Wednesday, April 05, 2006

தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை.

தமிழக மீனவர்கள் சிங்களக்கடற்படையால் கொல்லப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்பில் தொடங்கிய சர்ச்சையில் சில பதிவுகள் வந்துவிட்டன. ரோசா, வந்தியத்தேவன் ஆகியோர் இதுபற்றி எழுதியுள்ளதுடன் காரசாரமாகச் சண்டையும் நடக்கிறது. இதுதொடர்பில் என் சிறுபதிவு இது.

இப்பதிவு ஒருபோதும் சிங்களக் கடற்படையின் தமிழக மீனவர் மீதான தாக்குதலை நியாயப்படுத்தப் போவதில்லை. முக்கியமாக, கொல்லப்படுபவர்களோ கைதுசெய்யப்படுபவர்களோ கூலிக்கு மாரடிக்கும் ஏழைகள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவ்விசயத்தில் என்தரப்பு அனுதாபம் அவர்களுக்குண்டு.

இந்தச் சிக்கலை அவர்களின் அரசியல்வாதிகளோ மக்களோ தீர்க்க வேண்டும். இதுமட்டில் அம்மக்களின் தலைவர்கள் எனச் சொல்லப்படுபவர்களின் போக்கு வருத்தமளிக்கக்கூடியது. ஒதே உதாரணம். இவ்வளவு ஆண்டுகாலம் எத்தனையோ மீனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இரண்டொரு வருடங்களுக்கு முன் இலங்கை வந்த இந்தியக் கடற்படைத் தளபதியொருவர் (சரியாக யாரென்று மறந்துவிட்டது.) கொழும்பில் வைத்து ஒரு செவ்வி கொடுத்துவிட்டுத் திரும்பினார். அதில், "தமிழக மீனவர்களைத் தாக்குவது சிங்களக் கடற்படையன்று, மாறாக புலிகள்தான் அவர்களைத் தாக்குகின்றனர்" என்று திருவாய் மலர்ந்து விட்டுத் திரும்பினார். நானறிய வை.கோ. மட்டும்தான் இதையெதிர்த்து ஒரு அறிக்கை விட்டாரென்று நினைக்கிறேன். (பலருக்கு அப்படியொன்று நடந்தது தெரியுமா? என்னால் அதற்குரிய சுட்டிகளைத் தேட முடியாது. இது நான் தாயகத்தில் நிற்கும்போது நடந்தது.) இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக மீனவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை.

தமிழக மீனவர்களைக் கொல்வதுதான் சிங்களக் கடற்படையின் முதன்மை நோக்கமென்று சொல்வதை (என் தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில்) என்னால் ஒப்பவே முடியாது. அது வேறுபல அரசியல்களைக் கொண்டுள்ளது. (ஆனால் இருதரப்பு மீனவர்களுமே சிங்களக்கடற்படையால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை. போதை மருந்துக் கடத்தலுட்பட பலவிசயங்கள் இவற்றின் பின்னணியிலுள்ளன. அரச இயந்திரத்தின் மறைமுக - நேரடிச் சம்பந்தம் இவற்றிலுண்டு)

இன்றும்கூட மன்னார்க்கடலிலிருந்து வெறும் ஒருமைல் வரைக்கும் வந்து மீன்பிடிக்கும் தமிழகப்படகுகளை எதுவும் செய்யாமலே வேடிக்கை பார்க்கச் சிங்களக்கடற்படையால் முடிகிறது. வந்தியத்தேவன் சொல்லும் Trawlers படகுகள் வந்து வளத்தைக் கொள்ளையடிப்பதுடன் மீனவர்களின் வலைகளை அறுத்துச் செல்வதையும்கூட பல சந்தர்ப்பங்களில் வேடிக்கை பார்த்தே வந்திருக்கிறது. அதையெதிர்த்து உண்ணாவிரதம் அது இது என்று பலகூத்தாடினால் அடுத்தமுறை சிலரைக் கைது செய்வார்கள்.

என் அவதானத்தின்படி இந்திய மீனர்வர்கள் சுட்டுக்கொல்லப்படுவது இலங்கைக் கரையோரத்திலன்று. மாறாக கச்சதீவை அண்டியோ எல்லைக்கோட்டை அண்டியோதான். மன்னார்க்கரை வரை வந்து ஆறுதலாக மீன்பிடித்துச் செல்கிறார்கள்.

சிலதடவைகள் கரையோர மீனர்வகளால் மட்டுமே சிலபடகுகளும் பல மீனவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை அடுத்தநாளே புலிகள் விடுவித்த சம்பவங்களுமுண்டு.

உண்மையில் Trawlers இல் வருபவர்கள் அதன் முதலாளிகள் கிடையாது. அவர்கள் கூலிக்கு வரும் தொழிலாளர்களே. தாங்கள் விரும்பவில்லையென்றாலும் கட்டாயம் மன்னார்க்கடலுக்குச் செல்லும்படி தம் முதலாளிகள் வற்புறுத்துவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள் (பிபிசி செவ்வியிலுட்பட)

இருதரப்பு மீனவர்களுக்குமிடையில் இரண்டொரு சந்திப்புக்கள்கூட நடந்துள்ளன. எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மன்னாரில் வைத்து "இனிமேல் உங்கள் பகுதிக்கு வரமாட்டோம்" என்று உறுதியளித்துவிட்டு நாடு திரும்பியதும், "அப்படியேதும் நாங்கள் வாக்குறுதி தரவில்லை, அவர்களின் கரைக்குப்போய்த்தான் மீன் பிடிக்க வேண்டியிருக்கிறது" என்று சொன்னார் பேச்சுக்கு வந்த பொறுப்பானவர். இது மிகுந்த சினத்தை மன்னார்க்கரை மீனவர்களிடம் ஏற்படுத்தியது. அதைவிட "இனிமேல் Trawlers பயன்படுத்த மாட்டோமெ"ன்று சொல்லிவிட்டுச் சென்றபின்னும் பலமுறை மன்னார் மீனவரின் வலைகள் அப்படகுகளால் அறுக்கப்பட்டுள்ளன. இதுபற்றிக் கேட்டால், "நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டாமென்று சொல்லியிருக்கிறோம், ஆனால் சிலர் அதை நடைமுறைப்படுத்துகிறார்களில்லை" என்று அந்தப் பொறுப்பானவர் பதிலளிக்கிறார்(பி.பி.சி செவ்வி).

இன்றும்கூட ஈழத்துத் தமிழ்மீனவனுக்கு ஆழ்கடல் சென்று மீன்பிடிக்க நிறையத் தடைகளுண்டு. நேரக்கட்டுப்பாடுகளுண்டு. குறிப்பிட்ட மணித்தியாலங்கள் கொடுத்து அதற்குள் கரையேறி விடவேண்டுமென்ற கட்டுப்பாடு இன்னும் பல இடங்களில் இருக்கிறது. இந்நிலையில் கரையோர வளத்தையே பெருமளவு நம்பியிருக்கும் மீனர்வர்களின் வளங்கள் வேறாட்களால் எடுத்துச்செல்லப்படுவதையோ, தமது மீன்பிடி உபகரணங்கள் அவர்களாற் சேதமாக்கப்படுவதையோ பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

இன்றும் அப்படி வந்துபோகும்போது, "சிங்களவன் என்ன புடுங்கிறான்?" என்றுதான் மீனவர்களால் கேட்கப்படுகிறது. இதை ஈழத்துக்கரையோர மீனவனின் நிலையிலிருந்து பார்த்தால் ஓரளவு புரிபடக்கூடும்.

"தங்கள் கடலில் மீன்வளமில்லை, மன்னாரில்தான் அது கிடைக்கிறது" என்று சொல்வது சரியா என்று தெரியவில்லை. (இதை நான் சொல்லவில்லை. தமிழக மீனவர்களே ஊடகங்களிலும் பிபிசி உட்பட பன்னாட்டுச் செய்திச் சேவைகளிலும் சொல்லியுள்ளார்கள்.) அப்படித்தான் இருந்தாலும் மன்னாரில்தான் மீன்பிடிப்போம் என்று அடம்பிடிப்பதும் ஏற்புடையதன்று.

இதற்கெல்லாம் உடனடியா ஏதாவது தீர்வு கிடைக்குமென்று நான் நம்பவில்லை. என்ன தீர்வு என்றும் புரியவில்லை. தனியே இரு மீனவச் சமூகங்களும் மட்டும் பேசியும் எந்தத் தீர்வும் நடைமுறைக்கு வராது (ஏற்கனவே ஏற்பட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதுடன் மேலும் மேலும் விரிசல் வந்துகொண்டேயிருக்கிறது) அரசும் இதுவிசயத்தில் ஆக்கபூர்வமான முடிபுகள் எடுக்கப்போவதில்லை. இரு அரசுகளுமே தங்கள் தங்கள் சுயநலத்துக்காக இருதரப்பு மீனவர்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன.
************************
கச்சைதீவுக்கண்மையில் அல்லது எல்லைக்கோட்டுக்கண்மையில் (குறிப்பாக சிறுபடகுகளில் வரும்) வைத்துத் தாக்கப்படும் மீனர்வர்கள் விசயத்தில் "அவர்கள் எல்லை தெரியாமல் வந்தார்கள்" என்று சொல்லலாம். ஆனால் Trawlers படகில் வருபவர்கள் விசயத்தில், அதுவும் மன்னார்க்கரையிலிருந்து ஒருமைல் வரை (இன்னும் நெருங்கினால் Trawlers தரைதட்டுமென்ற அளவுக்கு) வருபவர்கள் விசயத்தில் அப்படிச் சொல்ல முடியாது. (வேண்டுமானால் அம்மீனவர்களுக்கு எல்லைக்கோடு பற்றிய அறிவில்லையென்று மறவன்புலவு சச்சிசாதனந்தன் சொல்வதை ஏற்கலாம். எல்லாக்கடலும் அனுமதிக்கப்பட்டதென்ற புரிதல்தான் அவர்களுக்கிருக்க வேண்டும்.)
************************
மீனவப்பிரச்சினையுடன் சம்பந்தமற்றது.

இந்தியக் கடற்கரையிலிருந்து 470 கடல்மைல் தொலைவில் - பன்னாட்டுக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலைத் தடுக்கவோ, கைது செய்யவோ, விசாரிக்கவோ, கட்டாயப்படுத்தி ஆயுதமுனையில் தம் நாட்டுக்கு அழைத்துச் செல்லவோ இந்தியக்கடற்படைக்கிருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துவதற்கப்பால், அப்படித் "துடியாட்டமாயுள்ள இந்தியக் கடற்படை, இருபதாண்டுகளாக தமது குடிமக்கள் கடலில் வைத்துக் கொல்லப்படும் விசயத்தில் -பலநேரங்களில் தங்கள் கடலெல்லைக்குள் வைத்தே அன்னியப்படையால் கொல்லப்படும் விசயத்தில் என்ன செய்கிறது?" என்று ரோசா கேட்ட நியாயமான ஒரு கேள்விக்கு ஒரு நியாயமான பதிலைச் சொல்லாது,


"ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும்,
தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள
வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது "

என்று சொல்லி தனது மனப்புழுக்கத்தைக் கொட்டப் பயன்படுத்திக்கொண்டார் வந்தியத் தேவன்.
இந்திய இராணுவப் பாசிசம் பற்றி (அதற்கெல்லாம் தனியொரு அவில்தாரின் அரிப்பு என்று தப்பிக்க முடிகிறது உங்களால்) இந்தியாவிலேயே உணர்ந்துகொள்ளுங்கள். சிக்கலென்னவென்றால் புலிகளும் கட்டளையிடும் தலைமைப்பீடம், அதன் தொடர்ச்சியான நிர்வாகக் கட்டமைப்புக்கொண்ட ஒரு நிறுவனம் என்பதை மறந்துவிட்டாரோ என்னவோ?


கட்டளைக்கு அடிபணிந்து, நிறுவனரீதியாக- உத்தரவு பெற்று எதைச்செய்தாலும் அது பாசிசமன்று. எல்லாம் ஜனநாயகமே.(ஈழத்தில் நடந்த கொலைகள், பாலியல் வன்புணர்ச்சி, சித்திரவதைகள், கட்டாயப்படுத்தி ஆட்சேர்த்துத் துப்பாக்கிமுனையில் சமர்க்களமனுப்பிக் கொன்றது.....எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்)

Labels: , ,


Comments:
நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கூட 150 வரையான இந்திய இழுவைப் படகுகள் மன்னார்க் கடலில் வந்து மீனவர்களின் வலைகள் சிலவற்றை அறுத்துச் சென்றுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 
எழுதிக்கொள்வது: karthikramas

வன்னியன், பதிவுக்கு நன்றி. நேரமிருக்கும்போது விரிவாக எழுதுகிறேன்.

12.52 5.4.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]