Monday, June 13, 2005

வழமைகள் பொய்க்கும் புள்ளி.


அயுத உதவிகளும் ஈழத்தவனின் பெருமையும்.

வணக்கம்!
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற தொனியில் வலைச் சண்டை நடந்துவருகிறது. பிறகு வழமைபோலவே வேறு திசை நோக்கிச் செல்கிறது. அப்பதிவைப்பற்றி வாதிக்க எதுவுமில்லை. வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை. (தான் சரியாக வெளிப்படுத்தவில்லையெனச் சொல்லி அவர் தப்பிக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் சரியாகவே சொல்லியுள்ளார், எது தனது நிலைப்பாடு என.) சரி அதைவிட்டு நான் எழுதவந்த விசயத்துக்கு வருகிறேன். அப்பதிவைப் பார்த்தபோது, எனக்கு எழுந்த கருத்தொன்றைப் பதிவு செய்வதே இப்பதிவின் நோக்கம்.

வழமையாக 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியில் கடந்தகால உலக நடப்புக்கள் இருந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இத்தொனியைத் தெளிவாகக் காணலாம். ஏறத்தாள முழு விடுதலைப் போராட்டங்களும் (வெற்றி பெற்ற, பெறாத) பிற சக்தியின் அல்லது சக்திகளின் உதவியுடன் செயற்பட்டுள்ளன. (சில விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் வெளியில் தெரிந்தவரை இல்லை)

எரித்திரியப் போராட்டத்துக்கு ரஸ்யாவின் ஆதரவு. (இது பின்னர் எதிர்ப்பாக மாறியதும் வரலாறு.)
கியூபா அமெரிக்காவை எதிர்த்த போது ரஸ்யாவின் ஆதரவு.
வியட்கொங்குகளுக்கு சீனா உள்ளிட்டவைகளின் ஆதரவு.
ஐரிஸ்களுக்கு அமெரிக்கச் சக்திகளின் பின்னணி.
ஏன் இந்தியச் சுதந்திரப்போராட்டத்துக்கு (சுபாஸ் சந்திரபோசின்) யப்பான், இத்தாலி முதலிய வெளியாரின் ஆதரவு.
மேற்குறிப்பிட்டவைகள் ஆயுத, இராணுவ, பொருளாதார உதவிகள்.

இவையாவும் போராடுபவர்கள் மேல் கொண்ட அன்பினால் அன்று. 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற தொனியினால் தான். இது முஹாஜுதீன்கள், தலிபான்கள் முதற்கொண்டு ஒசாமாபின்லேடன் வரைகூடப் பொருந்தியது. இது நாடுகளுக்கு உதவுவதிலும் உண்டு. ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இக்கொள்கை எதிர்மாறாகக் கடைப்பிடிக்கப்டுகிறது. அதாவது எதிரிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தரப்புக்கு உதவுவது. முதன்மையான எதிரி மட்டும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவினான், எதிரியின் எதிரி நண்பன் என்ற தொனியை வைத்து. ஆம் பிரேமதாசா தான் அவர். பிரேமதாசா புலிகளுக்கு உதவியதைவிட இப்படியான நோக்கத்தை வைத்து வேறு சந்தர்ப்பங்கள் இல்லை. இங்கே இந்தியா ஆயுதங்களும் பயிற்சிகளும் தந்ததைச் சொல்லலாம். ஆனால் அது தொடர்ச்சியான நிகழ்வாய் இருக்கவில்லை. மேலும் ஆயுதங்களைத் திருப்பி வாங்கிவிட்டதாலும் இது பொருந்துமா என்ற கேள்வி உண்டு. எனினும் இலங்கையைத் தன் காலடியில் விழவைக்க இந்தியா ஆயுத உதவிகளும், பயிற்சிகளும் கொடுத்து குழுக்களை வளர்த்துவிட்டது என்பது உண்மை.

இங்கே எல்லா எதிரிகளும் சேர்ந்து ஈழத்தமிழருக்கெதிரான யுத்தத்துக்கு உதவினார்கள், உதவுகிறார்கள் என்பது ஒரு நகைமுரண். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகியவை முதன்மைப் பங்காளிகள். எப்போதும் இரு துருவங்களான ரஸ்யாவும், இஸ்ரேலும் இவ்யுத்தத்தில் தீவிரமாக உதவி வழங்குபவர்கள். சிறிலங்காவின் வான், மற்றும் கடல் படை வலிமை இவ்விரண்டு நாடுகளிலுமே பெரிதும் தங்கியுள்ளது. போதாததுக்கு அமெரிக்கா, பிரிட்டன் என்பனவும் உள்ளடக்கம். குறிப்பாகப் புலனாய்வு வலைப்பின்னலில் யோசிக்காமல் அனைத்து நாடுகளும் ஒன்றினைந்து செயற்படுகின்றனர். இது இப்படியிருக்க எந்த நாடும் தமிழர் தரப்புக்கு உதவிகள் வழங்குவதில்லை.

ஈழப்போராட்டமென்பது இத்தனை எதிரிகளையும் சமாளித்துத்தான் வளர்ந்தது; வளர்கிறது. புலிகளின் கடல் வழி வினியோகத்தைத் தடுக்க சர்வதேச அளவில் முக்கிய நாடுகள் புலனாய்வு வழியிலும், கடலில் இந்தியா தன் நேரடிக் கண்காணிப்பிலும், நேரடி மோதலாலும் உதவகின்றன. இந்தியாவால் நேரடியாக மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் இதற்குச் சான்று. (கிட்டு உட்பட). தனியே சிறிலங்காவின் படைப்பலமோ பொருளாதார பலமோ ஈழப்போராட்டத்துக்கு ஒரு பொருட்டேயன்று என்பது வெளிப்படையான உண்மை.

எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு இலங்கையில் தமிழரை அழிக்க உதவி செய்கின்றனர். அதை வெளிப்படையாகச் சொல்வதில் வெட்கப்படுகிறார்கள் என்பது தான் வேதனையாயிருக்கிறது. இங்கே வலைப்பதிவிலும் அதுதான் நடக்கிறது. பலரின் ஆழ்மன எண்ணங்கள் அவர்களே அறியாமல் வெளிப்படுகின்றன.

வங்காளதேசத்துக்கு இந்தியா சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததாக பரப்புரை செய்யப்படுகிறது. ஏன் கொடுத்தது என்பதற்கு விடை, அம்மக்கள் மேல் கொண்ட பாசத்தினாலாம். ஆனால் ஏன் கொடுத்தோம் என்பதற்கான சரியான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னும் ஒருவரின் வலைப்பதிவில் இப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
"பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த" என்று விழிக்கிறார். நாம் போட்ட பிச்சையில் பிறந்த வங்கதேசம், நாம் போடும் கட்டளைகளைக் கேள்வியின்றி செய்ய வேண்டுமென்ற தொனியில் அவரது கருத்து இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத வகையில் பலரின் எண்ண ஓட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.

ஈழத்தவரைப்பார்த்தும் இப்படித்தான் சொல்ல நினைத்தீர்களோ தெரியாது. எனினும் ஆண்டாண்டுக்கும் அந்த இழிச்சொல்லைக் கேட்பதிலிருந்து தப்பிவிட்டோமென்ற நிம்மதியுண்டு. எந்த நாட்டினதும் உதவியுமின்றி, சொந்த மக்களினதும் புலம்பெயர்ந்தவர்களினதும் பலத்தால் மட்டுமே வளர்ந்த போராட்டம் என்று பெருமைப்பட எங்களுக்கு உரிமையுண்டு. குறிப்பாக பக்கத்து நாடுகளே அஞ்சும் வண்ணம் (இவற்றில் பெருமளவு மக்களைப் பேய்க்காட்ட வடிவமைக்கப்பட்ட அச்சங்கள்) கடல், வான் படைகளைக் கட்டமைத்த போராட்டம் என்பதில் பெருமையும் ஆணவமும் கொள்ள எங்களுக்கு இடமிருக்கிறது.

Labels: , ,


Comments:
எழுதிக்கொள்வது: kulakaddan

வன்னியன் நல்ல பதிவு. ஆனால் அது புத்தியுள்ளவனுக்கு விளங்கும். இங்க பலர் மூளையை வெளில களட்டி வச்சிட்டு வாற ஆக்காக்கும்.


18.34 13.6.2005
 
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|என்றென்றும் கிணற்றுத்தவளைகளை அன்புடன் மேற்கோள் காட்டிப் பதிவு எழுதும் வன்னியன் என்றென்றும் கண்டிக்கப்படவேண்டியவர்|
 
வன்னியன்,
நீங்கள் இங்கு கூறியுள்ள கருத்துக்களில் எனக்கு ஒப்புமையும் சில மாற்றுக்கருத்துக்களும் உண்டு.

////ஒருவரின் வலைப்பதிவில் இப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
"பிச்சைக்கார, சுண்டைக்காய் (நாம் வாங்கித் தந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்) நாடான பங்களாதேஷை சேர்ந்த" என்று விழிக்கிறார். நாம் போட்ட பிச்சையில் பிறந்த வங்கதேசம், நாம் போடும் கட்டளைகளைக் கேள்வியின்றி செய்ய வேண்டுமென்ற தொனியில் அவரது கருத்து இருக்கிறது. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத வகையில் பலரின் எண்ண ஓட்டங்களை அது வெளிப்படுத்துகிறது.////

இந்திய எல்லைப்படையினரை வங்கதேச எல்லைக்கு இழுத்துச் சென்று உயிருடன் உடலைச் சிதைத்துக் கொடூரமாய்க் கொன்றதை நீங்கள் வசதியாய் மறைத்துவிட்டீர்கள். அதைச் சொல்லாமல் இந்தியாவின் பேச்சைக் கேளாததால்தான் வங்கதேசத்தை அவ்வாறு திட்டினார் என்று கூறுகிறீர்கள்.

தாங்கமுடியாத ஆத்திரத்தில் தகாத வார்த்தை பேசுவதுபோன்றதுதான் அங்கே அவர் சொன்னது. அவரால் முடிந்த அளவுக்குக் கடுமையை உபயோகித்திருக்கிறார்.

தனது நாட்டு எல்லைப்படையினரை கொடூரமான முறையில் வங்கதேசம் இழுத்துச்சென்று உடலைச் சிதைத்துக் கொன்றதற்காய் எத்தனை இந்தியவலைப்பதிவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்?. வெளிப்படுத்திய ஒருவரையும் மற்ற இந்தியர்கள் எதிர்க்கவேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இதற்கு சிரிப்பதா அழுவதா என்று எனக்குத் தெரியவில்லை.

சரி அதைவிடுங்கள். இந்திய நாய்கள் என்று சகவலைப்பதிவர்கள் திட்டியதற்காய் எத்தனை இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்?. இந்தியர்களின் சொரணை பற்றி ஏற்கனவே தெரிந்ததுதானே.

நீங்கள் கடைசிப் பத்தியில் சொன்ன இறுதி இருவரிகளில் எனக்கு மிக ஒப்புமை உண்டு. கூடவே இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்தியர்களைவிட ஈழத்தவர்கள் சென்ஸிடிவானவர்கள், மான உணர்ச்சி அதிகம் உடையம் உடையவர்கள், தங்களை யாராவது பழித்தால் சில சொரணைகெட்டவர்கள் போல பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், இதற்காகவும் ( சகநாட்டோரின் தன்மானத்தைத் தாம் மதித்தாலும், மதிக்காவிட்டாலும்) ஈழத்தவர்கள் பெருமையும், ஆணவமும் கொள்ள முழு உரிமை உண்டு.
 
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

முத்து!
நான் எடுத்துக்கொண்ட கருத்துக்குத் தேவையானதையே அப்பதிவிலிருந்து எடுத்துச் சுட்டினேன். இதற்காக அப்பதிவின் முழுக்கருத்தையும் சொல்லவேண்டிய தேவையில்லை. அப்பதிவில் குறிப்பிட்ட அந்த வசனம் மூலம் அவர் வெளிப்படுத்திய திமிர்தான் நான் சொல்லவந்த விடயம்.

இந்திய இராணுவத்தினரை இழுத்துச் சென்று கொன்றதற்காக ஒரு நாட்டை, அந்நாட்டு மக்களை இவ்வளவு கீழ்த்தரமாக வர்ணிக்க முடியுமா? இதே செயலைச் செய்யும் இன்னொரு நாட்டுக்கு இதே வசனத்தைப் பயன்படுத்துவீர்களா? நான் சொல்லவந்தது அவ்வலைப்பதிவாளர் பயன்படுத்திய வசனம் தான். இது அம்மக்களின் சுயத்தின் மீது பூசப்பட்ட சேறு. அதையும் நீங்கள் புரிந்துதான் வைத்துள்ளீர்கள். கடைசியில் நீங்கள் சொன்னது தான்.

இவ்வளவுக்குப்பின்னும் நாம் அப்படிச் சொல்லப்படுவதிலிருந்து தப்பி விட்டோமென்பதற்காக மகிழ்கிறேன் என்றால் அந்த இழி வார்த்தைப்பிரயோகம் என்னை எந்தளவு சினக்க வைத்திருக்க வேண்டுமேன்று பாருங்கள்.

நான் சொல்வதை நினைத்து நீங்கள் அழுவதா சிரிப்பதா என்று யோசிக்கத்தேவையில்லை. சிரியுங்கள். ஏனெனில் சொல்லப்பட்டது நீங்களில்லை. அதைச் சொல்லியவர்களின் பக்கம் நிற்கிறீர்கள். ஆகவே சிரிக்கவேண்டிய முறைதான் உங்களுடையது.
ஆனால் இப்போதும் நம்புகிறேன், அந்த வர்ணனை சரியென்று நீங்கள் நம்பவில்லையென்று.

மேலும், இந்தியரைக் கொன்றதற்குக் கண்டணம் தெரிவித்ததைக் கண்டணம் செய்யச்சொல்லி நான் எங்கே சொன்னேன்? அப்படிச்சொல்லாதவர்களை நான் எங்கே கண்டித்தேன்? நான் எடுத்துக்கொண்டது குறிப்பிட்ட அந்த வரியைத்தான். அதில் வங்கதேசம் எங்கள் அடிமை என்ற தொனி உங்களுக்குத் தெரியவில்லையா? இதையே சீனா செய்திருந்தால் இந்த வசனம் அவரால் சொல்ல முடிந்திருக்காது. காரணம், அவர்களுக்கான சுதந்திரம் நீங்கள் பெற்றுக்கொடுத்ததாகச் சொல்ல முடியாது.

மீண்டும் சொல்கிறேன், நான் அந்த குறிப்பிட்ட வரியையும் அதன் தொனியையும்தான் கண்டித்தேன். இதே மனோபாவம் ஈழப்பிரச்சினையிலும் கையாளப்பட்டது, கையாளப்படுகிறது என்பதையும் பதிவு செய்தேன்.
 
எழுதிக்கொள்வது: mugamoodi

வன்னியன் உங்கள் பதிவில் எமக்கு துவேசம் என்று சொல்கிறீர்கள் // வை.கோ. சிறையிலடைக்கப்பட்டது சரியே என நிறுவும் அப்பதிவர் மேலும் சொல்லும் விசயங்கள் தெளிவாகவே சொல்லிவிடுகிறது, அவரின் துவேசத்தை //

வசந்தன் கேட்டது இது :: // வை.கோ. என்ன செய்தார் என்று கேட்டீர்களே? குரல் கொடுப்பதைத்தவிர வேறென்ன செய்ய முடியும் அவரால்? சரி குரல்தான் கொடுக்க விடுகிறீர்களா? அவர்கள் சிறையில் செலவிட்ட காலங்களுக்கு யார் பொறுப்பு? என்னையா ஜனநாயகம் பேசுகிறீர்கள்? //

என் பதில் இது :: //தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட இயக்கத்தை பற்றி பேசினால் (அதில் அரசியல் இருந்தாலும்) சிறையில் வாடுவதுதான் ஜனநாயகம். //

இதில் துவேஷம் என்னவென்று மேற்கொண்டு படித்துவிட்டு சொல்லுங்கள்:: தமிழ்நாட்டிக் மதுவிலக்கு என்று ஒரு கூத்து நடக்கும். திடீரென மதுவிலக்கு அமலுக்கு வரும். அப்பொழுது யாரும் நாட்டு சாராயம் குடிக்க கூடாது... ஆனால் அண்டை மாநிலம் பாண்டிச்சேரியில் மது அருந்தலாம்... பாண்டிக்கு அருகாமையில் வாழும் மக்கள் நடந்து சென்று மது அருந்திவிட்டு திருமபி வருவார்கள். மது வயிற்றுக்கு வெளியே இருந்தால் அது குற்றம். அப்புறம் மதுவிலக்கு நீக்கப்படும். மக்கள் தாராளமாக மது அருந்தலாம். ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் 'எல்லா' மக்களுக்கும் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ சட்டம் என்று ஒன்றை இயற்றினால் அதை பின்பற்றி நடக்க வேண்டியது மக்களின் கடமை. என் கொள்கைக்கு முரணாக இருக்கிறதென்று அதை மீறினால் அது குற்றம், இழைத்தவர் தண்டிக்கப்படுவர். இந்த நிலைமையில் தடை செய்யப்பட்ட எந்த தீவிரவாத இயக்கத்தையும் எந்த முறையில் ஆதரித்தாலும் பொடா பாயும் என்று சட்டம் இயற்றியாயிற்று. சாமான்யன் மதிக்கும் சட்டத்தை மக்கள் பிரதிநிதி வைகோ மதிக்க வேண்டியது இல்லையா? இத்தனைக்கும் 'இந்திய அரசியல் சாசனப்படி...' என்று பல முறை சத்தியம் செய்தவர் அவர்... முன்னுதாரணமாக திகழ வேண்டிய அவர் சட்டத்தை மீறும் போது சிறையிலடைக்கப்படுவதை அநீதி என்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா?? நாளை வேறு யாராவது அல்குவைதாவுக்கு ஆதரவாய் பேசியதற்காக கைது செய்யப்பட்டால் வைகோவுக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் (அல்குவைதாவை புலிகளோடு நான் ஒப்பிடுகிறேன் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்)


23.39 13.6.2005
 
முகமூடி!
தனிப்பட்ட உங்களுக்கான விளக்கத்தை 'எம்மை' என்ற பதத்துக்கூடாகப் பன்மையாக்குகிறீர். யாரையோ துணைக்கழைக்கிறீர் அல்லது என் குற்றச்சாட்டை முழு இந்தியத்தமிழருக்கும் பொதுமைப்படுத்த நினைக்கிறீர்.

அடுத்து, வை.கோ. பிரச்சினை. உங்கள் விளக்கம் சுவாரசியமாக இருக்கிறது. அப்படியாயின் ஏன் அவர் பேசியது குற்றமன்று, அப்படி ஆதரவு தெரிவித்துப் பேசுவதும் குற்றமன்று என்று முடிபு கொடுக்கப்பட வேண்டும்? உங்கள் பதிலில் வை.கோ.வுக்கு எதிரான கருத்தையே கண்டேன்.

மேலும், நீங்கள் போட்ட அடுத்த பதிவிலும் ஒன்றும் புதிதாய்ச் சொல்லவில்லை. சுத்திவளைத்து அதே புள்ளியில்தான் நிற்கிறீர்கள். உங்களால் புதிதாகச் சொல்லவும் முடியாது. கேள்வி இதுதான். இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்துக்காக அந்நாட்டுக்கு ஆயுத உதவிகள் செய்வது சரியென்றால், ஈழத்தமிழரைக் கொல்வதற்குத் துணைபோகும் பழியை இந்தியா ஏற்கத்தயாரா?

சுத்திச் சுத்தி அயுத உதவி செய்வது சரியே என்பதைச் சொல்லுகிறீர்கள். ஆகவே தன் இறையாண்மைக்கும் சொந்த நலனுக்காகவும் ஈழத்தமிழரை அழித்தொழிக்க இந்தியா உதவி செய்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பசப்புவதற்காக வேறு கதைகளை விடுகிறீர்கள். ஈழத்தமிழரைப்பற்றி எந்தக் கவலையுமில்லை; எங்களுக்கு எங்கள் நலன் மட்டுமே முக்கியம்; அதற்காக எதுவேண்டுமானாலும் இந்தியா செய்ய வேண்டும்; என்ற தொனியைச் சொல்லும் நீங்கள், ஈழத்தமிழர் மேல் அக்கறையுள்ளதாகக் காட்ட முற்படும் வேடத்தனத்தையே அடையாளப்படுத்த நான் எழுதினேன்.

இப்போதும் சொல்கிறேன். கொடுக்கும் இராணுவ, ஆயுத உதவிகள் ஈழத்தமிழரை அழிக்கப்பயன்படாது என்று எங்கும் நீங்கள் நிறுவவில்லை. நிறுவவும் முடியாது. இந்நிலையில் ஆயுத உதவிகள் செய்ய வேண்டுமென்று நீங்கள் கூறுவது, எந்த விதத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான கருத்தாக அமையாது என்பதை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். நான் கேட்பதன் அர்த்தம் தெளிவாகவே இருக்கிறது. முடிந்தால் பதில் சொல்லுங்கள். அல்லாத பட்சத்தில் நான் தெளிவாகவே சொல்கிறேன், ஈழத்தமிழரின் அழிவைப்பற்றி எந்தக் கவலையுமில்லாத, அவர்களின் அழிவுக்குத் துணைபோகும் ஒரு பதிவும் கருத்தும் உங்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
 
எழுதிக்கொள்வது:

//கடல், வான் படைகளைக் கட்டமைத்த போராட்டம் என்பதில் பெருமையும் ஆணவமும் கொள்ள எங்களுக்கு இடமிருக்கிறது.
//

உண்மை

4.38 14.6.2005
 
முகமூடிக்கு எழுதி விட்டுப்போன பின்னூட்டம்:

இந்தியா 'விற்காவிட்டாலும்' அவர்கள் வேறிடத்தில் ஆயுதம் வாங்கத்தான் போகிறார்கள் என்பது தெரியும். இந்தியா செய்வது விற்பனை தாண்டிய உதவி. இவ்வளவு காலம் செய்ததும் விற்பனை தாண்டிய உதவிகள்தான். இப்போது செய்யவிளைவதும் அதுதான். ஈழத்தமிழர் என்ன அங்கீகரிக்கப்படாத உயிர்களா? அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்பதற்காக எதையும் செய்வீர்களா?
நான் சொல்வது இதுதான். இப்பதிவுக்காக உங்கள் மேல் கோபமில்லை. ஆனால் ஈழத்தமிழரில் ஏதோ கரிசனை உள்ளவர்கள் போல் நடிக்கிறீர்கள் பாருங்கள், அதை தயவு செய்து நிறுத்துங்கள். இனியும் உங்கள் நீலிக்கண்ணீரை காட்டி மற்றவர்களை ஏமாற்றாதீர்கள்.

இவ்வளவு கூச்சமில்லாமல் சந்தையில் விலைகூறி விற்பது போல எங்கள் உயிர்களையும் உணர்வுகளையும் பொருட்பண்டமாக விலைகூவுகிறீர்கள். இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் என்று புள்ளிவிவரக் கணக்குக்கூட காட்டுகிறீர்கள். தேர்ந்த வியாபாரியின் லாவகத்தோடு உங்கள் பேரங்ளை அரங்கேற்றுகிறீர்கள்.
 
////முத்து!
நான் எடுத்துக்கொண்ட கருத்துக்குத் தேவையானதையே அப்பதிவிலிருந்து எடுத்துச் சுட்டினேன். இதற்காக அப்பதிவின் முழுக்கருத்தையும் சொல்லவேண்டிய தேவையில்லை. அப்பதிவில் குறிப்பிட்ட அந்த வசனம் மூலம் அவர் வெளிப்படுத்திய திமிர்தான் நான் சொல்லவந்த விடயம்.///
வன்னியன்,
அப்போது சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன். அவரால் முடிந்த அளவுக்கு அதிகமாய் தனது கோபத்தை சொற்களால் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு அதைவிட இழித்துப் பேச வேறு வார்த்தை கிடைக்காமல் போயிருக்கிறது. இதைத் திமிர் என்றுதான் சொல்வேன் என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் விருப்பம். ஒன்றை நன்றாய்ப் புரிந்துகொள்ளுங்கள். உலகில் எந்த நாடும் எந்த நாட்டுக்கும் அடிமை இல்லை, யாரும் அவ்வாறு நடத்துவதும் சாத்தியமில்லை. அந்தக் காலம் மலையேறி வெகுநாட்களாகிவிட்டது.
 
எழுதிக்கொள்வது: Garunyan

அருமையான தலைப்பையா.

நான் வைக்க யோசித்தேன்…..ம்ம்ம் முந்திக்கொண்டுவிட்டீர்.

காருண்யன்


21.15 15.6.2005
 
மெத்தச் சரி வன்னியன்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]