Monday, November 23, 2009

புலிகள் இயக்கத்தின் குழப்பநிலையும் உண்மை நிலைவரமும்

தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது.

இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தைத் தப்பிப் பிழைக்க விடுவதில்லையென்று கங்கணம் கட்டிக்கொண்டு பல சக்திகள் விடாது முயற்சிப்பதை அறிய முடிகிறது. இயக்கம் சந்தித்துக் கொண்டிருக்கும் தொடர் சவால்களில் மிகப் பிந்தியதும் மிகவும் பாரதூரமான விளைவுகளைத் தரக்கூடியதுமான சிக்கல்தான் களத்திலிருந்து தளபதி ராம், நகுலன் போன்றோர் வெளியிடுவதாக வந்து கொண்டிருக்கும் அறிக்கைகள்.

இப்போது ராம், நகுலன் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் அல்லது அவர்கள் வெளியிடச் சொன்னதாகச் சொல்லப்பட்டு வரும் அறிக்கைகளும், அவர்கள் தனிப்பட்டவர்களோடு செய்து கொள்ளும் உரையாடல்களும் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கைக் கொண்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. சிலநாட்களின் முன்னர் குறிப்பிட்ட தளபதிகளும் பொறுப்பாளர்களும் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, தடுப்பு முகாமிலிருந்தவாறே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே ஓர் அறிக்கை மறுபுறத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

இறுதியாக தளபதி ராமினால் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் பொறுப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் சாடி எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி, சொத்துக்கள் என்பன பேசப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்தின் வீழ்ச்சிக்கு இவர்களே காரணமெனவும், தற்போது தாயகத்திலுள்ள போராளிகள் தொடர்பாகவோ, கைது செய்யப்பட்டுள்ள போராளிகள் தொடர்பாகவோ, முகாம்களிலிலுள்ள மக்கள் தொடர்பாகவோ அக்கறையற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுக்களில் சில தமிழ்மக்களிடமும் உள்ள அபிப்பிராயங்களே. இதனால் மிக இலகுவாக இவை தமிழ்மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் செயற்குழுவுக்கும் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையைக் குறைக்க வழிசெய்யும் நிலையிலுள்ளன. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகக்கவனமாக அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஒருவகையில் இந்த அடியை வாங்க புலிகள் தகுதியானவர்களே. மறுபுறத்தில் அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தளதிகளான இராம், நகுலன் உட்பட்டோர் இராணுவத்தினரின் பிடியில் சிக்கியமை ஏற்கனவே தெரிந்திருந்தும் அதை மக்களிடம் மறைத்து இவ்வளவு நாளும் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். தளபதி ராம் அனுப்பிய அவரின் தனிப்பட்ட அறிக்கையைக் கூட செயற்குழுவின் சார்பில் பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். தளபதி ராமோடு தொலைத் தொடர்பு வழியான தொடர்பினைக் கொண்டிருந்தார்கள்.

தமது பிடியிலிருந்த ராமையும் நகுலனையும் இன்னும் சில முக்கிய பொறுப்பாளர்களையும் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத் தரப்பு எஞ்சிய புலிகள் அமைப்பின் செயற்குழுவோடும் செயற்பாட்டாளர்களோடும் விளையாடிக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் (கே.பி யின் கைதுக்குப் பின்னர்) இவைகள் தெரிந்தும்கூட தமக்கு எதுவும் தெரியாதது போல புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். இயக்கத்தின் சொத்துக்கள், நிதி வழங்கல் வழிமுறைகள், செயற்பாட்டாளர்கள் பற்றி சாடைமாடையாகக் கதைபிடுங்க அவர்களும், அத்தருணங்களில் இலாவகமாகத் தப்பி இவர்களுமென இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இவ்வளவு காலம் நீண்டிருந்ததே ஆச்சரியம்தான்.

இப்போது மாவீரர் நாளையொட்டி இந்தக் கண்ணாமுச்சி விளையாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் தமிழ்மக்களுக்கான புலிகளின் மாவீரர்நாள் செய்தி ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்துவதாகவே அமைகிறது. அவ்வறிக்கையில் சொல்லப்படும் விடயங்களில் தமது நோக்கத்தைத் திணிக்க முயன்று தோற்றுப் போன நிலையில் சிறிலங்கா அரசதரப்பு தனது தனித்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. அதன்படி மாவீரர் நாளுக்கான உரை வழமைபோல் இடம்பெறும் என்ற அறிவிப்பு தளபதி ராமின் பெயரால் நேரடியாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்குழுவால் விடுக்கப்படாத நிலையில் சில ஊடகங்கள் எச்சரிக்கையடைந்து கொண்டன. சில ஊடகங்கள் மட்டும் அதை வெளியிட்டு, பின்னர் புலிகள் வேண்டுகோளுக்கிணங்க அவ்வறிக்கையை நிறுத்திக் கொண்டன.

இனிமேலும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடர முடியாத நிலையில்தான் புலிகள் இயக்கம் உண்மையை ஊடகங்களுக்குத் தெரிவித்தது. அதை சில ஊடகங்கள் பொதுமக்களின் பார்வைக்கும் வெளியிட்டன. அதைத் தொடர்ந்து எதிர்பார்த்ததைப் போல் மறுதரப்பிலிருந்து உணர்ச்சிமயமான அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதை உணர்ந்துகொள்ள முடிகிறது. முதலில் இராணுவ, புவியியல் நிலைமைகளைக் கொண்டு சிலவற்றை ஊகிக்க முற்படுவோம்.

மே மாதம் 18 ஆம் நாளோடு வன்னி முழுவதும் சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து சேர்ந்தது. அதற்கு முன்பே தளபதி ராம், நகுலன் ஆகியோரோடு சில நூறு போராளிகள் அம்பாறையை மையமாக வைத்துச் செயற்பட்டு வந்தார்கள். அம்பாறையில் இருந்த புலிகளின் இராணுவக் கட்டமைப்பைச் சிதைக்க சிறிலங்கா அரசபடை தன்னாலான முயற்சிகளை எடுத்தது. கஞ்சிக் குடிச்சாறு வனப்பகுதியில் பாரிய தேடுதல் வேட்டைகளை நடத்தியதும், அங்கே பல சண்டைகள் நடந்ததும் நாமறிந்ததே.

இந்நிலையில் வன்னிப்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த பின்னர் மிகப்பெரிய ஆளணிவளத்தோடிருந்த சிறிலங்கா இராணுவம் தனது அடுத்த நடவடிக்கையாக கிழக்கின் காடுகளில் இருக்கும் தளபதிகளையும் போராளிகளையும்தான் வேட்டையாடியிருக்கும். வன்னியில் உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்தபோதே தனக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஆளணி வளத்தோடு அம்பாறைக் காடுகளில் தேடுதல் வேட்டையிலீடுபட்ட அரசபடை, பின்னர் அப்படியெதுவும் செய்யாது பேசாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. வன்னியின் அழிவுக்குப்பின்னர் அம்பாறைக் காடுகளில் சண்டைகள் நடந்ததாக இருதரப்பிலிருந்தும் தகவல்களில்லை. சுமார் ஆறுமாதகாலமாக தளபதி ராமையும் ஏனையவர்களையும் செயற்பட விட்டுக்கொண்டு அரசபடை பேசாமலிருந்தது என்பது நம்புவதற்குக் கடினமே.

இதே காரணத்தை வன்னியிலும் பொருத்திப் பார்த்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடியும். வன்னிக் களத்திலே தலைவரோ முக்கிய தளபதி யாரேனுமோ இறக்காமல் தப்பியிருக்கும் பட்சத்தில், அவர்கள் எங்கோ காடுகளுள்தான் மறைந்திருக்கிறார்கள் என்ற சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் சிறிலங்கா அரசபடை இவ்வளவு காலமும் பேசாமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தளபதிகளல்லாதவர்களைக் கொண்ட மிகச் சிறு அணிகள் சிலவேளை தப்பிப் பிழைத்திருக்க வாய்ப்புண்டேயன்றி வேறு சாத்தியங்களில்லை. இந்திய இராணுவக் காலப்பகுதியை உதாரணப்படுத்தும் காலம் இதுவன்று. சிறிலங்கா அரசபடையினரின் ஆட்பலம், நவீன வசதிகளைக் கொண்ட நுட்பப் பலம் என்பன இன்றைய நிலையில் மிகமிக உயர்ந்த நிலையிலேயே உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மேற்படிச் சந்தேகம் இப்போதன்று, முன்பே விடயம் தெரிந்தவர்களால் கதைக்கப்பட்டதுதான். காடுகளில் சண்டை நடப்பதாகத் தன்னும் செய்திகளைக் கசிய விடுவதன் மூலம் தமது சூழ்ச்சிக்கான நம்பகத்தன்மையைப் பேண அரசு முயற்சிக்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை எங்கள் மேல்!

சரி, இனி தற்கால விடயத்துக்கு வருவோம்.
ராமின் பெயரால் வெளியிடப்பட்ட, வெளியிடப்படும் அறிக்கை பலரிடையே சலனத்தை எற்படுத்தியிருக்கிறதென்பது வெளிப்படை. முன்னாள் இயக்க உறுப்பினர்களாகவும் தற்போதைய செயற்பாட்டாளராகவுமுள்ளவர்கள் கூட இவ்வறிக்கையை நம்பத் தலைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனையே. பதிவர் சாத்திரியும் அவர்களுள் ஒருவர். அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள பலவற்றை நாமும் பேசுகிறோம்தான். அதற்காக தவறான இடத்திலிருந்து வருமோர் அறிக்கைக்கு நாம் ஆதரவு வழங்கி எதிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகாமலிருப்பது முக்கியமானது. அதுவும், இதற்கு முந்திய அறிக்கையில், மாவீரர் தினத்தில் கொள்கை விளக்க அறிக்கை வெளிவரும் என்றுகூடப் போடாமல், 'உரை' நிகழ்த்தப்படும் என்று எழுதப்பட்ட பின்னரும் அவ்வறிக்கையை நம்புவது ஏனோ தெரியவில்லை. தலைவரின் இடத்திலிருந்துகொண்டு உரை நிகழ்த்தக்கூடியவராகத் தன்னைக் கருதிக் கொள்பவரில்லை ராம் என்பது அவரையறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அப்படியொன்று வந்தால் மக்கள்தான் ஏற்றுக்கொள்வார்களா என்பது அடுத்த கேள்வி.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமாகவும், நேர்மையாகவும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் ஏற்பட்ட இந்த இராணுவ இழப்பென்பது திடீரென ஏற்பட்ட ஒன்றன்று. அதற்கான அத்திவாரம் முன்பே போடப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடும் திறமையோடு எதிரியால் நகர்த்தப்பட்ட காய்களும், அவற்றை முறியடிக்கத் தவறிய எமது தவறும் முக்கியமானவை. வன்னியின் வீழ்ச்சிக்கு முன்பே எமக்கான ஆப்பை இறுக்கிவிட்ட எதிரியின் நகர்வுகள், அதில் பகடைக்காயாக்கப்பட்ட எமது போராளிகள், பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய தகவல்களை இப்போதாவது வெளியிட வேண்டும். நேர்மையாகவும் தீவிரமாகவும் செயற்பட்டுக் கொண்டிருந்த தளபதி ராம் போன்றவர்கள் எவ்வாறு சூழ்ச்சியின் வலையில் சிக்கவைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்கள், ஏனையவர்கள் எப்படி பிடித்துக் கொடுக்கப்பட்டார்கள், முழுவிருப்போது எதிரியியோடு இணைந்து பணியாற்றிய துரோகிகள் யார் என்பவனவற்றையும் விரிவாகத் தெளிவுபடுத்த வேண்டிய நேரமிது. இனியும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு வேலைக்குதவாது.

எமது ஈழவிடுதலைப் போராட்டம் இனி எப்படிப் போகுமென்பது தெரியவில்லை. அதை ஒற்றைமாடாக இழுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் என்ன கதியாகுமென்று தெரியவில்லை. ஆனால் (குறைந்தபட்சம்) அவ்வியக்கத்துக்கு ஒரு பொறுப்புண்டு. நடந்ததைச் சொல்லுங்கள். புலனாய்வுப் பகுதியில் எதிரியை முறியடிப்பதில் தோற்றுவிட்டோம். அனால் என்ன நடந்ததென்பதையாவது மறைக்காமல் சொல்வது இயக்கத்தின் கடமை.

உண்மையைச் சொல்வதால் மக்கள் எம்மைவிட்டுப் போய்விடுவார்களென்ற பயம் வெகுளித்தனமானது. 'பொய்யைச் சொல்லுங்கள், கூட வருகிறோம்; உண்மையைச் சொன்னால் ஓடிப்போகிறோம்' என்று சொல்லும் மக்களை இழுத்துக் கொண்டு எங்கே போவது?

எமது இயக்கத்தின் மீதான எதிரியின் சூழ்ச்சித் திட்டங்களும், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமும், அதற்குப் பயன்படுத்தப்பட்டவர்கள், பலிக்கடா ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களுமடங்கிய விரிந்த அறிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து எதிர்பார்க்கிறோம்.

Labels: , , ,


Sunday, August 09, 2009

பத்மநாதன் கைதுக்கு யார் காரணம்?

கடந்த 05-08-2009 அன்று கே.பி எனப்படும் செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டுக் கொழும்பு கொண்டு செல்லப்பட்டார்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் மற்றுமொரு பெரும் பின்னடைவு இது.

நீண்டகாலம் ஆயுதவழியில் ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை கடந்த மேமாதம் அழிக்கப்பட்டதோடு அவ்வியக்கம் தளத்தில் செயலிழந்தது. ஆயுதங்களை மெளனிக்கிறோம் என்ற அறிவிப்போடு அவ்வியக்கம் தமது ஆயுதவழிப் போராட்டத்தைக் கைவிட்டது.

இந்நிலையில் கே.பியைத் தலைமைச் செயலராகக் கொண்டு வன்முறையற்ற வழியில் தொடர்ந்தும் செயற்படும் நிலைப்பாட்டை புலிகள் அமைப்பு எடுத்தது. இது புலத்திற் செயற்பட்டுக் கொண்டிருந்த புலிகள் அமைப்பினராலும், தொடர்ந்தும் களத்திலிருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினராலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். தொடக்கத்தில் மிகச்சிலரால் சலசலப்புக்கள் ஏற்படுத்தப்பட்டபோதும்கூட அவை சரிப்படுத்தப்பட்டு அவ்வியக்கம் ஒன்றுபட்டுச் செயற்படத் தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. அவ்வியக்கத்துக்கு மட்டுமன்றி, அவ்வியக்கத்தைச் சார்ந்த தமிழ்மக்களும் பேரதிர்ச்சியே.

இந்த நிலைமைக்கு யார் காரணம்?

கே.பியின் அதிகரித்த நகர்வுகள், பகிரங்கமான நடமாட்டங்கள், நேர்காணல்கள், ஏராளமான சந்திப்புக்கள் என்பவை அவருக்கு ஆபத்தானவையாக அமைந்தன. ஆனால் அவர் அப்படிச் செயற்பட வேண்டி வந்ததற்கான காரணகர்த்தாக்கள் வேறுயாருமல்ல, நாம்தாம்.

கே.பி மீதான அவதூறுகள், வசைபாடல்கள், கயமைத்தனமான விமர்சனங்களை நோக்கினால் அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய காரணிகளை அறியலாம்.
'நிழல் மனிதர்', 'அனாமதேயப் பேர்வழி' போன்ற சொற்களால் அவர் குறிப்பிடப்பட்டார். அவரது மறைப்புத்தன்மையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவரது தலைமையை எதிர்க்கச் சிலர் கிளம்பினர். அது படிப்படியாகக் குறைந்தபோதும் இன்றுவரை அந்த விமர்சனம் அவர்மீது வைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாத இவரா எமக்குத் தலைமை என ஒரு கூட்டம் கிளம்பியது. இதைவிட, மக்களோடு தொடர்பிலில்லாத மர்ம மனிதர் அவர், எப்படி இவரால் ஒழுங்காகக் செயற்பட முடியுமென்ற விமர்சனம் வைக்கப்பட்டது. கே.பிக்கான ஒத்துழைப்பு சரியாக வழங்கப்படவில்லை. வீம்புக்காக அவரை எதிர்த்து நின்ற கூட்டம் தொடர்ச்சியான அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.

இவ்வளவும் புலிகள் இயக்க உறுப்பினர்களால் செய்யப்பட்டவையல்ல. (ஆம், புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் உறுப்பினர் சிலர் முரண்பட்டது உண்மையே! அவர்களின் எதிர்ப்பில் சில நியாயமான சந்தேகங்கள் இருந்தன. அதைவிட அவர்களுக்கு அந்த அருகதை இருந்தது. இறுதியில் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து செயற்பட முன்வந்தார்கள்.) புலிகள் அமைப்பின் உறுப்பினரல்லாத, ஆனால் தாம்தான் இயக்கம் என்ற மாயையை ஏற்படுத்தி வைத்திருந்த நபர்கள்தாம் இதில் முக்கியமானவர்கள்.
அவர்கள் "பலர்" வியாபாரிகளாயிருந்தார்கள், ஊடகவியலாளராய் இருந்தார்கள், இராணுவ /அரசியல் ஆய்வு என்ற பேரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பவர்களாய் இருந்தார்கள், இயக்கம் தனது செயற்பாட்டு வசதிக்காக ஏற்படுத்திய மக்கள் அமைப்புக்களில் அங்கத்தவராய் அல்லது பொறுப்பாளராய் இருந்தார்கள், யுத்தநிறுத்த காலப்பகுதியில் வன்னிக்குப் போய் நாலு புகைப்படம் பிடித்துக் கொண்டு வந்தவர்களாய் இருந்தார்கள், பொறுப்புக்காகவும் நாலுபேரை மேய்க்கும் மனமகிழ்ச்சிக்காகவும் ஈழப்போராட்டத்தின் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்களாய் இருந்தார்கள்.
இவர்கள் தமக்குத் தெரிந்த நாலுபேரையும், பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் வைத்தே இயக்கத்தை அறிந்திருந்தார்கள். கே.பி ஏதோ இவ்வளவுநாளும் ரொட்டிக்கடை நடத்திக் கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரெனத் தலைமைக்கு வந்ததாக நினைத்துக் கொண்டிருந்தார்கள், அப்படியே மற்றவர்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

வேறு "சிலர்" உண்மையில் அனைத்தையும் தெரிந்திருந்தாலும் அயோக்கியத்தனமான காரணங்களால் கே.பியின் வழிநடத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; குழப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நபர்களின் திருகுதாளங்களால் மக்கள் குழப்பமடைந்தார்கள். கே.பிக்குக் கிடைக்க வேண்டிய ஒத்துழைப்பு சரியான முறையில் கிடைக்கவில்லை. இவற்றை எதிர்கொள்ள அவர் தனது கூண்டுக்குள்ளிருந்து வெளிவர வேண்டியிருந்தது. மர்ம மனிதர், நிழல் மனிதர், அனாமதேயப் பேர்வழி போன்ற வசைகளை எதிர்கொள்ள அவர் ஓரளவு வெளிப்படையாகச் செயற்பட வேண்டியிருந்தது; ஊடகங்களோடு உரையாட வேண்டியிருந்தது; பலரோடு நேரடிச் சந்திப்புக்களைச் செய்ய வேண்டியிருந்தது. குழப்ப நிலையிலிருந்த பல செயற்பாட்டாளரை நேரடியாகச் சந்தித்துக் கதைத்ததன் மூலமே அவர் பல சிக்கல்களைத் தீர்த்து முன்னேறினார். செயற்பாட்டு மந்தநிலையைக் களைய தானே நேர்நின்று செயற்பட வேண்டுமெனத் தீர்மானித்தார்.

தான் யாரென்பதையும் தானொரு முக்கியமானவர் என்பதையும் தானே சொல்ல வேண்டிய அவலநிலைக்கு அவர் ஆளாக்கப்பட்டார். மிகச்சிலரைத் தவிர எல்லோராலும் இது வோறோர் ஆள் என்று இதுவரை காலமும் இனங்கண்டுகொண்டிருந்த புகைப்படங்களில் நிற்பது தானேதான் என்ற உண்மையை அவரே புகைப்படங்களை வெளியிட்டுச் சொல்ல வேண்டி வந்தது. (காட்டுக்குள் பாலா அண்ணை, சங்கர் அண்ணை, தலைவரோடு நிற்பது மு.வே.யோ வாஞ்சிநாதன் என்பதாகவே- கே.பியையும் வாஞ்சிநாதனையும் தெரிந்தவர்களைத் தவிர்த்து- பெரும்பாலானவர்களால் இதுவரை காலமும் நினைக்கப்பட்டு வந்தது.)

இவ்வாறான செயற்பாடுகள் தனது பாதுகாப்புக்குப் பாதகமென்பதை அவர் நன்கு அறிந்தேயிருந்தார். ஆயினும் அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. அவரது பாதுகாப்புக் குறித்து எச்சரித்தவர்களிடம், தான் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதை விசனத்தோடு குறிப்பிட்டுத்தான் அவர் தொடர்ந்தும் செயற்பட்டார். தனது இயலாத உடல்நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் அவர் உழைத்தார். இறுதியில் அவரும் மற்றவர்களும் பயந்தது போலவே மாட்டுப்பட்டுப் போனார்.

அவரை இந்நிலைக்குக் கொண்டுவந்தவர்களில் எத்தனை பேருக்கு இந்த உண்மை சுடுமென்று தெரியவில்லை. பலருக்கு இதுவொரு விடயமேயன்று. மூன்றாந்தரப்பாக நின்று 'அப்பிடியாம், இப்பிடியாம்' என்று விண்ணாணம் பேசிக்கொண்டு அடுத்த 'மேய்ப்பு'க்குக் கிளம்பிவிடுவார்கள்.

வழிநடத்துபவருக்கான ஆபத்தையும் அவரின் மறைப்புத்தன்மைக்கான தேவையையும் நன்கு அறிந்திருந்தும்கூட அதைக்கொண்டே அவரைச் சீண்டி மாட்டுப்பட வைத்தவர்கள் கொஞ்சநேரம் கண்களை மூடி யோசிப்பார்களாக.


===============
*இக்கட்டுரையில் கே.பி என்ற பெயர் மூலமே திரு. பத்மநாதன் குறிப்பிடப்படுவது தற்செயலானதன்று. அப்பெயருக்கான வலு உறைக்க வேண்டும். ஈழப்போராட்டத்தில் இராணுவ வெற்றிகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அழப்பரியது. அப்பங்களிப்புக்கள் யாவும் கே.பி என்ற பெயரூடாகவே சாத்தியமாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனால் இன்று அதே புலத்தில்தான் கே.பி பந்தாடப்பட்டார்.

Labels: , , , , ,


Wednesday, February 21, 2007

புலியாக நினைத்த நரியும் தமிழ்தெரியாத உணர்வுகளும்

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது எண்டு பதிவு வந்திருக்கு.
நரி, நரியாகவே இருந்துவிடுவது நல்லதுதான்.
நரி புலிவேஷம் போடுறது உண்மையான புலிகளுக்கு ஆபத்து.

வன்னியனுக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாதா எண்ட சொறிக்கேள்வி வேறு கேட்டிருக்கிறார்.
யாருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியாது?
"உணர்வுகள், தான் கேள்விப்பட்டவற்றைத் திரும்பத் திரும்ப உண்மைபோலச் சொல்கிறார்" என்றுதான் முன்னர் இட்ட பதிவில் எழுதியிருந்தேன். அதைக்கூட விளங்கிக்கொள்ள முடியவில்லை.இவருக்கு இவைபற்றி நேரில் ஏதும் தெரியாதென்பது நான் ஏற்கனவே விளங்கிக்கொண்ட விடயம்.
பெயரிலி தன் பின்னூட்டத்தில் என்ன எழுதினார் என்பதையே விளங்க முடியாமல், பதிவுபோட்டவர் என்னைப்பார்த்துக் கேட்கிறார் இக்கேள்வி.

முதலில் அவரின் பொய்களை மறுத்து எழுதிய கருத்துக்களுக்கு எந்தப்பதிலுமே அவரால் வைக்கப்படவில்லை. வைக்கவும் முடியாது. போகிற போக்கில் பிரபாகரன் அப்படி, புலிகள் இப்படி என்று பொய் சொல்லிவிட்டுப் போவதைத்தவிர அவரால் எதையும் எதிர்கொள்ள முடியாது. தான் சொன்ன தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இல்லை.
பிரபாகரன் வீட்டு நாய்க்கு இவரைப்பற்றித் தெரியும் என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
அல்லது அந்த நாய்கூட தன் எதிராளிகளின் கூற்றை நம்பாது என்பதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்?
(மேற்குறிப்பிட்ட இருகேள்விகளையும் சேர்த்து வாசிக்கவும். பிறகு வன்னியனுக்குத் தமிழ்தெரியாது எண்டு இன்னொருக்காச் சொல்லக்கூடாது.)
தான் சொல்வதெல்லாம் உண்மை என்பதையா?

புலிகள் இயக்கத்தில் மதங்கள் கையாளப்படும் விதம்பற்றி இவ்வளவு எழுதியபின்னும் அதைப்பற்றி ஒரு பேச்சில்லை, ஆனால் மதம் இன்னும் முக்கியமாகவே இருக்கிறது என்று திரும்பவும் சொல்லிவிட்டுப் போகிறார்.

தனக்குத்தானே பின்னூட்டமிடுவது யாரென்று இங்கு எல்லோருக்கும் தெரியும். அதைவிட்டுவிடுவோம்.
அவரைப்போல இல்லாமல் நாங்கள் எல்லாப் பின்னூட்டங்களையும் வெளிய விடுறம் எண்டதுதான் அவருக்குப் பிரச்சினைபோல.
பெயரிலியின் பெயரிணைப்பு எந்தவலைப்பதிவுக்கும் இட்டுச்செல்லவில்லையென்றால் அவர் போலி, ஆனால் ஆரூரானுக்கு ஆதரவாக கும்மாங்குத்து குத்துபவர்களும் அப்படியே இருந்தாற்கூட அவர்களைக்குறித்து எக்கருத்துமில்லை.

நான் அவரின் பதிவிலே ஒரு பின்னூட்டமி்ட்டது உண்மை. 'நான் உங்களுக்கு மறுப்புப்பதிவொன்று இட்டுள்ளேன்' என்ற விவரத்தை ஒரு பின்னூட்டமாக அங்கு இட்டேன். அதை வலைப்பதிவுலகில் ஒரு நடைமுறையும்கூட. ஆனால் இந்தப் பதிவருக்கு அது வேறுமாதிரித்தெரிகிறது.
தனது பதிவிலிருந்து என்பதிவுக்கு ஆட்களை வரவைக்கவே நான் அந்தப்பின்னூட்டத்தை இட்டேனாம். தான் அதை வெளியிட மாட்டாராம்.
இவரது கதைப்படியே இருந்தாலும்கூட, தனது பதிவுக்கு மறுப்புப்பதிவொன்று இடப்பட்டுள்ளதென்பதையே மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதென்று மறைக்க முற்படும் இந்த மனநோயாளியைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நான் பதிவுபோட்ட காரணமே அவர் தனக்குப் பாதகமாக வரும் பின்னூட்டங்களை வெளியிடுவதில்லை என்பதால்தான்.
கருத்துலக பாசிசத்தை நடத்திக்கொண்டு பெரிய கருத்துக்களம் நடத்துகிறாராம்.

இப்போது நிதர்சனத்தை புலியாதரவு என்றுவேறு அடுத்த கோமாளித்தனம் செய்ய முற்பட்டுள்ளார். நிதர்சனத்தை எதிர்ப்பவர்கள் புலியெதிர்ப்பாளர்கள் என்கிறார். நிதர்சன ஆதரவிலேயே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய மனநோய் பிடித்தவர் என்று. நிதர்சன ஆதரவுப்புத்தியோடே இயங்கும் இவரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்?
நிபந்தனையின்றி நிதர்சனத்தை எதிர்ப்பவர்களின் நானுமொருவன்.
எங்களை புலியெதிர்ப்பாளராக்கிவிட்டு இந்தக் கோமாளிதான் புலியாதரவாகிவிட்டார்.

தனது பழைய பதிவுகளை வாசித்தால் தன்னைப் புரிந்துகொள்ளலாம். ஆம் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பார்ப்பனீயத்தை காரசாரமாக எதிர்த்து எழுதிக்கொண்டிருதபோது எப்படி இடையில் தடம் மாறியது, பின் பார்ப்பனீயத்தை ஆதரிக்கவேண்டியதே ஈழத்தமிழர்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று எழுதுமளவுக்குப் போனது, இடையில் கிடைத்த இந்திய இந்துத்துவவாக்களின் ஏகோபித்த ஆதரவு, இன்று உணர்வுகள் என்ற வலைப்பதிவு இருக்கும் அரசியல் நிலை என்ன என்பவற்றைத் தெளிவாகவே பார்த்துக்கொண்டு வருகிறோம்.
ஆனால் ஆரூரான் மட்டும் பழையவற்றைத் தேட மாட்டாராம். வன்னியனைத் தேடுறதை விடுவம். பெயரிலி இவ்வளவு காலமும் என்ன எழுதினார், ஆறுமுகநாவலருக்காக அவர் இந்தியத் தனத்தோடு எவ்வளவு சண்டைபிடித்தார், ஈழத்தேசியத்தில் பெயரிலியின் நிலையென்ன என்பவற்றை அறியாமல் - அறிந்துகொள்ள விருப்பின்றி துரோகிப்பட்டம் கொடுக்கும்போது இந்த ஆராயும் தன்மை எங்குப்போனது? நிதர்சனப் புத்தியின் தொடர்ச்சிதானே?

முதலில் கருத்துச்சொன்னவர்களைக் குறிப்பிட்டு பதிவெழுதிறது நல்லது. அவரின்ர கடசிப்பதிவில சொல்லியிருக்கிறதுகள் ஏதோ பொத்தாம்பொதுவாச் சொல்லப்படுது. அதில சொல்லியிருக்கிற கருத்துக்கள் பல எனக்குரியதில்லை. ஆனா ஏதோ வன்னியனுக்குரிய மாதிரி எழுதப்பட்டிருக்கு. அவர் விமர்சிக்கிற கருத்துக்களை யார்யார் எழுதினார்கள் என்பதைத் தனித்தனியக் குறிப்பிட்டு விமர்சித்தால் நன்று. அதுவொரு ஒழுங்குமுறை.

பின்னூட்டங்களை மறுப்பது பதிவரின் உரிமையாம். அதை யாரும் கேள்விகேட்க முடியாதாம்.
ஐயா ராசா, அது உங்கள் உரிமைதான். நீங்கள் ஏதோ உங்கட வீட்டுப்பிரச்சினை பற்றிக் கதைச்சு நாங்கள் வந்து சும்மா உங்களோட தேவையில்லாமல் தனகிக்கொண்டிருக்கிறோம் எண்டோ நினைக்கிறியள்?
ஈழத்தவரின் அரசியல் பிரச்சினை இது. நீங்கள்மட்டும்தான் ஈழத்தவர் எண்டில்லை. நாங்களும்தான். நாங்கள் மட்டும்தான் எண்டில்லை. நீரும்தான்.
நீர் ஈழுத்தவர் சார்பா ஒரு கருத்துச் சொன்னால் - அதுவும் ஈழத்தவரின் கருத்து இதுதான் எண்டு நீர் அடிச்சுச் சொல்லேக்க அது மாற்றுக்கருத்து எங்களிட்ட இருக்கிறதால அதைச் சொல்லவேணும். அப்பிடியில்லாட்டி நீர் சொல்லிறதுதான் சரியெண்டு நிலைச்சிடும். அதைத்தான் நீரும் விரும்பிறீர்.
பின்னூட்டங்களை நிப்பாட்டிறதெண்டா முழுக்க நிப்பாட்ட வேணும். அதென்ன உமக்கு ஆதரவாயும் உமக்குப் பெரியளவில பாதகமாயில்லாதுகளாயும் பாத்து மட்டும் விடுறது?

முதல் பின்னூட்டத்தில போலி எண்டு விளிச்சதை விளக்கி அடுத்த பின்னூட்டம் போடக்கூட ஒருவனுக்கு அனுமதியில்லையெண்டால் பிறகென்ன மண்ணாங்கட்டிக்கு நீர் பதிவு நடத்திறீர்? நீர் ஒருத்தனைக் கண்டபடி திட்டலாம், ஆனா திட்டுவாங்கிறவன் தன்ர நியாயத்தைச் சொன்னால் அதை ஒளிச்சு வைச்சிடுறதோ? என்னப்பு நியாயம்?
இதுக்குள்ள பெரிசா விவாதம் நடத்த வந்திட்டார். அவருக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இன்னும் கொஞ்ச அனானிகள்.

தன்ர பின்னூட்டம் வெளிவராட்டி ஒருவன் நியாயம் கேட்கத்தான் செய்வான்.
தமிழ்மணத் திரட்டியில மட்டுறுத்தலைச் செய்யச்சொல்லி நிர்வாகம் அறிவித்தபோது, வலைப்பதிவு உரிமையாளர் தனக்குப்பிடிக்காத பின்னூட்டங்களை நிறுத்திவிடுவார் என்று சிலரால் சொல்லப்பட்டது. ஆனா நீர்தான் அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறீர்.
நல்லது தொடர்ந்து செய்யும்.

ஆனா உந்த புலியாதரவுப் பூச்சாண்டி காட்டி பேக்காட்டாதையும்.
அப்பிடியே வடிச்செடுத்த "யாழ்"த்தனத்தோட வந்திருக்கிறீர்.
(இதை யாழ்ப்பாணத்தனமென்றோ யாழ்.கொம் தனமென்றோ வசதிபோல் எடுக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐயா இன்னொரு கேள்வி.
கேள்வியில்லை சவால் எண்டே வைச்சுக்கொள்ளும்.
இஞ்ச வலைப்பதிவுலகில ஈழத்தமிழர்கள் பலர் வலைப்பதிவு வைச்சிருக்கினம்.
இதில எத்தினைபேர் உம்மோட முழுக்க ஒத்துப்போயினம் எண்டு ஒருக்கா யோசிச்சுப்பாரும்.
ரெண்டுபேரைத்தவிர மிச்ச ஆக்கள் ஏதோவொரு விதத்தில முரண்பட்டுத்தான் நிக்கினம்.
அந்த ரெண்டுபேர்கூட (வெற்றி, மயூரேசன்) "ஈழத்தில சாதிப்பிரச்சினை முடிஞ்சுபோச்சு" எண்டு வண்டில் விடுறதிலதான் உம்மோட துணைநிற்கினம். மற்றும்படி அவர்களுக்கும் உம்மோட கருத்துவேறுபாடு நடந்திருக்கு.

பிறகெப்படியப்பன் நீர் சொல்லிறதுதான் ஈழத்தமிழரின்ர குரல் எண்ட நினைப்போட தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறீர்?
நிறையப்பேர் ஆதரித்தால்தான் அது சரியான கருத்தென்று நான் சொல்லவரவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அரசியற்பார்வையில்லை, எனக்கு மட்டும்தான் உண்டு என்று மமதையோடிருப்பதும் மற்றவர்க்கான கருத்துரிமையை மறுக்கும் பாசிசப்போக்கும் ஆபத்தானவை என்பதைச் சுட்டவும் உங்களை ஒரு சுயவிமர்சனத்துக்கு யோசிக்க வைக்கவுமே இது.
___________________________________
பூராயத்தில் பொதுவாக இப்படியான தனிநபர் சிக்கல் தொடர்பாகப் பதிவிடுவதில்லை.
இரண்டு வருடகாலத்தில் கறுப்பிக்கென்று ஒருபதிவும் சிறிரங்கனுக்கென்று ஒருபதிவும் இட்டுள்ளேன். இப்போது இந்தத் தொல்லை.

Labels: ,


Tuesday, February 20, 2007

ஆட்டக்கடிச்சு மாட்டக் கடிச்சு பிரபாகரனையும்...

உணர்வுகள் என்ற பதிவாளர் போகிறபோக்கில் பொய்யொன்றைப் பரப்பிவருகிறார்.
அதன்மூலம் தான் நினைப்பதை, தனது வாதத்தை நிலைநிறுத்த கீழ்த்தரமான முறையில் முயல்கிறார்.

"பிரபாகரன் வற்றாப்பளையில் பொங்காமல் எந்தப் போருக்கும் செல்வதில்லை" என்ற வடிகட்டின பொய்யொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்கிறார்.
இப்போது மடுமாதாவும் சேர்ந்துவிட்டா.

இது முற்றிலும் கடைந்தெடுத்த பொய்யென்பதைச் சொல்லிக்கொள்ளவே இந்த அவசரப்பதிவு.
எந்தப் போருக்குப் போவதற்கும் எங்கும் பொங்கல் நடத்தப்பட்டதில்லை.
கோயிலில் மந்திரித்த நூல் கட்டுவதற்குக்கூட சிலதுறைகளையும் சில செயற்றிட்டங்களிலுமுள்ள போராளிகளைத் தவிர்த்து யாருக்கும் அனுமதியில்லை.


நேர்த்திக்கடன் என்றபேரில் காவடிகூட எடுக்க முடியாது. அதற்கு முற்றாகத் தடை.
முழுநேரப் போராளிகளை விடுங்கள்.
ஊதியத்துடன் பணிபுரியும் துணைப்படையினருக்கிருக்கும் கட்டுப்பாடுகள் எவ்விதத்திலும் குறைந்ததில்லை. போராளிகள் போலவே புகைத்தல் மது என்பவற்றுக்கு மிக இறுக்கமான தடை இருப்பதுபோல் மத விடங்களுக்கும் இருக்கிறது. துணைப்படையில் பெரும்பான்மையானோர் குடும்பத்தலைவர்கள். குழந்தைக்கு நேர்த்தியென்றுகூட காவடி தூக்க முடியாது. ஏனென்றால் போராளிகளுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஏற்றுத்தான் அவர்கள் துணைப்படையில் சேர்கிறார்கள். (இதை மதவுரிமை தலையீடு என்று சிலர் புலியெதிர்ப்பு நோக்கத்துக்காகச் சொல்லலாம்.)
இதுவும் மதச்சார்பின்மைதான்.
ஆனால் உண்மையை விட்டுவிட்டு எதிர்வளமாக கதை திருப்பப்படுகிறது.
மதச்சார்பின்மை என்பதை தனக்கேற்ற முறையில் வெளிப்படுத்துவது என்ன சார்பு?

தீபாவளியைத் தடைசெய்யாவிட்டாலும் அதற்கு எதிரான உணர்வு வெளிப்படையாகவே அங்கு இருக்கிறதே?
(தீபாவளிக்கும் சைவத்துக்கும் தொடர்பில்லையெண்டு ஒரு பதிவு வந்தால் மகிழ்ச்சி)


புதுவை இரத்தினதுரை நல்லூர்க்கந்தனை விளித்துப் போராட்டப் பாடல்கள் எழுதியவை வைத்து புலிகள் இயக்கத்தில் சைவத்தன்மையைக் கண்டுப் புல்லரித்துப் போனவர்கள் வன்னிக்கு வெளியே நிறைய இருக்கிறார்கள். புலத்தில் ஏராளம்பேர்.
ஆனால் அந்த மனுசன் பொதுவிலேயே சாமிகளையும் மதத்தையும் கிழிப்பதைப் பார்த்தவர்களுக்கு மயக்கமேதும் இருப்பதில்லை; பொதுவிலே பழித்தும் பாடலில் விளித்தும் எழுதும் தன்மையையும் புரிந்துகொண்டிருப்பார்கள்.


சரி, விடுதலைப்புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான தமிழேந்தி, கல்விக்கழகப் பொறுப்பாளரான இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்) ஆகியோருட்பட சிலர் மதம், ஆரியம், திராவிடம், பார்ப்பனீயம் பற்றி பொதுமேடைகளிற்கூட பேசியைவை எவையுமே உணர்வுகள் கேட்டிக்கவில்லையா? அவருக்குரிய தகவல் மூலங்கள்கூட அறிந்திருக்கவில்லையா? (நான் சொல்வது நிகழ்காலம்பற்றி). மேற்கூறியவர்கள் தீவிர தமிழ்ப்பற்றாளர்(வெறியர்?)கூட.
இவர்களிருவரின் கருத்தும்தான் புலிகளினதோ ஈழத்தமிழரினதோ கருத்தென்று நான் சொல்லவில்லை; சொல்லவும் முடியாது. ஆனால் கருத்துலகில் செல்வாக்குச் செலுத்தும் மிக முக்கிய நபர்கள் அவர்கள்.

சுயமரியாதைத் திருமணங்கள் எங்களிடம் கிடையாது என்று உணர்வுகள் சொல்லிக்கொள்கிறார்.
போகட்டும்.
சுயமரியாதைத் திருமணம் என்பதை விட்டுவிவோம்.
தமிழ்த்தேசியத்தைத் தாங்கி நிற்பதாக, அதை வழிநடத்துவதாக நானும் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவரும் கருதும் பிரபாகரனும் அவரது இயக்கமும் என்ன செய்கிறது?

போராளிகளின் திருமணங்கள் எப்படி நடக்கின்றன?
தாலி கட்டாமல் திருமணம் செய்வதையே வரவேற்பதாக போராளிகளை "பிரபாகரனின்" தலைமை ஏன் அறிவுறுத்துகிறது?
தாலியில்லாத திருமணங்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் நடப்பது ஏன்?
ஏன் ஐயரோ மந்திரமோ வைத்து ஒரு திருமணம்கூட நடத்தப்படுவதில்லை?
கிறிஸ்தவ முறையில்கூட எந்தத்திருமணமும் நடப்பதில்லை?
போராளிகளின் திருமணங்கள் அனைத்திலும் மதம் முற்றாகப் புறக்கணக்கப்பட்டு நடத்தப்படுவது ஏன்?

இயக்கத்தில் திருமணம் முடிந்தபின் சம்பிரதாயமாக, குடும்பத்தவரின் அரியண்டத்தால் கோயிலுக்குப் போய் தாலி கட்டிய தளபதியொருவரை அமைப்பிலிருந்தே நிறுத்தவேண்டி வந்தது ஏன்?

இதுவொன்றும் தெரியாமல் உணர்வுகள் வலைப்பதிவு வைத்திருப்பவர் சும்மா உளறக்கூடாது.
தான் கேள்விப்பட்டதாக நினைப்பதைத் திரும்பத்திரும்பச் சொல்வதன்மூலம் தான் சொல்லும் தர்க்கங்களுக்கு வலுச்சேர்க்கவே இவர் முனைகிறார்.
தொடக்ககாலத்தில் நடந்த பிரபாகரனின் திருமணத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதை எல்லாருக்கும் பொருத்திவிடுவது சரியன்று. இயக்கத்தில் காலத்துக்குக் காலம் நடைமுறைகள் மாறிக்கொண்டே வந்துள்ளது, தொடக்கத்தில் மாவீரரின் வித்துடல்கள் அனைத்தையும் எரிப்பதிலிருந்து பின் அனைத்தையும் புதைப்பதற்கு மாறியதுபோல.

குறிப்பிட்ட பதிவரின் ஏனைய கருத்துக்கள் தொடர்பில் எனக்கு எக்கருத்துமில்லையென்றபோதும் இப்படியான கூற்றுக்களை உடனேயே மறுக்கவேண்டிய தேவை - அதுவும் திரும்பத்திரும்பச் சொல்லும் நிலையில் - உள்ளதென்பதால் இம்மறுப்புப் பதிவு.

மற்றவர்கள் என்ன பூசுகிறார்களோ இல்லையோ, முதலில் நீங்கள் இப்படியான பொய்மையான பூச்சுக்களை நிறுத்துங்கள்.

மதச்சார்பின்னை என்பது எல்லா மதத்தையும் கும்பிடுவதாகச் சொல்லி நிறுவவேண்டியதில்லை. உண்மையாக இருக்கும் (பிரபாகரனின்) சார்பின்மையாக எதையும் கும்பிடாமல் இருப்பதைச் சொல்வதே சரி.

பிரபாகரனின் மாமனாரின் சைவத்தனத்தை மருமகனுக்கும் பொருத்துவதில் புலியெதிர்ப்பாளர்களும், புலியாதரவில் மிதமிஞ்சிய சைவத்தனமானவர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடக்க காலத்திலே பிரபாகரன் மொட்டையடித்திருந்ததை, திருப்பதியில் மொட்டையடித்ததாக இன்றுவரை சொல்லிக்கொண்டு திரிவோருண்டு. இதையெல்லாம் மறுக்கும் விதமாக தான் எதிரிப்படையினரால் அடையாளப்படுத்தப்படாமலிருக்கவே மொட்டையடித்துத் திரிந்தேன் என பிரபாகரன் ஒளிச் செவ்வியில் சொல்லியிருக்கிறார்.
இதுபோல் இன்னும்பல கதைகள் கட்டப்பட்டு, பரப்பப்பட்டு உலாவருகின்றன.
பிரபாகரன் கிறித்தவத்துக்கு மாறிவிட்டார், மகனுக்குக் கிறித்தவப் பெயர் வைத்துவிட்டார், கிறித்தவ நாட்டுக்காகச் சண்டைபிடிக்கிறார் என்று இந்திய இந்துத்துவவாதிகள் புலம்புவதைப் போல்தான் இவையும்.

________________________________
ஈழத்தில் சாதியொழிந்துவிட்டது என்று உணர்வுகள் (அவரோடு கூட்டுச் சேர்ந்து வெற்றி, மயூரேசன்) புலம்புவதைக்காண திகைப்பாக இருக்கிறது. அல்லது அவரே இறுதியாகச் சொன்னதுபோல், "எங்கள் அழுக்குகளை மற்றவர்க்குக் காட்டக்கூடாது" என்ற கோட்பாட்டின்படிதான் தனக்கே பொய்யென்று தெரிந்தும் தொடர்ந்து சொல்கிறாரோ?
இதே கண்ணோட்டத்தில்தான் தமது பதிவுப்பெயர்களினூடாக பின்னூட்டம் இட்டோரின் கருத்துக்களைக்கூட வெளியிடாமல் முடக்கி வைத்திருக்கிறாரோ என்னவோ?

களத்தைவிடவும் புலத்தில் அந்தச்சிக்கல் அதிகமிருப்பதைப் பார்க்கிறோம்.
தேசிய நாளிதழ்கள் என்று இலட்சக்கணக்கில் விற்பனையாகும் முன்னிணிப் பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களில் வராத சாதியா?
ஒழித்துவிட்டதாகச் சொல்லி பம்மாத்துப் பண்ணுவது என்ன அரசியல்?
அதை ஒளித்து வைக்கக்கூட முடியாதபடி முற்றியிருக்கிறது.
__________________________

நெடுங்காலமாகவே இணையத்தில் எழுதிவரும் பெயரிலி என்ற இரமணிதரனை ஈழ எதிர்ப்பாளனாகவும், துரோகியாகவும் (இச்சொல் தனது உண்மையான கருத்தையிழந்து கண்டகண்ட குஞ்சு குருமன்களாலும் சகட்டுமேனிக்குப் பயன்படுத்தப்படுகிறது) அடையாளப்படுத்தி குறிப்பிட்ட பதிவர் எழுதுவது பெரிய வேடிக்கை.
மற்ற வலைப்பதிவுகளையும் வாசிக்க சிறிது நேரமொதுக்கினால் புண்ணியமுண்டு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த வலைப்பதிவில் தமிழ்மண திரட்டி நிர்வாகம் தன் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியை இந்த வலைப்பதிவுக்கு நிறுத்திக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தாமல் வரும் அனைத்துப்பின்னூட்டங்களும் வெளியிடப்படும்.
இதை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேனாயினும் இப்பதிவில் இதைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் இருக்கிறது.

Labels: ,


Wednesday, February 14, 2007

ஐந்தாண்டு நிறைவுடன் ஈழம் கிடைக்குமா?

இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது.
இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன.
இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம்.

ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்தபிறகு ஏதோ நடக்கப்போகிறது என்றும் ஒருகதை.
அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல்கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்தவேண்டியதுதான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்கள் இருக்கின்றன.
ஐந்தாண்டுகள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததைப் பாராட்டி "சர்வதேசம்" விருது வழங்கும்; தமிழீழத்தை அங்கீகரிக்கும்; எங்கள் போராட்டம் வெற்றி பெற்றுவிடும் என்ற கனவோடு ஏராளம் பேர் உலாவுகிறார்கள்.

ஒன்றில் நடப்பவற்றைக் கொண்டு ஊகிக்க வேண்டும். அல்லது வரலாற்றிலிருந்து பாடம்படிக்க முற்பட வேண்டும்.
இவை எதுவுமில்லாமல் சிறுபிள்ளைத்தனமான கற்பனைகளையும் புரட்டுக்களையும், நம்பிக்கொண்டும் பரப்பிக்கொண்டும் இருப்பது சரியில்லை.

ஐந்தாண்டுகள் வரை பொறுமை காக்கவேண்டுமென்ற கடப்பாடோ விருப்பமோ புலிகளுக்கில்லை. அப்படி பொறுமை காப்பதில் எந்த அனுகூலமுமில்லை என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். மட்டமாக ஒரு காலத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்களுக்கிருக்கும் ஒரே வசதி, எதிர்காலத்தில் "நாங்கள் ஐந்து வருடங்கள் பொறுமை காத்து ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம்" என்று அடிக்கடி சொல்லிக்கொள்வதுதான். (இவ்வருட மாவீரர் தின உரையில் முக்கிய இடம்பிடிக்கப்போகும் வசனமிது) அந்தவசனம் சொல்லத்தான் காலம் கடத்தினார்கள் என்பதற்கு, அப்படிச் சொல்வதால் என்ன கிடைக்குமென்று யோசிக்க வேண்டும்.
இவ்வளவுகாலம் நீடித்தது, காலத்தின் கட்டாயமேயன்றி ஐந்தாண்டு கணக்கிற்காக அன்று.
2005 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே போராட்டத்தைத் தீவிரப்படுத்த எண்ணியிருந்ததாகவும் 2004 மார்கழி கடற்கோள் அனர்த்தத்தால் அது சாத்தியப்படவில்லையென்றும் 2005 மாவீரர்நாள் உரையிலேயே சொல்லப்பட்டாயிற்று.
அப்படி ஏதாவது நடந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" மூன்றாண்டுக் கணக்குச் சொல்லித்திரிந்திருப்பார்கள்.

2006 இலேயே போர் தீவிரமடையத் தொடங்கிவிட்டது. புலிகள் நினைத்தபடி எதிரணி அரசியலில் எல்லாம் நடந்துகொண்டிருக்க, களத்தில் ஏற்பட்ட ஒரு பிசகால் நிலைமை தமிழர் தரப்புக்குப் பாதகமாக மாறியது. காலம் இழுபட்டது. அதற்குப்பின்னும் ஒருசுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
எல்லாம் சரிவந்திருந்தால் எங்கள் "ஆய்வாளர்கள்" நான்காண்டு கணக்குச் சொல்லியிருப்பார்கள்.

'சர்வதேசம்' எங்கள் பக்கம் திரும்பும், எங்களை அங்கீகரிக்கும் என்று இப்போது நம்பிக்கை கொள்வது வீண்வேலை. அதுவும் களத்தில் பின்னடைவுளைச் சந்தித்துள்ளதாக தோற்றப்பாடுள்ள இன்றைய நிலையில் அறவே சாத்தியமில்லை.
எங்களை அங்கீகரிக்கவும், ஆதரவளிக்கவும் எந்தக்கடப்பாடும் அவர்களுக்கில்லை. கடப்பாடுள்ள விடயத்திலேயே அவர்கள் சரியாக நடக்கவில்லை.

இன்று இலங்கை இனச்சிக்கல் தொடர்பில் நோர்வேக்கு உள்ள கடப்பாடு என்ன? அவர்கள் அதன்படி நடக்கிறார்களா? என்று பார்த்து, அதன்வழி 'சர்வதேச'த்தையும் பொருத்திப் பார்க்கலாம்.
பலவற்றுக்குப் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடுள்ள நோர்வே சத்தம்போடாமல் தானுண்டு, தன் பாடுண்டு என்று இருக்கிறது. யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவின் கதையைக் கேட்கவே வேண்டாம்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசதரப்பால் தொடர்ந்து நடத்தப்பட்ட மீறல்கள் குறி்த்து அவர்களுக்கு எக்கவலையுமில்லை. விலகுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களிலிருந்து தன் படைகளைவிலக்கி மக்களை இயல்புக்குத் திருப்புவதைச் செய்யாத அரசுமேல் அவர்கள் எக்குற்றச்சாட்டையும் வைக்கமாட்டார்கள். மக்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதையும் பார்த்துக்கொண்டு வாளாவிருப்பார்கள். (இவை ரணில் காலத்திலேயே நடந்துவிட்டன). அரசு மக்கள்மேல் எறிகணை மழை பொழிந்து கொத்துக் கொத்தாகப் பலிகொண்டபோது, நோர்வே (சர்வதேசமும்) சொன்ன தீர்வு, மக்களை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடிப்போகச் சொன்னதுதான். கொல்லப்பட்டடவர்கள் மக்கள் தான் என்பதையும் அவர்களது எண்ணிக்கையையும் சொல்வதைத்தாண்டி இந்தப் படுகொலைகள் தொடர்பில் நோர்வே (சர்வதேசமும்) செய்தது வேறொன்றுமில்லை.
ஒவ்வொருமுறை படுகொலை நடக்கும்போதும் சம்பந்தமேயில்லாமல் புலிகளையும் அதற்குள் இழுத்து ஓர் அறிக்கை விடுவதன்மூலம் பயங்கரவாத அரசுக்கு மேலும்மேலும் ஊக்கமளித்ததுதான் இந்த நோர்வே உட்பட்ட சர்வதேசம் செய்தது.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையான நில ஆக்கிரமிப்புத் தொடர்பாகப் பார்த்தால், அதிலும் இவர்கள் செய்தது படுகயமைத்தனம்தான்.
மூதூர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தால் சில மணித்துளிகளில் நோர்வே அறிக்கை விடுகிறது, "உடனடியாக பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டும்" என்று. அதற்குமுன்பே அரசபடைகள் மாவிலாறு மீது படையெடுத்திருந்தனர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதன்பின் அரசபடைகள் சம்பூர் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை அகதிகளாக்கி, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று சம்பூரைக் கைப்பற்றிக் கொண்டபோது நோர்வேயிடமிருந்து அறிக்கை வரவில்லை. படையினர் பழைய நிலைகளுக்குத் திரும்பிப்போக வேண்டுமென்று, சம்பூர் ஆக்கிரமிக்கப்பட்டு ஐந்து மாதங்களாகியும் எந்த அறிவித்தலும் வரவில்லை.
வாகரையும் அப்படியே; கஞ்சிக்குடிச்சாறு்ம அப்படியே.

சமாதான முயற்சிகள் நடப்பதாக, பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் காட்டிக்கொள்வதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த கரிசனையுமில்லை.
அப்பட்டமான நில ஆக்கிரமிப்புகள் நடந்து, பல்லாயிரம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களுக்கு அடிப்படை உணவுகள்கூட மறுக்கப்பட்டு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபடி திறந்திருக்கவேண்டிய A-9 பாதை மூடபட்டிருந்த நேரத்திலும் - எதுவுமே நடக்காதது போல் அடுத்த சுற்றுப்பேச்சுக்கு ஒழுங்கு பண்ணுவதில் மட்டும் குறியாயிருந்த - அப்படி இருதரப்பையும் மேசையில் கொண்டுவந்து இருத்திவிட்டால் எல்லாம் முடிந்தது என்று சிறுபிள்ளைத்தனமாகச் செயற்பட்ட நோர்வே (உட்பட்ட சர்வதேசம்) பற்றி நாமின்னும் அறியவில்லையா?

தான் பதில் சொல்லவேண்டிய கடப்பாடுள்ள விடங்களுக்கே எந்தவித சலனமுற்று, சாந்தமாக இருக்கிறது நோர்வே.
இந்நிலையில் எந்தச் சம்பந்தமுமில்லாத, எந்தக் கடப்பாடுமில்லாத 'சர்வதேசம்' என்று நாம் சொல்லும் சக்தி என்ன கிழிக்கப்போகிறது?
இன்று தமிழர்மேல் கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கெதிராக எந்தவொரு ஆக்கபூர்வமான செயலையும் செய்யாத சர்வதேசம் எமது உரிமைப்போராட்டத்தை "இப்போது" அங்கீகரிக்குமென்பது - அதுவும் ஐந்துவருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்ததென்ற ஒரே காரணத்துக்காக அங்கீகரிக்குமென்பது சுத்த மடத்தனமல்லவா?

ஐந்து வருடங்கள் ஒருதரப்பு ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தால் அவர்களின் நிலம் அவர்களுக்கே என்று பட்டா எழுதும் சட்டமேதும் சர்வதேசம் என்ற சக்தி இயற்றி வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவர்களின் கோட்பாட்டுக்குட்பட்டதைக் கூட அவர்கள் செய்யவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் பாடமாகப் படிக்க வேண்டாமா?
சுயநிர்ணயம் தொடர்பில் தனியாகப் பிரிந்து செல்லும் அதிகாரம், இடைக்கால நிர்வாகம், பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு என்று 'சர்வதேசம்' ஏற்படுத்திவைத்த - பல இடங்களில் செயற்படுத்திய நடைமுறையைக் கூட ஈழத்தவர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? ஏன்?
இவர்களுக்குப்பிடித்தால் நாட்டைப் பிரிப்பார்கள்; இல்லையென்றால் ஒட்டுவார்கள்.
சர்வதேச மனிதாபிமானத்துக்கு பல எடுத்துக்காட்டு்க்கள் இருக்கின்றன.
மிக அண்மையில் நடந்த லெபனான் பிரச்சினையிலிருந்து கூடவா நாங்கள் பாடம் படிக்கவில்லை? ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் வெளியுலகிற்கு வருவதைவிட பலநூறு மடங்கு உத்வேகத்துடன் லெபனானில் நடப்பவை உலகுக்கு வெளிவந்தன. அந்தப்பிரச்சினை சர்வதேச மயமாகியது. அப்படியிருந்தும் அம்மக்களை யார் காப்பாற்றினார்?


முடிவாக - ஐந்து வருடங்கள் ஒப்பந்தத்தைக் கடைப்பிடித்தோம் என்ற காரணத்துக்காக சர்வதேசம் எங்களை அங்கீகரிக்கும்; ஆதரவு தரும்; சர்வதேசத்தில் எமக்கு ஆதரவான சூழல் ஏற்படும் என்பது சுத்த முட்டாள்தனமான பிதற்றல்.
ஆதரவு, அங்கீகாரம் போன்ற பம்மாத்துத் தோற்றமொன்று வருவதானாற்கூட அதைத்தீர்மானிக்கும் காரணி வேறுதான்; ஐந்தாண்டு நிறைவன்று.
______________________________
இங்கே சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகளையோ நிகழ்வுகளையோ கூட்டத் தொடர்களையோ நான் தவறென்று சொன்னதாக யாரும் கருதத்தேவையில்லை. அவை கட்டாயம் தேவைதான். அரசதலைவர்களை விடவும் வேற்றின மக்களிடத்தில் எமது நியாயங்களைச் சொல்வது முக்கியம். தொடர்ச்சியான கவன ஈர்ப்பைச் செய்துகொண்டிருப்பது முக்கியம். புலத்திலிருக்கும் எல்லோரும் ஒரேயணியில் திரள்வதற்கும், இளையோரிடத்தில் ஒன்றிப்பும் பங்கேற்றலும் அதிகரித்தலுக்கும்கூட இவை முக்கியம்.

ஒரு நோக்கத்துடனான செய்பாடு வேறு; அது நிறைவேறும் முன்பே அதீத நம்பிக்கை கொண்டு பகற்கனவு காண்பது வேறு.
இந்தியா எமது பக்கமென்று புழுகித்திரியும் வேளையிலேயே அது நசுக்கிடாமல் தனது வழமையான பணியைச் செய்துகொண்டிருக்கிறது.
அதற்காக, 'இந்தியா இனிச்சரிவராது' என்று பேசாமல் இருந்துவிட முடியாது. அரசியல் சந்திப்புக்கள், முயற்சிகள் ஒருபக்கம் நடந்துகொண்டேயிருக்கட்டும். ஆனால் அதன் தற்போதைய நிலைப்பாட்டை, செயற்பாட்டை சரியாகப் புரிந்துகொண்டு, கனவுகள் காணாமல் இருப்பதும் முக்கியம்.
_____________________________
ஐந்தாண்டு நிறைவின்பின் பெரியதொரு தாக்குதல் புலிகளால் நடத்தப்படுமென்ற கதை பரவலாக உள்ளது.
அது சரிதான். ஆனால் இந்த ஐந்தாண்டு நிறைவுக்காகத்தான் தாக்குதலை ஒத்திப்போட்டுள்ளார்கள்; நிறைவுநாள் வந்ததும் பாயப்போகிறார்கள் என்ற தோற்றத்தை பலர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
இப்போதுள்ள தோற்றப்படி ஐந்தாண்டு நிறைவுக்கு அடுத்தநாள் புலிகள் கட்டாயம் தாக்குதல் தொடங்கப்போகிறார்கள் என்ற நினைப்புடன்தான் பலர் திரிகிறார்கள். அன்றிரவு நித்திரை கொள்ளாமல் செய்திக்காகக் காத்திருக்கப் போகிறவர்கள் எத்தனைபேரோ தெரியாது. அது நடக்காத பட்சத்தில் மக்கள் சலிப்பூட்டப்படுவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் இக்கதையைக் கட்டிவிட்டவர்கள்தாம் காரணமாக இருப்பார்கள்.

இனி, இராணுவ ரீதியில் பலமானதொரு தாக்குதல்தான் அடுத்த நடவடிக்கை என்ற முடிவுக்கு தமிழர்தரப்பு வந்தாயிற்று. அதை நிகழ்த்த ஐந்தாண்டு நிறைவென்பது ஒரு காரணமேயன்று. ஆட்பலத்திரட்டல் உட்பட பலவேலைத்திட்டங்களின் பின்தான் அது நிகழ்த்தப்படும். ஏற்கனவே நடந்த சில தவறுகள், இழப்புக்களைச் சீர்செய்ய வேண்டும். கடந்த வருடத்தில் இடங்களேதும் கைப்பற்றாமல், மாறாக இழக்கப்பட்டு, எண்ணூற்றுச் சொச்சம் போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.
தவறுகள் களையப்பட்டு, எல்லாம் சீர் செய்யப்பட்டு, மிகுந்த ஆயத்தத்தோடும் எச்சரிக்கையோடும்தான் தாக்குதல் முயற்சியில் இறங்குவார்கள்.
சும்மா வெளியிலிருந்து கொண்டு 'ஏன் இன்னும் அடிக்கேல?', 'அஞ்சு வருசம் முடிஞ்சு தானே?' என்ற புலம்பல்களுக்காக அங்கே தாக்குதல் செய்ய முடியாது.
களத்திலிருக்கும் மக்களும் களத்தை நடத்துபவர்களும் (மட்டும்)தான் அதைப்பற்றித் தீர்மானிக்க முடியும்.
அவர்கள் எப்போது செய்வார்களோ அப்போது செய்துகொள்ளட்டும்.

புலத்திலிருப்பவர்கள் அதைப்பற்றி யோசிக்காமல், செய்ய வேண்டிய பொருளாதார, அரசியல் வேலைத்திட்டங்களை தவறாமல் செய்தால் சரி.
____________________________
நடத்தப்படப் போகும் தாக்குதல் தற்செயலாக ஐந்தாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்டால், காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக மேற்கண்ட கதையைச் சொல்லித்திரிந்தவர்கள் காட்டில் மழைதான்.

Labels: , , ,


Friday, September 01, 2006

மூதூர் - சம்பூர் - திருமலை. நடப்பவை - மறைக்கப்பட்டவை.

மூதூர் என்றதுமே பலருக்கு ஞாபகம் வருவது முஸ்லீம்கள்தாம்.
மூதூரில் தமிழர்களே இல்லை என்றும், மூதூர்ச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லீம்கள் மட்டுமே என்றும், அனைத்துக்கும் காரணம் புலிகள்தான் என்றும் சிலரால் திட்டமிட்டும், சிலரால் அறியாத்தனமாகவும் படிமம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. நடுநிலை வலைப்பதிவாளர்கள் சிலர்கூட இக்கதைகளாற் குழம்பிப்போயினர் என்றே நினைக்கிறேன்.
பலர் தமது புலி மற்றும் ஈழத்தமிழர் எதிர்ப்புக்கு அதை வாய்ப்பாக்கிக் கொண்டனர், இன்றும் தொடர்கின்றனர்.

முஸ்லீம்களைக் கொன்றது சிங்கள இராணுவம்தான் என்பதைச் சொல்லிய முஸ்லீம்கள்கூட சிங்கள அரசபயங்கரவாதத்தை எதிர்த்து ஏதும் செய்ததாய் அல்லது சொல்லியதாய்த் தெரியவில்லை (பாராளுமன்றில் ரவூப் சத்தம் போட்டது மட்டும் புறநடை). அனைத்தையும் தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராகப் பயன்படுத்திக்கொண்டனர் என்பதே சரி. இங்கென்னவென்றால் முஸ்லீம்களைக் கொன்றது புலிகள்தான் என்று அப்பட்டமான பொய்யைப் புனைந்து உலவ விட்டனர் சிலர்.

இங்கே அவற்றை விவரிப்பது நோக்கமன்று. மூதூரில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வசித்தார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் முழுவதும் தமிழர்களே இருந்தார்கள். இன்று அத்தமிழர்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசபயங்கரவாதத்தை, அம்மக்களின் தொடர்ச்சியான இடப்பெயர்வை, பாடுகளை யாரும் பேசக் காணவில்லை. இத்தமிழர்களின் பாடுகளோடு ஒப்பிடும்போடு மற்றவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் புறக்கணிக்கப்பட்டது எது என்றால் இம்மக்களின் பாடுகள்தாம். அப்போது விழுந்துவிழுந்து கூத்தாடிய ஊடகங்களும்சரி, எழுத்தாள மூர்த்திகளும்சரி, அதைவிடக் கொடூரமானவை ஏவப்படும் மக்களைப் பற்றியோ, அவர்கள் பாடுகளைப் பற்றியோ எதுவும் பறையவில்லை. பறையப்போவதுமில்லை.

என்ன நடக்கிறது மூதூர் சம்பூர் உள்ளிட்ட புலிகளின் பகுதியில்?

இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா அரசபடையால் கடுமையான போரொன்று அப்பிரதேசத்தில் நடத்தப்படுகிறது. அதைக் கைப்பற்றுவது தமது நோக்கன்று என்று விழுந்தடித்து அரசதரப்பில் சிலர் சொன்னாலும் தவிர்க்கவியலாமல் அவர்கள் வாயிலிருந்தே அதைக் கைப்பற்றும் நோக்கு வெளிவந்துவிடுகிறது. இராணுவத் தளபதி மிகத் தெளிவாக அதைச் சொல்லிவிட்டார்.
இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு கிலோமீற்றர் வரை இராணுவம் முன்னேறியுள்ளதை புலிகள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

சம்பூர் மீதான அண்மைய இராணுவத் தாக்குதல் தொடங்கப்பட்டபோது 20 க்கும் அதிகமான பொதுமக்கள் அரசபடையால் கொல்லப்பட்டனர். அதைவிட அதிகமானோர் காயமடைந்தனர். யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மக்களை வெளியே செல்லவிடாமல் முக்கிய பாலமொன்றைத் தாக்கிச் சேதப்படுத்தியது அரசவான்படை. அதன்பின் வெளியேற முடியாமலிருந்த மக்கள் மீது குண்டுபோட்டுப் படுகொலை செய்துள்ளது.

இப்பகுதி மக்கள் மீதான அரசபயங்கரவாதம் இப்போதுதான் ஏவப்பட்டது என்றில்லை. யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே (இப்போதும் இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். நான் சொல்வது இருதரப்பும் சுமுகமாக இருந்த காலத்தை) அப்பகுதி மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ரணில் காலத்தில், புலிகள் வெளிநாடுகளில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூர்ப்பகுதி மக்களுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. கட்டடப் பொருட்களுக்கான தடை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அரசபடையால் தடைசெய்யப்படுவதும் பின் மக்கள் போராட்டம் நடத்தி அவற்றைப் பெறுவதுமாகக் கழிந்த காலமுண்டு.

பின் அரசியல் நிலைமைகள் மோசமடையத் தொடங்கிய காலத்தில் இப்பகுதி மக்கள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் இம்மக்கள் மேல் முழு அளவில் தன் படுகொலை அரசியலைத் தொடங்கியது அரசபடை. யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபின் அரசபடையால் நடத்தப்பட்ட முதல் வான்தாக்குதல் இப்பகுதி மக்கள்மேல்தான் நடத்தப்பட்டது. இதில் பதினாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அப்போதும் புலிகளைத்தான் கொன்றோம் என்று அரசபடை சொல்லிக்கொண்டது, உலகமும் நம்பியது என்றுதான் நினைக்கிறேன்.

அன்று தொடங்கிய பிரச்சினை தொடர்ந்தது. அப்பகுதி மீது தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாகவே பெருந்தொகை மக்கள் அப்பிரதேசத்தைவிட்டு ஏனைய பிரதேசங்களுக்குச் சென்றார்கள். முதல் கிழமையில் மட்டும் அப்பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் 28 ஆயிரம்பேர்.

அன்று தொடக்கம் இன்றுவரை அப்பகுதி மக்கள் ஓடிக்கொண்டும் செத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இன்று வாகரையில் குந்தியிருக்கும் சம்பூர்க்குடும்பங்கள் சில இந்தக்காலத்துள் பத்துத் தடவையாவது இடம்மாறியிருக்கின்றன. பத்துத் தடவைகள் இடம்பெயர்வதென்பது எங்களுக்குச் சாதாரணமானதுதான். வன்னியில் நிறையப் பேரைப் பார்த்தாயிற்று. ஆனால் அது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடந்தவை. மேலும் வன்னியி்ல் ஓரளவுக்கு சமாளிக்கும் வல்லமையிருந்தது. இங்கே, நாலு மாதத்துள் நடந்த இடப்பெயர்வுகள் பெரியவை. ஏப்ரலில் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் தமது சொந்த வீட்டைப் பார்க்கக்கூட வழியில்லை. தம்மோடு ஒன்றாக ஊரிலிருந்து புறப்பட்டவர்கள் எங்கே என்றே தெரியாமல் பலர். யார் செத்தார்கள், காயப்பட்டார்கள் என்றே விவரம் தெரியாமல் அங்குமிங்குமாகச் சிதறியிருக்கிறது அச்சமூகம். ஓடும் இடமெல்லாம் அரசபடை தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயரும் மக்களைக் குறிவைத்துக்கூட தாக்குதல் நடத்துகிறது. இடம்பெயர்வதற்கிருக்கும் வழிகளைத் தாக்கியழிக்கிறது. இலங்கைத்துறை பாலத்தைத் தாக்கியதும், வெருகல் பாதையைத் தாக்கியழித்ததும் இப்படித்தான். இவ்வளவு கொடுமையையும் நடந்துகொண்டிருப்பது, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்ற ஒன்று நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் காலத்திலும், பன்னாட்டுச் சக்திகள் 'கண்காணிப்பதாய்'ச சொல்லிக்கொள்ளும் காலத்திலும்தான்.

இன்று இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்களைக்கூட அரசு அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. இன்று அம்மக்களுக்கு இருக்கும் ஒரே தொண்டு நிறுவனம் 'தமிழர் புனர்வாழ்வுக் கழகம்' தான். (அந்நிறுவனத்தைப் பயங்கரவாத நிறுவனமாகச் சித்திரித்து நடத்தப்படும் பரப்புரைகூட மிக நேர்த்தியான ஒரு திட்டமிட்ட ஈழத்தமிழர் எதிர்ப்பு நடவடிக்கைதான்).

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற தொண்டு நிறுவனங்களையும், தனியார்களையும் தடுத்து வைத்திருந்தது அரசபடை. காயப்பட்டவர்களை அப்புறப்படுத்தச் சென்ற நோயாளர் காவுவண்டியைக்கூட சிலநாட்களாக அனுமதிக்கவில்லை அரசு. சிலநாட்களின்பின் பத்து லொறியில் உணவுப்பொருட்களை அரசு அனுமதித்தபோது "ஆகா என்னே ஒரு கரிசனையாக அரசு!" என்று ராஜபக்சவைப் புகழ்ந்து பதிவுகள் வந்தபோது இந்தப் 'பயங்கரவாதி' களை நினைத்து உண்மையில் பயம்தான் வந்தது. [தொண்டு நிறுவனங்களை சேவையிலிருந்து வெளியேற்றும் மிகக் கோரமான திட்டதுடன் அரச பயங்கரவாத இயந்திரம் வடக்குக் கிழக்கில் செயற்பட்டுவருவது அறிந்ததே. அதற்கு ஏதுவாக அத்தொண்டு நிறுவனங்களும் தமது 'சேவையை' நிறுத்திவிட்டு மூட்டை முடிச்சுடன் வெளிக்கிடுகிறார்கள்.]

இன்று, திருமலையிலும்சரி, மட்டக்களப்பு -அம்பாறையிலும்சரி, தமிழ்மக்கள் மீது நடத்தப்படும் அரசபயங்கரவாதம் பெருமளவு வெளியில் தெரிவதில்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் செய்தியாகவாவது வரும். புலிகள் தரப்போ புலியெதிர்ப்புத் தரப்போ போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவார்கள். அதைவிட கிறிஸ்தவ மதபீடத்தின் மூலமும் பிரச்சினைகள் வெளிவரும். மேலும் பன்னாட்டுப் பார்வையும், அதன் நிறுவன அங்கத்தவர்களும் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அங்கு நடப்பவற்றுக்கு ஒரு 'விலை' உண்டு.

ஆனால் இப்போது கிழக்கில் நடப்பதற்குப் 'பெறுமதி' இல்லையோ என்ற ஐயம் வருகிறது. நாயைப் போலச் சாகடிக்கப்படும், நடத்தப்படும் மக்களின் துன்பங்கள் சரியான முறையில் வெளிக்கொணரப்படவில்லை. கொல்லப்பட்ட, காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக்கூட சும்மா கைக்கணக்கில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். இன்று அரசபடை கடும் யுத்தத்தைத் தொடங்கியிருக்கும் மூதூர் - சம்பூர்ப்பகுதி மிகக்குறுகிய பகுதி. வெளியேறும் பாதைகள் அடைக்கப்பட்டால் இடம்பெயர அந்தப் பகுதிக்குள் இடமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சகல வழிகளையும் அடைத்து, வெளியுலகத்திலிருந்து அப்பகுதியைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசு அங்குப் பெரிய மனித அவலத்தை விதைத்துள்ளது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில் கொடூரமான வான்தாக்குலும், பிரதேசங்களைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையும் அரசபடையால் நடத்தப்படுகிறது. இன்னும் கண்காணிப்புக்குழுவும் நடுவர்களும் என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைத் தடுப்பதையும், மக்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்துக்கொல்வதையும் எவரும் பெரிய பிரச்சினையாக்கிய மாதிரித் தெரியவில்லை. மூதூரிலிருந்த 'இராணுவ முகாம்களை' புலிகள் தாக்கிய போதுமட்டும் உலகத்துக்கும் நடுவர்களுக்கும் 'மனிதாபிமானம், யுத்தநிறுத்த ஒப்பந்தம்' என்பவை ஞாபகம் வந்து பின் மறந்து போயின. புலிகளிடமிருந்து எப்போதாவது ஒருநாள் எதிர்நடவடிக்கை வரத்தான் போகிறது. அப்போது பார்ப்போம் இந்தக் கோமாளிகளின் கூத்தை.

இன்று என் யாசகம் இதுதான்.
மறந்தும்கூட புலிகள் முஸ்லீம்களோ சிங்களவர்களோ இருக்கும் பிரதேசத்திலுள்ள 'இராணுவ முகாம்கள்' மீது தாக்குதல் தொடுத்துவிடக்கூடாது. அரசபடையினரை நோக்கியும் என் வேண்டுகோள் இதுதான். அவர்களும் முஸ்லீம்கள்மீதோ சிங்களவர்கள்மீதோ தாக்குதல் நடத்திவிடக்கூடாது.
ஏனென்றால் அரபடை தாக்குதல் நடத்திக் கொன்றால்கூட அதற்கும் புலிகளைக் காரணம் சொல்லி "மனிதாபிமான, மக்கள் நேய"ப் பதிவுகளை எழுதவேண்டிய நிலைக்குச் சக பதிவர்கள் ஆளாகிவிடக்கூடாதென்ற நல்ல நோக்கத்திற்றான்.
அவர்களுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். எதற்கு அவர்களையெல்லாம் நேரம் மினக்கெட்டு பதிவு போட வைப்பான்?


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கிழக்கு மாகாணத்தின் மக்கள் அவலங்கள் பற்றி D.B.S. Jeyaraj ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இடப்பெயர்வு விவரங்கள் பற்றியும் சில தகவல்கள் சொல்லியுள்ளார்.
அவரின் முழுமையான கட்டுரைக்கு:
Wretched of the North-East Lanka earth


_____________________________________________

Labels: , , , , ,


Friday, August 11, 2006

புலிகள் - ஒப்பந்தம் - சிறிலங்கா அரசு

யுத்தநிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஏட்டளவில் உள்ளது. யதார்த்தத்தில் நிறைவுக்கு வந்து நீண்டகாலமாகிவிட்டது.

நேற்று (10.08.2006) புலிகளின் நிலைகள் சிலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். புலிகள் மூதூர் மீது நடவடிக்கை செய்தபோது 'எல்லோரும் பழைய இடங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்' என்று விழுந்தடித்து அறிக்கைவிட்ட நோர்வே என்ன செய்யப்போகிறதென்று தெரியவில்லை. உண்மையில் நேற்றுத்தான் படையினர் கைப்பற்றினாலும் தாம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாக படைத்தரப்புச் சொல்லிவிட்டது. படைத்தரப்பு தாம் மாவிலாறைக் கைப்பற்றிவிட்டதாகச் சொன்ன நாளே நோர்வே இதைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எதுவுமில்லை. சிலவேளை படையினரின் கூற்றை நம்பாமல் இருந்தார்களோ என்னவோ? ஆனால் நேற்றிலிருந்து நாட்கள் எண்ணப்படுகின்றன.

மிகக்கொடூரமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை, வான் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்குமதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ளது அரசபடை. விடுதலைப்புலிகள் தரப்பிலும் சேதங்கள். ஆனால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. மக்கள் இழப்புப் பற்றிக் கேட்டால், தாம் அந்தப்பகுதிகளுக்குப் போகமுடியாது, தமக்குப் பாதுகாப்பில்லை என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு இருந்துவிடுகிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு விழுந்தடித்து ஓடுகிறார்கள்? குறைந்தபட்சம் அரசபடையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றாவது உண்மையைச் சொல்லத் துப்பில்லாத போக்கிரிக் குழுவாக இருக்கிறது இக்குழு. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை மட்டுமன்றி மற்றவர்களையும் துரத்திவிட்டு எம்வழியை நாமே பார்க்கலாம் போல உள்ளது.

அணைதிறக்கச் சென்ற கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட்ட குழுமீது அரசபடை எறிகணைத்தாக்குதல் நடத்தியது. அணை திறக்கவிடாமல் செய்ததற்கு அரசுதான் காரணம். ஆனால் அதைப்பற்றிச் சொல்லும்போது 'சிலருக்கு தண்ணீர் தேவையில்லை, யுத்தம் தான் தேவை போலுள்ளது' என்றுதான் அவரால் சொல்லமுடிந்தது. கடுமையான வார்த்தைகளில் நேரடியாகக் குற்றம்சாட்ட அவருக்கு மனசில்லை. தங்கமான மனசு.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவைக்கூட மறுத்துவருகிறது அரசபடை. இவ்வளவு கொடூரமான தாக்குதல்களுக்கிடையில் காயப்பட்டவர்களைக் கூட சரியான முறையில் அப்புறப்படுத்த முடியாத நிலை. மக்கள் போக்குவரத்து நடக்கும் வெருகலில் படகின் மீதும் குண்டுபோட்டு மக்களைச் சாகடித்துள்ளது வான்படை. மக்களுக்குச் செல்லும் அனைத்து உதவிகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவசர நோயாளர் காவுவண்டிகூட மாங்கேணி படைநிலையில் தடுத்து திருப்பி அனுப்பப்ட்டுள்ளது.
ஆனால் கண்காணிப்புக்குழுவோ, "அம்மக்களுக்கு நிறையச் சிக்கல் இருக்குமென்று நம்புகிறோம். அங்குப் போனால் தான் இதுபற்றிக் கூற முடியும்' என்று பதில் தருகிறது.
ஒன்றில் இருந்து ஒழுங்காக வேலை செய்யவேண்டும். அல்லது மூட்டை முடிச்சோடு ஓடிவிடவேண்டும்.


இன்னும் நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு
ஒப்பந்தத்தைக்காட்டி தமிழர்தரப்பை மட்டும் கட்டிப் போட்டுக்கொண்டு மறுதரப்பை சுதந்திரமாக படுகொலை செய்யவிட்டுக்கொண்டிருப்பது தான் கண்காணிப்புக்குழுவா?
இதுதான் மத்தியஸ்தமா?

புலிகளின் ஆட்லறி நிலைகளைத்தான் தாக்குகிறோம் என்று பச்சைப்பொய்யை அரசதரப்புச் சொல்லும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள்? திருமலை மாவட்டத்தின் மாவிலாற்றுக்குச் சம்பந்தமேயில்லாத மட்டக்களப்பு மாவட்ட வாகரைப்பகுதி தாக்கப்படுகிறது.

இந்தக் குழுக்களை நம்பி சிங்களவனோடு ஒரு தீர்வுக்கு இணங்குவது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கும்? இனிமேல் தனினாநாடு தவிர எந்தத் தீர்வுமே நடைமுறைச்சாத்தியற்ற நிலைக்குப் போயக்கொண்டிருக்கிறது. வேறு தீர்வுகள் பற்றிக் க்தைத்தாலும் ஆயுதக்கையளிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (அது இணைந்த நாடென்ற தீர்வானாலும்.)

இன்று மட்டக்களப்பிலும் தரவைப்பகுதியில் கடுமையான குண்டுவீச்சை அரசவான்படை செய்துள்ளது. புலிகளின் முகாம்தான் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யார் தாக்கப்பட்டால் என்ன? என்ன துணிவில் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு இப்படி தாக்குதலைச் செய்கிறது அரசபடை? இதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் கண்காணிப்பாளரை என்ன சொல்வது? இன்று யாழ்பபாணத்தின் முகமாலையிலும் கடும் எறிகணை வீச்சோடு வன்னிநோக்கி படைநகர்வு நடந்ததாகச் செய்திகள் வருகின்றன.

மாவிலாறு படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டதை வைத்து ஒப்பந்தத்தை நிரந்தர முடிவுக்குகொண்டு வந்துவிடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் நோர்வே தானாகவே வெளியேறுவது சிறந்தது. புலிகள் வலிந்த யுத்தத்தைத் தொடுக்க வேண்டும். நிலமீட்பைத் துரிதப்படுத்த வேண்டும்.
முன்னேறும் படைத்தரப்பை எதிர்கொண்டு மறிப்பதில் மட்டும் ஆள்வலுவையும் ஆயுத வலுவையும் செலவு செய்துகொண்டிருப்பது போராட்டத்துக்கு ஆபத்து.

இன்றைய நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வேலையை உடனடியாகவே செய்ய வேண்டும். ஒப்பந்தக்காலத்தைப் பயன்படுத்தி கொழுத்து திமிர் பெற்றுவிட்ட கொழும்பை அசைக்க வேண்டும். இன்னொரு கட்டுநாயக்கா வெற்றி தேவை.

திருமலையில் புலிகள் முன்னேற்ற முயற்சி மேற்கொண்டால் அது முஸ்லீம்கள், சிங்களவர் வாழும் பகுதிகளையும் உள்ளடக்கித்தான் வரும். இதைத் தவிர்க்கவே முடியாது. இம் மென்ற முதல் இனஅழிப்பு, பாசிசம் என்று தும்மும் கோமாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக எழுதிக்கொண்டிருப்பது வேலையாக இருக்கலாம். எழுத விசயமில்லாமல் யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கொடுக்கத்தானே வேண்டும்?

இந்தச் சமாதானப் பொறியிலிருந்து மீள முடியாமல் தமிழர் தரப்பு இரு்நதது உண்மை. ரணிலைத் தோற்கடித்தது பொறிமீளல் தந்திரமாகவே பார்க்கப்பட்டது. அதை மேலும் இலகுவாக்கியது ஐரோப்பிய யூனியன். இப்போது சிங்களத்தரப்பே இன்னும் இலகுவாக்கியுள்ளது. இவையனைத்தும் தந்திர வெற்றியென்று இன்னும் உறுதியாகவில்லை.
மகிந்த வெற்றியிலிருந்து இன்றுவரை நடந்தவை அனைத்தினதும் பலாபலன் இனி புலிகள் எடுக்கப்போகும் முடிவில்தான் இருக்கிறது.

Labels: , , , ,


Wednesday, May 31, 2006

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்

சிறிரங்கன் சிக்கல் குறித்த பதிவு.

இப்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு முதன்மைச் சம்பந்தமில்லாதது. எவ்விதத்திலும் அதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு இது உதவாது. எனவே ஏதோ விசயமிருப்பதாக நம்பி ஏமாற வேண்டாம்.
ஓர் எதிர்ப்புப் பதிவை இடவேண்டுமென்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை. அப்பிரச்சினையைத் திசைதிருப்பும், கொச்சைப்படுத்தும் எண்ணமுமில்லை. இந்தத் தெளிவோடு மேற்கொண்டு படியுங்கள்.

"இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் கண்டிக்கிறேன்".

இதுவரை நான் 'உண்மையாயிருக்கும் பட்சத்தில்" என்ற சொற்றொடரைப் பாவிக்கவில்லை. ஆனால் இப்போது பாவிக்கிறேன்.
இச்சொற்றொடர் பாவித்த சிலர் மீது பொடிச்சி போன்றவர்களிடமிருந்து விழுந்திருக்கிறது சாத்து. நான் பாவிக்கவில்லையென்றாலும் அதே நிலைதான் எனதும் என்பதாலும், எதிர்வினை இல்லாமலே விட்டால் தாங்கள் சொன்னதுதான் சரியென்று சிந்திக்கத் தலைப்படுவதோடு(ஏற்கனவே சிறிரங்கன், ஜனநாயகம், இராயகரன் போன்றவர்களுக்கு எதிர்வினை இல்லாததால் அவர்கள் சொல்வது சரியென்றும் புலி அடிவருடிகளின் ஆற்றாமையென்றும் பி.கே சிவகுமார் சொல்லித் திரிந்தது போல) தொடர்ச்சியாக இதுபோன்ற இலவச அறிவுரைகளை / கண்டனங்களை என்போன்றவர்கள் சந்திக்க வேண்டிவருமென்பதாலும்,
இச்சிறு பதிவு.

மீண்டும் சொல்கிறேன்.
சிறிரங்கனின் விசயம் "உண்மையாயிருக்கும் பட்சத்தில்" எனது கண்டனமும் அவருக்கு என் ஆதரவுமுண்டு.
மேற்கொண்டு அதுபற்றிக் கதைக்காமல் பதிவு எழுத வந்த காரணத்தை மட்டும் பார்த்துச் செல்கிறேன்.

இந்த 'உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என் சொற்றொடர் சிலராற் பாவிக்கப்பட்டது சிறிரங்கனின் இரண்டாம் பதிவுக்கு முன்பு என்பதை ஒரு தகவலாகச் சொல்லிவிட்டு மேற்கொண்டு செல்கிறேன்.
யாரும் ஒருவர் சொல்வதை உண்மையென்று அப்படியே நம்பி துள்ளிக் குதிக்கத் தேவையில்லை. அதுவும் இப்படியான விசயங்களின் போது தங்களின் சந்தேகத்தைத் தெரிவிக்க குறைந்தபட்சமாக இப்படியொரு சொற்றொடரைப் பாவிப்பதை எப்படித் தவறென்று சொல்ல முடியும்? அப்படிச் சொல்வதாலேயே அவர்கள் உண்மையில் அனுதாபம் தெரிவிக்காதவர்கள் ஆகிவிடுவார்களா? இப்படிச் சொல்லாமல் நேரடியாக வந்து சொல்பவர்களின் எத்தனை பேர் உண்மையில் சிறிரங்கனில் அக்கறையுள்ளவர்? புலியைச் சாட அருமையானதொரு சந்தர்ப்பமென்று வருபவர்கள் எத்தனை பேர்?

நிற்க, என்போன்றவர்கள் சிறிரங்கன் போன்றோரை எழுந்த மானத்தில் நம்ப முடியாமலிருப்பதற்கும், இப்படியான தருணங்களில் 'இது உண்மையாக இருக்கும் சந்தர்ப்பத்தில்' என்று அடைமொழி போடுவதற்கும் வலுவான காரணங்களுண்டு. அவர் வலையுலகில் வந்தகாலம் முதல் வாசித்துவருபவன் என்ற முறையில் என் பட்டறிவு அதுதான்.

"புலிகளால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் போருக்கு வளர்க்கப்படும் வேள்விக் கிடாய்கள்" என்று சிறிரங்கன் எழுதினார். அதை விமர்சித்த போது, 'உங்களுக்கு எதுவும் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும். உலகம் முழுவதும் எனக்குத் தொடர்பிருக்கிறது' என்றுதான் பதில் வந்தது.
நேரே சம்பந்தப்பட்ட, அறிந்த, பழகிய விசயங்கள் மட்டில் இப்படியொரு பொய்யைச் சொன்னதையும் அதையே கேள்வியின்றி நிறுவியதையும் பார்த்துக்கொண்டு பேசாமலே இருக்க முடிந்தது. முல்லைத்தீவில் ஒரு சிறுவர் இல்லம் சுனாமியில் அகப்பட்டு அனைவருமே கொல்லப்பட்டதை, 'புலிக்காக வளர்க்கப்பட்டவர்கள் அழிந்தார்க்ள' என்று ஒருவித மகிழ்ச்சியோடு செய்தி வெளியிட்ட ஊடகத்தின் தொடர்ச்சியாக்குமென்று நினைத்து விட்டாயிற்று.


மேற்படிச் செய்தியை உண்மையென்று நம்புவதாக நான் நினைக்கும் பொடிச்சி போன்றவர்களால் எந்தக் கேள்வியுமின்றி சிறிரங்கனின் கூற்றை நம்பமுடிவது சரியென்றால், நேரடி அனுபவத்தில் பொய்யென்று வலுவாகத் தெரிந்திருக்கும் என்போன்றவர்கள் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற அடைமொழியைப் போடக்கூடத் தகுதியில்லாமற் போயிற்றோ?

"காயடிக்கப்பட்ட போராளிகள், போராளிகளுக்குக் காயடித்தல்" என்று நானறிய இருமுறை சொல்லியுள்ளார். ஆனால் உந்த 'காயடிப்பு' எண்டதுல ஏதாவது உட்கருத்து, படிமம் எண்டு ஏதாவது கோதாரி இருக்கோ அல்லது நேரடியான அர்த்தம் தானோ எண்டு விளங்காததால (எனக்குக் கொஞ்சம் விளக்கம் குறைவுதான்.) அதைப்பற்றிக் கதைக்காமலே போறன்.

சிறிரங்கன் மட்டுமன்றி எந்தப் புலிவிமர்சகனையும நான் இதே கண்ணோட்டத்திற் பார்க்க வெளிக்கிட்டு பல மாதங்களாகிவிட்டன.
புலியை எதிர்த்துக் கருத்துச் சொல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. அதை வரவேற்கிறேன். ஆனால் ஏன் புளுகு மூட்டைகளை அவிழ்க்க வேண்டும். இது புலியெதிர்ப்புக் கருத்தாளிகளின் வங்குரோத்துத் தனத்தையல்லவா காட்டுகிறது?

தேனி போன்ற வடிகட்டின புளுகுத் தளங்களை விட வலைப்பதிவில் எழுதுபவர்களை நான் வித்தியாசப் படுத்தியே வைத்திருக்கிறேன். (தேனிக்கு எதிர்முனையில் நிதர்சனத்தை வைக்கலாமென்றாலும் நிதர்சனம் தேனியை நெருங்க முடியாதென்றே நினைக்கிறேன்)

"பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் உல்லாசமாகப் படிக்கிறார், அவருக்கு மகேஸ்வரன் தான் விசா எடுத்துக் கொடுத்தது" என்று ஒரு புளுகுப்பதிவு வருகிறது. அதில் ஒருவர், "அது பிழை, அவர் வன்னியில்தான் இருக்கிறார், போராளியாகவே இருக்கிறார்" என்று பதில் போட,
"அவர் வெளிநாடு போனாரா இல்லையா என்பதல்ல பிரச்சினை. அப்படிப் போகலாமா இல்லையா என்பதே இப்பதிவின் விவாதம்"
என்று ஒரு குத்துக்கரணம் அடித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.

சிறிரங்கனின் பதிவிலேயே, "வன்னியன் போன்றவர்களுக்கு மூளை சுகமில்லை, அவர்களைச் சரியானபடி எங்காவது காட்டி வைத்தியம் பார்க்கவேண்டுமென்றும் ,சிறிரங்கனுக்கும் இராகரனுக்கும் தான் மூளை இருக்கிறது, அவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்தவர்கள்" என்றும் ஒருவர் சொல்லிவிட்டு அதைப் பிறகும் வந்து நிறுவுவார்.

"பிரபாகரனின் மனுசி ஐரோப்பா சுற்றுகிறாள்" என்று இன்னொரு பதிவர்.
அண்மையில் கருணா குழு முகாம்கள் தாக்கியழிக்கப்பட்டது சம்பந்தமான பதிவொன்றில் ஒருவர்,
'சும்மா இருங்கோடாப்பா, அங்க பால்ராச்சை சுத்தி வளைச்சுப் போட்டாங்களாம். ஆள் தப்பிறது கஸ்டம்தான்' என்ற பாணியிற் சொல்லிவிட்டுப் போகிறார். தாங்கள் நடக்க வேண்டுமென்று நினைக்கும் சம்பவங்களை உண்மைபோல சிருஸ்டித்து அள்ளிவிட்டுக்கொண்டு போவார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் புளுகுகளை அவர்களே நம்பத் தலைப்பட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

பல சந்தர்ப்பங்களில் தேனி மனோபாவத்திலிருந்து மாற்றமில்லாத பதிவுகள் வரும். தேனி மனோபாவம் என்பதற்குப் பல காட்டுக்களைக் காட்ட முடியுமென்றாலும், சுனாமி நேரத்தில் புலிகளில் 2000 பேர் கொல்லப்பட்டனர் என்று தாங்களே உருவாக்கிச் செய்தி போட்டதும் தொடர்ச்சியா அதைச் சொல்லிக்கொண்டிருந்ததும், பிரபாகரன் இறந்துவிட்டாரென்ற கதையை அரசதரப்பே பின்வாங்கிவிட்ட நிலையிலும்கூட அது உண்மையென்று தொடர்ந்து சொல்லிவந்ததும், பிரபாகரன் நோர்வேத் தூதுவரைச் சந்தித்த பின்னும், தமிழ்ப் புத்திசீவிகளைச் சந்தித்து சுனாமி மீட்புப்பணி பற்றிக் கதைத்த பின்னும், "அது பிரபாகரன் இல்லை. அவரைப்போல ஒருவரை வெளிக்கிடுத்தித்தான் புலிகள் நாடகமாடுகின்றனர்" என்று தொடர்ந்து சொல்லும் மனோபாவத்தைச் சொல்லலாம்.

இவர்களில் யாராவது சிறிரங்கன் சொன்னதைப் போல ஒரு விசயம் சொல்லியிருந்தால் கட்டாயம் என்னிடமிருந்து கண்டனமும் ஆதரவும் வந்திருக்கும். ஆனால் 'இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு அல்லது அதே உணர்வோடுதான் அது வரும்.

மேற்கண்டவர்களில் இருந்து சிறிரங்கனை ஓரளவு தனித்துப் பார்க்கலாம்.
என் பார்வையில் பலநேரங்களில் குழப்பகரமான பார்வையைத் தருவார். ஒருவர் தான் இந்தப் பேரில் எழுதுகிறாரா என்று சந்தேகப்படும் அளவுக்குக் குழப்பங்கள் தருவார். அதாவது வாசிக்கும் பதிவைப்பொறுத்து உடனடியாகவே அதீத உணர்ச்சிவசப்பட்டு (ஆதரவாகவோ எதிராகவோ) கருத்துச் சொல்வார்.
ஒரேயொரு காட்டு:

ஒருமுறை walkman க்கு என்ன தமிழ்ச்சொல் சரிவரும் என்று டோண்டு அவர்களோடு விவாதம் தொடங்கி சில சொற்களைப் பரிசீலித்துக் கதைத்தார். பின்வந்த ஒரு நாளில் நட்சத்திரக்கிழமையில் வசந்தன் பதிவில் தனித்தமிழ் பற்றியும் புலிகளின் தமிழ்ப்படுத்தலை முழுதாக ஆதரித்தும் (ஓரளவு பரப்புரைப் பார்வையிலும்) எழுதப்பட்ட பதிவொன்றில்
"வசந்தன்,இது நீர்தாம் எழுதியதோ?உம்மிடம் இவ்வளவு காட்மான விசயமெல்லாமிருக்கோ?சும்மா படங்காட்டிவிட்டுப்போய்விடுவீரென நினைத்தேன்,ஆனால் நீர் பண்டிதனானாய். 1995இல் இதுபற்றி(தமிழ்ப்படுத்தல்)ஈழமுரசில் எழுதியுள்ளேன்.புலிகளின் தமிழ்ப்படுத்தலில் எனக்கும் உடன்பாடுண்டு.ரயிலுக்குத் தொடரூந்து எனும் வார்த்தை எவ்வளவு பொருத்தமாகவுள்ளது!இவை காலப்போக்கில் ஏற்கப்படும்."
என்று பின்னூட்டம் போட்டிருந்தார்.
நாலோ ஐந்தோ மணித்தியாலம் தான் கழிந்திருக்கும். கறுப்பி, சொற்களைத் தமிழாக்குவதையும், புலிகளின் தமிழாக்கத்தையும் நக்கலடித்து ஒரு பதிவு போட்டிருந்தார். உடனேயே அதில் சிறிரங்கன் பின்னூட்டம் போட்டார். முழுதும் கறுப்பிக்கு ஆதரவாக. அதில் வானொலி, தொலைக்காட்சி போன்ற சொற்களே தேவையற்றவை, நேரடியாக றேடியோ, ரெலிவிஷன் என்றே பாவிக்க வேண்டும் என்று சொன்னார். பிறகு வசந்தன் பதவில் வந்து மதிகந்தசாமி 'றேடியோ' என்று எழுதியிருந்ததைக் குறித்துக்காட்டி, 'பார்த்தீர்களா? றேடியோ எண்டுதான் சாதாரணமாகப் பாவிக்கிறோம். எணடபடியா வானொலி எண்டு சொல்லிறது தேவையில்லை. றேடியோ எணடே பாவிப்போம்' என்றார்.

walkman க்குத் தமிழ்ச்சொல் உருவாக்க விவாதம் நடத்தியவர், புலிகளின் தமிழ்ச்சொல்லாக்கத்தை ஆதரித்துப் பின்னூட்டம் போட்டவர், அதுபற்றி முன்பு ஈழமுரசில் எழுதியதாகச் சொன்னவர், சில மணித்தியாலத்தில் முற்றிலும் எதிர்மாறான கருத்தை - அதுவும் பல்லாண்டுகளாக வழக்கத்துக்கு வந்துவிட்ட வானொலியையும் தொலைக்காட்சியையும் தேவையற்ற சொல்லாக்கமென்று கறுப்பியின் பதிவிற் சொல்கிறார். இரண்டு பதிவிலும் இடப்பட்டவை அவரது கருத்துக்கள் என்பதைவிட இரு பதிவுகளும் அவருக்குள் ஏற்படுத்திய உணர்ச்சிகள் என்றுதான் சொல்லலாம்.

இதைவிட, தமிழ்மண -நந்தவன மாற்றத்தின் போது சிறிரங்கன் அடைந்த குழப்பம்; தொட்டதுக்கெல்லாம் தன் வலைப்பதிவை முடக்குகிறார்கள், தூக்குகிறாரகள், தனக்கெதிராகச் சதி செய்கிறார்கள் என்று பதிவுகள் போட்டது; பொடியன்கள் பிரச்சினையில் எல்லோரும் கோமாளிகளாகவும் நகைச்சுவையாகவும் கருதிக்கொண்டிருக்க சிறிரங்கன் மட்டும் குய்யோ முறையோ என்று குதித்தது; பின் டக்ளஸ் - இதயவீணை - பொடியன்கள் என்று ஒரு தொடர்பைக் கொண்டுவந்தது என்று பலவற்றுக்குள்ளால் இப்புரிதலைச் சொல்லிச் செல்லலாம்.

இவை சிறிரங்கனை இழுக்காகவல்ல. மாறாக இப்படியாகவற்றுக்குள்ளால் தான் சிறிரங்கன் பற்றிய என்போன்றவர்களின் புரிதல் தொடர்கிறதென்பதைச் சுட்டவே.

இப்படியாக நான் புரிந்து வைத்திருக்கும் சிறிரங்கனிடமிருந்து, (மற்றவர்கள் அப்படித்தான் புரிந்தார்களா என்று தெரியாது) வெளிவரும் எந்தக் கருத்தையும் இரட்டிப்புக் கவனத்தோடே எதிர்கொள்வேன், அது எனக்கோ என் தரப்புக்கோ ஆதரவானதென்றாலுங்கூட.
****************************

இங்கு நானெழுதிய எதுவும் சிறிரங்கனை மட்டந்தட்டவோ, கேலி செய்யவோ இல்லை. என்போன்றவர்களின் புரிதல் எப்படியாக இருக்கிறதென்பதைச் சுட்டவே. அதுகூட 'உண்மையாயிருக்கும் பட்சத்திலே' என்ற ஒற்றைவரி பாவித்தவர்கள் மேல் சடுதியாக வைக்கப்பட்ட விமர்சனத்தாலேயே.

இதில் சிறிரங்கன் பொய் சொல்கிறார் என்றுகூடச் சொல்லத் தேவையில்லை. இத்தகவலில் இருக்கக் கூடிய தவறுகள், இயல்பாகவே சிறிரங்கனுக்கிருக்கும் சடுதியாக உணர்ச்சிவசப்படும், குழப்பமடையும் தன்மையால் வந்திருக்கக் கூடிய பயம் என்பவற்றையெல்லாம் ஒரு சகவலைப்பதிவர் யோசிக்கலாம். அதைவிட இயல்பாக இருக்கக்கூடிய சந்தேகங்களும் சேரும்.

இந்த நிலையில், சிறிரங்கனின் இரண்டாவது பதிவு வருவதற்கு முன்னர் 'இது உண்மையாயிருக்கும் பட்சத்தில்' என்ற அடைமொழியோடு ஒரு பதிவர் தன் கண்டனத்தையும் ஆதரவையும் தெரிவிப்பதில் என்ன பெரிய தவறைக் கண்டீர்கள்? 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒப்பாரி வேறு. இப்படிக் கேட்டதுக்கூடாக சிறிரங்கனின் கூற்றுமீது நான் சந்தேகம் கொள்ளத்தக்க காரணங்களாகக் கருதியவை மட்டில், நீங்கள் சிறிரங்கனின் கூற்றுக்களை உண்மையென்று முழுமனதாக நம்புவதாக எடுத்துக்கொண்டு, உங்களிடம் அவைபற்றிக் கேட்டு, இறுதியில் 'இது எங்கே போய் முடியுமோ?' என்ற ஒரு கேள்வியோடு முடிக்கலாம். சிறிரங்கன் மட்டுமன்றி அதே வகைகுள் நான் அடக்குபவர்களின் கருத்தையும் தூக்கிக்கொண்டு கேட்கலாமோ? அப்படியென்றால்,

"அண்மைக்காலத்தில் இராணுத்தாற் கொல்லப்படுபவர்கள், புலிகளாகவோ புலிகளின் செயற்பாட்டாளராகவோ அடையாளங்காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு தெரிந்தெடுக்கப்படடே கொல்லப்படுகிறார்கள்"
என்ற கருத்து முதற்கொண்டு நீங்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.
இப்படியே மாறிமாறி ஒராளை ஒராள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?
****************************
இதில் சம்பந்தப்பட்டவர்கள் வலைப்பதிவுலகுக்குப் பழையவர்கள் என்றபடியால் சுட்டியெல்லாம் போட வேண்டியதாக நான் நினைக்கவில்லை.

Labels: , ,


Thursday, June 23, 2005

குழந்தைகளின் உலகம்.


“இந்த மரத்தின்ர விளிம்புகள் பச்சை நிறமா இருக்கு. இது இங்க நிண்டபடி வானத்துக்கு உயந்துகொண்டு போகுது. காத்து கடந்துபோகேக்க அதோட ரகசியம் பேசுது.
‘எங்கெங்க போனனீயெண்டு எனக்குச் சொல்லு; என்னென்ன கண்டனீ; என்னால அரக்க ஏலாது; ஏனெண்டா என்ர வேருகள் என்னை நிலத்தோடக் கட்டிப்போட்டிருக்குதுகள்; நெடுக இஞ்சதான் நிக்கவேணும்' எண்டு அந்த மரம் காத்திட்ட கேக்குது.
அதுக்குக் காத்து மரத்தோட ரகசியமா கதைக்கும்.
‘நான் ஒரு இடத்தில நிக்கமாட்டன்; என்னால அப்படி நிக்க ஏலாது; நான் போய்.. போய்.. போய்க் கொண்டேதான் இருப்பன்; உன்னோட நிண்டு கதைக்க ஏலாது’
எண்டு சொல்லிப்போட்டு சிரிச்சுக்கொண்டே போகுது.
அதுக்கு மரம்,
‘உன்னோட வர விருப்பமாயிருக்கு; இப்பிடியே நிக்க எரிச்சலாயிருக்கு; நீ எவ்வளவு சந்தோசமாயிருக்கிறாய்@; ஆனா நான்….ஓ’
எண்டு பெருசா அழுகுது.”

இது சிறுவனொருவனின் மரமொன்றைப்பற்றிய விவரணம். இன்று சஞ்சிகையொன்றைப் படித்தேன். அதில் “மூடுபனிக்குள் ஒரு தேடல்” என்ற பெயரில் தமிழாக்கத்தொடர் நவீனமொன்று வெளிவருகிறது. அதன் ஐம்பதாவது அத்தியாயம் தான் நான் வாசித்த பகுதி. அதில் கதைசொல்லி ஒரு சிறுவனோடு உரையாடுகிறார். வாசித்தஅளவில் அவன் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாயிருக்க வேண்டும். அவன் பெயர் ‘டிப்ஸ்’.
ஜேன், ஹெடா, ஜேக், மில்லி, போன்ற பாத்திரங்கள் வருகின்றன.

டிப்ஸ் குறிப்பிட்ட அந்த மரத்தை மிகவும் நேசிக்கிறான். தோட்டக்காரன் ஜேக் அவனுக்குச் சொல்கிறான்,
‘இது 200 வருசமா இஞ்ச நிக்குது, ஆனா ஒருத்தரும் உன்னைப்போல இந்த மரத்தை நேசிக்கேல’.
அம்மரத்தின் கிளைகள் வீட்டுச் சுவரைத் தொடுகிறது என்று அக்கிளைகளை வெட்டிவிடும்படி டிப்ஸின் தந்தை தோட்டக்காரனைக் கேட்க, அவனும் கிளைகளை வெட்டுகிறான். தன் யன்னலின் பக்கமிருக்கும் கிளையை வெட்ட வேண்டாமெனக் கெஞ்சும் டிப்சுக்காக ஜேக் (தோட்டக்காரன்) அதை வெட்டாமல் விடுகிறான். ஆனால் தந்தை விடாப்பிடியாக நிற்க, ஜேக்,
‘கிளை சுவரில் தேய்க்காதவாறு, அனால் டிப்ஸ் எட்டித் தொட்டு விளையாடக் கூடியதாக விட்டு வெட்டிவிடுவாதாகச்’ சொல்கிறான்.
ஆனால் தந்தை விடாப்பிடியாக அக்கிளையை முழுவதுமாக வெட்டுவிக்கிறார்.

அந்தக் கிளை தன்னைத் தொடுவதாலேயே (கவனிக்க: தான் கிளையைத் தொடுவதாகச் சிறுவனாற் சொல்லப்படவில்லை) தன்தந்தைக்கு எரிச்சல் என்று தனக்குள் அனுமானித்துக்கொள்கிறான். தான் டிப்சுக்காக நிறைய விளையாட்டுப் பொருட்கள் வைத்திருப்பதாச் சொல்லி அவற்றைக் கொடுக்கிறார் தந்தை. அத்தனையும் செயற்கை விளையாட்டுப் பொம்மைகள். முதற்பார்வையிலேயே அவற்றில் வெறுப்பையும், மரக்கிளை மீதான நேசிப்பையும் சிறுவன் வெளிப்படுத்துகிறான். வெட்டப்பட்ட அக்கிளைநுனியை ஜேக் சிறுவனிடம் கொடுக்கிறான்.

இவ்வளவும் போன வருசம் நடந்ததாகவும் தான் இப்போதும் அக்கிளையை வைத்திருப்பதாகவும் அதை வேறு யாரும் தொடவிடுவதில்லையென்றும் கதைசொல்லிக்குச் சொல்கிறான் சிறுவனான டிப்ஸ். (சமயத்தில் அதைத் தொட்ட யாருக்கோ கடித்துவிட்டதாவும் சொல்கிறான்) அவன் வெளியுலகத்தையும் அம்மரத்தையும் ரசித்த அந்த யன்னலும் முற்றாகப் பூட்டப்படுகிறது.

சிறுவனின் நெருங்கிய நண்பன் தோட்டக்காரனான அந்த ஜேக் மட்டுமே. சிறுவனே சொல்கிறான்,
“ஜேக்கை விட எனக்கு நண்பர்கள் இல்லை. மற்ற மனுசரவிட எனக்கு மரங்களும் காக்கா, குருவி போல பறவையளுந்தான் சிநேகிதங்கள்.”

அத்தனையும் குழந்தை மனதொன்றில் பார்வையிலேயே சொல்லப்படுகிறது. அவன் ஒரு பாட்டை முனுமுணுக்கிறான். இது எங்க படிச்சனியள்? என்று கேட்கப்படும் கேள்வியில்தான் அனைத்தும் தொடங்குகிறது. வழமையாக குழந்தைகள் போலவே, ரீச்சர் பற்றித் தொடங்கி அப்படியே சுத்தி மரம்பற்றி, ஜேக் பற்றி, கிளை வெட்டப்பட்டது பற்றியென்று எல்லாக் கதையும் வருகிறது. இடையில் கதைசொல்லி வேறு கதைக்குத் தாவினாலும், சிறுவன் மரத்தைப்பற்றியே கதைக்கிறான்.

இது எந்தப் புத்தகத்தின் தமிழாக்கமோ தெரியவில்லை. மூலப்புத்தகத்தின் பெயர் போடப்படவில்லை. மொழி பெயர்ப்பவர், வின்சன்ட் ஜோசப். இவர்தான் எக்ஸோடஸ் எனும் இஸ்ரேலியர் பற்றிய புத்தகத்தைத் தமிழில் ‘தாயகம் நோக்கிய பயணம்’ என்று மொழியாக்கம் செய்தவர். இவரைப்பற்றி முன்பும் மேலோட்டமாக எழுதியுள்ளேன். இந்த மொழியாக்கத்தில் அச்சிறுவனின் சிந்தனைகள், மொழி நடை, கதை சொல்லும் பாங்கு என்பன நன்கு பிடித்துள்ளது. தங்களுக்குள் பெரியளவு வேற்றுமைகள் இல்லையெனவும், பெரியவர்களிடத்தில் பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாக உள்ளது என்பது போலவும் ஓரிடத்தில் சொல்கிறான். அவன் பாவிக்கும் வார்த்தைகள், ‘வளந்த பொம்பிளையள், வளந்த ஆம்பிளையள்’. இது ஓர் உளவியல் நவீனம் என்று தலைப்புப் போடப்படுகிறது. நவீனம் முழுவதும் குழந்தைகளின் உளவியல்தான் நிறைந்திருக்குமென்று படுகிறது.

இலையுதிர்க் காலத்தில் உதிராமல் மீதியாயிருந்த ஓர் இலை, தன்னை ஏன் ஒருத்தரும் கூட்டிக்கொண்டு போக வரேல எண்டு அழுகுதாம். காத்து வந்து அந்த இலையை உலகம் முழுக்கக் கூட்டிக்கொண்டு போகுதாம். கடசியா தன்ர முற்றத்திலயே வந்து இறக்கிவிட்டுட்டுப் போச்சுதாம். நல்லாக் களைச்சுப்போன அந்த இலையை எடுத்துப் பத்திரப்படுத்தி வச்சிருக்கிறதாக கதைசொல்லிக்கு அவன் சொல்கிறான். மேலும் அந்த இலை எங்கெங்கெல்லாம் போய் வந்திருக்குமெண்டு யோசிச்சு அந்தந்த நாடுகளப்பற்றியெல்லாம் தான் அறிந்துகொள்வதாகவும் சொல்கிறான்.

குழந்தைகளின் கதையாடல் நன்றாக இருக்கிறது. ஒரு மழலை கதைக்கும் போது ஆசையாகக் கேட்டுக்கொண்டிருப்போமே, அதே சுவாரசியத்தோடு இந்தப் பகுதியைப் படித்தேன். இது அந்தத் தொடரின் ஐம்பதாவது பகுதி. முழுவதும் படிக்கக் கிடைக்காதா என்று ஏக்கமாயிருக்கு.

இது வன்னியிலிருந்து வரும் ஈழநாதத்தின் வார சஞ்சிகையான வெள்ளி நாதத்தில் வந்திருந்தது. வெள்ளி நாதத்தைப் பார்க்கும்போது மனத்துக்கு இனிமையாக இருக்கிறது. மிகத்தரமான வடிவில் வருகிறது. நிறைவான ஆக்கங்கள், எந்த வியாபார சமரசமுமில்லாமல் வெளிவருகிறது. இதுபற்றிக்கூட நேரமிருந்தால் எழுத வேண்டும்.

Labels: , , ,


Tuesday, June 14, 2005

ஈழப்போராட்டக் காரணிகள் -2.

மாணவர்கள் மேல் பாய்ந்த அச்சட்டம் தான் தரப்படுத்தல் சட்டம்.
இச்சட்டத்தின்படி, பல்கலைக்கழகம் நுழைய வேண்டுமானால் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது எல்லாப்பாடங்களுக்கும் பொருந்தும். கீழேயுள்ள அட்டவணையில் காட்டப்படும் புள்ளிகள் 1970 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் பல்கலைக்கழகம் புகவேண்டிதற்காகப் பெற்றிருக்க வேண்டிய புள்ளிகள்.



இதன்படிப்பார்க்கும்போது எவ்வளவு தூரம் தமிழ்மாணவர்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்பது புரியும். பின்னர், இத்தரப்படுத்தல் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டதாக அறிகிறேன். இன்றிருக்கும் முறை தொடக்கத்திலிருந்து வேறுபட்டுள்ளது.


எழுபதுகளின் ஆரம்பத்தில் சத்தியசீலன் தலைமையில் தமிழ் மாணவர் பேரவை தொடக்கப்பட்டது. அது படிப்படியாக மாற்றமடைந்து பல இயக்கங்கள் உருவாகின. 1972 இல் புதிய தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு உருவானது. பின் அது 1976 இல் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரைப் பெற்றது.

ஆரம்பகாலங்களில் ஆயுத வழியிற்போராடப் புறப்பட்டவர்களில் முக்கியமானவர் பொன்.சிவகுமாரன். தான் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் சயனைட் உட்கொண்டார். பின் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் இறந்தார். சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட முதலாவது போராளி பொன்.சிவகுமாரன் ஆவார்.

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tamilnation.org/indictment/indict010.htm
http://www.tamilnation.org/selfdetermination/tamileelam/7409tulfmemorandum.htm
http://www.tamilnation.org/indictment/indict033.htm

இப்பதிவில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Labels: , , ,


Monday, June 13, 2005

வழமைகள் பொய்க்கும் புள்ளி.


அயுத உதவிகளும் ஈழத்தவனின் பெருமையும்.

வணக்கம்!
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற தொனியில் வலைச் சண்டை நடந்துவருகிறது. பிறகு வழமைபோலவே வேறு திசை நோக்கிச் செல்கிறது. அப்பதிவைப்பற்றி வாதிக்க எதுவுமில்லை. வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை. (தான் சரியாக வெளிப்படுத்தவில்லையெனச் சொல்லி அவர் தப்பிக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் சரியாகவே சொல்லியுள்ளார், எது தனது நிலைப்பாடு என.) சரி அதைவிட்டு நான் எழுதவந்த விசயத்துக்கு வருகிறேன். அப்பதிவைப் பார்த்தபோது, எனக்கு எழுந்த கருத்தொன்றைப் பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம்.

வழமையாக 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியில் கடந்தகால உலக நடப்புக்கள் இருந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இத்தொனியைத் தெளிவாகக் காணலாம். ஏறத்தாள முழு விடுதலைப் போராட்டங்களும் (வெற்றி பெற்ற, பெறாத) பிற சக்தியின் அல்லது சக்திகளின் உதவியுடன் செயற்பட்டுள்ளன. (சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் வெளியில் தெரிந்தவரை இல்லை)

எரித்திரியப் போராட்டத்துக்கு ரஸ்யாவின் ஆதரவு. (இது பின்னர் எதிர்ப்பாக மாறியதும் வரலாறு.)
கியூபா அமெரிக்காவை எதிர்த்த போது ரஸ்யாவின் ஆதரவு.
வியட்கொங்குகளுக்கு சீனா உள்ளிட்டவைகளின் ஆதரவு.
ஐரிஸ்களுக்கு அமெரிக்கச் சக்திகளின் பின்னணி.
ஏன் இந்தியச் சுதந்திரப்போராட்டத்துக்கு (சுபாஸ் சந்திரபோசின்) யப்பான், இத்தாலி முதலிய வெளியாரின் ஆதரவு.
மேற்குறிப்பிட்டவைகள் ஆயுத, இராணுவ, பொருளாதார உதவிகள்.

இவையாவும் போராடுபவர்கள் மேல் கொண்ட அன்பினால் அன்று. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியினால் தான். இது முஹாஜுதீன்கள், தலிபான்கள் முதற்கொண்டு ஒசாமாபின்லேடன் வரைகூடப் பொருந்தியது. இது நாடுகளுக்கு உதவுவதிலும் உண்டு. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இக்கொள்கை எதிர்மாறாகக் கடைப்பிடிக்கப்டுகிறது. அதாவது எதிரிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தரப்புக்கு உதவுவது. முதன்மையான எதிரி மட்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவினான், எதிரியின் எதிரி நண்பன் என்ற தொனியை வைத்து. ஆம் பிரேமதாசா தான் அவர். பிரேமதாசா புலிகளுக்கு உதவியதைவிட இப்படியான நோக்கத்தை வைத்து வேறு சந்தர்ப்பங்கள் இல்லை. இங்கே இந்தியா ஆயுதங்களும் பயிற்சிகளும் தந்ததைச் சொல்லலாம். ஆனால் அது தொடர்ச்சியான நிகழ்வாய் இருக்கவில்லை. மேலும் ஆயுதங்களைத் திருப்பி வாங்கிவிட்டதாலும் இது பொருந்துமா என்ற கேள்வி உண்டு. எனினும் இலங்கையைத் தன் காலடியில் விழவைக்க இந்தியா ஆயுத உதவிகளும், பயிற்சிகளும் கொடுத்து குழுக்களை வளர்த்துவிட்டது என்பது உண்மை.

இங்கே எல்லா எதிரிகளும் சேர்ந்து ஈழத்தமிழருக்கெதிரான யுத்தத்துக்கு உதவினார்கள், உதவுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை முதன்மைப் பங்காளிகள். எப்போதும் இரு துருவங்களான ரஸ்யாவும், இஸ்ரேலும் இவ்யுத்தத்தில் தீவிரமாக உதவி வழங்குபவர்கள். சிறிலங்காவின் வான், மற்றும் கடல் படை வலிமை இவ்விரண்டு நாடுகளிலுமே பெரிதும் தங்கியுள்ளது. போதாததுக்கு அமெரிக்கா, பிரிட்டன் என்பனவும் உள்ளடக்கம். குறிப்பாகப் புலனாய்வு வலைப்பின்னலில் யோசிக்காமல் அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து செயற்படுகின்றனர். இது இப்படியிருக்க எந்த நாடும் தமிழர் தரப்புக்கு உதவிகள் வழங்குவதில்லை.

ஈழப்போராட்டமென்பது இத்தனை எதிரிகளையும் சமாளித்துத்தான் வளர்ந்தது; வளர்கிறது. புலிகளின் கடல் வழி வினியோகத்தைத் தடுக்க சர்வதேச அளவில் முக்கிய நாடுகள் புலனாய்வு வழியிலும், கடலில் இந்தியா தன் நேரடிக் கண்காணிப்பிலும், நேரடி மோதலாலும் உதவகின்றன. இந்தியாவால் நேரடியாக மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் இதற்குச் சான்று. (கிட்டு உட்பட). தனியே சிறிலங்காவின் படைப்பலமோ பொருளாதார பலமோ ஈழப்போராட்டத்துக்கு ஒரு பொருட்டேயன்று என்பது வெளிப்படையான உண்மை.

எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் தமிழரை அழிக்க உதவி செய்கின்றனர். அதை வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனையாயிருக்கிறது. இங்கே வலைப்பதிவிலும் அதுதான் நடக்கிறது. பலரின் ஆழ்மன எண்ணங்கள் அவர்களே அறியாமல் வெளிப்படுகின்றன.

வங்காளதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பரப்புரை செய்யப்படுகிறது. ஏன் கொடுத்தது என்பதற்கு விடை, அம்மக்கள் மேல் கொண்ட பாசத்தினாலாம். ஆனால் ஏன் கொடுத்தோம் என்பதற்கான சரியான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் ஒருவரின் வலைப்பதிவில் இப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
"பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த" என்று விழிக்கிறார். நாம் போட்ட பிச்சையில் பிறந்த வங்கதேசம், நாம் போடும் கட்டளைகளைக் கேள்வியின்றி செய்ய வேண்டுமென்ற தொனியில் அவரது கருத்து இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத வகையில் பலரின் எண்ண ஓட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.

ஈழத்தவரைப்பார்த்தும் இப்படித்தான் சொல்ல நினைத்தீர்களோ தெரியாது. எனினும் ஆண்டாண்டுக்கும் அந்த இழிச்சொல்லைக் கேட்பதிலிருந்து தப்பிவிட்டோமென்ற நிம்மதியுண்டு. எந்த நாட்டினதும் உதவியுமின்றி, சொந்த மக்களினதும் புலம்பெயர்ந்தவர்களினதும் பலத்தால் மட்டுமே வளர்ந்த போராட்டம் என்று பெருமைப்பட எங்களுக்கு உரிமையுண்டு. குறிப்பாக பக்கத்து நாடுகளே அஞ்சும் வண்ணம் (இவற்றில் பெருமளவு மக்களைப் பேய்க்காட்ட வடிவமைக்கப்பட்ட அச்சங்கள்) கடல், வான் படைகளைக் கட்டமைத்த போராட்டம் என்பதில் பெருமையும் ஆணவமும் கொள்ள எங்களுக்கு இடமிருக்கிறது.

Labels: , ,


Friday, May 27, 2005

நீதி வென்றது???

பிந்துனுவெவ படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் விடுதலை.

"இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? "

சிறிலங்காவில் பிந்துனுவெவ எனும் இடத்தில் சிறைச்சாலையொன்று உள்ளது. அங்கு சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 27 இளைஞர்கள் ஒரே இரவில் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 17 வயதுக் “குழந்தையும்” அடங்கும். அதில் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 41 பேரில் நால்வருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 2003 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. நேற்று அவர்களின் தண்டனைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. சட்டத்தரணிகளின் கூற்றுப்படி இனி மேல்முறையீடு செய்ய ஏதுநிலைகளில்லை. ஐ.நா. வில் மனுச்செய்யலாம் என்கிறார்கள். எதிர்பார்த்த முடிவுதான்.


இதுபோலவே ராஜபக்ச எனும் இராணுவ வீரனும் அவனுடன் சேர்ந்த மேலும் மூவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைவழக்கில் இத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னாலுள்ள மற்ற விதயங்கள் அப்படியே அடங்கிப்போய்விட்டன. அந்த இராணுவ வீரன் “தன் மேலதிகாரிகள் கொன்ற 400 பேர் வரையான சடலங்ளை தான் செம்மணியிற் புதைத்திருக்கிறேன்” என்று நீதிமன்றில் வைத்துச் சாட்சியம் சொல்லியும், எந்தப் பயனுமில்லை. இன்றுவரை யாழ்ப்பாணத்தில் 1996 இல் இராணுவத்தாற் கைதுசெய்யப்பட்டுக் காணாமற்போன எழுநூறு வரையான இளைஞர் யுவதிகளின் முடிவுகள் தெரியாது. அவர்களில் ஆக 16 பேர் மட்டும் கொல்லப்பட்டு விட்டார்களென்று ஆணைக்குழு கூறியுள்ளது. (மிகச்சாதாரணமாப் போய்விட்டது அந்தக்கொலைகள்) எட்டு வருடங்களாக அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறவோ அதைப்பற்றி அரசுக்கு அழுத்தங்கொடுக்கவோ எவரும் தயாரில்லை. மனித உரிமை பேசும் அமைப்புக்களும் நாடுகளும் வாளாவிருக்கின்றன. ஏறத்தாள அனைவரும் இறந்துவிட்டனர் என்ற நிலைமைக்கு அந்தப் பெற்றோர்கள் வந்து விட்டனர்.
வன்னியில் மன்னார்கடலிலும் முல்லைத்தீவுக் கடலிலும் அடைந்துவந்த சடலங்கள் சிலவற்றைக் கண்டெடுத்த போதே எமக்குப் புரிந்து விட்டது, அவை யாழில் கைதுசெய்யப்பட்ட சிலரினதுதான் கடலில் கொண்டுபோய் வீசப்பட்டிருக்கின்றனவென்பது. அப்பட்டமான ஒரு மனித அழிவை எல்லோரும் வேடிக்கை பார்த்துநிற்கும் கொடுமை இது. இதற்கு அரசியல் வழியில் நீதிகிடைக்குமென்பதெல்லாம் வெறும் பகற்கனவு. அவர்கள் கொல்லப்படவில்லையென்றால் எங்கே வைத்திருக்கிறார்கள்? எழுநூறு பேர் என்பது மிகச்சிறிய கணக்குப்போலும். அல்லது ஏதாவது படித்துப் பட்டம்பெற்றவர்களாயும் மனித உரிமைபற்றிக் கதைத்தவர்களாயுமிருக்க வேண்டும்போலும். இல்லை புலிகளை எதிர்த்து ஏதாவது கதைத்திருந்தால் இவ்விடயத்தில் ஏதாவது செய்யலாமென்று நினைக்கிறார்கள்போலும்.

இப்போது பிந்துனுவெவ படுகொலைகள் பற்றிய தீர்ப்பு இன்னொருமுறை நீதியை நிலைநாட்டியிருக்கிறது. அப்பட்டமான ஒரு படுகொலையைச் சாதாரணமாக முடித்துவிட்டார்கள். சிறைச்சாலைக்குள்ளேயே அனைவரும் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார்கள். தப்பிய பலர் வாக்குமூலமும் கொடுத்துவிட்டார்கள். நீதிமன்றில் குற்றவாளிகளில் நால்வருக்கு மரணதண்டனையும் விதித்துவிட்டார்கள். இப்போது அனைத்தையும் திருப்பிவிட்டார்கள். அப்போ அந்தக் கொலைகளுக்கு முடிவென்ன? எதுவுமில்லை. ஆத்திரமடைந்த சில பொதுமக்களால் அந்தப் 27 பேரும் கொல்லப்பட்டார்கள். அவ்வளவே. இதில் குற்றம்சாட்டவோ தண்டனையளிக்கவோ எதுவுமில்லை.

2003 இல் இந்நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்ட போது ஈழநாதத்தில் 'பிரபுத்திரன்' எழுதிய பத்தியில் “இத்தண்டனை வெறும் கண்துடைப்புத்தான். இன்னும் இருவருடத்தில் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான பேரங்கள் பேசி முடிந்தபின்புதான் இத்தண்டனைகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தண்டனை மூலம் தமிழர்கள் மேல் மேலும் அரசபயங்கரவாதம் தன் கோரமுகத்தைக் காட்டப்போகிறது.” என்று எழுதப்பட்டிருந்தது. எவ்வளவு சரியான வார்த்தைகள்? 90 இல் காரைநகர் கற்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ் இளைஞன் ஒருவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது சிறிலங்கா நீதிமன்றம். அவர்களின் நோக்கம் தெளிவானது. அதைப்பார்த்து வாய்மூடியிருக்கும்- ஆனால் ஒருதரப்புக்கு மட்டும் மனிதநேயத்தையும், ஜனநாயகத்தையும் போதிக்கும் சக்திகளின் நோக்கமும் தெளிவானது.

நீங்களே சொல்லுங்கள், இத்தனைக்குப்பிறகும் ஒருவனுக்கு (அவன் அடக்கட்படும் தமிழனாயிருக்கும் பட்சத்தில்) ஜனநாயகத்திலும் நீதியமைப்பிலும் நம்பிக்கை வருமா? பிந்துனுவெவப் படுகொலைக்கு என்ன முடிவு?

நீதிமன்றம் அவர்களைத் தண்டனையிலிருந்து மீட்டுவிடலாம். ஆனால் அவர்களால் மீள முடியாது. எங்காவது வெளிநாடு சென்று வாழ்வது உத்தமம். இன்றேல் தண்டனை அவர்களைத் தேடிவரும். இதற்கெல்லாம் சட்டம் சரிவராது என்றால் சன்னம்தான் சரிவரும் என்று முடிவெடுப்பதில் தவறென்ன? அந்த நிலைமையைத் தோற்றுவித்தவர் யார்? தோற்றுவித்துக்கொண்டிருப்பவர்கள் யார்?

இதே சிறைப்பொறுப்பதிகாரி ‘இனந் தெரியாதவர்களால்’ கொல்லப்படும்போது பல உலக நாடுகளும் அமைப்புக்களும் கூக்குரல் இடப்போவது மட்டும் உறுதி. அவர்களுக்கென்ன வாங்கும் சம்பளத்திற்குக் கூப்பாடு போடவேண்டியது கடமை. இதே சம்பவத்திற் கொல்லப்பட்ட 17 வயதுக் “குழந்தை” பற்றி எந்த அக்கறையும் அவர்களுக்குத் தேவையில்லை. ஆனால் இதே காரணிகளிலிருந்து தன்னையும் தான் சார்ந்தவர்களையும் காக்க ஆயுதமேந்தும் “குழந்தை” மட்டுந்தான் அவர்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். ஏனெனில் அவர்கள் உயிரை இழப்பதொன்றும் பெரிய விசயமில்லை. தமது 'சிறுபராயத்தை' இழக்கிறார்கள் என்பதுதான் பிரச்சனை. அப்படித்தான் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. (இன்னும் குழந்தை என்ற சொல்லைத் தமிழில் இவர்களைக் குறிக்கப் பாவித்துக்கொண்டிருக்கும் பண்டிதர்களைக் குறித்தும் கேட்கிறேன்)

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.abc.net.au/ra/news/stories/s1379012.htm
http://www.news.tamilcanadian.com/news/2000/12/20001203_5.shtml
http://www.tamilcanadian.com/pageview.php?ID=2105&SID=257
http://www.tamilcanadian.com/page.php?index=342
http://www.news.tamilcanadian.com/news/2001/09/20010928_1.shtml

Labels: , ,


Saturday, May 21, 2005

J.V.P.--- சமகாலப் பார்வை.

தம்கருவிலே தம்மையே கருவறுக்க தாமே கருக்களைக் காவுவோர் -2 -
க.வே.பாலகுமாரன்-

J.V.P. புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது.

இதன் முதற்பாகம் இங்கே.

இப்போது தமது மூன்றாவது எழுச்சிக் காலகட்டத்துள் ஜே.வி.பியினர் பிரவேசித்துள்ளனர். 1971ஆம் ஆண்டு காட்டிய அதே முனைப்போடு அதே தமிழ்மக்கள் மீதான காழ்ப்போடும் அன்றும் அப்போதிருந்ததைவிட உறுதியான கட்டமைப்போடும் அதிகரித்த செல்வாக்கோடும் இன்று அவர்கள் செயற்படுகின்றனர்.

நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியல் மயப்பட்டும் சில விடயங்களிற்கு மிகச் சரியான நிலைப்பாடோடும் அவர்கள் செயற்படுவதாக மாமனிதர் சிவராம் போன்றோரே கருதுமளவு அவர்கள் தீவிரமாக இன்று இயங்கி சிங்களத்தின் மரபுசார்ந்த கட்சிகளை முடக்கிவிட்டுள்ளனர். எனவே இன்று எழுந்துள்ள கேள்வி இம்முறையாவது அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவார்களா? இல்லவே இல்லை.

அவர்கள் ஒரு அரசியல் விபத்து. அவர்களைப் பார்த்துக் கலங்கவோ, கற்கவோ என்னவுள்ளது? என கேட்பாருமுள்ளனர். எனவே உண்மை நிலையென்ன? இலக்கை அடைவார்களா? அல்லது ஏலவே இரண்டுதடவை நிகழ்ந்தது போன்று விபரீதத்தினை உருவாக்கப் போகின்றார்களா? வரலாறு சொல்லும் செய்தியென்ன? ஜே.வி.பியின் வரலாற்றினை எழுதியோர் சொல்வதென்ன?

'சிறிலங்கா: ஒரு தோற்ற புரட்சி" என்கிற நூலில் பயங்கரவாதம் அதன் முறியடிப்பு என்கிற மேற்குலகின் மிக விருப்பத்திற்குரிய துறைகளில் ஈடுபட்டு பிரபலமானவரான றோகன் குணரத்தின ஜே.வி.பியின் 1989ஆம் ஆண்டு வன்முறைக்காலம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'சர்வதேச அளவில் 20ம் நூற்றாண்டின் ஈவு இரக்கமற்ற குழுக்களில் ஜே.வி.பியும் ஒன்று. சிறிலங்காவின் மக்கள் வாழ்விலே முன்னெப்போதுமில்லாத அச்சத்தையும் ஒப்பிட முடியாதளவு பயங்கரவாதத்தையும் அது செலுத்தியது." அப்படி என்னதான் ஜே.வி.பி செய்தது என்கிற கேள்விக்கான பதில் மிகுந்த அவலத்தை, கலக்கத்தினை, வெறுப்பினை, அச்சத்தை ஏற்படு த்தவல்லது.

அரசியல் அதிகாரத்தினைக் கைப்பற்ற தடம்புரண்டு தயக்கமின்றி எதனையும் செய்ய ஜே.வி.பி ஆயத்தமாக இருப்பதையும் இருக்கிற அதிகாரத்தை காப்பாற்ற எந்த அளவு அரச பயங்கரவாதத்தினையும் பிரயோகிக்க மரபுசார் சிறிலங்கா அரசியலாளர் எவ்விதத் தயக்கமுமின்றி செயற்படுவர் என்பதையும் 1989ம் ஆண்டின் வரலாறு நிரூபித்தது. எமக்கு மீண்டும் நினைவிற்கு வருவது "வரலாற்றின் அதிசயம் என்னவென்றால் அது திரும்பத் திரும்ப நிகழ்வதுதான் 'திரும்பிப்பார். எதிர்காலமென்று ஒன்றில்லை. ஏனெனில் இந்தக் காலமே எதிர்காலமாக உன்முன் வந்து நிற்கின்றது" என்கின்ற கூற்றுக்களே.

எனவே இம்முறை நடக்கப்போவது என்னவென்பதை நாம் இப்போதே உணர்கின்றோம். இத் துன்பியல் நிகழ்வுகள் சிங்கள மக்கள் மீது இடியாக இறக்கப்போகும் பேரிடர்களை நினைத்து உண்மையிலே நாம் வேதனைப்படுகின்றோம். இவ் வரலாற்றினை மீளவும் வாசிக்கும்பொழுதும் எழுதும்பொழுதும் இழக்கப்பட்ட, இழக்கப்படுகின்ற வாய்ப்புக்களையெண்ணி மேலும் மனத்துயர் அடைகின்றோம். ஏலவே நடந்த கிளர்ச்சிகளின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. 1971ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சியின் விளைவுகள் 15,000 உயிர்கள் இழக்கப்பட்டதும் இலங்கையின் பொருண்மியம் பின்னடை வைச் சந்தித்ததும் 400 மில்லியன் பெறுமதியான அரசாங்க சொத்துக்கள் அழிக்கப்பட்டதும்தான்.

மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஜே.வி.பியினர் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின் 390 பேர்வரை சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் றோகண உட்பட ஐவருக்கு ஆயுட்கால தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கதை இத்தோடு முடியவில்லை. 1988, 89களில் ஜே.வி.பியினர் செய்த இரண்டாவது கிளர்ச்சியின் விளைவுகள் எண்ணிலடங்காதவை.

1987ம் ஆண்டின் பின்னரைப் பகுதியில் நாளாந்தம் சராசரி 10பேர்வரை கொல்லப்பட்டனர். 1988 டிசம்பரின் பின் அது நாளாந்தம் 100 பேர் வரை யானது. அரச பயங்கரவாதமும் ஜே.வி.பியினரின் பயங்கரவாதமும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்பட்டு 70-80 ஆயிரத்திற்கும் இடைப்பட்டோர் உயிர்களைப் பறித்ததாகக் கருதப்படுகின்றது. அரசாங்க உடமைக்கேற்பட்ட சேதவிபரமோ மிகப் பாரியவை. 9000மில்லியன் வரை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றினைவிட சோமவன்ச தவிர்ந்த றோகண, உபதிஸ்ஸ கமநாயக்க, கீர்த்தி விஜயபாகு போன்ற அனைத்து ஜே.வி.பியினரின் மத்திய குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இவற்றினைவிட ஜே.வி.பியினரின் இரண்டாவது கிளர்ச்சி விளைவித்த மனவடுக்கள் சிறிலங்கா வரலாற்றின் மிகமிக இருண்ட பக்கங்கள். இரண்டாவது கிளர்ச்சி தாம் இனி ஒருபோதும் இராணுவ ரீதியாக செயற்பட்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்ற முடியாதென்பதையாவது ஜே.வி.பியினருக்கு உணர்த்தியிருக்க வேண்டும். இத்தனை இழப்பும் ஜே.வி.பியினருக்கு எதனையாவது உணர்ந்தியிருக்கின்றதா? எதுவுமேயில்லை.

எப்படியாவது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டுமென்பதில் மட்டும் அவர்கள் குறி மேலும் இறுக்கமடைந்ததைத் தவிர. இதற்குக் காரணமென்ன? இதற்கான பதிலை றோகன் தனது நூலில் தருகின்றார். பொதுவாக சிங்கள அரசியலாளர் குறித்தும் சிறிலங்காவின் எதிர்காலம் குறித்தும் தனது நூலின் முடிவிலே அவர் புகழ்பெற்ற ஐரோப்பிய தத்துவஞானியான ஜோர்த் சத்நாயானாவின் (geroge satnayana) கூற்றினை மேற்கோள் காட்டுகிறார். "வரலாற்றின் பாடங்களை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கின்றார்கள்."

1988, 89ஆம் ஆண்டு நிகழ்வுகளை இங்கே மீள் நினைவூட்டிப் பார்ப்பதன்மூலம் சிறிலங்காவில் இனிமேல் நடக்கப்போகும் இழுபறியின் உச்சத்தை 2500 ஆண்டு காலமாக வளர்த்தெடுத்த பூதத்திற்கு இவர்கள் யாவரும் இரையாகப்போகும் வினாசத்தை எம் மக்கள் உணர்வர். அந்தப் பொழுதே தமிழ்பேசும் மக்களின் விடிவின் பொழுது. சிங்கள அரசியலாளனின் முண்ணான் எலும்பு மையத்திற்குள் பிரவேசித்த சன்னமாக, மூளைக்குள் புகுந்துவிட்ட அகற்றமுடியாத நச்சுக் கிருமியாக தொண்டைக்குள் சிக்கிவிட்ட கூர்முள்ளாக ஜே.வி.பி மாறிவிட்டது. ஆறுவருட சிறைவாசத்தின் பின் 1977 நொவம்பர் 20ஆம் திகதி சுதந்திர மனிதனாக றோகண வெளியில் வருகின்றார்.

எவ்வாறு அவர் வெளியில் வந்தார்? 1977ம் ஆண்டு ஏனைய தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்று பதவியேறிய ஜே.ஆர் நிரந்தர மன்னனாக முடிசூட முடிவெடுத்தார். சுதந்திரக் கட்சியை முற்றாக அழிக்க ஜே.வி.பியினரை வெளியில் விடுவதே பொருத்தமென நினைத்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். றோகணவை வெளியில் விடாதிருந்தால் அவர் இன்னொரு மண்டேலாவாகியிருப்பார் என பகிடி வேறு விட்டார்.

அவர் எதிர்பார்த்தது நடந்தது; எதிர்பார்க்காததும் நடந்தது. சுதந்திரக் கட்சியோடு ஜே.வி.பி முழுதாக முரண்பட்டது. அவர் எதிர்பார்த்தது. ஆனால் ஜே.வி.பியினரின் ஏறுமுக வளர்ச்சி அவரால் பொறுக்கமுடியாதது. 1987இல் ஒரு உடன்பாட்டின் பொழுது ஜே.வி.பியோடு மறைமுக உடன்பாட்டிற்கு சுதந்திரக் கட்சியினர் வந்ததும் ஜே.ஆர் முழுத்தோல்வியை இறுதியில் சந்தித்ததும் 'கெடுவான் கேடு நினைப்பான்" கதையின் மறுவடிவம்தான்.

அளவிற்கு மீறிய சாணக்கியம் ஜே.ஆரை இறுதியில் அரசியற் சாக்கடைக்குள் தள்ளியது. ஜே.வி.பியினரின் இரண்டாம் கிளர்ச்சிக்கு வழி வகுத்தது. 1983, யூலை 31ஆம் திகதி ஜே.வி.பியினரை ஜே.ஆர் தடைசெய்தார். அரசாங்கத்தினைக் கவிழ்க்க சதி, யூலைக் கலகத்திற்கு பொறுப்பு என்பது இந்தச் சாட்டு. ஆனால் 1989களில் உண்மையிலே அரசாங்கத்தினை அவர்கள் கவிழ்க்க முயன்றனர்.

தனது அரசியல் இருப்பிற்காக தான் சார்ந்த சமூகத்தின் நிறைவேறாத கனவுகளின் ஏற்றத்தாழ்வின் வறுமையில் பிள்ளைகளையே பகடையாக அவர் பயன்படுத்த முயன்றமை வரலாற்றின் பாரிய தவறு. இதனை ஜே.ஆர் இறக்கமுன்னர் தன்னிடம் ஏற்றுக்கொண்டதாக றோகன் கூறுகின்றார். எனவே 1983-87ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலகட்ட தலைமறை செயற்பாட்டின் வீச்சின் விளைவாக 1987களில் பலம்பெற்று ஆயத்த நிலையை ஜே.வி.பியினர் அடைந்தனர். பெருமளவு நிதியை கொள்ளைகள் மூலம் கையகப்படுத்தினர்.

உள்வீட்டு உதவியோடு கணிசமான ஆயுதங்களை சேகரித்தனர். DJV என பிற்காலத்தில் பெருமச்சத்தோடு சிங்களவரால் அறியப்பட்ட தேசப்பிரேமி சனதா வியாபாரய (மக்கள் தேசப்பற்று இயக்கம்) தமது இராணுவப் பிரிவினை கட்டியெழுப்பினர். தமக்கும் தமது தந்தையர் தாய்மாருக்கும் சிங்கள முதலாளிய ஆட்சியாளர் செய்த அநீதிகளுக்குப் பழிவாங்க பெருமளவு அச்சமூட்டும் வன்முறை வடிவங்களைக் கைக்கொண்டனர். அச்சமூட்டி செயற்கையாக மக்களை தம்பக்கம் சேர்க்கலாமென எண்ணினர். ஜே.வி.பியினரின் போக்கு எப்போதுமே மாறும் நிலைமகளுக்கேற்ப தமது கருத்தியலை மாற்றி புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்து அதன்மூலம் தமது இலக்கை அடைய முயல்வது என்பது இப்போது அவர்கள் பற்றிய ஆய்வுகளின் முடிவு. இதற்கேற்ப தமிழ்மக்கள் மனதுணர்வினை புறம்தள்ளி ஒடுக்கி இறுக்கினர். முற்றிலும் விருப்பமில்லாமல் வேண்டாவெறுப்பாக இல - இந்திய உடன்பாட்டில் கைச்சாத்திட ஜே.ஆரின் இரண்டக கையறுநிலையைப் பயன்படுத்தினர். (இப்பொழுது சந்திரிக்கா அம்மையாரினதும் நிலையுமிதுவே. புலிகளோடு வேண்டாவெறுப்பாக இணைந்து செயற்படுவது பற்றிய கருத்தும் அதனை ஜே.வி.பினர் பயன்படுத்துவதும் பழைய கதைதான்).

இம்முறை இந்திய ஏகாதிபத்திய விரிவாக்க எதிர்ப்புக் கருத்தியலால் புண்பட்ட சிங்கள தேசப்பற்றின் உணர்வுகளை நன்கு கிளறினர். எனவே இந்திய எதிர்ப்புவாதம் பேரினவாதம் இரண்டையும் சம விகிதத்திற் கலந்து இந்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் 'ஏவல் நாய்களுக்கு எதிராக" கிளர்ந்தெழுந்து ஒருவகை ஒத்துழையாமை இயக்கத்தினை நடத்தி 1989 யூலை மாதமளவில் அரசாங்கத்தைக் கவிழ்க்க திட்டம் ஆயத்தமானது. இதற்கான வெளியரங்கம், ஊடரங்கு, கடையடைப்பு, அரசாங்க நிருவாகச் செயலிழப்பு, அச்சமூட்டும் வன்முறைவடிவப் பிரயோகம் என விரிந்தது.

இவ்வாறாக 1989களில் இன்னொரு அரசாங்கமாக ஜே.வி.பி மாறியது. தமது இறுதிக்கட்ட நடவடிக்கையாக பாதுகாப்புப் படையினரை குறிப்பிட்ட திகதிக்குள் (1989 ஆகஸ்ட் 20) பதவி விலகுமாறு இறுதியறிவித்தல் கொடுக்கப்பட்டது. இதனை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்கிற அவர்கள் அச்சுறுத்தல் நடைமுறையில் இராணுவத்தினரின் உறவுகளை கொல்லுமளவிற்குச் சென்றது.

ஆனால் ஜே.வி.பியினர் எதிர்பார்த்தது இம்முறையும் நடக்கவேயில்லை. மாறாக நடந்ததென்ன? 1989 நவம்பர் 12ம் திகதி உலப்பனை தோட்ட வீட்டில் மறைந்திருந்த றோகண கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து சோமவன்ச தவிர்ந்த மத்தியகுழுவினர் யாவரும் கொல்லப்படுகின்றனர். மீண்டும் நிறைவேறாத கனவுகளுக்காக செயற்கையான கிளர்ச்சி நிலையைத் தோற்றுவிக்க அச்சமூட்டி அணிதிரட்டிய சிங்களத்தின் புதல்வர்கள் தம் குருதியால் தம் தேசத்தைக் கழுவினர். ஆயினும் நிறைவேறாத புரட்சியின் கனவுகள் அவர்கள் கண்களிலே இறந்தபின்னும் ஒளிர்கின்றது. எனவே இவர்கள் கொள்கை மூன்றாவது புரட்சியை (?) நடத்த சோமவன்ச மட்டும் இரண்டாம் தடவையும் உயிர்தப்பி விடுகின்றார்.

இவரைக் காப்பாற்றி இந்தியா கொண்டுசென்று பின் அவர் பிரான்சு செல்ல உதவியது இந்திய உளவமைப்பான 'றோ" என்பதும் இங்கே குறிப்பிடவேண்டியது.

பல்வேறு காரணங்களால் இரண்டாம் புரட்சியும் தோற்றாலும் இவர்கள் உடனடி அழிவுக்கு ஜனாதிபதி பிறேமதாசா கைக்கொண்ட தனிமைப்படுத்தும் உத்தியே காரணம். இவ்வுத்தியை உணர்ந்த புலிகள் அதனை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் ஜே.வி.பியினரால் இதைத் தடுக்கமுடியவில்லை. இந்திய எதிர்ப்புவாதத்தினை தானே கையாலெடுத்து புலிகளோடு இணக்கத்திற்கு வந்து பிறேமா ஜே.வி.பியினரின் அழிவிற்கு வழிவகுத்தார். எனவே சிங்கள சமூகத்தின் அடிப்படை முரண்பாட்டினை ஜே.வி.பியினர் பிரதிபலித்தாலும் வரலாற்றின் இயங்குவிதிகளை அவர்கள் புரியவில்லை. அவர்கள் என்றும் புரியமாட்டார்கள் என்பதற்கு இம்முறை அவர்கள் அரசியலுத்திகள் சான்றாகவுள்ளன.

எனவே இப்பொழுது சோமவன்சவின் முறை. வெளுத்துக்கட்டுகின்றார். 1971இல் புரட்சியில் தொடங்கிய பயணம் அமைச்சரவையில் வந்துநிற்கின்றது. 1964 சண்முகதாசனின் கட்சிக்குள் ஊடுருவத் தொடங்கிய உத்தி சிறிலங்கா சுதந்திரக்கட்சியைப் பணயக் கைதியாக்கும் நிலைக்கு வந்துள்ளது. சிங்கள பேரினவாதப் பயணமோ இப்போது PNM எனப்படும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தில் வந்துநிற்கின்றது. ஆனால் தாம் புரட்சி செய்ய முயன்ற ஒவ்வொரு முறையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டும் எதிர்மறை நிலையெடுத்ததே அவர்கள் வரலாறாகிவிட்டது. எனவே இம்முறையோ அவர்கள் எதிர்நிலைச் செயற்பாடு சர்வதேசத்தின் முன் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டின் நியாயத்தினை உணர்த்தவும் வரலாற்றின் ஆபூர்வ தருணங்களில் எடுக்கப்படும் அரியதொரு முடிவிற்கு அவர்கள் வந்தடையவும் வழியை பிறப்பித்ததுமாக அமைந்துவிட்டது. உலகின் முதல் மனிதப் பேரழிவாக வருணிக்கப்படும் சுனாமி ஆழிப்பேரலை அழிவுகூட எம்மை மாற்றமுடியாது என்பதை எவ்வளவு தெளிவாக உரத்து உலகிற்குக் கூறிவிட்டீர்கள். எனவே நாம் செய்கின்றோம் 'நன்றி". நண்பர்களே அடுத்த முறையாவது உங்களுக்கு வெற்றி கிட்டட்டும். எம்முடன் நிழல்போரை நிறுத்திவிட்டு நேரடியாக உங்கள் எதிரிகளோடு மோதுங்கள். ஏனெனில் எங்கள் தலைகளை அடுத்தமுறை உருட்ட வாய்ப்பிராது. அம்முறை நாங்கள் அருகிலிருக்க மாட்டோம். 'அண்டை நாட்டிலிருப்போம்".
-------------------------------------------------------------------
நன்றி: சித்திரை-வைகாசி மாத 'விடுதலைப்புலிகள்" ஏடு

Labels: , ,


Thursday, March 17, 2005

முற்போக்கும் வயிற்றுப் போக்கும்...

வெங்கட்டின் பதிவில் கறுப்பி பின்னூட்டமிட்டதை வைத்து இப்பதிவு எழுதப்படுகிறது. வெங்கட்டின் பதிவிலேயே எழுதியிருக்கலாம். ஆனால் அது அவ்விவாதத்தின் கோணத்தை மாற்றிவிடும் என்பதால் இங்கே பதிகிறேன்.

சாதிக் கொடுமை ஒழிப்பு சாத்தியப்படும் என்று நம்பி வேலையில் இறங்குவோம்” என்று வெங்கட் சொன்னதற்கு, கறுப்பி சொல்கிறார்.

//இந்தக் கொடுமை தீரும் என்று தாங்கள் கனவு கண்டால் உங்களை
நான் கோழை என்றுதான் சொல்லுவேன்
.
//

இவர் என்ன சொல்ல வருகிறார்? மாற்றங்கள் வரும் என்று நம்பமுடியாதா? அப்படியானால் பெண் விடுதலை என்பதுகூட சாத்தியமற்ற வெறுங்கனவோ? சாத்தியமற்ற வெறுங்கனவுகளுக்காகத் தான் நீங்களும் மற்றவர்களும் மாய்ந்துமாயந்து கதைக்கிறீர்களோ? பெண்ணியவாதியாயும் முற்போக்குவாதியாயும் உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொண்டு இப்படிக் கதைக்கலாமா? முற்போக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு நீங்கள் தருவது வாழ்வு பற்றியதும் மாற்றங்கள் பற்றியதுமான அவநம்பிக்கைகளையா? பிறகெதற்குப் பெண்விடுதலை, மாற்றுச் சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்? நடக்காத வெறுங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஏன் திரிகிறீர்கள்? சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று நம்பும் வெங்கட்டை நீங்கள் கோழை என்றால், பெண்ணியம், தமிழில் நல்ல சினிமா என்றெல்லாம் எதிர்பார்ப்போடு எழுதும் உங்களை எப்படித் திட்டுவது?

இதற்குப் பதிலாக "சாதி வேறுபாடு ஒழிக்கவே முடியாது, ஆனால் மற்றவை மாறக்கூடியன" என்று சொல்ல வருகிறீர்களா? சாதிவேறுபாடு மனித இனத்திற்குப் பொதுவான அம்சமன்று. எல்லா இடங்களிலும் இப்பிரச்சினை பூதாகாரமாக இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளில், இனங்களில் மட்டுமே உள்ள பிரச்சினை. ஆனால் பெண் அடக்குமுறையென்பது மனித இனத்திற்கே பொதுவானது. அது தன் சந்ததிகளினூடு தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவது. மேலும் உடல் ரீதியான வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டதால் இலகுவில் மாற்றமடைய முடியாத அடித்தளத்தைக் கொண்டது தான் பெண்ணிய அடக்குமுறை. சாதிவேறுபாடுகள் தோன்றமுதலே, மனித இனத்தோற்றத்தின் போதே தோன்றிவிட்ட பெண் அடக்குமுறையை, அழிக்கவே முடியாது என்பதற்கு தர்க்க ரீதியல் வலுவான காரணிகளைக் கொண்ட பெண் அடிக்குமுறையை முறியடித்து பெண்விடுதலை பெற முடியுமென்று நீங்கள் கருதினால், ஏன் சாதிமுறை ஒழிய முடியாது? எல்லோரும் பெண்விடுதலை பற்றி ஆவலோடு கதைத்துக்கொண்டிருப்பது அது பெறப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான். யாருக்கும் தெரியாது எப்போது பெண் முழுவதும் விடுதலையாவாள் என்று. குறைந்த பட்சம், சாத்தியமா என்பதுகூட எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அதைவிட இலகுவான சாத்தியமுள்ள (பார்க்க: பெண்விடுதலையோடு ஒப்பிட்டுத்தான்) சாதிவிடுதலை பற்றி ஒருவர் நம்பிக்கை கொள்ளல் பெண்விடுதலை பேசும் உங்களுக்கு நகைப்பாக இருக்கிறது.

சாதி விடுதலை சாத்தியமென்பது என் வலுவான நம்பிக்கை. (மேலை நாடுகளில் ஆண்டுக்கணக்காக வாழ்ந்து விட்ட உங்களுக்கு இதன்மீது நம்பிக்கை வராதது நான் சற்றும் எதிர்பார்க்காதது). என் வன்னி அனுபவத்தின் அடிப்படையில் இது ஒழிக்கப்படும் என்று நம்புகிறவன் நான். அங்கே எல்லோரும் தான் பதுங்குகுழி வெட்டினோம். எல்லைக்குப் போனோம். போரின்போது இடம்பெயர்ந்தோம். ஒன்றாகவே உணவுண்டோம். ஒன்றாகவே அடிவாங்கினோம். ஒன்றாகவே செத்துப்போனோம். வெற்றிகளின் போது ஒன்றாகவெ மகிழ்தோம். அவலங்களின் போது யாரும் அங்கு சாதிபார்த்து வாழவில்லை. உள்ளுக்குள் அந்த மனப்பான்மை பலருக்கு இருந்தாலும் வெளியில் அவர்களால் காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலை. இளஞ்சமுதாயம் ஏறத்தாள முழுமையான சாதிபற்றின மனமாற்றத்துக்கு வந்திருந்தது. சாதி பார்க்கப்படும் ஒரே சந்தர்ப்பமாக இருந்த திருமணபந்தம் கூட மாறிவிட்டது. ஒப்பீட்டளவில் பல கலப்புத்திருமணங்கள் நடந்தன. அதற்கு புலிகளும் தமிழீழக் காவல்துறையினரும் துணைநின்றனர். காதலுக்கு புலிகள் அதிகளவு ஆதரவளிப்பதாக ஒரு விமர்சனம் எம்மக்களிடையே உண்டு. ஆனால் அவர்கள் சாதி மற்றும் மதங்களைக் கட்டுப்படுத்த காதல் திருமணங்களை ஒரு காரணியாகப் பார்க்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் விரிவாக இன்னொரு பதிவிலிடுகிறேன். இப்படி வன்னியில் எனக்கு சாதிஒழிப்பு மீதான நம்பிக்கை வலுவடைந்தது. ஆனால் நீண்ட இடைவெளியின்பின் சொந்த ஊர் (யாழ்ப்பாணம்) சென்றபோது அங்கே என்னிடம் “பொடியளில வெள்ளாளரோ கரையாரோ அதிகமா இருக்கினம்?” என்று கேட்கப்பட்ட போது என் மனக்கோட்டையில் சில கற்கள் சரிந்து விழுந்தன. அந்த நம்பிக்கை வீதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முற்றாகபப் போய்விடவில்லை. என்ன… கொஞ்சக் காலம் கூடுதலாக எடுக்கும். ஆனால் தமிழகம் பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சாதிச்சான்றிதழ் பாவனையிலிருக்கும் நாட்டில், சாதி ரீதியாகவே கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அடையாளங்காணப்படும் நாட்டில், இன்னும் தலித் இலக்கியம் என இலக்கியங்களும் வந்துவிட்ட நாட்டில் (கவனிக்க: இவை தவறென்று சொல்லவில்லை. அது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியது) எல்லோரும் சமனென்று வர எவ்வளவு காலமெடுக்கும் எனச் சொல்லத் தெரியவில்லை.

முன்னர், நம்பிக்கை கொண்ட வெங்கட்டை கோழை என்றவர் பின்னர் கீழே ஓரிடத்தில் சொல்கிறார்:
//நம்பிக்கைதான் வாழ்க்கை//
இது எப்பிடி இருக்கு?

//தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப்
போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?
//
வெங்கட் யார், என்ன செய்கிறார், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. வாசித்த அளவில் முக்கியமான ஒரு அறிவிலாளர் என்பது புரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு வசனம் மூலம் ஒருவரின் உழைப்பு, படிப்பு, பிரயாசை எல்லாவற்றையும் சாதியொன்றின் பெயரில் அடக்கி விட்டார் கறுப்பி. தன் திறமைக்குக் கடவுளைக் காரணம் காட்டுபவனைக் கண்டாலே கோபம் வருகிறது. அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகளை விரித்தபோது முதலில் அவரெழுதிய கவிதையைப் பார்த்ததுமே கோபம் தான் வந்தது. சிறுவயதில் வறுமையின் பிடிக்குள் சிக்கி, அதற்குள்ளிருந்து தன் உழைப்பால் முன்னேறிய ஒரு வழிகாட்டி அவர். தான் சிகரத்தை அடைந்தது தன் தாயின் கண்ணீரால் என்று தாயைப் போற்றுகிறார். மெத்தச்சரி. ஆனால் அதோடு சேர்த்துக் கடவுளின் கிருபையையும் காரணமாகச் சொன்னவர், தன் முயற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால் தன் திறமையையும் உழைப்பையும் சொல்லாமல் வானத்தைப் பார்த்துக் கைகாட்டுவது பிடிக்கவில்லை. அதுபோலவே கறுப்பியும் ஒற்றைப்படையாக ஒரு காரணம் கூறுகிறார். எனக்குப் பார்ப்பான்களின் வாழ்க்கைத் தரம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர்களிலும் ஏழைகள் இருக்கக் கூடுமென்றே எண்ணுகிறேன். எனவேதான் சாதியைக் காட்டி ஒருவரது செல்வத்தையோ திறமையையோ குறிப்பிட்டு அவரது திறமையை ஒளிப்பது சரியன்று எனச்சொல்ல வந்தேன். இந்த வாதமெல்லாம் முற்போக்கானவையாகத் தெரியவில்லை.

//யாரோ செய்த பாவம்,"கர்மா" போன்றவற்றில் எனக்கு
நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?
//
கர்மா பற்றி நம்பிக்கையில்லாத “முற்போக்காளராகிய” நீங்கள், பார்ப்பான்களைக் கொலை செய்வதற்கு அதே கர்மாவை துணைக்கழைக்கிறீர்கள். வெங்கட் அப்பாவியான தன் பக்கத்துவீட்டுக்காரர் கொலை செய்யப்பட்டதாகச் சொன்னதற்குத்தான் இப்படி கருத்துச் சொல்லியுள்ளீர்கள் என்று கருதுகிறேன். பார்ப்பான் இப்படியான சமூகத்தை உருவாக்கியது எப்போது? அல்லது செத்துப்போன அந்த அப்பாவிப் பக்கத்து வீட்டுக்காரரும் அதற்குள் அடங்குவாரா?

சரி! உங்கள் கருத்துப்படி கொலைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது விடிவுக்காக கொலை செய்வது பிழையே இல்லை என்பது உங்கள் கருத்து. இங்கே தான் நான் உங்கள் மீது விமர்சனம் வைக்கிறேன். முற்போக்கு என்ற முகமூடி போட்ட படியே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்கள். இது சரியா? அதுவும் சம்பந்தமில்லாத ஒருவரைப் பழிவாங்கக் கொல்வதை ஆதரிப்பது. (நான் தான் முற்போக்கு என்பதைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளேனோ தெரியாது) இதே முற்போக்கு முகமூடிகளைப் போட்டுக்கொண்டு புலிகளின் செயல்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தற்பாதுகாப்புக்காக, தமது இருத்தலுக்காக, தமது நோக்கத்துக்காக (பல்லாயிரம் மக்களின் விடுதலை சார்ந்தது) செய்யப்படுபவை என நியாயப்படுத்தக் கூடிய கொலைகளையே சாடிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்களின் பார்வை உங்ளைப் போல்தான் இந்த இடத்தில் (வெங்கட்டின் இடத்தில்) செல்லுமா?

புலிகளில் 2000 பேர் சுனாமியில் இறந்துவிட்டதாகவும் அதன் தலைமை ஆட்டங்கண்டுள்ளதாகவும் தாமே செய்தியை உற்பத்தி செய்துவிட்டு, பின் “புலிகள் பலவீனமாயுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழருக்கு உரிமையைப் பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் இனிச் சந்தர்ப்பமே இல்லை” என்று “புத்திசாலித்தனமாக” அரசியல் போதிக்கும், தம்மைத்தாமே முற்போக்காளர்கள், சோசலிச வாதிகள், இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலைப்பாடுகளில் நாம் “யதார்த்தமான, சரியான” மதிப்பீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் முற்போக்காளராகவும் பெண்ணியவாதியாகவும் தன்னை அடையாளங்காட்டும் கறுப்பி கொலைகளை ஆதரிக்கிறார். அதுவும் சம்பந்தப்படாதவர்களைக் கொலை செய்தல். தலித் விடுதலைக்கு கொலை பயன்படுமோ இல்லையோ, கொலை செய்து விடுதலை பெற வேண்டிய (குறைந்த பட்சம் உயிர்வாழவாவது கொலை செய்தே ஆகவேண்டிய) தேவையிலிருக்கிற ஈழ நிலைப்பாட்டை எப்படி இதே முற்போக்காளர்கள் பிழையெனச்சொல்லலாம்?

கறுப்பி! ஈழத்துப் பாடல்களையே வன்முறை போதிக்கிறது என்பதால் தடை செய்யவேண்டும், பிடுங்க வேண்டுமென்று வாதித்த நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வெங்கட்டின் பதிவில் உங்கள் ஆழ்மனத்திலுள்ளதைக் கொண்டு வந்துவிட்டீர்கள். அந்த விதத்தில் வெங்கட்டின் பதிவுக்கு நன்றி.


இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஒரு முற்போக்காளராக இருப்பதால் உங்கள் பார்வையைக்கொண்டே முற்போக்காளர்களை எதிர்கொள்ளலாமா? முற்போக்குச் சித்தாந்தத்திலே கொலைகள் பற்றிய பார்வை என்ன? மரணதண்டனை பற்றின உங்கள் பார்வை என்ன? முற்போக்கு முகமூடிகள் கொலையை ஆதரித்தால் அதை எல்லா இடத்திலும் அவர்களே சொல்லும் நியாயங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். மாறாக தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த முகமூடியும் முற்போக்கும் தேவையில்லை.
(முகமூடியென்பது முகத்தை மறைக்கவன்று, உள்ளத்தை மறைக்க)


Labels: ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]