Thursday, March 17, 2005

முற்போக்கும் வயிற்றுப் போக்கும்...

வெங்கட்டின் பதிவில் கறுப்பி பின்னூட்டமிட்டதை வைத்து இப்பதிவு எழுதப்படுகிறது. வெங்கட்டின் பதிவிலேயே எழுதியிருக்கலாம். ஆனால் அது அவ்விவாதத்தின் கோணத்தை மாற்றிவிடும் என்பதால் இங்கே பதிகிறேன்.

சாதிக் கொடுமை ஒழிப்பு சாத்தியப்படும் என்று நம்பி வேலையில் இறங்குவோம்” என்று வெங்கட் சொன்னதற்கு, கறுப்பி சொல்கிறார்.

//இந்தக் கொடுமை தீரும் என்று தாங்கள் கனவு கண்டால் உங்களை
நான் கோழை என்றுதான் சொல்லுவேன்
.
//

இவர் என்ன சொல்ல வருகிறார்? மாற்றங்கள் வரும் என்று நம்பமுடியாதா? அப்படியானால் பெண் விடுதலை என்பதுகூட சாத்தியமற்ற வெறுங்கனவோ? சாத்தியமற்ற வெறுங்கனவுகளுக்காகத் தான் நீங்களும் மற்றவர்களும் மாய்ந்துமாயந்து கதைக்கிறீர்களோ? பெண்ணியவாதியாயும் முற்போக்குவாதியாயும் உங்களை நீங்களே அடையாளப்படுத்திக் கொண்டு இப்படிக் கதைக்கலாமா? முற்போக்கு என்ற பெயரில் மற்றவர்களுக்கு நீங்கள் தருவது வாழ்வு பற்றியதும் மாற்றங்கள் பற்றியதுமான அவநம்பிக்கைகளையா? பிறகெதற்குப் பெண்விடுதலை, மாற்றுச் சினிமா பற்றியெல்லாம் எழுதுகிறீர்கள்? நடக்காத வெறுங்கனவுகளைச் சுமந்து கொண்டு ஏன் திரிகிறீர்கள்? சாதி வேறுபாடுகள் ஒழியும் என்று நம்பும் வெங்கட்டை நீங்கள் கோழை என்றால், பெண்ணியம், தமிழில் நல்ல சினிமா என்றெல்லாம் எதிர்பார்ப்போடு எழுதும் உங்களை எப்படித் திட்டுவது?

இதற்குப் பதிலாக "சாதி வேறுபாடு ஒழிக்கவே முடியாது, ஆனால் மற்றவை மாறக்கூடியன" என்று சொல்ல வருகிறீர்களா? சாதிவேறுபாடு மனித இனத்திற்குப் பொதுவான அம்சமன்று. எல்லா இடங்களிலும் இப்பிரச்சினை பூதாகாரமாக இல்லை. குறிப்பிட்ட சில நாடுகளில், இனங்களில் மட்டுமே உள்ள பிரச்சினை. ஆனால் பெண் அடக்குமுறையென்பது மனித இனத்திற்கே பொதுவானது. அது தன் சந்ததிகளினூடு தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவது. மேலும் உடல் ரீதியான வித்தியாசத்தை அடிப்படையாகக் கொண்டதால் இலகுவில் மாற்றமடைய முடியாத அடித்தளத்தைக் கொண்டது தான் பெண்ணிய அடக்குமுறை. சாதிவேறுபாடுகள் தோன்றமுதலே, மனித இனத்தோற்றத்தின் போதே தோன்றிவிட்ட பெண் அடக்குமுறையை, அழிக்கவே முடியாது என்பதற்கு தர்க்க ரீதியல் வலுவான காரணிகளைக் கொண்ட பெண் அடிக்குமுறையை முறியடித்து பெண்விடுதலை பெற முடியுமென்று நீங்கள் கருதினால், ஏன் சாதிமுறை ஒழிய முடியாது? எல்லோரும் பெண்விடுதலை பற்றி ஆவலோடு கதைத்துக்கொண்டிருப்பது அது பெறப்பட வேண்டுமென்ற நோக்கத்தோடுதான். யாருக்கும் தெரியாது எப்போது பெண் முழுவதும் விடுதலையாவாள் என்று. குறைந்த பட்சம், சாத்தியமா என்பதுகூட எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அதைவிட இலகுவான சாத்தியமுள்ள (பார்க்க: பெண்விடுதலையோடு ஒப்பிட்டுத்தான்) சாதிவிடுதலை பற்றி ஒருவர் நம்பிக்கை கொள்ளல் பெண்விடுதலை பேசும் உங்களுக்கு நகைப்பாக இருக்கிறது.

சாதி விடுதலை சாத்தியமென்பது என் வலுவான நம்பிக்கை. (மேலை நாடுகளில் ஆண்டுக்கணக்காக வாழ்ந்து விட்ட உங்களுக்கு இதன்மீது நம்பிக்கை வராதது நான் சற்றும் எதிர்பார்க்காதது). என் வன்னி அனுபவத்தின் அடிப்படையில் இது ஒழிக்கப்படும் என்று நம்புகிறவன் நான். அங்கே எல்லோரும் தான் பதுங்குகுழி வெட்டினோம். எல்லைக்குப் போனோம். போரின்போது இடம்பெயர்ந்தோம். ஒன்றாகவே உணவுண்டோம். ஒன்றாகவே அடிவாங்கினோம். ஒன்றாகவே செத்துப்போனோம். வெற்றிகளின் போது ஒன்றாகவெ மகிழ்தோம். அவலங்களின் போது யாரும் அங்கு சாதிபார்த்து வாழவில்லை. உள்ளுக்குள் அந்த மனப்பான்மை பலருக்கு இருந்தாலும் வெளியில் அவர்களால் காட்டிக்கொள்ள முடியாத சூழ்நிலை. இளஞ்சமுதாயம் ஏறத்தாள முழுமையான சாதிபற்றின மனமாற்றத்துக்கு வந்திருந்தது. சாதி பார்க்கப்படும் ஒரே சந்தர்ப்பமாக இருந்த திருமணபந்தம் கூட மாறிவிட்டது. ஒப்பீட்டளவில் பல கலப்புத்திருமணங்கள் நடந்தன. அதற்கு புலிகளும் தமிழீழக் காவல்துறையினரும் துணைநின்றனர். காதலுக்கு புலிகள் அதிகளவு ஆதரவளிப்பதாக ஒரு விமர்சனம் எம்மக்களிடையே உண்டு. ஆனால் அவர்கள் சாதி மற்றும் மதங்களைக் கட்டுப்படுத்த காதல் திருமணங்களை ஒரு காரணியாகப் பார்க்கிறார்கள். இதுபற்றி கொஞ்சம் விரிவாக இன்னொரு பதிவிலிடுகிறேன். இப்படி வன்னியில் எனக்கு சாதிஒழிப்பு மீதான நம்பிக்கை வலுவடைந்தது. ஆனால் நீண்ட இடைவெளியின்பின் சொந்த ஊர் (யாழ்ப்பாணம்) சென்றபோது அங்கே என்னிடம் “பொடியளில வெள்ளாளரோ கரையாரோ அதிகமா இருக்கினம்?” என்று கேட்கப்பட்ட போது என் மனக்கோட்டையில் சில கற்கள் சரிந்து விழுந்தன. அந்த நம்பிக்கை வீதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் முற்றாகபப் போய்விடவில்லை. என்ன… கொஞ்சக் காலம் கூடுதலாக எடுக்கும். ஆனால் தமிழகம் பற்றி எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சாதிச்சான்றிதழ் பாவனையிலிருக்கும் நாட்டில், சாதி ரீதியாகவே கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அடையாளங்காணப்படும் நாட்டில், இன்னும் தலித் இலக்கியம் என இலக்கியங்களும் வந்துவிட்ட நாட்டில் (கவனிக்க: இவை தவறென்று சொல்லவில்லை. அது வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியது) எல்லோரும் சமனென்று வர எவ்வளவு காலமெடுக்கும் எனச் சொல்லத் தெரியவில்லை.

முன்னர், நம்பிக்கை கொண்ட வெங்கட்டை கோழை என்றவர் பின்னர் கீழே ஓரிடத்தில் சொல்கிறார்:
//நம்பிக்கைதான் வாழ்க்கை//
இது எப்பிடி இருக்கு?

//தங்கள் வாழ்க்கை குடும்பம் செழிப்பாகவே இருக்கப்
போகின்றது. அதற்குத் தாங்கள் பார்ப்பனாகப் பிறந்தது ஒரு காரணம் இல்லையா?
//
வெங்கட் யார், என்ன செய்கிறார், என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. வாசித்த அளவில் முக்கியமான ஒரு அறிவிலாளர் என்பது புரிகிறது. மேற்குறிப்பிட்ட ஒரு வசனம் மூலம் ஒருவரின் உழைப்பு, படிப்பு, பிரயாசை எல்லாவற்றையும் சாதியொன்றின் பெயரில் அடக்கி விட்டார் கறுப்பி. தன் திறமைக்குக் கடவுளைக் காரணம் காட்டுபவனைக் கண்டாலே கோபம் வருகிறது. அப்துல் கலாமின் அக்கினிச் சிறகுகளை விரித்தபோது முதலில் அவரெழுதிய கவிதையைப் பார்த்ததுமே கோபம் தான் வந்தது. சிறுவயதில் வறுமையின் பிடிக்குள் சிக்கி, அதற்குள்ளிருந்து தன் உழைப்பால் முன்னேறிய ஒரு வழிகாட்டி அவர். தான் சிகரத்தை அடைந்தது தன் தாயின் கண்ணீரால் என்று தாயைப் போற்றுகிறார். மெத்தச்சரி. ஆனால் அதோடு சேர்த்துக் கடவுளின் கிருபையையும் காரணமாகச் சொன்னவர், தன் முயற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. இது அவரின் தனிப்பட்ட நம்பிக்கை. ஆனால் தன் திறமையையும் உழைப்பையும் சொல்லாமல் வானத்தைப் பார்த்துக் கைகாட்டுவது பிடிக்கவில்லை. அதுபோலவே கறுப்பியும் ஒற்றைப்படையாக ஒரு காரணம் கூறுகிறார். எனக்குப் பார்ப்பான்களின் வாழ்க்கைத் தரம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர்களிலும் ஏழைகள் இருக்கக் கூடுமென்றே எண்ணுகிறேன். எனவேதான் சாதியைக் காட்டி ஒருவரது செல்வத்தையோ திறமையையோ குறிப்பிட்டு அவரது திறமையை ஒளிப்பது சரியன்று எனச்சொல்ல வந்தேன். இந்த வாதமெல்லாம் முற்போக்கானவையாகத் தெரியவில்லை.

//யாரோ செய்த பாவம்,"கர்மா" போன்றவற்றில் எனக்கு
நம்பிக்கையில்லை. ஆனால் இப்படியான சமூகத்தை உருவாக்கியது பாப்பன்கள். அவர்களில் ஒரு சிலர் இறந்துதான் தலித்திற்கு விடிவு வருமென்றால் அதில் தவறென்ன?
//
கர்மா பற்றி நம்பிக்கையில்லாத “முற்போக்காளராகிய” நீங்கள், பார்ப்பான்களைக் கொலை செய்வதற்கு அதே கர்மாவை துணைக்கழைக்கிறீர்கள். வெங்கட் அப்பாவியான தன் பக்கத்துவீட்டுக்காரர் கொலை செய்யப்பட்டதாகச் சொன்னதற்குத்தான் இப்படி கருத்துச் சொல்லியுள்ளீர்கள் என்று கருதுகிறேன். பார்ப்பான் இப்படியான சமூகத்தை உருவாக்கியது எப்போது? அல்லது செத்துப்போன அந்த அப்பாவிப் பக்கத்து வீட்டுக்காரரும் அதற்குள் அடங்குவாரா?

சரி! உங்கள் கருத்துப்படி கொலைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அதாவது விடிவுக்காக கொலை செய்வது பிழையே இல்லை என்பது உங்கள் கருத்து. இங்கே தான் நான் உங்கள் மீது விமர்சனம் வைக்கிறேன். முற்போக்கு என்ற முகமூடி போட்ட படியே நீங்கள் கொலைகளை ஆதரிக்கிறீர்கள். இது சரியா? அதுவும் சம்பந்தமில்லாத ஒருவரைப் பழிவாங்கக் கொல்வதை ஆதரிப்பது. (நான் தான் முற்போக்கு என்பதைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளேனோ தெரியாது) இதே முற்போக்கு முகமூடிகளைப் போட்டுக்கொண்டு புலிகளின் செயல்களைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தற்பாதுகாப்புக்காக, தமது இருத்தலுக்காக, தமது நோக்கத்துக்காக (பல்லாயிரம் மக்களின் விடுதலை சார்ந்தது) செய்யப்படுபவை என நியாயப்படுத்தக் கூடிய கொலைகளையே சாடிக்கொண்டிருக்கும் முற்போக்காளர்களின் பார்வை உங்ளைப் போல்தான் இந்த இடத்தில் (வெங்கட்டின் இடத்தில்) செல்லுமா?

புலிகளில் 2000 பேர் சுனாமியில் இறந்துவிட்டதாகவும் அதன் தலைமை ஆட்டங்கண்டுள்ளதாகவும் தாமே செய்தியை உற்பத்தி செய்துவிட்டு, பின் “புலிகள் பலவீனமாயுள்ள இந்த நேரத்தைப் பயன்படுத்தி தமிழருக்கு உரிமையைப் பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால் இனிச் சந்தர்ப்பமே இல்லை” என்று “புத்திசாலித்தனமாக” அரசியல் போதிக்கும், தம்மைத்தாமே முற்போக்காளர்கள், சோசலிச வாதிகள், இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலைப்பாடுகளில் நாம் “யதார்த்தமான, சரியான” மதிப்பீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் முற்போக்காளராகவும் பெண்ணியவாதியாகவும் தன்னை அடையாளங்காட்டும் கறுப்பி கொலைகளை ஆதரிக்கிறார். அதுவும் சம்பந்தப்படாதவர்களைக் கொலை செய்தல். தலித் விடுதலைக்கு கொலை பயன்படுமோ இல்லையோ, கொலை செய்து விடுதலை பெற வேண்டிய (குறைந்த பட்சம் உயிர்வாழவாவது கொலை செய்தே ஆகவேண்டிய) தேவையிலிருக்கிற ஈழ நிலைப்பாட்டை எப்படி இதே முற்போக்காளர்கள் பிழையெனச்சொல்லலாம்?

கறுப்பி! ஈழத்துப் பாடல்களையே வன்முறை போதிக்கிறது என்பதால் தடை செய்யவேண்டும், பிடுங்க வேண்டுமென்று வாதித்த நீங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் வெங்கட்டின் பதிவில் உங்கள் ஆழ்மனத்திலுள்ளதைக் கொண்டு வந்துவிட்டீர்கள். அந்த விதத்தில் வெங்கட்டின் பதிவுக்கு நன்றி.


இப்போது சொல்லுங்கள்: நீங்கள் ஒரு முற்போக்காளராக இருப்பதால் உங்கள் பார்வையைக்கொண்டே முற்போக்காளர்களை எதிர்கொள்ளலாமா? முற்போக்குச் சித்தாந்தத்திலே கொலைகள் பற்றிய பார்வை என்ன? மரணதண்டனை பற்றின உங்கள் பார்வை என்ன? முற்போக்கு முகமூடிகள் கொலையை ஆதரித்தால் அதை எல்லா இடத்திலும் அவர்களே சொல்லும் நியாயங்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். மாறாக தேவையான சந்தர்ப்பத்தில் மட்டும் அந்த முகமூடியும் முற்போக்கும் தேவையில்லை.
(முகமூடியென்பது முகத்தை மறைக்கவன்று, உள்ளத்தை மறைக்க)


Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: முரசு

undefined

14.36 18.3.2005
 
எழுதிக்கொள்வது: முரசு

undefined
வெங்கட் பதிவைப் படித்தபிறகு,கறுப்பியைப் பற்றிய எனது பிம்பம் மறைந்து போனது.

14.38 18.3.2005
 
சாதிவேறுபாடு, தீண்டாமை மறையக்கூடியதே. பொருளாதாரத்தில் இந்தியா போன்ற நாடுகள் முன்னேறும்போது இது தன்னால் மறையும். இந்தியாவிலும் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குப் போகும் போது அது மறைகிறது அல்லது அவ்வளவாகக் கவனம் கொள்ளப்படுவதில்லை (சாதி என்பது ஒருவகையில் உள்ளூர் அடையாளம், கொத்தடிமை உத்தி). தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிவிட்டு எதிர்ச்சாதீயம் பேசினால் அதுவும் தீண்டாமையே. சாதீயமே. ஆண்களை ஒழித்துவிடுவதால் வருவதல்ல பெண் விடுதலை. ஆண்களின் போக்கை மாற்றுவதில்தான் வெற்றி உள்ளது. அரசியல் காரணங்களுக்காகப் போராடுவது என்பது ஒன்று. உளத்தளவில் உண்மையான மாற்றத்தை வேண்டுவது என்பது ஒன்று. இரண்டாவதின் சாத்தியம் தனிமனித சத்திய சோதனையில் உள்ளது. அது அகவயப்பட்ட மாறுதல். போர்க்காலங்களிலும், நெருக்கடிகளிலும் இது இல்லாமல் போவது போல் தோன்றுவது ஒரு தற்காலிக மாற்றமே. நிலமை சகஜ நிலைக்கு வரும் போது பழைய conditioning மீண்டும் வந்துவிடும். எனவே கல்வியறிவு, தீர்க்கமான சுய ஆய்வு இவையே தீண்டாமையப் போக்கும். இது ஆன்மீகத்திற்கு வழியிடுவதால் பெரும்பாலோர் மேற்பரப்பில் நின்று தற்காலிக மாற்றத்தையே பேச வேண்டியுள்ளது!
 
எழுதிக்கொள்வது: kulakaddan

கறுப்பி போன்று முகமூடி அணிந்த முற்னோக்குவாதியை அவரது மன்மதன் விமரிசனமே இனங்காட்டிவிட்டது

9.24 18.3.2005
 
கருப்பி SUCKS, AS SHE SAID.
 
எழுதிக்கொள்வது: chittu

இடப்பெயர்வு நேரத்திலும் வடமராட்சிக்கு ஓடிய வேளையிலும் கூட வெள்ளிப்பேணி
கொண்டு ஓடியவர்கள் பலர்.தமது கிணற்றில் நீர் அள்ள விடாதவர் யார்?அதே தமிளர்தன்.

16.26 18.3.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]