்பாடு இன்னும் பல இடங்களில் இருக்கிறது. இந்நிலையில் கரையோர வளத்தையே பெருமளவு நம்பியிருக்கும் மீனர்வர்களின் வளங்கள் வேறாட்களால் எடுத்துச்செல்லப்படுவதையோ, தமது மீன்பிடி உபகரணங்கள் அவர்களாற் சேதமாக்கப்படுவதையோ பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.
இன்றும் அப்படி வந்துபோகும்போது, "சிங்களவன் என்ன புடுங்கிறான்?" என்றுதான் மீனவர்களால் கேட்கப்படுகிறது. இதை ஈழத்துக்கரையோர மீனவனின் நிலையிலிருந்து பார்த்தால் ஓரளவு புரிபடக்கூடும்.
"தங்கள் கடலில் மீன்வளமில்லை, மன்னாரில்தான் அது கிடைக்கிறது" என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை. (இதை நான் சொல்லவில்லை. தமிழக மீனவர்களே ஊடகங்களிலும் பிபிசி உட்பட பன்னாட்டுச் செய்திச் சேவைகளிலும் சொல்லியுள்ளார்கள்.) அப்படித்தான் இருந்தாலும் மன்னாரில்தான் மீன்பிடிப்போம் என்று அடம்பிடிப்பதும் ஏற்புடையதன்று.
இதற்கெல்லாம் உடனடியா ஏதாவது தீர்வு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. என்ன தீர்வு என்றும் புரியவில்லை. தனியே இரு மீனவச் சமூகங்களும் மட்டும் பேசியும் எந்தத் தீர்வும் நடைமுறைக்கு வராது (ஏற்கனவே ஏற்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுடன் மேலும் மேலும் விரிசல் வந்துகொண்டேயிருக்கிறது) அரசும் இதுவிசயத்தில் ஆக்கபூர்வமான முடிபுகள் எடுக்கப்போவதில்லை. இரு அரசுகளுமே தங்கள் தங்கள் சுயநலத்துக்காக இருதரப்பு மீனவர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன.
************************
கச்சைதீவுக்கண்மையில் அல்லது எல்லைக்கோட்டுக்கண்மையில் (குறிப்பாக சிறுபடகுகளில் வரும்) வைத்துத் தாக்கப்படும் மீனர்வர்கள் விசயத்தில் "அவர்கள் எல்லை தெரியாமல் வந்தார்கள்" என்று சொல்லலாம். ஆனால் Trawlers படகில் வருபவர்கள் விசயத்தில், அதுவும் மன்னார்க்கரையிலிருந்து ஒருமைல் வரை (இன்னும் நெருங்கினால் Trawlers தரைதட்டுமென்ற அளவுக்கு) வருபவர்கள் விசயத்தில் அப்படிச் சொல்ல முடியாது. (வேண்டுமானால் அம்மீனவர்களுக்கு எல்லைக்கோடு பற்றிய அறிவில்லையென்று மறவன்புலவு சச்சிசாதனந்தன் சொல்வதை ஏற்கலாம். எல்லாக்கடலும் அனுமதிக்கப்பட்டதென்ற புரிதல்தான் அவர்களுக்கிருக்க வேண்டும்.)
************************
மீனவப்பிரச்சினையுடன் சம்பந்தமற்றது.
இந்தியக் கடற்கரையிலிருந்து 470 கடல்மைல் தொலைவில் - பன்னாட்டுக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலைத் தடுக்கவோ, கைது செய்யவோ, விசாரிக்கவோ, கட்டாயப்படுத்தி ஆயுதமுனையில் தம் நாட்டுக்கு அழைத்துச் செல்லவோ இந்தியக்கடற்படைக்கிருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதற்கப்பால், அப்படித் "துடியாட்டமாயுள்ள இந்தியக் கடற்படை, இருபதாண்டுகளாக தமது குடிமக்கள் கடலில் வைத்துக் கொல்லப்படும் விசயத்தில் -பலநேரங்களில் தங்கள் கடலெல்லைக்குள் வைத்தே அன்னியப்படையால் கொல்லப்படும் விசயத்தில் என்ன செய்கிறது?" என்று ரோசா கேட்ட நியாயமான ஒரு கேள்விக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்லாது,
"ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும்,
தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள
வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது "
என்று சொல்லி தனது மனப்புழுக்கத்தைக் கொட்டப் பயன்படுத்திக்கொண்டார் வந்தியத் தேவன்.
இந்திய இராணுவப் பாசிசம் பற்றி (அதற்கெல்லாம் தனியொரு அவில்தாரின் அரிப்பு என்று தப்பிக்க முடிகிறது உங்களால்) இந்தியாவிலேயே உணர்ந்துகொள்ளுங்கள். சிக்கலென்னவென்றால் புலிகளும் கட்டளையிடும் தலைமைப்பீடம், அதன் தொடர்ச்சியான நிர்வாகக் கட்டமைப்புக்கொண்ட ஒரு நிறுவனம் என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ?
கட்டளைக்கு அடிபணிந்து, நிறுவனரீதியாக- உத்தரவு பெற்று எதைச்செய்தாலும் அது பாசிசமன்று. எல்லாம் ஜனநாயகமே.(ஈழத்தில் நடந்த கொலைகள், பாலியல் வன்புணர்ச்சி, சித்திரவதைகள், கட்டாயப்படுத்தி ஆட்சேர்த்துத் துப்பாக்கிமுனையில் சமர்க்களமனுப்பிக் கொன்றது.....எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்)
Labels: அரசியற் கட்டுரை, அனுபவம், மக்கள் துயரம்
Sunday, December 25, 2005
ஈழத்தில் நடப்பவை....
இதுதொடர்பாகக் கண்டன அறிக்கையொன்றை விடுத்துள்ளனர் புலிகள். மேலும் அவருக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" விருது இன்று மாலை வழங்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்ட மூன்றாவது மாமனிதர் விருதுக்குரியவர் ஜோசப் பரராசசிங்கம். ஏற்கெனவே இக்காலப்பகுதியில் பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான தராகி எனப்படும் சிவராம் மற்றும் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோர் கொல்லப்பட்டவர்களாவர்.
-----------------------------------------
மன்னாரில் அண்மையில் நடைபெற்ற கடற்படை மீதான தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பேசாலைப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். நால்வர் காணாமற்போயிருந்தனர். அவ்வாறு காணாமற்போன நால்வரும் வெட்டிக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் இன்று அப்பகுதி மக்களாற் கண்டுபிடிக்கப்பட்டனர்.
4 வயது குழந்தை டிலக்சன், அவரது தாயார் திரேசா (சுகந்தி), கணவன்-மனைவியாகிய இமானுவேல், குரூஸ் மற்றும் மாணவி அந்தோனிக்கா ஆகியோரே வெட்டி எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரே இக்கொலைகளுக்குக் காரணமென மக்கள் கருதுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை சுற்றிவளைப்பிற் கைதுசெய்யப்பட்டவர்கள் பலத்த அடிகாயங்களோடு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பேசாலை - தலைமன்னார்ப் போக்குவரத்தை கடற்படையினர் முற்றாகத் தடைசெய்துள்ளது.
------------------------------------
யாழ்ப்பாணத்தில் கோட்டைப்பகுதியில் நேற்று நடந்த மோதலில் தமது தரப்பில் மூவர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஐவரை தாம் சுட்டுக் கொன்றிருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டிருந்தது. அத்தோடு ஐவரின் சடலங்களையும் இராணுவம் யாழ். மருத்துவமனையில் ஒப்படைந்திருந்தது.
ஆனால் இன்றுகாலை அச்சடலங்களில் ஒன்று தன் மகனுடையதென்று அவரின் தாயார் அடையாளம் காட்டியுள்ளார். தனது மகன் யாழ். மத்திய கல்லூரியின் இரவுக் காவலாளியாக வேலை பார்ப்பவரென்றும், மாலை இரவுணவை எடுத்துக்கொண்டு வேலைக்குச் சென்ற மகன் திரும்பி வரவில்லையென்றும் தெரிவித்துள்ளார். அவரது சடலம் யாழ் மத்திய கல்லூரிச் சுற்றாடலில் இருந்தே யாழ்.வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏனைய நால்வரும்கூட அப்பாவிகளாக இருக்கலாமென்ற ஐயம் நிலவுகிறது.
இதேவேளை யாழ்த் தாக்குதல்களுக்கு உரிமைகோரும் 'பொங்கியெழும் மக்கள் படை' இன்று எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த ஐவரும் அப்பாவிகளென்றும், அவர்களுக்கும் தாக்குலுக்கும் சம்பந்த்மில்லையென்றும் தெரிவித்துள்ளதோடு, அப்பாவிகளைக் கொன்று அவர்கள்மேல் பழிபோடும் இராணுவத்தின் இச்செயலுக்குப் பதிலடியாக 50 இராணுவத்தினரை தாம் கொல்லப்போவதாக அவ்வெச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகவச்சேரியிலும் நேற்று இளம்பெண்ணொருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியிருந்தார்.
-----------------------------------
புரிந்துணர்வு ஒப்பந்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது செயற்பாடுகளை நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மோசமான நிலையில் இது மேலும் வன்முறைகளைத் தூண்டிவிடுமென்ற அச்சம் நிலவுகிறது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அலுவலகத்துள் அத்துமீறி நுழைய முற்பட்டார்கள் என்றும், வன்முறையைத் தூண்டிவிட்டார்களென்றும் கூறியுள்ள அவர்கள், அப்படிச் செய்பவர்கள் சிலரேயென்றும் அவர்களைக் கண்டறிந்து இராணுவம் கைதுசெய்ய வேண்டுமென்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார்கள்.
-------------------------------------------
இதேவேளை, யாழ். இராணுவ வன்முறைகளுக்கு எதிர்ப்பு- நாளை முதல் அரச பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். அது தொடர்பான விரிவான செய்தி:
யாழில் சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்கள் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட தமிழ்த் தேசிய தொழிற்சங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா அரசியல்வாதிகளின் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையானது, தமிழின அழிப்பை பல்வேறு வழிமுறைகளிலும், சமாதானம் என்ற வெற்று முழக்கத்தை எழுப்பிக்கொண்டு பேரினவாத ஒடுக்குதலின் உச்சக்கட்டமாகிய தமிழின அழிப்பிற்கான போருக்கு மிகநுட்பமாக திட்டமிட்டு தயாராகிவிட்டது.
இதன் முதற்கட்டமாக கொடுமையான வன்முறைகளை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
தாமே உறுதிப்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுலாக்காமல் விடுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வஞ்சகமான தந்திரமாகும். அத்துடன் பேரினவாத்திற்கு ஏற்ற வகையில் இராணுவ நோக்கில் தமக்கு சாதகமாக உடன்படிக்கையை வளைத்து விடவும் திட்டமிடப்படுகின்றது. போர்நிறுத்த உடன்படிக்கையின் அடிநாதமாக விளங்குவது மக்களது இயல்பு வாழ்க்கையே.
இதனை எவ்வகையிலும் சிதைத்து தமிழ்மக்கள் மீது வன்முறைகளையும், அச்சுறுத்தலையும் பிரயோகிப்பது தமிழ்மக்கள் மீதான போரின் முதற்கட்டமாகும்.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின், நிழலாகத் தொடர்ந்த தமிழின விரோதக் செயற்பாடுகள், தமிழர் தாயகமெங்கும் இராணுவ வன்முறை வெளிப்பாடாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
கீழே தரப்படும் சம்பவங்கள் பேரினவாதத்தின் கொடுரத்தை தெளிவாக்குகின்றன.
அண்மையில் புத்தூர் கிழக்கில் குடும்பப் பெண் மீதான படையினரின் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியும் அதனைத் கண்டித்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலும்,- நீர்வேலியில் விவசாயிகள் இருவர் கொல்லப்பட்டமை,
- தேசப்பற்றும் சமூகப்பற்றும் கொண்ட வீடியோ கடை உரிமையாளர் உட்டபட கல்லூரி அதிபர்கள் இருவர் கொல்லப்பட்டமை,
- மிருசுவிலில் சிறுமி மீதான பாலியல் முயற்சி,
- புங்குடுதீவில் தர்சினி என்னும் இளம்பெண் கொடுரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை,
- இப்பெண்ணின் உறவினருடன் பெற்றோருக்கு ஆதரவு கூற செல்ல முயன்ற பல்கலைக் கழக மாணவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்,
- பல்கலைக்கழகச் சூழலில் படையினர் குவிக்கப்பட்டு பொது மக்களும் மாணவர்களும் தாக்கப்படுதலை கண்டித்து போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவிவிடம் முறைப்பாடு செய்ய அமைதியான முறையில் ஊர்வலத்தில் சென்ற யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மீதான காட்டுமிராட்டித்தனமான தாக்குதலையும், துப்பாக்கிச்சூட்டினையும் படையினர் மேற்கொண்டமை.
- ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் (இதே நாளன்று இனவெறி கொண்ட சிங்களத் தேசப்பற்றாளர் இயக்கம் விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்ய வேண்டும் என்று கூறி கொழும்பில் நடாத்திய ஊர்வலத்திற்கு படையினர் ஒத்துழைப்பையும் பாதுகாப்பினையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது).
- இதற்கு அடுத்த நாள் படையினரும், காவல்துறையினரும் அத்துமீறி நுழைந்து விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிச் சூடு நடாத்தியமை.
- முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், சாரதிகள் மீது யாழ் நகரத்தில் படையினர் மேற்கொண்ட தாக்குதல், அவர்களுடைய வாகனங்கள் நொறுக்கப்பட்டமை.
- தமது விளையாட்டு மைதானத்தினூடாக படையினர் பாதுகாப்பு அரணை அமைத்த போது ஹாட்லிக் கல்லுரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தபோது மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள்.
- நல்லூர் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றலின் பின்னர் வீடு திரும்பிய மாணவர்கள் மீது தாக்குதல்.
- தனியார் காணிகளின் ஊடாக வேலி பிரித்து சென்று வீடுகளில் உட்புகுந்து மோசமான முறையில் பெண்களை அவமானப்படுத்தும் வகையில் அடித்து துன்புறுத்துவதோடு அவர்களை உடற்சோதனை என்ற பெயரில் கேவலப்படுத்துவது.
- பரவலாக யாழ். குடாநாடெங்கும் மக்ளது சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறாக வழிமறிப்புக்கள், வீதித் தடைகள், உடற்சோதனை, தன்னிச்சையான கைதுகள், கண்மூடித்தமான தாக்குதல், துப்பாக்கிச் சூடுகள், வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையடித்தல்.
- பணிபுரிந்து வீடு திரும்பும் ஆண் அரச ஊழியர்கள் உடற்சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்படுதல்.
- படையினரின் இத்தாக்குதல் செயற்பாடுகளின் போது குண்டர்கள் போன்று கொட்டன்கள், சைக்கிள் செயின், கத்திகள் ஆகியவற்றுடன் முகத்தை மூடிக் கட்டிக்கொண்டு காடைத்தனம் புரிகின்றமை.
- இராணுவ புலனாய்வுத் துறையினராலும், தேசத்துரோகக் குழுக்களாலும் திட்டமிடபட்ட வகையில் இராணுவ உயர் மட்டத்தினரின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்படுகின்ற தேசப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள்.
இவற்றில் இருந்து எமக்கு தெளிவுபடுவது என்னவெனில், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என்ற தந்திரோபாயத்தை சிறிலங்கா அரசின் சார்பில் படைத்தரப்பு கையாள்கிறது என்பதாகும்.
சிறிலங்கா அரசாங்கமும், அதன் ஏவலர்களுமாகிய இராணுவக் குண்டர்களின் இச்சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டியவையாகும்.
மக்களது இயல்பு குறித்தோ அல்லது போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துவது குறித்தோ முடங்கிவிட்ட சமாதான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பது குறித்தோ சிறிலங்கா அரசாங்கத்திற்கு கிஞ்சித்தேனும் அக்கறையில்லை என்பதை அனைத்துலகத்தினது கவனத்திற்கும் கொண்டுவரவேண்டிய தேவை தமிழ்மக்களாகிய எமக்கு உள்ளது.
தமிழ்மக்கள் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும், சுதந்திரமாகவும், தமது வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா பேரினவாதம் தடையாக உள்ளது என்பதை பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களாகிய நாமே வெளிக்கொணர வேண்டும் என்ற பொறுப்பு எமக்கு உள்ளது.
சிங்கள அரசினதும் அதன் படைகளினதும் இத்தகைய அராஜக செயற்பாடுகள் யாவும் இன்று இங்கு போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வியை மக்களாகிய எம்மிடத்தில் தோற்றுவித்துவித்துள்ளது.
ஒரு சமூகத்தின் அதிஉயர் கல்வி நிறுவனமான பல்கலைக்கழத்தின் துணைவேந்தருக்கு இங்கு கௌரவமும், பாதுகாப்பும் இல்லையெனில் சாதாரண மக்களின் கௌரத்திற்கும், பாதுகாப்பும் என்ன உத்தரவாதம் என்ற நியாயமான கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்தியங்கும், அண்டிப்பிழைக்கும் தேசத்துரோகக் குழுக்கள் எமது மண்ணில் இருந்து முற்றாக அகற்றப்படல் வேண்டும்.
அத்துடன் பொதுமக்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கு குந்தகமாக உள்ளதால் மக்களால் வெறுக்கப்படுகின்ற இராணுவக் காவலரண்கள் நீக்கப்பட வேண்டும்.
சிங்களப் படைகளின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயல்பு வாழ்க்கையையும், மனித கௌரவத்தையும் வென்றெடுக்க வேண்டும்.எமது பாதுகாப்பை உறுதி செய்யும் வரை இயல்பு வாழ்க்கைக்கு உத்தரவாதம் வழங்கும் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச பணியாளர்களாகிய நாம் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக மேற்கொள்ள உள்ளோம்.
வரும் திங்கட்கிழமை 26.12.2005 முதல் பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக செய்வது என்ற என்ற தீர்மானத்தை யாழ். மாவட்டத்தில் இயங்குகின்ற தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பாகிய நாம் எடுத்துள்ளோம்.
இப்புறக்கணிப்பிற்கான ஒத்துழைப்பை அரச பணியாளர்கள் மற்றும் அனைவரும் வழங்குமாறு வேண்டுகின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------
தமிழ்ப்பதிவுகள்
Labels: செய்தி, மக்கள் துயரம்
Tuesday, December 20, 2005
யாழ்ப்பாணத்தில் இன்றும் இராணுவம் தாக்குதல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
பௌதீகத்துறை பீடாதிபதி மாணிக்கவாசகர் இளம்பிறையன் மற்றும் மாணவர் கௌரி செந்தூரன் ஆகியோரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கல்லூரியின் முன்பாக உள்ள இராமநாதன் வீதியில் காவல்துறையின் வாகனம் மீது முற்பகல் 11.30 மணியளில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்லெறிந்ததாக இராணுவத்தரப்பினர் கூறுகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர் இளம்பிறையன், வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------
இதேநேரம் இன்று முச்சக்கரவாகனச் சாரதிகள்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் படையினரால் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஓட்டோ சாரதியை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த ஓட்டோ தொழிற்சங்கத்தினர் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக யாழ். நகரில் இன்று மாலை 3.30 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டோ சாரதிகள் தங்களது வாகனங்களுடன் யாழ். நகரில் குவிந்தனர்.
ஸ்டான்லி வீதி, கஸ்தூரியார் வீதி ஆகியவற்றை ஓட்டோ சாரதிகள் மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த சிறிலங்கா இராணுவத்தினர் ஓட்டோ சாரதிகள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர்.
நூற்றுக்கும் மேலதிகமான படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டு அந்த இடத்தை இராணுவத்தினர் போர்க்களமாக்கினர். இந்தத் தாக்குதலில் ஓட்டோ சாரதிகள் பலர் படுகாயமடைந்தனர். அவர்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகின.
இராணுவத்தினரின் இந்த வன்முறைச் செயல்களால் யாழில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே மணற்காடு, குடத்தனை, வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினர் இன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை வீடு வீடாகத் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
---------------------------------------------
புங்குடுதீவில் தர்சினி என்ற இளம்பெண்ணொருவர் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------
செய்திகள்: புதினம், தமிழ்நெற்
தமிழ்ப்பதிவுகள்
Labels: செய்தி, மக்கள் துயரம்
Monday, December 19, 2005
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இராணுவ வன்முறை
நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எனப் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. பதினைந்து பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தனியொரு சம்பவமாக இன்றி பல சம்பவங்களின் தொடர்ச்சியே. கடந்த 3 நாட்களுக்குள் நடந்த பலசம்பவங்களின் கோர்வையே இது.
இதுபற்றிய செய்திகள்:
இரு தினங்களின் முன் "தர்சினி" என்ற இளம்பெண் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, கிணறொன்றினுள் வீசப்பட்ட சம்பவத்துடன் இது தொடங்குகிறது. இக்கிணறு சிங்கள இராணுவத்தினரின் முகாமருகே இருக்கும் கிணறு. இப்பாலியல் வன்புணர்வுக் கொலை இராணுவத்தால் தான் செய்யப்பட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். புங்குடுதீவில் இதுதான் முதல்தடவை என்றில்லை. ஏற்கெனவே இவ்வாறான பாலியல் வன்புணர்வுக்கொலைகள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளன. 'சாரதாம்பாள்' என்ற பெண்ணின் கொலை நீதிமன்றம் வரைகூட வந்தது. அவ்வழக்கில் இராணுவத்தினருக்கெதிரான சாட்சிகள் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு இறுதியில் வழக்கு நீர்த்துப்போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது தர்சினியின் கொலை. மருத்துப்பரிசோதனையும் பாலியல்வன்புணர்வுக்கொலையை உறுதிப்படுத்துகிறது.
இக்கொலையைக் கண்டித்து மக்களால் பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர்களுடன் புங்குடுதீவில் அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரால் வழிமறித்துத் திருப்பியனுப்பப்பட்டார். அவ்விடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு 25 வரையான பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.
இச்செயலைக் கண்டித்தும், எற்கெனவே பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட அட்டூளியங்களைக் கண்டித்தும், (பல்கலைக்கழத்துள் இராணுவப் பிரவேசம், அடையாள அட்டைகளைக் கிழித்தெறிந்தது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் என்னேரமும் இராணுவக் காவல்) யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆட்சேபனை மனுவொன்றைக் கொடுப்பதற்காக மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எனப்பலரும் கண்காணிப்புக்குழுப் பணிமனையை நோக்கிச் சென்றனர். அப்போது இடைமறித்த 'சிங்கள' இராணுவம் இவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. முதலில் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், பின் இவர்களை நிலத்துக்குச் சமாந்தரமாகவும் சுட்டுள்ளார்கள். தங்களை நோக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து வந்துள்ளார்கள். இச்சம்பவத்தில் காயமடைந்த 15 பேர்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில் காயமடைந்த பேராசிரியர் பேரின்ப நாதனும் இன்னொரு மாணவரும் துப்பாக்கிச் சூட்டிலேயே காயமடைந்தனர் எனச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தையிட்டு இராணுவம், 'அவர்கள் எங்கள்மேல் கல்லெறிந்தார்கள். அதனால்தான் நாம் வானைநோக்கிச் சுட்டோம்' என்கிறது.
இவர்கள் பின்னால் புலிகள் உள்ளார்கள் என்றும் சொல்கிறது.
ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக நின்ற யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாஸ், 'அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். இராணுவம் தாக்கியபோதும் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் நானும் பேசினோம். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூட்டை நிலத்திலும் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து உயிர்க்கொலைகளைத் தவிர்ப்பதற்காக நாம் கலைந்துசென்றோம்' என்கிறார்.
புங்குடுதீவில் நடந்த பாலியல்வன்புணர்வுக் கொலையையடுத்துத் தொடர்ச்சியாகப் பலசம்பவங்கள் நடந்துள்ளன. இந்நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே 'பொங்கியெழும் மக்கள்படை' என்ற பெயரில் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, இனியும் இராணுவம் எல்லை மீறினால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புக் குழுவுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இப்போது புங்குடுதீவுச்சம்பவமும் அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருட்பட மாணவர்கள், பேராசிரியர்கள, பொதுமக்கள் எனத் தொடர்ந்து இராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனிவரும் சிலநாட்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாம். (ஏற்கெனவே, நடைபெற்றுவரும் உயர்தரத் தேர்வுக்கு இடையூறு விளைவிக்காதிருக்கவே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கதைகள் கசிந்ததுண்டு)
யாழ். பாராளுமன்ற உறுப்பினருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் நடக்கும் சம்பவங்கள், அரசியல் மட்டத்தில் தெளிவாகவே ஒரு செய்தியைச் சொல்கிறது.

பேரணி சென்ற பல்கலைக்கழகச் சமூகம்.

பேரணியை "எதிர்கொண்ட" படையினர்




-----------------------------------------
படங்கள்: சங்கதி
தமிழ்ப்பதிவுகள்
Labels: செய்தி, மக்கள் துயரம்
Sunday, July 10, 2005
இரு நினைவு கூரல்கள்
நேற்று நவாலிப் படுகொலை நினைவு நாள்.
நூற்று ஐம்பது வரையான உயிர்களை ஒரேயிடத்தில், ஒரே கட்டடத்துள், ஒரே கணத்திற் பறிகொடுத்த கருமையான நாள்.
1995 யூலை எட்டாம் நாள் அதிகாலை.
“முன்னேறிப் பாய்தல்” என்ற பெயரிட்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமத்தைக் கைப்பற்றவெனத் திட்டம்போட்டு சிங்கள இராணுவம் புதிய படை நடவடிக்கையொன்றைத் தொடங்கியது. முதல் நாள் அது குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டது. ஏற்கெனவே பலாலித் தளத்திலிருந்து ஆரம்பித்து கரையோரம் உட்பட சில பிரதேரங்களை இராணுவம் கைப்பற்றியபோது இடம்பெயர்ந்திருந்த மக்களைச் செறிவாகக் கொண்டிருந்த பகுதிகளே இப்படை நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டன.
ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஓடினார்கள். அதிற் பெரும்பான்மையானோருக்கு அது முதலாவது இடப்பெயர்வன்று.
அப்படி ஓடிவந்தவர்களில் பெரும்பான்மையானோர் மானிப்பாய், நவாலியை நோக்கியே வந்திருந்தனர். அதிற் பெரும்பகுதியினர் நவாலி புனித இராயப்பர் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர். (அப்போது பாடசாலைகள் அல்லது கோவில்களில்தான் மக்கள் தஞ்சமடைவது வழக்கம்). நூற்றுக்கணக்கானவர்கள் அந்தத் தேவாலயத்தில் தங்கியிருந்தனர். மிகுந்த நெரிசலாயிருந்தது. மக்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து பலவேலைகள் நடந்துகொண்டிருந்தன.
ஒன்பதாம் திகதி.
வானில் சிங்களத்தின் புக்காரா விமானமொன்று வந்தது. எங்கோ சண்டை நடக்க (உண்மையில் அப்போது கடுமையான சண்டையேதும் நடக்கவில்லை. புலிகள் கடும் எதிர்பைக் காட்டவுமில்லை. இலகுவாகவே இடங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன) தொடர்பேயில்லாத நாவாலியில் வந்து குண்டுவீச்சு விமானம் வட்டமிட்டது. சரியாகக் குறிவைத்து ஒருமுறை தாழ்ந்தது. வழமையாக இலக்குத் தவறும் தாக்குதல்கள் அன்று இலக்குத் தவறவில்லை. சரியாக தேவாலயத்தின்மேல் அதன் குண்டுகள் வீழ்ந்தன.
எங்கும் மரணஓலம். கட்டடம் இடிந்து தரைமட்டம். ஒரே தடவையில் ஏழு குண்டுகளை வீசிச் சென்றிருந்தது அந்த இயந்திரக் கழுகு. நின்று திருப்பித் திருப்பி வீச நேரமில்லையோ தெரியவில்லை. அல்லது முதற்குண்டு வீசினவுடன் மக்கள் ஓடிவிடுவார்களாதலால் ஒரே தடவையில் வீசினால்தான் உண்டு என்பதனாலாயும் இருக்கலாம்.
யார்யார் தங்கியிருந்தார்கள் என்ற விவரம்கூட இல்லை. அனைவரும் இடம்பெயர்ந்து ஓடிவந்திருந்தவர்கள். அவர்களுக்குச் சேவைசெய்ய நின்றவர்கள் மட்டுமே உள்ளுர்க்காரர்கள். ஏறக்குறைய 60 உடல்கள் மட்டுமே அடையாளங் காணக்கூடியதாக எடுக்கப்பட்டன. தாயை இழந்த கைக்குழந்தைகள், சிறுவர்கள், என்று பார்க்கச் சகிக்க முடியாக் காட்சிகள். இறந்தவர்களின் தொகை ஓரளவு முழுமையாக அறிய ஒரு வாரகாலம் எடுத்திருந்தது. அந்தத் தாக்குதலில் 4 கிராமஉத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சதைக் கூளங்களை அள்ளிப்போடும் காட்சி மறக்க முடியாதது. ஒரு உழவியந்திரப் பெட்டி நிறுத்தப்பட்டிருக்கும். அதற்குள் கட்டட இடிபாடுகள் தூக்கிப் போடப்படும். அதற்குள் வரும் மனிதச் சதைகளும் துண்டங்களும் தனியாக ஓரிடத்திற் சேமிக்கப்படும். கட்டட இடிபாடுகள்கூட மனித சக்தி கொண்டு மட்டுமே அகற்றப்பட்டன. இடிபாடுகளுள்ளிருந்து யாரும் உயிருடன் மீட்கப்பட்டதாய் ஞாபகமில்லை.
(பக்கத்திலிருப்பது, குண்டுவிச்சின் பின், இடிபாடுகள் அகற்றப்பட்ட பின் நவாலித் தேவாலயம்.)
மறக்க முடியாத அந்த அவலத்தைத் தந்த அரசோ எதுவும் நடக்காதது போல இருந்தது. அதன் வானொலிச் செய்தியில், எடுத்தவுடனேயே புலிகளின் ஆயுதத் தொழிற்சாலையொன்று குண்டுவீசியழிக்கப்பட்டதாகச் சொல்லியது. உலகத்துக்கும் அப்படியொரு அவலம் நடந்தது தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். யாழ் மறைமாவட்ட ஆயர் இதை மேலிடத்துக்குத் தெரிவித்திருந்தாலும் எதுவும் நடக்கவில்லை. வத்திக்கானிலிருந்துகூட எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இந்துக் கோவில்களிலோ தேவாலயங்களிலோ குண்டுவீசி மக்களைக் கொல்வது இதுதான் முதல்தடவையன்று, கடைசித் தடவையுமன்று.மறக்க முடியாத அந்த அவலம் நடந்ததின் பத்தாம் ஆண்டு நினைவுநாள் நேற்று.
***********************************************
முன்னேறிய படையினரைத் துரத்தியடிக்கப் புலிகள் திட்டம் போட்டனர்.
அது பௌர்ணமிக்காலம்.
நிலவு வெளிச்சத்தில் வலிந்த தாக்குதல்களைப் புலிகள் செய்வதில்லை. அது கடினமானதும்கூட. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி யோசிக்க முடியாது. அதன்படி பத்தாம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
“புலிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இத்தாக்குதல் தொடக்கப்பட்டது. இருநாள்த் தாக்குதலின் பின் எதிரி கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள் யாவும் மீட்கப்பட்டன. மக்கள் பழையபடி தம் இடங்களுக்கு மீண்டனர், நவாலியிற் கொல்லப்பட்டவர்கள் தவிர.
அந்த முறியடிப்புத் தாக்குதலின்போது எதிரியின் முப்படைகளும் தாக்கியழிக்கப்பட்டன. விமானப்படையின் புக்காரா விமானமொன்று (நவாலியில் குண்டுவீசியதும் இதேரக விமானம்தான்) இச்சமரில் புலிகளினாற் சுட்டுவீழ்த்தப்பட்டது. காங்கேசன் துறைமுகத்தில் நின்ற பெரிய கட்டளைக் கப்பலான எடித்தாரா கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
“முன்னேறிப் பாய்தல்” யாழ்க்குடாநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையே. அதன்பின் மிகப்பெரிய அளவில் பாரிய திட்டத்துடன் குடாநாட்டின்மீது படையெடுத்து வலிகாமத்தைக் கைப்பற்றியது சிங்கள அரசு. எனினும் “முன்னேறிப் பாய்தல்” முறியடிக்கப்பட்டதூடாக குடாநாட்டின் வீழ்ச்சி கொஞ்சக் காலம் பின்போடப்பட்டது.
Labels: அனுபவம், களவெற்றி, சமர், சமர் நினைவு, மக்கள் துயரம், வரலாறு
Tuesday, June 28, 2005
கௌசல்யன் மருத்துவமனையின் பணி
(ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்று இங்கே படியெடுத்துப் போடப்படுகிறது.)
போர்க்களங்களில் விழுப்புண்ணடைந்த தமது தோழர்களுக்கு மருத்துவப் பணிகளையாற்றி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப்போராளி மருத்துவர்களின் பணி போர்நிறுத்த காலத்திலும் ஓய்வடைந்து விடவில்லை. இவர்களின் பணி பல நவீன வசதிகளை உள்வாங்கியவாறு தமது தேச உறவுகளின் துயரைத் தீர்ப்பதற்கான தீவிர செயற்பாட்டினை மேற்கொள்ளத் தூண்டுதல் அளித்துள்ளது. மக்களுக்காக களத்தில் நின்று எதிரியிடமிருந்து உயிர்காத்த வீரர்கள் இன்று மக்களின் உயிரைக் காவு கொள்ளவரும் நோய்களிலிருந்து காக்கும் பணியை சுமந்தவாறு மக்களைத் தேடிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். இதன் ஓர் அங்கமாக தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான லெப் . கேணல் கௌ சல்யன் ஞாபகார்த்த நடமாடும் மருத்துவ சேவையானது, தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவுப் போராளி மருத்துவர்களினால் பின் தங்கிய கிராமங்கள் தோறும் சென்று மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. பெருந்தொகையான போராளி மருத்துவர்களை உள்ளடக்கிய இக்குழுக்கள் மக்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் மருத்துவத் தேவையைக் கண்டறிந்து பூர்த்தி செய்து வருகின்றன. இவ்வாறு தமது சேவையினை கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு பாலமோட்டை கிராம மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த போராளி மருத்துவக்குழுவின் மருத்துவரான தூயவனைச் சந்தித்து அவர்கள் செய்தபணிகளையும், அக்கிராமத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ளும் முகமாக கேட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக லெப். கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்ட இந்நடமாடும் மருத்துவ சேவையானது இங்கு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. எங்கள் மக்களின் மருத்துவதேவையினை நிவர்த்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இந்தப் போராட்டத்திற்கு பக்கபலமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்டு வரும் இப்பிரதேச மக்கள் எதிரியின் எல்லைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்றார்கள். இவர்கள் மருத்துவ ரீதியான வசதிகள் அற்று இதனைக் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். நீண்டகாலமாக மருத்துவ ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தார்கள். எனவே இதனை நிவர்த்தி செய்வதற்காகவும் இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய தடையாக இருந்த இம்மருத்துவ பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்காகவும் இதனைத் தொடர்ந்து நிவர்த்தி செய்வதற்குமாக தமிழீழ தேசியத்தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்த மருத்துவ சேவையின் மூலம் இங்கு சேவையினை வழங்கி வருகின்றோம். இதில் குறிப்பிடக் கூடியதென்ன வென்றால் நோயாளிகள், மருத்துவ சிகிச்சை பெறவிரும்புபவர்கள் வைத் தியசாலைகளையும், வைத்திய நிபுணர்களையும் தேடிச் செல்வது தான் வழக்கம். இங்கு மக்களை நாடி நோயாளிகளைத் தேடி வைத்தியர்களும் நவீன உபகரணங்களைக் கொண்ட ஆய்வுகூடங்கள், சத்திர சிகிச்சைக்கூடங்கள், பல்துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள், அதாவது குழந்தை வைத்திய நிபுணர்கள், சத்திரசிகிச்சைக்கான வைத்திய நிபுணர்கள், பொது மருத்துவ நிபுணர்கள், பெண்நோயியல் மருத்துவ நிபுணர்கள், தோல், கண், மூக்கு, தொண்டை போன்ற வைத்திய நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள், போராளிமருத்துவர்கள் என பெருந்தொகையான வைத்திய நிபுணர்கள் வந்திருக்கின்றார்கள். இது எமது தேசத்தின் வளர்ச்சியில் ஒரு படிக்கல்லாக அமையும் என நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் மக்கள் சுகதேகிகளாக இருக்கின்ற பொழுது தேசத்தின் வளர்ச்சிக்கு அது படிக்கல்லாக அமையும்.
எங்கள் இந்த சேவையினை ஆரம்பித்து செய்கின்ற பொழுது பல்வேறுபட்ட பிரச்சினைகளை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. தனிய மருத்துவம் சம்பந்தமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளார்கள். இதற்கு யுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது யுத்தம் தவிர்க்க முடியாததொன்றாக இருந்த காரணத் தினால் இவர்கள் பொருளாதார ரீதியாக, மருத்துவரீதியாக மட்டுமன்றி பல பக்கங்களாலும் மோசமான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார்கள்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையான காரணம் அரசியல் ஸ்திரமின்மை என்பதே வெளிப்படையானது. அரசியல் ஸ்திரத்தை ஏற்படுத்துவதென்றால் அதற்காக மக்கள் நலமானவர்களாகவும், சுகதேகிகளாகவும் இருக்கவேண்டிய அவசியம் இருக்கின்றதனால் மருத்துவரீதியாக நாங்கள் எமது பணியை ஆற்றுகின்றோம். எனவே எம்மை பின்பற்றி ஏனைய சேவைகளும் இம்மக்களைத் தேடி வந்து உதவிபுரியும் என நம்புகின்றோம். அத்தோடு இந்த சேவையினை தொடர்ந்து நாங்கள் இம்மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
இந்தப்பகுதியை பொறுத்த வரையில் இதற்கு முன்னதான மருத்துவ வசதிகள் எவ்வாறிருந்ததென்பதைக் கூறமுடியுமா?
ஆம்- நாங்கள் இம்மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்தித்த போது அவர்கள் கூறிய சில சம்பவங்களை இங்கு நான் கூற விரும்புகிறேன். ஒருநாள் காலை மூன்று மணிபோல் ஒரு எட்டுவயதுச் சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையை நோக்கி சரியான பயணத்தினை மேற்கொள்ள முடியாமலிருந்த காரணத்தினால், அதாவது அன்று மழை பெய்து கொண்டிருந்தது. வாகனப் போக்கு வரத்து இங்கில்லை. மோட்டார் சைக்கிளிலே ஏற்றிக்கொண்டு செல்வதற்கு வீதியால் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் வழி விடவில்லை. இதன் காரணமாக அச்சிறுவன் இறந்துவிட்டான். இரண்டு மணித்தியால பயணத்தூரத்தில் இருக்கின்ற வைத்தியசாலையை சென்றடைய முடியாத காரணத்தினால் சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படக் கூடிய அச்சிறுவன் இறந்திருக்கிறான் இதுபோன்று ஏராளமான பிரச்சினைகள் இங்கு இருக்கின்றன. உதாரணமாக மார்புப்புற்று நோயுடைய ஒரு பெண்மணி அதற்கான சிகிச்சை பெறுவதற்கான இடத்திற்குச் செல்லமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதை விட உயர்குருதியமுக்கம், நீரிழிவு போன்ற நோயாளிகளும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவ்வாறான நோய்கள் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலத்தை கூட்டக் கூடியதாக விருக்கும். அவ்வாறு தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாமல் இருந்திருக்கின்றன.
இந்நடமாடும் மருத்துவ சேவையினை செய்வதற்காக நீங்கள் உரிய பகுதிகளை எவ்வாறு தெரிவு செய்கின்றீர்கள்? இவ்வாறு துயருறும் ஏனைய பகுதிகளுக்கும் இச்சேவைகள் சென்றடைய வாய்ப்புள்ளதா?
பொதுவாக மருத்துவ வசதிகள் குறைவான இடங்கள், போக்குவரத்து பிரச்சினையாகவுள்ள இடங்கள் விரைவாக வைத்தியசாலைகளை வந்தடைய முடியாத இடங்கள் போன்ற பகுதிகளுக்கு நாம் முன்னதாகவே துறைசார்ந்தவர்களை அனுப்பி இந்தப்பிரச்சினைகளை ஆய்வு செய்து அதன்பின்னர் மருத்துவ தேவை பற்றி ஆலோசித்த பின்பே நாம் இச்செயற்பாட்டில் ஈடுபடுகின்றோம்.
நடமாடும் சேவையாக பணிபுரியும் இந்த மருத்துவ சேவை இது போன்ற பின்தங்கிய கிராமங்களில் நிரந்தரமான செயற்பாட்டினைக் கொண்டதாக அமைப்பதற்கான ஒழுங்குகள் ஏதும் உண்டா?
ஆம்- நாங்கள் இவ்வாறான பிரதேசங்களை அலசி ஆராய்கின்ற பொழுது அதாவது பிரதான மருத்துவ நிலையங்களிலிருந்து வெகு தொலைவிலிருக்கின்ற போக்குவரத்து வசதி குறைந்த பகுதிகளில் திலீபன் மருத்துவமனையினை அமைக்கின்றோம். அங்கு உடனடி உயிர்காப்பு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் மேலதிக சிகிச்சைக்காக அவர்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் என்றார்.

[வான்மதி]
இதேபோன்று இதேபணியில் ஈடுபட்ட போராளி மருத்துவர் வான்மதி இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைகள் குறித்து எம்மோடு இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
இந்த கௌசல்யன் நடமாடும் சேவையானது, மக்களை ஓர் இடத்திற்கு அழைத்து அங்கு வைத்து வைத்தியம் பார்ப்பதோடு நின்று விடாமல் இந்தப்பிரதேசத்திலே இருக்கின்ற அனைத்து வீடுகளுக்கும் பன்னிரண்டு குழுக்களாக நாங்கள் பிரிந்து மக்களின் வீடுகளில் வைத்தே அவர்களை பரிசோதித்து வந்தோம். இதைத்தவிர ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று பற்சிகிச்சைளையும் ஏனைய சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். இதை விட நாம் வீடுகளுக்குச் சென்று நோயாளிகள் என இனங்கண்டவர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து வசதிகளையும் ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். இதனூடாக அவர்களை அழைத்துவந்து இங்கு சத்திரசிகிச்சை, பற்சிகிச்சை கண் பரிசோதனை செய்து கண்ணாடி வழங்குதல் போன்ற சேவைகளையும் செய்து வருகின்றோம்.
இவ்வாறான நவீன வசதி களைக் கொண்டதான இந்த நடமாடும் மருத்துவ சேவையினை மருத்துவப்பிரிவினர் ஆரம்பிப்பதற்கு தூண்டுதலாக அமைந்த காரணி என்னவென்று கூறமுடியுமா?
எமது பிரதேசமானது போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பதனால் தற்போது மீள்குடியமர்விற்குட்பட்டு வருகின்ற நேரத்தில் அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளான வைத்திய வசதி, பாடசாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படாததனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதோடு மருத்துவ வசதி கூட போதிய அளவு கிடைக்கவில்லை. மிக நீண்ட தூரப் பயணத்தின் பின்பு தான் அவர்கள் மருத்துவத்தை பெறக்கூடியதாக இருப்பதனாலே உயிர் ஆபத்து ஏற் படுகின்ற கட்டங்களில் மட்டும் தான் அவர்கள் வைத்தியசாலைக்கு வரக்கூடியதாக இருக்கின்றதே தவிர, சிறிய நோய்களையோ அல்லது பாரதூரமாக வருகின்ற நீண்டகால நோய்களை குணப்படுத்தவோ இவர்கள் வைத்தியசாலைக்கு செல்வது மிகக் குறைவாகவே இருக்கிறது.இதைவிட இலங்கையின் மருத்துவ ஒழுங்கு விதிகளின்படி குறிப்பிட்ட காலத்திற் கொருமுறை மருத்துவர்கள் பாட சாலைகளை தரிசிப்புச் செய்து அங்கிருக்கும் மாணவர்களுக்குள்ள நோய்களை இனங்காணுதல், சிகிச்சை யளித்தல், பற்சிகிச்சையளித்தல் என் பன நடைமுறையில் இருக்க வேண் டிய விடயங்கள். ஆனால் எமது பிரதேசங்கள் பின்தங்கிக் காணப்படுவதாலும் போரினால் பாதிக்கப்பட்டதனாலும் அரசாங்கமே இவர்களை பின்னடைவுக்குள்ளாக்கியதனாலும் இந்நடைமுறை பாடசாலைகளில் இல்லாதுள்ளன. எனவே கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையினூடாக நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்று இச்சேவையை செய்து வருவதோடு பின்தங்கிய பகுதியாதலால் பற்தூரிகை மூலம் பல்துலக்கும் முறையினையும் கற்பித்து பற்பசை, பற்தூரிகை போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
இப்பகுதி மக்களினுடைய எதிர்கால மருத்துவத்தேவைகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இப்பகுதி மக்களுக்கான மருத்துவத் தேவை என்பது இரண்டு அல்லது ஐந்து வீதமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கான இத்தேவையினைப் பூர்த்தி செய்யவேண்டிய தேவை எமக்கு நிச்சயமாக உண்டு. ஏனெனில் முற்றாக போக்குவரத்து வசதியற்ற நிலை காணப்படுவதும் வைத்தியசாலைகள் மிகத்தொலைவிலிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும். அத்தோடு இப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகள் என்று எதுவுமே இயங்கவில்லை. தியாகதீபம் திலீபன் மருத்துவமனை மட்டுமே இயங்கு கிறது. ஆகவே இப்பிரதேசத்தின் மிக அவசிய தேவை கருதி ஓரளவேனும் வசதியுடைய மருத்துவமனையையாவது அமைக்க வேண்டும் என்றார். இதேவேளை தாம் எதிர்பாராத வகையில் தமது மருத்துவத்தேவைகள் குறுகிய காலத்தில் தீர்க்கப்பட்டதை எண்ணிப் பெருமிதமடைந்த நிலையில் பாலமோட்டை, பனிச்சங்குளத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் புவனேஸ்வரி அவர்கள் இம்மருத்துவர்களின் சேவை பற்றி இவ்வாறு கூறினார்.
நாங்கள் இப்பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து இப்போது மீளக் குடியமர்ந்து வருகின்றோம். ஆனால் எமது பகுதிக்கு இதுவரை போக்குவரத்து வசதிகளோ, மருத்துவ வசதிகளோ, ஏனையவசதிகளையோ செய்து தர எவரும் முன்வரவில்லை. நாங்கள் மிகநீண்ட தூரம் பயணம் செய்தபின்பே மருத்துவமனைகளுக்குச் செல்லக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் மிக அவசரமான ஆபத்தான வேளைகளில் மருத்துவமனைக்குச் செல்கின்ற நோயாளிகள் செல்லும் வழியிலேயே இறந்து போகின்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. வவுனியா அல்லது மல்லாவி வைத்தியசாலைகளுக்குச் சென்றாலும் மருந்து பெற முடியாத நிலைகளும் ஏற்படுவதுண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த மருத்துவப்பிரிவினர் இப்பகுதிக்கு வந்து எமது மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்து வருவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்தோடு ஒவ்வொரு வீடுகளுக்கும் மருத்துவ போராளிகள் வந்து எமது நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கின்றார்கள். அத்தோடு நாம் மிக நீண்ட தூரம் சென்றாலும் செய்யமுடியாத சத்திரசிகிச்சைகளைக் கூட இங்கு இலகுவாக செய் துள்ளோம் எனவே தொடர்ந்தும் எமது பகுதிகளுக்கு இவ்வாறான சேவையைச் செய்ய வேண்டுமென அவர்களை நான் கேட்டுக்கொள்ளதோடு இவர்களின் இந்த சேவைக்கு நன்றி யையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
எனவே லெப்.கேணல் கௌசல்யன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்டு வரும் இம் மருத்துவப்பணியானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ரீதியில் பெரும் பயனாற்றி வருகின்றதென்பது மட்டுமன்றி இதன் பணி மூலம் எதிர்காலத்தில் தமிழீழ மக்களின் மருத்துவக்குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
நன்றி:- ஈழநாதம்.
Labels: ஈழ அரசியல், பகிர்தல், மக்கள் எழுச்சி, மக்கள் துயரம், வன்னி
Subscribe to Posts [Atom]