Thursday, February 01, 2007
கிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998
1997 மே இல் தொடங்கி ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை வன்னியில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த காலம்.
"1998 பெப்ரவரி நாலாம் திகதி ஜெயசிக்குறு இராணுவம் கிளிநொச்சியை அடையும்; தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை அமைக்கப்படும்" என்று அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை உறுதியளித்து கடும்போரை வன்னியில் நடத்திய நேரம்.
அந்த நேரத்தில் ஜெயசிக்குறு படையினர் தொடர்பை ஏற்படுத்தவேண்டிய இறுதி இலக்கான கிளிநொச்சியைக் கைப்பற்ற முடிவெடுத்தனர் புலிகள். சிறிலங்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.
சில நாட்களுக்கு முன்னர்தான் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடத்தப்படவிருந்த கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி சிங்களத் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.
01.02.1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது.தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள்.
சமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன.
இவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
கரும்புலி லெப்.கேணல் சுபேசன்
கரும்புலி மேஜர் குமுதன்
கரும்புலி மேஜர் ஜெயராணி
கரும்புலி மேஜர் மங்கை
கரும்புலி மேஜர் ஆஷா
கரும்புலி கப்டன் குமரேஸ்
கரும்புலி கப்டன் நளாயினி
கரும்புலி கப்டன் செங்கதிர்
கரும்புலி கப்டன் உமையாள்
கரும்புலி கப்டன் நளா
கரும்புலி கப்டன் இந்து











கிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை.
அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.


எதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்ரெம்பரில் 'ஓயாத அலைகள் -2" நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாக மீட்டெடுத்தனர் புலிகள்.
படங்கள்: அருச்சுனா
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, மாவீரர், வன்னி
Monday, December 04, 2006
ஜெயசிக்குறு நிறைவுநாள்
19.05.1997 அன்று சிங்களத்தில் 'ஜெயசிக்குறு' (தமிழில் வெற்றிநிச்சயம்) என்று பெயரிடப்பட்டு மிகப்பெருமெடுப்பில் இராணுவ நடவடிக்கையொன்று தொடங்கப்பட்டது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழியாகப் பாதை கைப்பற்றல் என்பதே அதன் இலக்கு. இன்று சர்சைக்குள்ளான ஏ-9 நெடுஞ்சாலைதான் அந்தப்பாதை. தொடக்கத்தில் மூன்றுமாத காலத்துள் முடித்துவிடலாம் என்று கணக்கிட்டுத் தொடங்கப்பட்ட நடவடிக்கை இரண்டரை ஆண்டுகளாக நடத்தப்பட்டு இறுதியில் கைவிடப்படுவதாக 04.12.1998 அன்று அறிவிக்கப்பட்டது.
அந்த இரண்டரை ஆண்டுகளில் கடுமையான மோதல்கள் பலவிடங்களில் நடந்தன. ஏ-9 நெடுஞ்சாலையைத்தான் கைப்பற்றுவது என்ற நோக்கிலிருந்து சாத்தியப்பட்ட எவ்வழியாயினும் சரிதான் என்ற நிலைக்கு அரசு வந்து பலமுனைகளில் பாதைதிறக்க முயற்சித்து முடியாமற்போனது.
இக்காலத்தில் சில ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர், மேலும் சில படையினர் காயமடைந்தனர். ஏராளமானோர் இராணுவத்தைவிட்டுத் தப்பியோடினர்.
இக்காலகட்டத்தில்தான் புலிகளின் போரிடும் ஆற்றல் அபரிதமான வளர்ச்சியடைந்தது.
தொடக்கத்தில் மெதுமெதுவாகப் பின்வாங்கிவந்து ஒருகட்டத்தில் நிலையான பாதுகாப்பரணை அமைத்து மாதக்கணக்கில் முறியடிப்புச்சமரை நடத்தினர்.
வன்னியை இனிமேலும் விட்டுக்கொடுப்பதில்லையென்ற ஓர்மத்தோடு போராடினர்.
இடைப்பட்ட கால்ததில் கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர்.
இந்நிலையில் டிசெம்பர் நாலாம்நாள் 'ஜெயசிக்குறு' நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. தொடர்ந்து 'றிவிபல' என்ற பெயரில் ஒட்டுசுட்டான் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது. ஒருதுப்பாக்கி வேட்டுக்கூட தீர்க்கப்படாமல் ஒட்டுசுட்டான் மண் படையினரால் கைப்பற்றப்பட்டது.
இரண்டரை ஆண்டுகள் நடத்தப்பட்டுக் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளையும், மேலதிகமாக பல பகுதிகளையும் புலிகள் ஐந்தேநாளில் படையினரிடமிருந்து மீட்டெடுத்தனர் என்பது வரலாறு.
இந்நிகழ்வுகள் பற்றிய விவரமான பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு
_________________________________________________
டிசெம்பர் ஐந்தாம்நாள்.
யாழ்ப்பாணத்தில் ரத்வத்த சிங்கக் கொடியேற்றி தமிழர்மீதான தமது வெற்றியைப் பறைசாற்றியநாள்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென்று 'றிவிரச' என்றபேரில் பாரிய படையெடுப்பைச் செய்த படையினர், மாவீர்நாளுக்குள் யாழ்நகரைக் கைப்பற்றி பிரபாகரனின் பிறந்தநாளன்று அல்லது மாவீரர்நாளன்று கோட்டையில் கொடியேற்றுவது என்று திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அத்திட்டம் கைகூடாமல் டிசெம்பர் ஐந்தாம்நாள் யாழ்.கோட்டையில் சிங்கக்கொடியை ஏற்றி வெற்றிமுழக்கமிட்டனர்.
அவ்வகையில் இதுவொரு கரிநாள்.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, வன்னி
Thursday, November 23, 2006
மாங்குளம் முகாம் தகர்ப்பு - நினைவுமீட்டல்
21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது.
இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது.
அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை விரிந்த கூட்டுப்படைத்தளத்தைக் கொண்டிருந்தனர். கிளிநொச்சியிலும் இராணுவ முகாம் அமைத்திருந்தனர். பின்னர் அம்முகாமைவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர்.
வவுனியாவிலிருந்து தெற்குப்பக்கமாக தொடர்ச்சியாக சிங்களப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும் - இன்று ஏ-9 என அழைக்கப்படும் - யாழ் - கண்டி நெடுஞ்சாலையில் இரு இடங்களில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்துத் தங்கியிருந்தது. கொக்காவில், மாங்கும் எனுமிடங்களில் இருந்த முகாம்களே அவைகள்.
வவுனியாவுக்கும் பரந்தனுக்குமிடையில் இருந்த இவ்விரு முகாம்களும் வன்னியைத் துருத்திக்கொண்டே இருந்தன.
சண்டை மூண்டதும் கொக்காவில் முகாம் தாக்கி வெற்றிகொள்ளப்பட்டது. அதன்பின் இடையில் துருத்திக்கொண்டிருந்த ஒரேமுகாம் மாங்குளம் முகாம்தான். தொடக்கத்தில் சிறிதாக இருந்த முகாம் பின்னர் ஒரு நடவடிக்கைமூலம் பெரிதாக்கிப் பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் யாழ்.கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றிய புலிகள் அடுத்துக் குறிவைத்தது மாங்குளத்தைத்தான்.
வன்னியில் விசாலமான நிலப்பரப்பொன்றையும் கண்டிவீதியையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டிய தேவையையும் புலிகள் அன்றே உணர்ந்திருந்தனர். அதன் வெளிப்பாடுதான் தமது முதலாவது பெரிய நடவடிக்கையாக கொக்காவில் முகாமைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. அடுத்து இடையில் துருத்திக்கொண்டிருந்த மாங்குளத்தையும் கைப்பற்றுவதென்று முடிவெடுத்தனர்.
அக்காலத்தில் புலிகள் தமது நினைவுநாட்களுக்காக பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. அவ்வகையில் ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் புலிகள் பெரிய தாக்குதலைச் செய்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். அப்படியே தாக்குதலும் நடந்தது.
இன்று கேணல் நிலையிலிருக்கும் தளபதி பால்ராச்சின் தலைமையில், இன்னொரு தளபதி தீபனின் துணை வழிநடத்தலுடன் மாங்குளம் முகாம் மீது 21 ஆம் திகதி தாக்குதல் தொடங்கப்பட்டது.
அப்போது பிரபலமாகவும் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவுமிருந்த புலிகளின் சொந்தத் தயாரிப்பான பசீலன் -2000 என்ற எறிகணை செலுத்திகளின் துணையுடன் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்டது. பல பகுதிகள் வெட்டையாக இருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு தாக்குதலைச் செய்தன புலியணிகள்.
முடிவில் மாங்குளம் படைமுகாம் வீழும் நிலைக்கு வந்தது. இறுதி முயற்சியாக கரும்புலித்தாக்குதல் நடத்துவதென்பது திட்டம். முகாம் தாக்குதலுக்கான திட்டமிடலின்போது அக்கரும்புலித் தாக்குதலை நடத்துவது யாரென்று தீர்மானிக்கும் நேரத்தில், வன்னிமாவட்டத் துணைத்தளபதியாக இருந்த போர்க் தானே அதை நடத்தவேண்டுமென்று பிடிவாதமாக நின்று அச்சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில் திட்டமிட்டபடி தளபதி - கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் வெடிமருந்து வாகனம் படைமுகாம் வரை சென்று வெடித்தது. அத்தோடு மாங்குளம் படைமுகாமின் சரித்திரம் முடிவுக்கு வந்தது.

மாங்குளம் படைமுகாம் வன்னிக்காட்டில் தனித்து நின்ற ஒரு படைமுகாம். ஒன்றில் காடுவழியாக முல்லைத்தீவுப் படைத்தளத்துக்கோ அல்லது வவுனியாப் படைத்தளத்துக்கோதான் செல்ல முடியும். மாங்குளம் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியோர் காடுகளில் புகுந்து திக்குத் தெரியாது ஓடினர். அவர்களைத் தேடுவதில் புலியணிகளோடு வன்னி மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இம்முகாம் தாக்குதலில் 65 வரையான விடுதலைப்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
______________________________________-
தொடக்கத்திலேயே வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த, கண்டிவீதியைத் துண்டாடியிருந்த இரு படைமுகாம்களை அவசரஅவசரமாகக் கைப்பற்றியதன்மூலம் பின்னாளில் போராட்டம் தொடர்ந்து நடப்பதற்குரிய அத்திவாரத்தை இட்டனர் புலிகள். வன்னியில் எஞ்சியிருந்த ஒரே படைத்தளமான முல்லைத்தீவையும் பின்னர் கைப்பற்றி, அகன்ற வன்னிப்பகுதியைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வந்தனர். இதன்மூலம் இன்றுவரை போராட்டத் தலைமை வன்னியில் இக்கட்டின்றி செயற்பட, ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வந்து தக்க வழிகோலினர் புலிகள்.
அன்று மீட்கப்பட்ட அந்த வீதிக்காக பின் ஆயிரம் சண்டைகள் நடந்தன. இன்றுவரை அந்த வீதிக்காக சண்டை நடந்துகொண்டே இருக்கிறது.
_____________________________
படம்: அருச்சுனா
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர், வன்னி
ஓயாத அலைகள் மூன்று - நினைவுமீட்டல்
இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம்.
கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள்
1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இலங்கையின் தென்பகுதிக்குமிடையில் தரைவழித்தொடர்பு புலிகளின் பகுதிக்குள்ளால் தான் இருந்தது. யாழ்ப்பாண, கிளிநொச்சி இராணுவத்துக்கான விநியோகங்கள் அனைத்தும் வான்வழி அல்லது கடல்வழிதான். அவ்வழிகள் பலநேரங்களில் விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகின. முக்கியமாக கடல்வழி விநியோகம் எந்தநேரமும் சீராக இருக்கவில்லை. நிறைய கடற்சண்டைகள் இந்த விநியோக நடவடிக்கையில்தான் நடந்தன.
இந்நிலையில் வடபகுதியுடன் தரைவழித் தொடர்பொன்றை ஏற்படுத்தவென தொடங்கப்பட்டதுதான் ஜெயசிக்குறு. அதாவது வவுனியா - தாண்டிக்குளத்திலிருந்து கிளிநொச்சி வரையான பகுதியைக் கைப்பற்றல். இதன்வழியாகச் செல்லும் கண்டிவீதியை மையமாக வைத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதுவரை இலங்கையில் நடக்காத பாரிய யுத்தமொன்று தொடக்கப்பட்டது. புலிகளும் கடுமையாகவே எதிர்த்துப்போரிட்டனர். புளியங்குளம் வரையே சிறிலங்காப்படையினரால் கண்டிவீதி வழியாக முன்னேற முடிந்தது. ஏறத்தாள நான்கு மாதங்கள் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்றவென கடும் சண்டைகள் நடந்தன. அந்த நான்கு மாதங்களும் படையினரால் அக்கிராமத்தைக் கைப்பற்ற முடியவில்லை. ஆனால் அரச வானொலியில் பல தடவைகள் அக்கிராமம் திரும்பத் திரும்ப படையினராற் கைப்பற்றப்பட்டதென்பது வேறுகதை.
இனி நேரடியாகக் கண்டிவீதியால் முன்னேறுவது சரிவராது என்று உணர்ந்த இராணுவம் அப்பாதையிலிருந்து விலகி காடுகளுக்குள்ளால் அவ்வீதிக்குச் சமாந்தரமாக முன்னேறி சில இடங்களைக் கைப்பற்றியது. தமக்குப் பக்கவாட்டாக நீண்டதூரம் எதிரி பின்சென்றுவிட்டதால் புளியங்குளத்திலிருந்து புலிகள் பின்வாங்கினர். பின் கனகராயன்குளத்தை மையமாக வைத்து சிலநாட்கள் சண்டை. அதிலும் சரிவாராத இராணுவம். தன் பாதையை மாற்றி சமர்க்களத்தை நன்கு விரிக்கும் நோக்குடன் அகண்டு கொண்டது. இறுதியாக கண்டிவீதிவழியான முன்னேற்றம் மாங்குளம் வரை என்றளவுக்கு வந்தது. அதன்பின் இராணுவம் எடுத்த முன்னேற்ற முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

தென்முனைப் படைநடவடிக்கைகள் தோல்வியுற்ற நிலையில் போய்ச்சேர வேண்டி மற்றய முனையான கிளிநொச்சியிலிருந்து தெற்குநோக்கி (மாங்குளம் நோக்கி) படையெடுப்புக்கள் நடத்தப்பட்டன. அவையும் முறியடிக்கப்பட்டன. பிறகு யாழப்பாணத்துக்கான பாதைதிறப்பில் சற்றும் சம்பந்தப்படாத - முல்லைத்தீவுக்கு அண்மையான ஒட்டுசுட்டான் என்ற நிலப்பரப்பை ஓர் இரகசிய நகர்வுமூலம் கைப்பற்றிக் கொண்டது. இதற்கிடையில் கிளிநொச்சி நகர்மீது இரு பெரும் தாக்குதல்களைத் தொடுத்து இரண்டாவதில் அந்நகரை முற்றுமுழுதாகப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர். அதன்பின் கண்டிவீதி மூலம் பாதை சரிவராது என்று முடிவெடுத்து, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையெடுக்கத் தீர்மானித்து ரணகோச என்ற பெயரில் படையெடுத்தது அரசு. அதையும் எதிர்கொண்டனர் புலிகள். அதுவும் பள்ளமடு என்ற பகுதியைக் கைப்பற்றியதோடு மேற்கொண்டு முன்னேற முடியாமல் நின்றுகொண்டது அரசபடை.

இப்போது தென்போர்முனை மிகமிகப் பரந்திருந்தது. இலங்கையின் கிழக்குக் கடற்கரையிலிருந்து (நாயாறு) மேற்குக் கடற்கரை வரை(மன்னார்) வளைந்து வளைந்து சென்றது முன்னணிப் போரரங்கு. இவ்வரங்கில் எங்குவேண்டுமானாலும் முன்னேறத் தயாராக நின்றது அரசபடை. நூறு கிலோ மீற்றர்களுக்குமதிகமான முன்னணி நிலை இத் தெற்குப்பக்கதில் இருந்தது. அதைவிட ஆனையிறு பரந்தனை உள்ளடக்கிய வடபோர்முனை. மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து தரையிறக்கவெனத் தெரிவுசெய்யப்பட்ட பூநகரிக் கடற்கரை (ஒருமுறை தரையிறக்க முயற்சி நடந்து முறியடிக்கப்பட்டது) என மிகப்பரந்து பட்டிருந்தது அரசபடையை எதிர்கொள்ளவேண்டிய நிலப்பரப்பு. கடுமையான ஆட்பற்றாக்குறை புலிகள் தரப்பில் இருந்தது. இவ்வளவு நீளமான காவலரன் வேலியை அவர்கள் எதர்கொண்டிருக்கவில்லை. அதுவும் எந்த இடத்திலுமே எந்த நேரத்திலும் எதிரி முன்னேறலாமென்ற நிலையில்.
அப்போது வன்னியில் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதியென்று இரண்டைக் குறிப்பிடலாம். புதுக்குடியிருப்பை மையமாக வைத்த ஒரு பகுதி. அடுத்தது மல்லாவியை மையமாக வைத்த ஒரு பகுதி. அவ்விரு பகுதியுமே இராணுவத்தால் எந்த நேரமும் கைப்பற்றப்படலாமென்ற நிலை. மிகமிகக் கிட்டத்தில் எதிரி இருந்தான். புதுக்குடியிருப்போ, முள்ளயவளையோ, முல்லைத்தீவோ மிகக்கிட்டத்தில்தான் இருந்தது. மக்கள் பெருந்தொகையாயிருக்கும் இடங்களைக் கைப்பற்றுவதோடு புலிகளுக்கான மக்கள் சக்தியை அடியோடு அழிக்கலாமென்பதும் திட்டம். அதைவிட முல்லைத்தீவுக் கடற்கரையைக் கைப்பற்றுவதோடு புலிகளின் அனைத்து வழங்கல்களையும் முடக்கிவிடலாமென்பதும் ஒருதிட்டம். உண்மையில் முல்லைத்தீவு கைப்பற்றப்பட்டால் பழையபடி கெரில்லா யுத்தம்தான் என்ற நிலை. அதைவிட காடுகளும் பெருமளவில் அரசபடையாற் கைப்பற்றப்பட்டுவிட்டது. தலைமை இருப்பதற்குக்கூட தளமின்றிப் போகக்கூடிய அபாயம். உண்மையில் யாழ்ப்பாணத்துக்கான பாதைதிறப்பு என்பதைவிட இப்போது மிகப்பெரிய வெற்றிகளுக்கான சாத்தியங்கள் ஏராளமாக அரசின்முன் குவிந்திருந்தன.

மிகமிக இக்கட்டான நிலை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி மிகமிகச் சுருங்கியிருந்தது. இந்நிலையில் எல்லைப்படைப் பயிற்சியென்ற ஒரு வடிவத்தை அறிமுகப்படுத்தினர் புலிகள். வயதுவந்த அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி. மக்களும் விருப்போடு அப்பயிற்சியைப் பெற்றனர். இந்நிலையில் மக்கள் குடியிருப்புக்களைக் கைப்பற்றும் தன் எண்ணத்தை ஒதுக்கிவைத்தது படைத்தரப்பு. ஏறத்தாள மூன்று மாதங்களாகத் தனது எந்த கைப்பற்றல் நடவடிக்கையையும் செய்யவில்லை. ஆனால் புலிகளின் மீது தாக்குதலைத் தொடுத்து அவர்களை அழிப்பது (இடங்களைக் கைப்பற்றுவதில்லை) என்ற முறையைக் கையாண்டு "வோட்டர்செட்" என்ற பெயரில் இரண்டு நடவடிக்கைகளை அடுத்தடுத்துச் செய்தது அரசபடை. அதில வெற்றியும் பெற்றது. இரண்டு தாக்குதல்களிலும் அறுபதுக்கும் மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தனர்.
மக்கள் பெரிதும் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். இனி எல்லா இடத்தையும் அவன் பிடிச்சிடுவான் என்றே பலர் எண்ணத் தலைப்பட்டனர். யாருக்கும் எதுவும் புரியவில்லை. இராணுவம் பெருமெடுப்பில் முன்னேறினால் இடம்பெயர்வதில்லையென்றே பலர் முடிவெடுத்துவிட்டனர். இடம்பெயர வன்னிக்குள் வேறு இடங்களுமிருக்கவில்லை.
இந்நிலையில்தான் "வோட்டர் செட் - இரண்டு" நடந்து ஒரு வாரகாலத்துக்குள் புலிகளின் நடவடிக்கை தொடங்கியது. அப்படியொரு தாக்குதல் நடக்கப்போவதாக எந்த அசுமாத்தமும் இருக்கவில்லை. பின்னர் சந்தித்துக் கதைத்த அளவில் ஒட்டுசுட்டானில் காவலரணில் நின்ற புலியணிக்குக்கூட ஒட்டுசுட்டான் இராணுவத்தளம் தாக்கப்படப்போவது பற்றியேதும் தெரிந்திருக்கவில்லை. நிச்சயமாக எதிரி ஒருசதவீதம்கூட எதிர்பார்த்திருக்கமாட்டான்.
ஒட்டுசுட்டான் படைத்தளத்தில்தான் ஓயாத அலைகள் -மூன்று தொடங்கப்பட்டது. இரவே அத்தளம் கைப்பற்றப்பட்டதுடன் தொடர்ச்சியாக அணிகள் முன்னேறின. ஒட்டுசுட்டானிலிருந்து இடப்பக்கமாக நெடுங்கேணிக்கும் வலப்பக்கமாக ஒலுமடு, கரிப்பட்டமுறிப்பு என தாக்குதல் விரிந்தது. தொடக்கச் சண்டையின் பின் அவ்வளவாக கடுமையான சண்டைகள் நடைபெறவில்லை. எல்லாத்தளங்களும் விரைவிலேயே புலிகளிடம் வீழ்ந்தன. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக வெவ்வேறு நடவடிக்கைள் மூலம் கைப்பற்றப்பட்ட பாரிய நிலப்பகுதியை வெறும் நாலரை நாட்களில் புலிகள் மீட்டார்கள். மன்னார்ப்பகுதியால் முன்னேறி படையினர் நிலைகொண்டிருந்த பகுதிகளையும் புலிகள் விரைந்த தாக்குதல் மூலம் மீட்டார்கள். அந்நேரத்தில்தான் மடுத்தேவாலயப்படுகொலை நடந்தது.
ஏற்கெனவே ஓயாத அலைகள் ஒன்று. இரண்டு என்பவை முறையே முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களின் மீட்பாக அமைந்தது. அதன் தொடர்ச்சியில் மூன்றாவது நடவடிக்கை தனியே குறிப்பிட்ட முகாம்களோ நகரங்களோ என்றில்லாது பரந்தளவில் நிலமீட்பாக அமைந்தது. நூற்றுக்கணக்கான சதுரகிலோமீற்றர்கள் பரப்புக்கொண்ட பெரும்பகுதியை மீட்கும் சமரிது. சிறிலங்காவின் பல கட்டளைத்தளபதிகளின் கீழ், விமானப்படை, கடற்படை, சிறப்புப்படைகள், காவல்துறை எனற பலதரப்பட்ட படைக்கட்டமைப்புக்களையும் கொண்டிருந்த மிகப்பெரிய தொகுதியை அழித்து நிலத்தைக் கைப்பற்றிய போரிது. கடந்த காலங்களைப்போலல்லாது மிகக்குறைந்த இழப்புடன் பெரும்பகுதி நிலப்பரப்புக் கைப்பற்றப்பட்டது.
அந்நடவடிக்கை தனியே தென்முனையில் மட்டும் நின்றுவிடவில்லை. அதேபெயரில் வடமுனையிலும் நடந்தது. ஆனையிவைச் சூழ ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை தொடர்ந்தது. இறுதியில் ஆனையிறவும் கைப்பற்றப்பட்டது. யாழின் கணிசமான பகுதி இந்நடிவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரைப் பத்திரமாக வெளியேற்றித் தருமாறு பிறநாடுகளிடம் அரசு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது இந்த ஓயாத அலைகள்-3.
அது தொடங்கப்பட்டபோது இருந்த நிலைக்கும் அந்நடவடிக்கை தொடங்கிய பின் இருந்த நிலைக்குமிடையில் பாரிய வித்தியாசம். அந்நடவடிக்கை தொடங்கமுதல்நாள் என்ன நிலையில் தமிழர்கள் இருந்தார்களோ, இரண்டொரு நாளில் அதே நிலைக்குத் தள்ளப்பட்டனர் அரசபடையினர்.
தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சலையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தித் தந்தது இந்த ஓயாதை அலைகள்-3 நடவடிக்கை. அவ்வெற்றிச் சமர் தொடங்கப்பட்ட இந்நாளில் அதை நினைவுகூருகிறோம். அத்தோடு இவ்வெற்றிக்காகத் தம்முயிர்களை ஈந்த மாவீரர்களையும் நினைவுகூர்கிறோம்.
-----------------------------------------------------------------
ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது களப்பலி லெப்.கேணல் இராகவன்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்தளபதியான இவர்தான் தாக்குதலைத் தொடங்குமணிக்குத் தலைமையேற்றுச் சென்றார். எதிரியின் காவலரண் தடைகளைத் தகர்க்கும் வேலையில் ஏற்பட்ட தாமதத்தையடுத்து அதைச் சரிசெய்ய முன்னணிக்கு விரைந்தபோது தொடங்கப்பட்ட தாக்குதலில் வீரமரணமடைந்தார். ஏற்கெனவே பல வெற்றிகளைத் தேடித்தந்த அருமையான தளபதி. இந்த வரலாற்றுத் தாக்குதலைத் தொடங்கிவைக்கத் தெரிவுசெய்யப்பட்டளவில் அவரது திறமையை ஊகிக்கலாம். முக்கியமான தளபதியொருவரின் ஈகத்தோடு தொடங்கியதுதான் இச்சமர்.
சம்பந்தமுள்ள வேறுபதிவு.
-வன்னியன்-
02.11.2005.
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மக்கள் எழுச்சி, வன்னி
Monday, November 13, 2006
தவளைப் பாய்ச்சல்
பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு.
ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம்.
அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி - நல்லூர் பாதையே இருந்தது. யாழ்ப்பாணத்தின் கிளாலிக் கடற்கரையிலிருந்து மன்னார் மாவட்டத்தின் நல்லூர் அல்லது ஆலங்கேணிக் கடற்கரைக்கு இரவில் படகிற் பயணம் செய்ய வேண்டும். அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.
இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் வஞ்சகமில்லாமல் நிறையப்பேர் அக்கடலிற் கொன்றுகுவிக்கப்பட்டனர். வெட்டுக்காயங்களோடுகூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ்.குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான்.
பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன்துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.
இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ("உறங்காத கண்மணிகள்" என்ற தமிழீழ முழுநீளத் திரைப்படம், இப்பூநகரிப் படைத்தளத்துள் வேவு பார்த்த வீரர்களையும், அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையும் தழுவி எடுக்கப்பட்டது)
யாழ். தென்மராட்சியில் இப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு புலியணிகள் பயிற்சியிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அந்நேரம்தான் யாழ்ப்பாணம் நோக்கி ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து 'யாழ்தேவி' என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. பூநகரிப்படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த புலியணிகளைக் கொண்டு அவசரஅவசரமாக அந்நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள்.
நீண்ட தயார்ப்படுத்தலின்பின் அந்நாளும் வந்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் இரவு புலியணிகள் அத்தளம் மீது தாக்குதல் தொடுத்தன. கடல்வழியாலும் தரைவழியாலும் அக்கூட்டுப்படைத்தளம் மீது அகோரத் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியில் முக்கியமான சமர் அது. பெரும் சமரொன்றுக்கான வினியோகம், பாதுகாப்பு என்பவற்றை முதன்முதல் கடற்புலிகள் வழங்கினர்.
நீர் வழியாலும் நில வழியாலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதாலேயே இந்நடவடிக்கைக்கு 'தவளைப் பாய்ச்சல்' என்று பெயர் சூட்டப்பட்டது.
மூன்றுநாட் சமரின் பின் புலியணிகள் பின்வாங்கின. ஏராளமான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியிருந்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சம்பவம், முதலும் கடைசியுமாக டாங்கியொன்றை (Tank) அரசபடையினரிடமிருந்து புலிகள் கைப்பற்றினர். இன்னொன்றை அழித்தனர்.
அன்று கைப்பற்றப்பட்ட அந்த ஒரேயொரு டாங்கி இன்றுவரை தன் சக்திக்கு மீறி உழைத்துக்கொண்டிருக்கிறது. பல முக்கிய வெற்றிகளை ஈட்டித்தந்துள்ளது.
நாகதேவன் துறையிலிருந்து ஐந்து 'நீருந்து விசைப்படகு'களைக் கைப்பற்றினர் கடற்புலிகள். அவையும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருந்தன.

அத்தாக்குதலில்தான் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளின் முதலாவது 'லெப்.கேணல்' தரத் தளபதி வீரச்சாவடைந்தார்.
லெப்.கேணல் பாமா/கோதை என்ற கடற்புலிகளின் பெண்களணியின் தளபதி இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்.
இச்சமரில் புலிகள் தரப்பில் லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் குணா, லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் அருணன்/சூட் எனும் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________
பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சமநேரத்தில் பலாலி விமானப்படைத்தளம் மீதும் கரும்புலித்தாக்குல் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றியாக அத்தாக்குதல் அமையவில்லை. இத்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________
பூநகரியில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக யாழ்ப்பாணம் யாகப்பர் தேவாலயத்தின் மீது சிங்கள வான்படை குண்டுகளை வீசி அத்தேவாலயத்தைத் தரைமட்டமாக்கியது. ஆலயம் முற்றாக நாசமானதோடு அத்தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் பலியாகினர்.
_________________________________________________
அதன்பின்னும் பூநரிப்படைத்தளம் சிங்களப்படையினரிடமே இருந்தது. அனால் கிளாலிக் கடலில் கடற்படையினரின் தாக்குதல் அச்சமின்றி பொதுமக்களின் பயணம் தொடர்ந்தது. கடற்புலிகளின் பாதுகாப்போடு பகலிற்கூட பயணங்கள் தொடர்ந்தன.
யாழ். குடாநாட்டை படையினர் முழுதாகக் கைப்பற்றியபோது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பாதையூடாகவே வந்தார்கள்.
அதன்பின்னும் பூநகரி படையினரிடம்தான் இருந்தது.
முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்துக்கொண்டது அரசபடை. அந்நேரத்தில் சத்தம்போடாமல் அரசபடை ஒரு காரியத்தைச் செய்தது.
1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றுமுழுதாகப் பின்வாங்கி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டது இராணுவம்.
சிறுசண்டைகூட இல்லாமல் பூநரிப்படைத்தளம் புலிகள் வசமானது.
இன்று அரசியற்களத்திலும் போரியற்களத்திலும் பூநகரிக்கு இருக்கும் முக்கியத்துவம் மிகப்பெரியது. பூநகரியை விட்டுப் பின்வாங்கியதால் அரசபடை கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் விலை அதிகம்.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம்
Friday, September 29, 2006
யாழ்தேவி முறியடிப்பு
28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பெரும் படைநகர்வொன்றை சிறிலங்கா அரசபடை செய்தது. அந்தப் படை நடவடிக்கைக்கு அரசு சூட்டிய பெயரும் "யாழ்தேவி" தான்.
இராணுவம் முன்னேற எடுத்துக்கொண்ட நிலப்பகுதி தமிழர் சேனைக்குச் சாதகமற்ற பகுதி. முதன்மைச் சாலையான A-9 பாதையூடாக முன்னேறாமல் கடற்கரைப் பக்கமாக, முழு வெட்ட வெளிக்குள்ளால் இராணுவம் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டது. அந்த வெட்டையில் இராணுவத்தை எதிர்த்து கடும்சமர் புரிவதென்பது புலிகளுக்கு மிகவும் பாதகமான நிலை. ஆனாலும் புலிகள் அச்சமரை எதிர்கொண்டனர்.
அந்த நடவடிக்கை நடந்தபோது புலிகள் பெரியதொரு வலிந்த தாக்குதலுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அதே ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பூநகரிக் கூட்டுப்படைத்தளம் மீதான 'தவளைப் பாய்ச்சல்' நடவடிக்கைக்கான ஆயத்தமே அது. அணிகள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டிருந்த சமயம் எதிரி புதிய களமுனையொன்றைத் திறந்திருந்தான். எப்படியும் இந்த முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை இருந்தது.
தவளைப் பாய்ச்சலுக்காகத் தயாராகிக் கொண்டிருந்த அணிகளை ஒருங்கிணைத்து தளபதி பால்ராஜ் முறியடிப்புத் தாக்குதலை நடத்துகிறார்.
புலோப்பளை வெட்டையில் புலியணிகள் மிக நன்றாக உருமறைத்துப் பதுங்கியிருந்தன. எந்தக் காப்புமற்ற வெட்டவெளி. முன்னேறிய படையினர் அன்று காலையும் தொடர்ந்து முன்னேறினர். பதுங்கியிருந்த புலியணிகளை அவர்கள் காணவில்லை. அவ்வளவு திறமையான உருமறைப்பு. கைகலப்பு நடக்குமளவுக்கு மிக நெருக்கமாக வந்தபின் இராணுவத்தினர் மீது புலியணிகள் கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. உச்சபட்ச திகைப்புத் தாக்குதலாக அமைந்த அந்த அதிரடியில் நிலைகுலைந்தது சிறிலங்கா அரசபடை. அவர்கள் சுதாரித்து அணிகளை ஒழுங்கமைத்து புலிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்குள் கணிசமான இராணுவத்தினரை இழந்திருந்தனர்.
தன்னை மீளமைத்துக்கொண்ட இராணுவம் தொடர்ந்தும் மிக மூர்க்கமாகத் தாக்கியபடி முன்னேறியது. புலோப்பளை வெட்டையில் மிகக்கடுமையான சமர் நடந்தது. அரசபடையினரின் முக்கிய பலமாகக் கருதப்பட்ட டாங்கிகளில் இரண்டை புலிகள் அழித்தனர். எதிரித்தரப்பில் இழப்புகள் அதிகமாகிக்கொண்டு வந்தது. இறுதியில் தனது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு பழையபடி இயக்கச்சிக்கே திரும்பியது இராணுவம்.
வெற்றிகரமாக அந்த "யாழ்தேவி" நடவடிக்கை புலிகளால் அன்று முறியடிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி திட்டமிட்டபடி பூநகரி மீதான தமது பாய்ச்சலையும் நடத்தினர் புலிகள்.
புலோப்பளைச் சமர் புலிகளின் போரியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை. அதாவது முழுமையாக தமக்குச் சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர்.
இதில் கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் /நாயகன் உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
__________________________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு
Tuesday, September 26, 2006
கிளிநொச்சி வெற்றி கொள்ளப்பட்ட நாள்
இன்று கிளிநொச்சி தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது.
தொன்னூறுகளின் இறுதிப்பகுதியில் இருந்து கிளிநொச்சி இராணுவ ஆக்கிரமிப்பில்லாமல் இருந்தது. வடபகுதியின் முக்கிய வியாபாரத் தலமாக இந்நகரம் இருந்துவந்தது.
1995 இன் இறுதியில் நடந்த யாழ்ப்பாணத்தில் வலிகாம இடப்பெயர்வைத் தொடர்ந்து கிளிநொச்சியின் மக்கள் செறிவு அதிகரிக்கத் தொடங்கியது. 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக சிங்களப்படையினரிடம் வீழ்ந்தபோது கிளிநொச்சியின் சனச்செறிவு அதிகரித்திருந்தது. கிளிநொச்சி புதிதாகக் களைகட்டத் தொடங்கியது.
இந்நிலையில் யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின் மிகக்குறுகிய காலத்துள் வன்னியைத் துருத்திக்கொண்டிருந்த முல்லைத்தீவு முகாம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். "ஓயாத அலைகள்" என்று பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் அம்முகாம் முற்றாகக் கைப்பற்றப்பட்டதோடு முதன்முதலாக தமிழர்படைக்கு ஆட்லறிப் பீரங்கிகளும் கிடைத்தன. அம்முகாமைக் காக்க சற்றுத்தள்ளி தரையிறக்கப்பட்ட படையினரையும் தாக்கி தப்பியோட வைத்ததோடு முல்லைத்தீவு நகரம் தமிழர் வசமானது. இன்றுவரையான போராட்டப் பாய்ச்சல்கள் அந்நகரத்தை மையமாக்கியே நடந்து வருகின்றன.
முல்லைத்தீவு இழப்புக்குப் பதிலாக சிங்களப்படைகள் கைப்பற்றப் புறப்பட்ட நகரம் தான் கிளிநொச்சி.
யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து களைகட்டியிருந்த கிளிநொச்சிக்கு வந்தது ஆபத்து 'சத்ஜெய' என்ற வடிவில். 'சத்ஜெய -1' என்ற பேரில் பரந்தன் சந்தியைக் கைப்பற்றினர். அதன்பின் 'சத்ஜெய -2' என்ற பேரில் கிளிநொச்சி நோக்கி முன்னேறிய படையினருக்கு அது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலைச் சந்திக்க வேண்டி வந்தது. புலிகளுக்கு அதுவொரு பயிற்சிக் களமாகக்கூட இருந்தது. பெருமெடுப்பில், யுத்த டாங்கிகளின் துணையோடு முன்னேறும் படையினரை எதிர்கொள்வது தொடர்பான ஆற்றலை மெருகூட்டும் நடவடிக்கை அது. தமது பீரங்கியணிகளையும், பீரங்கிச்கூட்டு வலுவையும் அக்களத்தில் மேம்படுத்திக் கொண்டார்கள் புலிகள். பின்வந்த 'ஜெயசிக்குறு' எதிர்ப்புக்கு இச்சமரிலிருந்து பயின்றவையே உதவின.
சுமார் ஒருமாதகாலம் இழுத்தடித்த சத்ஜெய நடவடிக்கை, பின் 'சத்ஜெய -3' என்ற நிலைக்கு வந்தது. இறுதியாக கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது. ஒருவர்கூட அந்நகரில் இல்லாமல் அத்தனைபேரும் வன்னியின் ஏனைய பக்கங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
கிளிநொச்சியைக் கைப்பற்றவென சிங்களப் படைகள் கொடுத்த இன்னொரு விலை பூநகரி. பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றாக வெளியேறிச் சென்றது சிங்களப்படை. இன்றுவரை சிங்களப்படைகள் எடுத்த வருந்தத்தக்க முடிவுகளில் ஒன்றாக இப்பின்வாங்கல் இருக்கும். சம்பூரை விட்டுப் பின்வாங்கியதால் திருகோணமலைக்கு வந்தது பேராபத்து. அதேபோல் பூநகரியை விட்டுச் சென்றதால் இன்றுவரை யாழ்ப்பாணத்து இராணுவத்துக்குப் பேராபத்து தொடர்கிறது.
இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப்போது தம் வீடுகளைப் பார்த்துவரவென கிளிநொச்சிக்குச் செல்வார்கள். சூனியப்பிரதேசம் என அவர்கள் நினைத்த இடங்களுக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டார்கள்.
இந்நிலையில் வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைக்க 'ஜெயசிக்குறு' என்ற பேரில் இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவர்களது இலக்கு வவுனியா தாண்டிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை செல்வதுதான். அந்நடவடிக்கை வன்னியை முழுப்போர்க்களமாக்கியது. சிறிது சிறிதாக முன்னேறி வந்த படைகள் வன்னியின் கணிசமான பகுதியைக் கைப்பற்றியிருந்தன. ஒருகட்டத்துக்கு மேல் முன்னேற முடியாதபோது வேறு முனைகளில் சமர் முனையைத் தொடக்கி இடங்களைப் பிடிக்க முற்பட்டார்கள். இறுதியாக மாங்குளம்வரை வந்தவர்கள், மாங்குளம் சந்தியைக் கைப்பற்ற முடியாமல் திண்டாடி நின்றார்கள்.
1998இல் இலங்கைச் சுதந்திர தினமான பெப்ரவரி நாலாம் நாள் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு பேருந்து விடுவதாக அப்போதைய பிரதியமைச்சர் ரத்வத்த சூளுரைத்திருந்தார். அதேநாளில் கிளிநொச்சியைக் கைப்பற்றவென புலிகள் தாக்குதல் தொடுத்தனர். அத்தாக்குதல் திட்டமிட்டபடி வெற்றியடையவில்லை. சிலபகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய வேறுசில பகுதிகளை விட்டுப் பின்வாங்க வேண்டிவந்தது. கணிசமான இழப்புடன் அத்தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்தது.
அதன்பின் இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல நடந்தன. கிளிநொசச்சியிலிருந்து கண்டிவீதி வழியாக தெற்குநோக்கியும் பாரிய முன்னேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில் கிளிநொச்சியை மீட்கும்நாள் வந்தது.
1998 செப்ரெம்பர் மாதம், 26 ஆம் நாள். தியாகி திலீபனின் ஒன்பதாவது ஆண்டு நினைவுநாள். அவரின் நினைவுநாள் வன்னியில் நினைவுகூரப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் புலிகளின் அணிகள் தாக்குதலுக்குத் தயாராகின்றன. 26 ஆம் நாளின் இரவில் தாக்குதல் அணிகள் இலக்குநோக்கி நகர்கின்றன. அன்றைய நள்ளிரவு தாண்டி 27 ஆம் நாள் அதிகாலை சமர் வெடிக்கின்றது. கிளிநொச்சி நகரை எதிரியிடமிருந்து மீட்பதற்கான சமர் "ஓயாத அலைகள் -2" என்று பெயரிடப்பட்டு நடத்தப்பட்டது.
3 நாட்கள் நடந்த கடும் சண்டையின்பின் கிளிநொச்சி நகரம் முற்றாகப் புலிகளிடம் வீந்தது. 1200 க்கும் மேற்பட்ட படையினர் கொல்ப்பட்டனர். கையளிக்கப்பட்ட இராணுவத்தினரது சடலங்களில் 600 சடலங்களை மாத்திரம் அரசதரப்புப் பெற்றுக்கொண்டது. மிகுதியை வழமைபோல் மறுத்துவிட்டது.
கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி நகரம் முழுவதுமே உயர்வலுவான பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளையும் பதினைந்துக்கும் மேற்பட்ட முகாம்களையும் ஒரு பிரிகேட் தலைமையகத்தையும் கொண்டிருந்தது. இதன் வெளிப்புற முன்னரங்கப்பகுதி பதினைந்து கிலோமீற்றர் நீளம்கொண்ட வலுவான காவலரண் வரிசையைக் கொண்டிருந்தது. (முல்லைத்தீவுப் படைத்தளம் 5 கிலோமீற்றர் சுற்றளவைக் கொண்ட படைத்தளம்).
அச்சமரில் நிறைய பீரங்கிகள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் பீரங்கிப்படையணி வளர்ச்சிக்கு முக்கியமான பாய்ச்சலாக அது இருந்தது.
புலிகள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது படையினர் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றினர். ஆனால் ஏற்கனவே பலதடவைகள் அச்சந்தியைத் தாம் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்ததால் அவ்வெற்றி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஓயாத அலைகள் -2 நடவடிக்கையில் கிளிநொச்சி நகரை மீட்பதற்கா களமாடி வீரச்சாவடைந்த முன்னூறுக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கு எமது அஞ்சலி.
_____________________________________________
தமிழ்ப்பதிவுகள்
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம்
Friday, August 11, 2006
புலிகள் - ஒப்பந்தம் - சிறிலங்கா அரசு
நேற்று (10.08.2006) புலிகளின் நிலைகள் சிலவற்றைப் படையினர் கைப்பற்றியுள்ளனர். புலிகள் மூதூர் மீது நடவடிக்கை செய்தபோது 'எல்லோரும் பழைய இடங்களுக்குத் திரும்பிப் போகவேண்டும்' என்று விழுந்தடித்து அறிக்கைவிட்ட நோர்வே என்ன செய்யப்போகிறதென்று தெரியவில்லை. உண்மையில் நேற்றுத்தான் படையினர் கைப்பற்றினாலும் தாம் ஏற்கனவே கைப்பற்றிவிட்டதாக படைத்தரப்புச் சொல்லிவிட்டது. படைத்தரப்பு தாம் மாவிலாறைக் கைப்பற்றிவிட்டதாகச் சொன்ன நாளே நோர்வே இதைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இதுவரை எதுவுமில்லை. சிலவேளை படையினரின் கூற்றை நம்பாமல் இருந்தார்களோ என்னவோ? ஆனால் நேற்றிலிருந்து நாட்கள் எண்ணப்படுகின்றன.
மிகக்கொடூரமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணை, வான் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்குமதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ளது அரசபடை. விடுதலைப்புலிகள் தரப்பிலும் சேதங்கள். ஆனால் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழு என்ன செய்கிறதென்று தெரியவில்லை. மக்கள் இழப்புப் பற்றிக் கேட்டால், தாம் அந்தப்பகுதிகளுக்குப் போகமுடியாது, தமக்குப் பாதுகாப்பில்லை என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு இருந்துவிடுகிறார்கள். இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு விழுந்தடித்து ஓடுகிறார்கள்? குறைந்தபட்சம் அரசபடையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றாவது உண்மையைச் சொல்லத் துப்பில்லாத போக்கிரிக் குழுவாக இருக்கிறது இக்குழு. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களை மட்டுமன்றி மற்றவர்களையும் துரத்திவிட்டு எம்வழியை நாமே பார்க்கலாம் போல உள்ளது.
அணைதிறக்கச் சென்ற கண்காணிப்புக்குழுத் தலைவர் உட்பட்ட குழுமீது அரசபடை எறிகணைத்தாக்குதல் நடத்தியது. அணை திறக்கவிடாமல் செய்ததற்கு அரசுதான் காரணம். ஆனால் அதைப்பற்றிச் சொல்லும்போது 'சிலருக்கு தண்ணீர் தேவையில்லை, யுத்தம் தான் தேவை போலுள்ளது' என்றுதான் அவரால் சொல்லமுடிந்தது. கடுமையான வார்த்தைகளில் நேரடியாகக் குற்றம்சாட்ட அவருக்கு மனசில்லை. தங்கமான மனசு.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்றாட உணவைக்கூட மறுத்துவருகிறது அரசபடை. இவ்வளவு கொடூரமான தாக்குதல்களுக்கிடையில் காயப்பட்டவர்களைக் கூட சரியான முறையில் அப்புறப்படுத்த முடியாத நிலை. மக்கள் போக்குவரத்து நடக்கும் வெருகலில் படகின் மீதும் குண்டுபோட்டு மக்களைச் சாகடித்துள்ளது வான்படை. மக்களுக்குச் செல்லும் அனைத்து உதவிகளும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவசர நோயாளர் காவுவண்டிகூட மாங்கேணி படைநிலையில் தடுத்து திருப்பி அனுப்பப்ட்டுள்ளது.
ஆனால் கண்காணிப்புக்குழுவோ, "அம்மக்களுக்கு நிறையச் சிக்கல் இருக்குமென்று நம்புகிறோம். அங்குப் போனால் தான் இதுபற்றிக் கூற முடியும்' என்று பதில் தருகிறது.
ஒன்றில் இருந்து ஒழுங்காக வேலை செய்யவேண்டும். அல்லது மூட்டை முடிச்சோடு ஓடிவிடவேண்டும்.
இன்னும் நடைமுறையிலிருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஒரு
ஒப்பந்தத்தைக்காட்டி தமிழர்தரப்பை மட்டும் கட்டிப் போட்டுக்கொண்டு மறுதரப்பை சுதந்திரமாக படுகொலை செய்யவிட்டுக்கொண்டிருப்பது தான் கண்காணிப்புக்குழுவா?
இதுதான் மத்தியஸ்தமா?
புலிகளின் ஆட்லறி நிலைகளைத்தான் தாக்குகிறோம் என்று பச்சைப்பொய்யை அரசதரப்புச் சொல்லும்போது இவர்கள் என்ன செய்கிறார்கள்? திருமலை மாவட்டத்தின் மாவிலாற்றுக்குச் சம்பந்தமேயில்லாத மட்டக்களப்பு மாவட்ட வாகரைப்பகுதி தாக்கப்படுகிறது.
இந்தக் குழுக்களை நம்பி சிங்களவனோடு ஒரு தீர்வுக்கு இணங்குவது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கும்? இனிமேல் தனினாநாடு தவிர எந்தத் தீர்வுமே நடைமுறைச்சாத்தியற்ற நிலைக்குப் போயக்கொண்டிருக்கிறது. வேறு தீர்வுகள் பற்றிக் க்தைத்தாலும் ஆயுதக்கையளிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (அது இணைந்த நாடென்ற தீர்வானாலும்.)
இன்று மட்டக்களப்பிலும் தரவைப்பகுதியில் கடுமையான குண்டுவீச்சை அரசவான்படை செய்துள்ளது. புலிகளின் முகாம்தான் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யார் தாக்கப்பட்டால் என்ன? என்ன துணிவில் இன்னும் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு இப்படி தாக்குதலைச் செய்கிறது அரசபடை? இதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் கண்காணிப்பாளரை என்ன சொல்வது? இன்று யாழ்பபாணத்தின் முகமாலையிலும் கடும் எறிகணை வீச்சோடு வன்னிநோக்கி படைநகர்வு நடந்ததாகச் செய்திகள் வருகின்றன.
மாவிலாறு படைத்தரப்பால் கைப்பற்றப்பட்டதை வைத்து ஒப்பந்தத்தை நிரந்தர முடிவுக்குகொண்டு வந்துவிடவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் நோர்வே தானாகவே வெளியேறுவது சிறந்தது. புலிகள் வலிந்த யுத்தத்தைத் தொடுக்க வேண்டும். நிலமீட்பைத் துரிதப்படுத்த வேண்டும்.
முன்னேறும் படைத்தரப்பை எதிர்கொண்டு மறிப்பதில் மட்டும் ஆள்வலுவையும் ஆயுத வலுவையும் செலவு செய்துகொண்டிருப்பது போராட்டத்துக்கு ஆபத்து.
இன்றைய நிலையில் சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் வேலையை உடனடியாகவே செய்ய வேண்டும். ஒப்பந்தக்காலத்தைப் பயன்படுத்தி கொழுத்து திமிர் பெற்றுவிட்ட கொழும்பை அசைக்க வேண்டும். இன்னொரு கட்டுநாயக்கா வெற்றி தேவை.
திருமலையில் புலிகள் முன்னேற்ற முயற்சி மேற்கொண்டால் அது முஸ்லீம்கள், சிங்களவர் வாழும் பகுதிகளையும் உள்ளடக்கித்தான் வரும். இதைத் தவிர்க்கவே முடியாது. இம் மென்ற முதல் இனஅழிப்பு, பாசிசம் என்று தும்மும் கோமாளிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக எழுதிக்கொண்டிருப்பது வேலையாக இருக்கலாம். எழுத விசயமில்லாமல் யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கொடுக்கத்தானே வேண்டும்?
இந்தச் சமாதானப் பொறியிலிருந்து மீள முடியாமல் தமிழர் தரப்பு இரு்நதது உண்மை. ரணிலைத் தோற்கடித்தது பொறிமீளல் தந்திரமாகவே பார்க்கப்பட்டது. அதை மேலும் இலகுவாக்கியது ஐரோப்பிய யூனியன். இப்போது சிங்களத்தரப்பே இன்னும் இலகுவாக்கியுள்ளது. இவையனைத்தும் தந்திர வெற்றியென்று இன்னும் உறுதியாகவில்லை.
மகிந்த வெற்றியிலிருந்து இன்றுவரை நடந்தவை அனைத்தினதும் பலாபலன் இனி புலிகள் எடுக்கப்போகும் முடிவில்தான் இருக்கிறது.
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், சமர், செய்தி, விமர்சனம்
Monday, July 24, 2006
கட்டுநாயக்கா தாக்குதல் -வீடியோ
1983 இல் இதேநாள் கொழும்பில் தமிழர் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் பாதிப்புக்கள் அனைவருக்கும் தெரியும்.
2001 இல் இதேநாளில் கொழும்பில் அரசு துடிதுடித்தது.
கட்டுநாயக்கா சர்வதேச விமானத்தளத்தினைத் தாக்கி அங்கிருந்த குண்டுவீச்சு விமானங்களைத் தகர்த்து, வர்த்தக விமானங்களையும் தகர்த்து மிகப்பெரிய அவலத்தைச் சிங்கள அரசுக்குக் கொடுத்தனர் புலிகள். பொருளாதார, இராணுவப் பேரழிவிலிருந்து மீள சிங்களப் பேரினவாதத்துக்குத் தெரிந்த வழி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்குவதாயிருந்தது.
உலகம் வியந்த இத்தாக்குதல் பற்றிய தொகுப்பொன்றைப் பார்வையிடுங்கள்.
இத்தொகுப்பிலேயே தமிழ்மக்கள் மீதான குண்டுவீச்சு அவலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Youtube இல் 10 நிமிடங்கள் கொண்ட இரு துண்டங்களாக உள்ளது.
கூகிளில் முழுத் தொகுப்பும் ஒரே கோப்பாக உள்ளது.
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-1
கட்டுநாயக்கா தாக்குதல்: பாகம்-2
கூகிள் வீடியோ
அல்லது இந்த இணைப்புக்குச் சென்று பாருங்கள்.
Labels: இராணுவ ஆய்வு, ஒலி, ஒளி, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், வரலாறு
Sunday, July 23, 2006
மறக்க முடியாத யூலைகள்.
1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலர்றறில் "பண்டா - செல்வா ஒப்பந்தம்" என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே அது.
“கறுப்பு யூலை” என்று இன்றுவரையும் அழைக்கப்படும் இம்மாதத்தின் 23 ஆம் நாள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பாரிய திருப்புமுனை ஏற்படுத்திய திருநெல்வேலித்தாக்குதல் நடத்தப்பட்டது. 1983 இல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அது பெரும் தொகையாகும். வெறும் கிளர்ச்சி என அறியப்பட்ட போராட்டம் அத்தாக்குதலுடன் தான் உலகத்தில் அறியப்பட்டது. அத்தாக்குதலில் பிரபாகரனும் நேரடியாகப் பங்குபற்றி அதில் 8 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்றார். அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய லெப்.செல்லக்கிளி அம்மான் அவ்விடத்திலேயே வீரமரணமடைந்தார்.
அதற்கு எட்டு நாட்களுக்கு முன்புதான் புலிகளின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலனும் ஆனந்தும் தென்மராட்சியில் கொல்லப்படுகின்றனர். பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த அத்தளபதியின் இழப்பு மிகப்பெரியது. இந்திய இதழொன்றுக்குச் செவ்வியளித்த பிரபாகரன் "திருநெல்வேலித் தாக்குதல் சீலனின் இழப்புக்குப் பழிவாங்கலா?" என்ற கேள்விக்கு, அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் என்று பதலளித்திருந்தார். சீலன் பற்றி பிரபாகரன் சொன்னவை அவரது குரலிலேயே கேட்க இங்கே செல்லவும். சீலன் பற்றிய முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.
அதே யூலை 24 இல் கொழும்பில் தமிழர் மீதான இன அழிப்பு (கலவரமன்று) சிங்களக் காடையர்களால் நடத்தப்பட்டது. ஏறத்தாள 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். கோடிக்கணக்கான தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு சிங்களக் காவற்படையும் இராணுவமும் வாளாவிருந்தன. கண்டனம் செய்த மற்ற நாடுகளுக்கு “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என்று அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பதிலளித்தார். மேலும் மிகப்பிரபல்யமான வாசகமான “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அறைகூவல் ஜெயவர்த்தனவால் விடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கப்பலேற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் சொத்துக்களனைத்தும் சூரையாடப்பட்டன. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளும் நடந்து முடிந்தன. இதுபற்றிய மேலதிக தகவல்கள் இங்கே. ஏற்கனவே பல இனப்படுகொலைகள் சிங்களவர்களால் நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது இந்த 83 யூலைப் படுகொலை. உலகநாடுகளினது கரிசனைப் பார்வை ஓரளவுக்குத் தமிழர்கள் மேல் திரும்பியது. தமிழகத் தமிழரின் பூரண ஆதரவும் அனுசரணையும் ஈழத்தவருக்குக் கிடைத்தது.
1987 யூலை ஐந்தாம் நாள், மிகமுக்கியமான நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வடிவமொன்று அறிமுகப்படுத்தப்பட்ட நாள். கரும்புலி என்ற வடிவம் தான் அது. முதல் கரும்புலியாக கப்டன் மில்லர் நெல்லியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார். இது பற்றிய பதிவு இங்கே.
அதே யூலை இறுதியில்தான் ராஜீவ்-ஜே.ஆர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதைத் தொடர்ந்து நடந்த அனர்த்தங்கள் அனைவரும் அறிந்ததே.
1990 இன் யூலையில் கடலிலும் கரும்புலித்தாக்குதல் அறிமுகப்படுத்தப்பட்டது. யூலை பத்தாம் நாள் முதல் கடற்கரும்புலித்தாக்குதல் பருத்தித்துறைக் கடலில் நின்ற கட்டளைக் கப்பலொன்றின் மீது நடத்தப்படுட்டது. இதில் மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரச்சாவடைந்தனர். இதில் மேஜர் காந்தரூபன் இறுதியாக பிரபாகரனிடம் தனது விருப்பமாக அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று அமைக்கச்சொல்லிக் கேட்டார். அது கைகூடியபோது அவரது பெயரே அதற்கு வைக்கப்பட்டு காந்தரூபன் அறிவுச்சோலை உருவாக்கப்பட்டது.
1990 யூலை பதினோராம் நாள் கண்டிவீதியில் குந்தியிருந்த முக்கியமான சிங்களப் படையினரின் முகாமொன்று புலிகளால் தாக்கி வெற்றி கொள்ளப்பட்ட நாள். கொக்காவில் முகாம் தாக்கப்பட்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. தமிழீழப் போராட்ட வரலாற்றில் முக்கியமான தாக்குதல் இதுவாகும். வன்னியை ஆங்காங்கே ஊடறுத்திருந்த படைமுகாம்களைக் களைந்து வன்னியைத் தக்கவைக்கும் தூரநோக்குடன் புலிகள் எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு இது.
1991 யூலை தமிழர் படையின் மறக்க முடியாத மாதம். விடுதலைப்புலிகள் முதன் முதல் “ஆகாயக் கடல் வெளிச் சமர்” என்று பெயர்சூட்டி ஒரு மரபுவழிச்சமர் ஒன்றைத் தொடுத்தனர். ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதல் தான் அது. ஏறத்தாள ஒரு மாதமளவு நீண்ட இச்சண்டையில் 500 வரையான புலிகள் வீரச்சாவடைந்தனர். ஆனையிறவுப் படைத்தளத்தைக் காக்க கட்டைக்காடு - வெற்றிலைக்கேணியில் பெருமளவு இராணுவத்தினர் தரையிறக்கப்பட்டனர். அவர்களுடனும் சண்டை நடந்தது. புலிகளின் பல தளபதிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர். நூற்றுக்கணக்கில் போராளிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை. அத்தாக்குதலை ‘இலங்கையில் இரு மரபுவழி இராணுவங்கள் உள்ளன’ என பி.பி.சி. வர்ணித்தது. எந்தக் காப்புமற்ற அந்த நீண்ட வெட்டையில் மண்பரல் உருட்டியும் பனங்குற்றி உருட்டியும் மண்சாக்குகள் அடுக்கப்பட்ட டோசரில் சென்றும் சண்டையிட்ட போராளிகளின் அனுபவங்கள் மெய்சிலிர்ப்பவை. அத்தாக்குதல் தோல்வியின் பாடங்கள் பின்னர் உதவின. இதே ஆனையிறவு, அந்த வெட்டையில் நேரடியான சண்டையின்றி 2000 ஆம் ஆண்டு வெற்றி கொள்ளப்பட்டது.
1992 யூலை ஐந்தாம் நாள். கரும்புலிகள் நாளன்று இயக்கச்சிப் பகுதியில் வான்படையின் வை-8 ரக விமானமொன்று வீழ்த்தப்பட்டது.
1993 யூலை 25ஆம் நாள் ஈழப்போராட்டத்தில் முக்கியமான தாக்குதலொன்று நடைபெற்ற நாள். மணலாற்றின் மண்கிண்டிமலை என்ற முக்கியமான இராணுவத் தளம் புலிகளால் தாக்கப்பட்டு வெற்றிகொள்ளப்பட்டது. ஏராளமான ஆயுதங்களையும் நவீன கருவிகளையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இத்தாக்குதலுக்கு "இதயபூமி-1" என்று புலிகள் பெயரிட்டிருந்தனர். மணலாற்றின் சிங்களக் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தியதோடு அங்குக் கைப்பற்றப்பட்ட நவீன தளபாடங்களின் உதவியுடன் புலிகள் அடுத்த பாய்ச்சலுக்குப் பேருதவியாக அமைந்ததால் இத்தாக்குதல் மிகமுக்கியத்துவமானது. மிகக்குறைந்த இழப்புக்களுடன் பெரியதொரு வெற்றியை ஈட்டியிருந்தனர் புலிகள்.
1995 யூலையில் வலிகாமத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றும் நோக்கோடு எதிரி மேற்கொண்ட “முன்னேறிப் பாய்தல்” நடவடிக்கையை “புலிப்பாய்ச்சல்” என்ற பெயரிட்ட எதிர் நடவடிக்கை மூலம் புலிகள் முறியடித்தனர். அதில் ஒரு புக்காரா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதுடன், எடித்தாரா கட்டளைக்கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. இதே யூலை 9 ஆம் திகதி நவாலித் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களை ஒரே தடவையில் குண்டுவீசிக் கொன்றது சிங்கள வான்படை. ஏறத்தாள 150 வரையான மக்கள் இதிற் கொல்லப்பட்டனர். இது பற்றிய பதிவு இங்கே.
1995 இன் யூலை இறுதிப்பகுதியில் மணலாற்றின் 5 பாரிய இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல் புலிகளால் நடத்தப்பட்டது. இது சிலரின் காட்டிக்கொடுப்பால் தோல்வியில் முடிந்தது. இருநூற்றுக்குமதிகமான புலிகள் வீரச்சாவடைந்தனர். லெப்.கேணல் கோமளா தலைமையிலான மகளிர் படையணியின் ஓர் அணி கடுமையான இழப்புக்களைச் சந்தித்தது.
1995 யூலை 30ஆம் நாள் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான "லெப்.ஜெனரல் நளின் அங்கமன" கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்
1996 இதே யூலையில் தான் முல்லைத்தீவு இராணுவ முகாம் ஓயாத அலைகள் தாக்குதலின் மூலம் முற்றாகத் தாக்கியளிக்கப்பட்டு அந்நகரம் மீட்கப்பட்டது. இது சம்பந்தமான பதிவு இங்கே. அந்த விடுவிப்பின் மூலமே இன்றுவரையான போராட்ட வெற்றிகள் யாவும் தீர்மானிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் இழந்ததால் போராட்டம் இறந்துவிடவில்லையென்பதும், தமிழர் படைப்பலம் குன்றிப்போகவில்லையென்பதும் உலகுக்கும் சிங்களத்துக்கும் புரிய வைக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 1300 வரையான படையினர் கொல்லப்பட்டனர். பலர், திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமை தான் “கறுப்பு யூலை” இனப்படுகொலைக்குக் காரணமெனச் சொல்வர். உண்மை அதுவன்று. அத்தாக்குதலை இப்படுகொலைக்கு ஒரு சாட்டாகச் சிங்களவர் எடுத்துக்கொண்டனர். மற்றும் படி ஏற்கெனவே யூலைப்படுகொலைக்கான ஆயத்தங்கள் இருந்தன.
அன்று 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதை ஒரு பாரிய இனஅழிப்பைச் செய்யச் சாட்டாக எடுத்துக்கொண்ட சிங்களவர், 13 வருடங்களின்பின் அதைப்போல் நூறு மடங்கு இராணுவத்தினரைக் கொன்றபோது எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த யூலை வெற்றிகளுக்கெல்லாம் சிகரம் வைத்த வெற்றியொன்று 2001 இல் வந்தது. 83 யூலை இனப்படுகொலையின் நினைவு நாளான 24 ஆம் திகதி, கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்த யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. ஏறத்தாள யுத்தத் தேவைகளுக்காகப் பாவிக்கபட்ட 28 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. இவற்றை விட பயணிகள் விமானங்கள் மூன்று முற்றாக அழிக்கப்பட்டன. மேலும் மூன்று சேதமாக்கப்பட்டன. இந்த விமானங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சொந்தமானவை மட்டுமே. இத்தாக்குதலில் எந்தவொரு பயணிகூட காயப்படவில்லை.
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இத்தாக்குதல் தான் சிங்கள அரசு ஓரளவாவது இறங்கிவரக் காரணமாய் அமைந்தது. இத்தாக்குதலின் விளைவால் ஏற்பட்ட பொருளாதாரச்சிக்கல் மிகப்பெரியது. இத்தாக்குதலின்பின் உடனடியாய் எந்தவொரு படைநடவடிக்கையையும் செய்யமுடியாத நிலைக்குச் சிங்களப் படை தள்ளப்பட்டது. அதன்பின் நடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்தது. பின் இன்றுவரையான ஒரு தளம்பல் நிலை இருந்துகொண்டிருக்கிறது.
ஈழப்போராட்ட வரலாற்றில் தனியே “கறுப்பு யூலை” யாக மட்டுமே அடையாளங்காணப்பட முடியாத மாதம் தான் இம்மாதம். பல முக்கிய வெற்றிகளையும் அதற்கூடாக விடிவு பற்றிய நம்பிக்கையையும் பிரகாசத்தையும் தந்த மாதம் இம்மாதம்.
______________________________________________________
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, ஈழ அரசியல், களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர்
Monday, July 17, 2006
ஓயாத அலைகள்: -வெற்றிகளின் ஆணிவேர்...
இன்று விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு முலலைத்தீவு இராணுவ முகாம் மீதான தாக்குதல் தொடுக்கப்பட்டு அப்படைமுகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள். அதன் மூலம் முலலைத்தீவு என்ற நகரம் மீட்கப்பட்டதோடு போராட்டத்தின் அபாரப் பாய்ச்சலுக்கும் வித்திடப்பட்டது.
இத்தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டம் மிகவும் முக்கியமானது. அதுவரை புலிகளின் கோட்டையாகவும் போராட்டத்தின மையமாகவும் தலைமையிடமாகவும் கருதப்பட்ட யாழ்ப்பாணம் சிங்களப் படைகளால் முற்றாகக் கைப்பற்றப்பட்ட நிலையில், இனிமேல் புலிகள் என்ன செய்யப்போகிறார்களென்று எல்லோரும் கேள்வி கேட்ட நேரத்தில், புலிகளில் 80 சதவீதம் பேர் அழிந்து விட்டார்கள், இன்னும் 20 சதவீதம் பேரே மிஞ்சியிருக்கிறார்களென்று ஜெனரல் ரத்வத்த (இவர் அதுவரை கேணலாயிருந்து யாழ் கைப்பற்றலோடு திடீரென ஜெனரல் பதவி வரை தாவினவர்.(பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என்பவற்றுக்குப் போகாமல் நேரடியாக நாலாம் கட்டத்துக்குத் தாவினார். நல்லவேளை பீல்ட் மார்ஷல் பதவி கொடுக்கப்படவில்லை)) சொன்ன நேரத்தில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல். தமிழ்மக்களே போராட்டத்தின்பால் அவநம்பிக்கை கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணமே போய்விட்டது இனியென்ன என்று வெறுத்துப்போயிருந்த நேரம்.
ஏறத்தாள இரண்டாயிரம் வரையான துருப்பினரையும் இரு ஆட்லறிகளுட்பட வலுமிக்க படைத்தளபாடங்களையும் கொண்டிருந்த படைத்தளம் தான் முல்லைத்தீவுப் படைத்தளம். நேரடியாக மற்றப்பிரதேசங்களோடு தரைவழித்தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும் கடல்வழி மற்றும் வான்வழித்தொடர்புகளைச் சீராகப் பேணிவந்த படைத்தளம். முல்லைத்தீவின் ஆழ்கடற்பகுதிக் கரையோரத்தின் குறிப்பிட்டளவைக் கொண்டிருந்த இப்படைத்தளம் சீரான கடல்வழித்தொடர்பைக் கொண்டிருந்தது. ஏதும் அவசரமென்றால் திருகோணமலைத் துறைமுகம் ஒரு மணிநேரக் கடற் பயணத்தூரத்தில் இருந்தது.
இப்படைத்தளம் மீதான தாக்குதல் ஒத்திகைகள் யாவும் பூநகரிப் படைத்தளத்தை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்டன. பூநகரி மீதுதான் தாக்குதல் நடத்தப்படப் போகிறதென்று மக்களிடையேகூட இலேசாகக் கதை பரவியிருந்தது. போராளிகளுக்குக்கூட பூநகரிதான் இலக்கென்ற அனுமானமேயிருந்தது. திடீரென இரவோடிரவாக அணிகள் மாற்றப்ப்பட்டு திட்டம் விளங்கப்படுத்தப்பட்டது. மக்களுக்குத் தெரியாமல் அணிகள் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன.
திட்டமிட்டபடி பதினெட்டாம் திகதி அதிகாலை படைத்தளம் மீது பலமுனைகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தி அரைமணிநேரத்தில் கடல்வழி உதவி கிடைக்கும் என்ற அனுமானத்துக்கேற்ப ‘டோறா’ விசைப்படகுகள் திருமலைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்தன. அவற்றை வழிமறித்துத் தாக்கும் பணியைக் கடற்புலிகளின் படகுகள் பார்த்துக்கொண்டன. எப்பாடுபட்டும் முலலைத்தீவில் தரையிறக்கியே தீருவதென்று சிங்களப்படைகளும் அதை விடுவதில்லையென்ற நோக்கத்துடன் கடற்புலிகளும் நிற்க, கடலிற் கடுமையான சண்டை நடந்தது. தரையிலும் கடும் சண்டை நடந்தது.
கடலில் 'ரணவிறு' என்ற போர்க்கப்பல் கரும்புலிப்படகுகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. 600 துருப்பினரைக் காவிய துருப்பிக்காவிக் கலமொன்றின் மீதான கரும்புலித்தாக்குதல் மயிரிழையில் பிசகியது. அதனால் அக்கலமும் துருப்பினரும் தப்பினர். இதேவேளை வான்வழியில் துருப்பினரைத் தரையிறக்கும் முயற்சியும் நடந்தது. இதில் ஒரு உலங்குவானூர்தி சுட்டுவீழ்த்தப்பட்டது. 3 நாள் கடும் சண்டையின்பின் முலலைத்தீவுக்கு அப்பாலுள்ள அளம்பில் என்ற கிராமத்தில் வான்வழியாயும் கடல்வழியாயும் ஆயிரத்துக்குமதிகமான துருப்பினர் தரையிறக்கப்பட்டனர்.
அவர்களின் முல்லைத்தீவை நோக்கிய நகர்வை மூர்க்கமாக எதிர்கொண்டனர் புலிகள். வெட்ட வெளியில் கடும் சண்டை நடந்தது. வான் படையும் கடற்படையும் தம் வலு முழுவதையும் பாவித்தது. மறிப்புச் சமர் அளம்பிலில் நடந்துகொண்டிருக்க, முல்லைத்தீவுப் படைத்தளம் முற்றாகக் கைப்பற்றப்பட்டுவிட்டது. இரு ஆட்லறிகளும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. இப்போது புலிகளின் முழுக்கவனமும் தரையிறங்கிய படையினரை எதிர்கொள்வதில் திரும்பியது. கடின எதிர்த்தாக்குதலைத் தாங்க முடியாமலும், காப்பாற்ற வந்த படைமுகாம் முற்றாக வீழ்ந்துவிட்டதாலும் தரையிறங்கிய படையணி ஓட்டமெடுக்கத் தொடங்கியது.
எங்கே ஓடுவது? திரும்பவும் கடல்வழியால்தான் ஓட வேண்டும். மீண்டும் துருப்புக்காவியொன்று கரைக்கு வந்தது. தங்களது ஆயுதங்களைக்கூட போட்டுவிட்டு அத்துருப்புக்காவில் ஏறி ஓடினர் படையினர். எஞ்சிய படையினர் முழுப்பேரையும் ஏற்றிக்கொண்டு போகக்கூட அவர்களுக்கு அவகாசமில்லாமல் ஓடினர் படையினர்.
தப்பிய சிலர் காடுகளில் திரிந்து ஒருவாறு கொக்குத்தொடுவாய்ப் படைமுகாமுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள்மூலம் தான் சிங்களத்தின பலபொய்கள் முறியடிக்கப்பட்டன. ரத்வத்தை சொல்லியிருந்தார்: இரு ஆட்லறிகளும் இராணுவத்தால் தகர்க்கப்பட்டிருந்ததாக. ஆனால் தப்பிப்போனவர்கள், புலிகள் ஆட்லறிகளை முழுதாக இழுத்துச் செல்வதை தாம் நேரே பார்த்ததாகச் சொன்னார்கள். மேலும் இறந்த படையினரின் தொகை பற்றியும் சொன்னார்கள்.
அத்தாக்குதலில் 1300 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள். 800 வரையான சடலங்களைப் புலிகள் கையளித்தபோதும் சிங்கள அரசு அவற்றைக் கையேற்கவில்லை. ஏராளமான சடலங்கள் தொகுதி தொகுதியாக எரிக்கப்பட்டன. இப்போதும் அந்த இடங்களை வன்னிக்குச் செல்பவர்கள் காணலாம். இன்றுவரை காணாமற்போனோர் பட்டியலில் சிங்கள அரசு அறிவித்திருக்கும் படையினரிற்பலர் இப்படி எரியுட்டப்பட்டவர்கள் தாம். (பின் ஓயாத அலைகள் இரண்டு, மூன்று என்று பின்வந்த தாக்குதல்களிலும் பல சடலங்கள் இப்படி மறுக்கப்பட்டு எரிக்கப்ட்டன.)
இத்தாக்குதல் போராட்டத்தின் மறுக்க முடியாத பாய்ச்சல். முதன்முதல் இரு ஆட்லறிப் பீரங்கிகளைத் தமிழர் படைக்குப் பெற்றுத் தந்தது. அதன் படிப்படியான வளர்ச்சிதான் இன்று ஆட்லறிச்சூட்டில் எதிரி வியக்கும் வண்ணம் இருக்கிறது. வன்னியில் துருத்திக்கொண்டிருந்த ஒரு படைத்தளம் அழிக்கப்பட்டு மிக முக்கிய நகரமான முல்லைத்தீவு மீட்கப்பட்டது. அதன் பின்தான் கடற்புலிகளின் அபார வளர்ச்சி தொடங்கியது. போராட்டத்துக்கான சீரான வழங்கலும் தொடங்கியது. நவீனத் தொழிநுட்பங்களும் ஆயுதங்களும் அதன்பிறகுதான் இயக்கத்துக்கு சீராக கிடைக்கத்தொடங்கின. எந்தச் சமரையும் முறியடிக்கும் வல்லமையும், எந்தப் படைமுகாமையும் தாக்கிக் கைப்பற்றும் திறனும் அதன்பிறகுதான் மெருகேறியது. ஜெயசிக்குறு வெற்றியிலிருந்து, ஆனையிறவுக் கைப்பற்றல் வரை எல்லாமே முல்லைத்தீவுக்குள்ளால் கிடைத்தவைதாம். போர்க்காலத்தின் இராஜதந்திரப் பயணங்களும் முல்லைத்தீவுக்குள்ளால் தான். பாலசிங்கத்தின் வெளியேற்றமும் அதற்குள்ளால் தான்.
இன்று ‘கிளிநொச்சி’ போராட்டத்தின் மையமாகப் பார்க்கப்படுகிறது. அது வெறும் சந்திப்புக்களின் மையமேயொழிய போராட்டத்தின் மையமன்று. பொதுவாகவே வன்னி என்ற பதத்தால் அழைத்தாலும் குறிப்பிட்டுச் சொன்னால் அது முலலைத்தீவுதான்.
முல்லைத்தீவுப் பட்டினம் கடந்த பத்துவருடகாலத்துள் இரு தடவை பிணங்களால் நிறைந்தது. முதலாவது சந்தர்ப்பம் ‘ஓயாத அலைகள்” தாக்குதலின்போது. மற்றையது கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது.
இதே முல்லைத்தீவில் ஆங்கிலேயப் படைமுகாமைத் தாக்கியழித்ததோடு அங்கிருந்த பீரங்கிகளையும் கைப்பற்றிய வரலாறு பண்டாரவன்னியனுக்குண்டு. அதன் தொடர்ச்சி ஓயாத அலைகள். முல்லைத்தீவு வீழ்த்தப்படக்கூடாத நகரம். அதன் இருப்புத்தான் தமிழர் படையின் இருப்பும். மற்ற எந்த நகரமும் பறிபோகலாம். ஆனால் முல்லைத்தீவு பறிபோகக்கூடாத நகரம்.
ஓயாத அலைகள் எனற பெயரில் தொடர் நடவடிக்கைகள் நடந்தன. புலிகள் ஒரே பெயரில் தொடர் நடவடிக்கைகள் செய்தது ஓயாத அலைகள் என்ற பெயரை வைத்துத்தான். இறுதியாக யாழ் நகரைக் கைப்பற்றும் சமராக ‘ஓயாத அலைகள்-4’ அமைந்தது.
முல்லைத்தீவை மீட்க “ஓயாத அலைகள்” படை நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 400 வரையான மாவீரர்களுக்கு எமது இதயஅஞ்சலிகள்.
--------------------------------------------------------
இதையொட்டிய சம்பவமொன்று:
முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆட்லறியொன்றைப் புதுக்குடியிருப்பு நோக்கி இழுத்து வந்தனர் புலிகள். இடையில் இழுத்து வந்த வாகனம் பழுதோ என்னவோ, மந்துக் காட்டுப்பகுதியில் ஆட்லறி நிற்பதைக் கண்டுவிட்டனர் சிலர். அதிகாலை நேரம். ஓரிருவர் எனக் கூடியகூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. ஆட்லறியைக் கட்டிப்பிடித்துக் கூத்தாடியபடி சிலர், பார்த்ததை மற்றவர்களுக்குச் சொல்லவென சைக்கிளிற் பறக்கும் சிலர், ஆட்லறிச் சில்லைக் கட்டிப்பிடித்தபடி ஒப்பாரி வைக்கும் ஓரிருவர் என்று அந்த இடம் களைகட்டத்தொடங்குகிறது. அங்கு நின்ற ஓரிரு போராளிகளாற் கட்டுப்படுத்த முடியவில்லை, கட்டுப்படுத்தவுமில்லை. (நிலத்தில் பிரதட்டை கூட அடித்தனர் சிலர்).

கைப்பற்றப்பட்ட ஆட்லறியுடன் போராளிகள்.
கொஞ்ச நேரத்தில் மாலைகளுடன் வந்த சிலர் ஆட்லறிக்குழலுக்கு மாலைசூட்டினதோடு ஆட்டம் போட்டனர். அதன்பிறகுதான் தாம் தமிழர் என்று உறைத்திருக்குமோ என்னவோ, இரு சைக்கிள்களில் தேங்காய் மூட்டைகள் வந்தன. ஆட்லறியின்முன் தேங்காய் உடைக்கத்தொடங்கியதோடு அங்கு ஒரு திருவிழா ஆரம்பமாகத் தொடங்கியது. (அதற்குள்ளும் தேங்காய் உடைப்பதில் அடிபிடி) இன்னும் மாலைகளோடு சிலர் வந்துகொண்டிருந்தார்கள். ஐயர் சகிதம் பூசை தொடங்கமுதல் வேறொரு பவள் வாகனத்தைக் கொண்டுவந்து ஆட்லறியை இழுத்துக்கொண்டு மறைந்துவிட்டார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவொரு திருத்திய மீள்பதிவு.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், மாவீரர், வரலாறு
Friday, May 12, 2006
வென்ற சமரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு.
1997 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, நாள் நேரம் பார்த்து புத்த பிக்குகளால் பிரித் ஓதி ‘கோலாகலமாக’த் தொடங்கி வைக்கப்பட்டது இந்நடிவடிக்கை. (the date was chosen as it was said to be auspicious, according to the Sinhala Buddhist calendar). தொடக்கத்தில் 20000 இராணுவத்தினருடனும் பெருமளவு டாங்கிகள், ஆட்லறிகளுடனும் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட இடம் வவுனியா. போகவேண்டிய இலக்கு, கண்டி வீதியூடாக கிளிநொச்சி. ஏறக்குறைய 70 கிலோமீற்றர்களே இராணுவம் முன்னேற வேண்டிய தூரம். ஏற்கெனவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணப்பக்கம் அனைத்துப் பகுதிகளுமே இராணுவத்தின் வசம்தான். நடவடிக்கையிலீடுபடும் இராணுவத்தினரை எதிர்பார்த்து கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தினர் காத்திருந்தனர். இராணுவப் பேச்சாளரின் தகவலின்படி, இந்நடவடிக்கான காலம் ஆகக்குறைந்தது எவ்வளவு நாளாயுமிருக்கலாம்; ஆகக்கூடியது 4 மாதங்களே. போர் நீண்டநாள் நீடிக்காது என்பதே பெரும்பாலான கணிப்பு. ஏனெனில் சற்று முன்தான் வவுனியா மன்னார் வீதியைப் பிடித்து இராணுவம் மேற்கொண்ட படைநடடிக்கை எந்த எதிர்ப்புமில்லாமல் வெற்றி பெற்றிருந்தது. புலிகள் பலமிழந்து விட்டார்கள் அல்லது இந்த நடவடிக்கையை எதிர்க்க பலம் போதாது என்று சிலர் கணித்தனர். அபபடிப் போரிட்டாலும் எத்தனை காலத்துக்குத்தான் போரிடுவர் என்ற கேள்வியும் எழுந்தது.

ஆனால் புலிகளும் தம்மை நிறையவே தயார்ப்படுத்தியிருந்தனர். தென்தமிழீழத்திலிருந்து ஆயிரம் போராளிகள் வரை வந்திருந்தனர். மேலும் பீரங்கியணிகள் உருவாகியிருந்தன. ‘விக்டர் கவச எதிர்ப்பு அணி’ என்ற சிறப்பு அணியும் உருவாக்கப்பட்டிருந்தது. இது இராணுவத்தினரின் அதியுச்ச நம்பிக்கையான டாங்கிகளை அழிக்கவென உருவாக்கப்பட்டது. இதைவிட கிளிநொச்சியைக் கைப்பற்ற இராணுவம் செய்த ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கையை எதிர்கொண்டதில், எப்படி ஒரு மரபுரீதியான வழிமறிப்புச் சமரைச் செய்வது என்று நிறைய அனுபவங்களைப் பெற்றிருந்தனர். அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத் தொடங்கினர் புலிகள்.

போர் தோடங்கிவிட்டது. அன்றே தாண்டிக்குளத்தைக் கைப்பற்றிவிட்டனர் படையினர். அதே நேரம் கண்டிவீதிக்குக் கிழக்காக உள்ள நெடுங்கேணியையும் கைப்பற்றினர். ஓமந்தையில் சண்டை நடந்தது. அதுவும் கனநாள் நீடிக்கவில்லை. அதையும் படையினர் கைப்பற்றி விட்டனர். நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்கு ஒரு வீதி வருகிறது. அந்த வழியாக நெடுங்கேணியிலிருந்தும் கண்டிவீதி வழியாக ஓமந்தையிலிருந்தும் புளியங்குளத்தை நோக்கிப் படைகள் நகர்ந்தன. புளியங்குளச் சந்தியை அண்மித்து இராணுவம் வழிமறிக்கப்பட்டுக் கடும் சண்டை மூண்டது. மூன்று மாதங்கள் தாண்டியும் புளியங்குளச் சந்தியை இராணுவத்தாற் கைப்பற்ற முடியவில்லை. 'புளியங்குள வெற்றியின் நூறாவது நாள் என்று கொண்டாட்டம் கூட தமிழர்தரப்பால் நடத்தப்பட்டது. புளியங்குளத்தில் எதிர்ப்புச் சமர் கேணல் தீபனின் கட்டளையின் கீழ் நடந்தது. அதேநேரம் நெடுங்கேணியிலிருந்து புளியங்குளம் நோக்கிய நகர்வு கேணல் ஜெயம் அவர்களின் தலைமையில் எதிர்கொள்ளப்பட்டது. பல தடவைகள் பல வழிகளில் முன்னேறியும் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இச்சண்டைகளில் இராணுவத்தின் கவசப் படை பற்றிய கனவுகள் அடித்து நொருக்கப்பட்டன. நிறைய டாங்கிகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன. புளியங்குளத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் சுற்றிவளைத்து காட்டுக்குள்ளால் நகர்ந்தது. இதனால் புளியங்குளத்தை விட்டு புலிகள் பின்வாங்கி கனகராயன் குளத்துக்கு வந்தனர்.

கனகராயன் குளத்தைக் கைப்பற்ற இராணுவம் முன்னேறியபோதுதான் பெண்புலிகளின் பெயர்பெற்ற மன்னகுளச் சண்டை நடந்தது. அமெரிக்க ‘கிறீன் பரேட்’ கொமாண்டோக்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிதான் அந்தச் சண்டையிற் பங்கேற்றது. இந்தா கனகராயன்குளம் விழுந்தது என்று இறுமாப்போடு மகளிர் அணி நின்ற பக்கத்துக்குள்ளால் ஊடறுத்து நுளைந்த இராணுவம் மோசமாக அடிவாங்கித் திரும்பியது. அதில் உதவிகள் கிடைக்கும் வரை தனித்து நின்று சண்டை செய்த ‘நீலாம்பரி’ என்ற பெண்போராளி அனைவராலும் பாராட்டப்பட்டாள். நூற்றுக்குமதிகமான இராணுவ உடல்கள் கைப்பற்றப்பட்டன. இறந்தவர்கள் தொகை முன்னூறுக்கும் அதிகம்.
பின் இராணுவம் மாங்குளம்-ஒட்டுசுட்டான் வீதியிலுள்ள கரிப்பட்ட முறிப்பு எனும் இடத்தில் காட்டுக்குள்ளால் இரகசியமாக வந்து ஏறியது. கனகராயன் குளத்தில் நிலைகொண்டிருந்த புலிகள் அணிக்கு இது மிக ஆப்பத்தானது. எனவே மாங்குளம் சந்திக்கு அணிகள் பின்வாங்கிவிட்டன. மாங்குளத்தைத் தக்க வைக்க தொடர்ந்து சண்டைகள். அதே நேரம் ஒலுமடு கரிப்பட்ட முறிப்பு என்பவற்றிலிருந்து முன்னேறும் படைகளுடனும் தொடர்ச்சியாகச் சண்டைகள். மறிப்புச் சமர் செய்ய வேண்டிய முன்னணிக்களத்தின் நீளம் நன்றாக அதிகரித்திருந்தது.
சம காலத்திலேயே மன்னாரிலிருந்து பூநகரியூடாக பாதையொன்றைத் திறக்க இராணுவம் முயன்று ரணகோச 1,2,3,4 என்று தொடரிலக்கங்களில் நடவடிக்கை செய்தது. அதுவும் மூர்ககமாக முறியடிக்கப்பட்டது. வழிமறிப்புச்சமரின் முன்னணிக் காவலரன் தொடரின் நீளம் மிகவும் அதிகரித்திருந்தது. புலிகளின் ஆட்பலம் இச்சமர்களை எதிர்கொள்ளப் போதாது என்பதே அவர்களின் கணிப்பு. இதைவிட இவ்வளவுநாளும் பேசாமலேயிருந்த கிளிநொச்சி முனையையும் போர்க்களமாக்கியது இராணுவம். அங்கிருந்தும் மாங்குளம் நோக்கி நகர்வு முயற்சிகளைச் செய்தது. திருவையாறுவரை வந்து வன்னியை இரண்டு துண்டாக்கியது. இரணைமடுக்குளத்தின் அணைக்கட்டு மட்டுமே மக்களுக்கான ஒரேயொரு பாதையாக இருந்தது. இது பற்றி ஏற்கெனவே பதிந்தாகிவிட்டது.
இந்நிலையில் இராணுவத்தளபதி மிக மோசமான செயலொன்றைச் செய்தார். மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிட்ட புலிகளுடன் பேரம் பேசினார். புலிகள் தங்கள் முன்னணி நிலைகளிலிருந்து 5 கிலோமீட்டர்கள் பின்வாங்கிச் சென்றால் தாம் மக்களுக்கான பாதையைத் திறப்பதாகப் பேரம் பேசினார். சண்டையிட்டுப் பாதைபிடிக்க முடியாத இராணுவம் கேவலாமான நிலைக்கு இறங்கியது. இதுநடந்தது 1998 செப்ரெம்பர் மாதம். ஆனால் புலிகள் தெளிவாக மறுத்ததுடன், வேறொரு திட்டம் தீட்டினர்.
மாங்குள இராணுவம் போய்ச்சேர வேண்டிய கிளிநொச்சியைக் கைப்பற்ற புலிகள் முயன்றனர். 1998 பெப்ரவரியில் நடந்த முயற்சி முழுவதும் கைகூடாத நிலையில் செப்ரம்பர் 98 இல் இது கைகூடியது. ‘ஓயாத அலைகள் 2’ நடவடிக்கையில் கிளிநொச்சி நகரம் முற்றுமுழுதாகப் புலிகள் வசம் வீழ்ந்ததுடன், ஆயிரத்துக்குமதிகமான படையினர் கொல்லப்பட்டனர். அதே நேரம் மாங்குளம் சந்தியை இராணுவம் கைப்பற்றிக் கொண்டது. பின் மிக நீண்டகாலம் நடத்தப்பட்டதாகப் ‘புகழ் பெற்ற’ அந்த ஜெயசிக்குறு நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து றிவிபல என்று பெயரிட்டு இரவோடு இரவாக இரகசியமாய் நகர்ந்து சண்டையேதுமின்றி ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது சிறிலங்கா இராணுவம்.
றிவிபல மூலமும் ஜெயசிக்குறு மூலமும் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முயன்று இராணுவத்தாற் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களனைத்தும் ஐந்து நாட்களில், ஆம் ஐந்தே நாட்களில் புலிகளால் போரிட்டு மீட்கப்பட்டன. அதைவிட ரணகோச 1,2,3,4 மூலம் கைப்பற்றப்பட்ட பகுதிகள் இரண்டு நாட்களில் அதே நடவடிக்கையில் மீட்கப்பட்டன. ஓயாத அலைகள் மூன்றின் பாய்ச்சல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது அந்த நடவடிக்கை மீதான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தவிர்த்து சில வலிந்த தாக்குதல்களையும் புலிகள் செய்திருந்தார்கள்.
முதலாவது தாண்டிக்குளம் படைத்தளம் மீதான தாக்குதல். (10.06.1997).
இதில் நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. புலிகளின் முதற் பெண் தரைக்கரும்புலி மேஜர் யாழினி வீரச்சாவு.
இரண்டாவது, பெரியமடுத் தளம் மீதான தாக்குதல்.
இதிலும் இராணுவத்துக்குப் பெரிய இழப்பு. இச்சண்டையின் தளபதி லெப்.கேணல் தனம் வீரச்சாவு.
மூன்றாவது, ஓமந்தைத் தளம் மீதான தாக்குதல். (01.08.1997). இதில் தான் புகழ் பெற்ற ஈழத்துப் பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவு.
நான்காவது, கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் மீதான தாக்குதல். நூற்றுக்கணக்கான இராணுவம் பலி. ஏகப்பட்ட ஆயுததளபாடங்கள் அள்ளப்பட்டன. ‘ஜெயசிக்குறு நாயகன்’ எனப்படும் தென்தமிழீழத்தைச் சேர்ந்த லெப்.கேணல். சந்திரகாந்தன் வீரமரணம். ஜெயசிக்குறு பற்றிக் கதைக்கும் எவரும் சந்திரகாந்தனை விட்டுவிட்டு எதுவும் சொல்லமுடியாதபடி அவனது பணிகள் அந்த எதிர்ப்புச் சமரில் விரிந்து கிடக்கும்.
2002 இல் பன்னாட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்று, “உங்கள் இராணுவ வெற்றிகளில் முதன்மையானது என நீங்கள் கருதுவது எதை?”
பெரும்பாலானோர் கருதியது ஆனையிறவு வெற்றியைத்தான்.
ஆனால் அவர் சொன்னது ஜெயசிக்குறு எதிர்ச்சமரைத்தான். அந்தளவுக்கு ஈழப்போராட்டத்தில் தவிர்க்க முடியாத பங்கை இச்சமர் பெற்றுக்கொண்டது.
இச்சமரில்தான் புலிகளின் பிரமாண்ட வளர்ச்சி தெரியும். சமர் தொடங்கும்போது எத்தனைநாள் தாக்குப்பிடிப்பார்கள் என்ற கேள்வியுடன் தான் தொடங்கியது. ஆனால் அச்சமர் முடிவதற்குள் அவர்கள் அடைந்த வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. பீரங்கிச்சூட்டு வலிமையை எதிரிகளே பாராட்டுமளவுக்கு வளர்த்தெடுத்தார்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் தம்மால் ஒரு முறியடிப்புச் சமரைச் செய்ய இயலுமென நிரூபித்துக்கொண்டார்கள். வலிந்த சண்டைகளையும் இடையிடையே செய்து தமது போர்த்திறனை வளர்த்துக்கொண்டார்கள். அதன்பின்னான அவர்களது வெற்றியெல்லாம், குறிப்பாக காட்டுப்போர்முறையில் அவர்களடைந்த வெற்றியெல்லாம் ஜெயசிக்குறு தந்த பாடமே. ஓயாத அலைகள் மூன்றில் அந்த மின்னல்வேக அதிரடியில் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர்களை ஐந்தே நாளில் கைப்பற்றுவதற்கான பட்டறை இந்த ஜெயசிக்குறுச் சமர்தான். மேலும் ஆனையிறவு வெற்றியாகட்டும், இறுதி வழிமறிப்புச் சமரான தீச்சுவாலையாகட்டும் எல்லாம் ஜெயசிக்குறுவின் பாடங்கள்தாம்.
இக்காலகட்டத்தில் மக்கள் பட்ட கஸ்ரங்கள் சொல்லி மாளாது. ஒருமுறை இடம்பெயர்வது, பின் அந்த இடத்தை இராணுவம் நெருங்க மீண்டும் இடம்பெயர்வது. இப்படி இடப்பெயர்வே வாழ்க்கையாகிப்போனது. வெளியுலகத்துக்கு என்ன நடக்கிதென்றே தெரியாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. இந்தியாவுக்குச் செல்லும் அகதிகள் நடுவழியில் படகு கவிழ்ந்து நூற்றுக்கணக்கில் மாண்ட சம்பவங்களும் இந்தக் காலப்பகுதியில்தான். அத்தனைக்குள்ளும் புலிகளுக்குத் தோள்கொடுத்து விடுதலைப்போரை வெல்ல துணைபோனவர்களும் இதே மக்கள்தான்.
இந்த வழிமறிப்புச் சமர்க்காலத்தில் ஒரே போராளி பலதடவைகள் காயப்பட்டிருப்பார். 3 முறை காயப்பட்டவர்களைப் பார்க்கலாம். அதாவது காயம் மாறி மீண்டும் களம் சென்று, பின் மீண்டும் விழுப்புண்ணடைந்து, குணமாகி, மீண்டும் களம் சென்று…. இப்படி. எல்லைக் காவலரணே வாழ்க்கையாக்கி வருடக்கணக்கில் நின்று சண்டை செய்து நிலம் காத்தார்கள் அப்புலிவீரர்கள். மழையிலும் சேறிலும் நின்று எல்லை காத்தனர் அவ்வீரர்கள்.
வீட்டிலிருந்து போராட்டத்துக்கென சென்று 3 மாதத்திலேயே வித்துடலாக வீடுவருவார்கள். இப்படியான சம்பவங்களும் நடந்தன. பாடகர் சாந்தனின் மகனொருவரும் (கானகன்) இவ்வாறுதான் போய் சில நாட்களிலேயே வீரச்சாவு. புலிகளிடத்தில் ஆட்பற்றாக்குறை இருந்தது.
ஜெயசிக்குறு சமரின்போது விசுவமடுப் பகுதியில் மாவீரர் துயிலுமில்லமொன்று அமைக்கப்பட்டது. வீரச்சாவடையும் தென்தமிழீழப் போராளிகளின் வித்துடல்கள் அங்கேதான் விதைக்கப்படும். இப்போது ஆயிரக்கணக்கில் அங்கே கல்லறைகள் இருக்கின்றன. 2002 இன் மாவீரர் நாளுக்கு தென்தமிழீழத்திலிருந்து முதன்முதல் தமது பிள்ளைகளின் கல்லறைகளைக்காண வந்திருந்த பெற்றோர்களைக் கண்டபோது நெஞ்சு கனத்தது.
ஜெயபாலனின் சொற்களில்,
"வன்னியில்
மயிர் பிடுங்க வந்தோரின்
தலை பிடுங்கி…."
வென்றவரின் கல்லறைகள் அவைகள்.
************************
ஜெயசிக்குறு நடவடிக்கை மீதான முதலாவது வலிந்த தாக்குதல் 10.06.1997 அன்று தாண்டிக்குளம் படைமுகாம் மீது நடத்தப்படட தாக்குதல். அத்தாக்குதல் வெற்றி நினைவாக வெளியிடப்பட்ட பாடலைக் கேளுங்கள்.
************************
மேற்கண்ட பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. சில மாற்றங்களுடன் மீள்பதிவாக இடப்படுகிறது.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம்
எங்கள் கடல் எங்களுக்கானது.
சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரு டோறாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், 700 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கப்பலொன்று (கண்காணிப்புக் குழுவின் உதவியால்) தப்பியுள்ளது. இது சிங்கள அரசுக்கு விடுக்கப்பட்ட முக்கியமானதொரு செய்தி.
புலிகளுக்குக் கடலில் உரிமையில்லை என்று புதிதாக கண்காணிப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. புலிகள் பயிற்சி செய்யவோ கடற்பயணங்கள் செய்யவோ அவர்களுக்கு அனுமதியோ உரித்தோ இல்லையென்றும் சர்வதேச நடைமுறைகளின்படி கடற்பகுதி மீதான உரிமை அந்நாட்டுக்கே சொந்தமென்று அவ்வறிக்கை கூறுகிறது.
சர்வதேச நடைமுறைப்படி பார்த்தால், புலிகளுடன் பேசுவது கூடத்தான் இறைமைப்பிரச்சினை. அரச கட்டுப்பாட்டுப் பகுதி போலவே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியையும் அங்கீகரிக்கும்போது கடற்பகுதியையும் அங்கீகரிக்கத்தானே வேண்டும்? மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புலிகளுக்கான கடல் தடையைப் பற்றி எந்தச் சரத்துமில்லை. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட அன்றிலிருந்தே புலிகள் தங்களுக்கா கடலாதிக்கத்தைத் தெளிவாகச் சொல்லி வருகிறார்கள். அவ்வப்போது சலசலப்பு வந்தாலும் பிரச்சினை பெரிதாகாமல் அமுங்கிவிடும்.
அதைவிட சிறிலங்கா அரசும் கண்காணிப்புக்குழுவும் இவ்வளவுகாலமும் புலிகளின் கடல் இறைமையை அங்கீகரித்தே வந்துள்ளன. புலிகளின் படகுகள் வடக்கிற்கும் கிழக்கிற்கும் பயணித்துள்ளன. புலிகளின் பயணத்துக்கு கடற்பயணம் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக (ரணில் பாராளுமன்றத்தில் தோற்கும்வரை) இருந்து வந்துள்ளது.
அதைவிட கண்காணிப்புக்குழுத் தலைவரும் சிலதடவைகள் கடற்புலிகள் கடலில் பயிற்சி செய்வது தொடர்பாக சாதகமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அப்போதெல்லாம் புலிகளுக்கிருந்த கடல் இறைமை இப்போது திடீரென இல்லாமற் போனதேன்?
****************************
புலிகளின் கடற்படையின் ஆதிக்கமுள்ள, கடற்பரப்பு உள்ளது. இதை இன்றுவரை சிறிலங்கா அரசும் ஒத்துக்கொண்டு புலிகளின் மறைமுகமான அனுமதியுடன்தான் தன் போக்குவரத்தைச் செய்துவருகிறது.
யுத்தநிறுத்த ஒப்பந்தம் வரும்வரைக்கும் முல்லைத்தீவுக் கரையிலிருந்து நூறு கிலோமீற்றர்களுக்குள் சிறிலங்காவின் கடற்படைக் கப்பல் தொடரணி சென்றதேயில்லை. புலிகள் திருகோணமலைத் துறைமுகத்தையும் தாண்டித்தான் கிழக்கிற்கான அவர்களது பயணங்களை மேற்கொண்டார்கள். அந்தப்பெரிய கடற்படைத் தளத்தைத் தாண்டிச் செல்லும் புலிகளின் கடற்படையை அவர்களால் அழிக்க முடிந்ததில்லை.
மாறாக யாழ்ப்பாணத்துக்கான படையினரின் வினியோகத்தை கடற்புலிகள் மிகமிக நெருக்கடிக்குள்ளாக்கியிருந்தனர். அடிக்கடி தொடரணி மீது தாக்குதலை நடத்துவது, சமயங்களில் பாரிய கப்பல்கைளத் தகர்ப்பது, சண்டைப்படகுகளைத் தகர்ப்பது என்று தொடர்ச்சியாக தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் மக்களைப் பயணக்கைதிகளாக வைத்து கப்பலில் இராணுவத்தினரை ஏற்றியிறக்கியது சிறிலங்காக் கடற்படை. 'City of Trinco' என்ற கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் யாழ்பபாண - திருகோணமலை மக்கள் போக்குவரத்துக்கென்று பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஒருமுறை செஞ்சிலுவைச் சங்கக் கொடியைப் பறக்கவிட்டபடி 1300 இராணுவத்துடன் இக்கப்பல் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்றது. இடைவழியில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு அது மக்களின் போக்குவரத்துக் கப்பலென்று தாக்காமல் விடுவிக்கப்பட்டது. (பின் செஞ்சிலுவைச் சங்கம் இச்சம்பவத்தை ஒத்துக்கொண்டது).
ஆனையிறவுக்கான் மாபெரும் தரையிறக்கச் சண்டையின்போது கூட சிறிலங்காக் கடற்படையால் தரையிறக்கத்தைத் தடுக்கவும் முடியவில்லை, கடல்வழி வினியோகத்தை மட்டுமே நம்பியிருந்த தரையிறங்கிய அணிகளுக்கான வினியோகத்தையும் தடுக்க முடியவில்லை.
இப்படியிருந்தது தான் சிறிலங்காக் கடற்படை. (தயா சந்தகிரி பொறுப்பேற்றதன்பின் கொஞ்சம் முன்னேறி கடற்புலிகளுக்கு நிகரான நிலைக்கு இறுதிநேரத்தில் வந்திருந்தது சிறிலங்காக் கடற்படை. )
இப்படியிருந்த கடற்படை, இன்றுவரை சுதந்திரமாக முல்லைத்தீவைத் தாண்டிச் சென்று வருகிறது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவுக் கரைக்கே வந்து சேட்டை விட்ட காலங்களுமுண்டு. ஒப்பந்தம் கைச்சாத்தாகி கொஞ்சக் காலத்தின்பின் முல்லைத்தீவுக் கரையிலிருந்து இரண்டு மைல்வரைகூட வந்து மீனவருடன் சொறிந்துவிட்டுச் சென்றது சிறிலங்காக் கடற்படை டோறாக்கள். பலரைத்தாக்கியது. படகுகளை இடித்து மூழ்கடித்தது. முன்பெல்லாம் அறுபது, எழுபது கிலோமீற்றர்களுக்குள் நெருங்காதவர்கள் பின் கரைவரை வந்து சேட்டை விட்டனர். ஒரு கட்டத்தில் கடற்கரை வாழ் மக்கள், 'உடனடியாக யுத்தத்தைத் தொடங்குங்கள்' என்று புலிகளுக்கு மனு அனுப்பிய நிலைவரை வந்தது.
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இன்றுவரை புலிகளின் மறைமுக அனுமதியுடன்தான் சிறிலங்காக் கடற்படை நடமாடுகிறது. அதாவது புலிகள் தாக்கமாட்டார்கள் என்ற உறுதிமொழியோடு புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக் கடலைப் பாவித்து வருகிறது.
ஆனால் புலிகளுக்கு இதுநாள்வரை அங்கீகரிக்கப்பட்டிருந்த போக்குவரத்து முறையை கண்காணிப்புக்குழுவும் அரசாங்கமும் மறுக்கிறது.
முதலில் கடல்வழிப் பயணத்தைச் செய்துவந்த புலிகளுக்கு அரசாங்கமே வான்வழியை ஒழுங்கு செய்து தந்தது. நீண்டகாலம் அதுதான் நடந்து வந்தது. பின் அவ்வழியை அரசாங்கம் மறுத்தபோது, புலிகள் தங்களது கடல்வழிப் பயணத்தைத் தொடர முடிவெடுத்தனர். அப்போது அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில்தான் இலங்கையின் போக்கு பெரும் சிக்கலுக்குள்ளானது.
இந்நிலையில் தாங்கள் கடற்பயணங்களை மேற்கொள்வோம் என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டனர் புலிகள். அண்மையில் திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்குமிடையில் இரு பயணங்களைப் புலிகள் மேற்கொண்டதும், இடையில் கடற்படை வழிமறித்தபோதும் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக பயணத்தை முடித்ததும் குறிப்பிடத்தக்கது.
புலிகளுக்கான போக்குவரத்து முறைகள் மறுக்கப்பட்ட நிலையில் அவர்களைப் பேச்சுக்கு வா என்று சர்வதேசமும் சிறிலங்கா அரசாங்கமும் அழைக்கிறது. கிழக்குத் தளபதியோடு கலந்துரையாட ஏதுமில்லையென்ற நிலை இருந்தாலும்கூட புலிகள் அப்படியான சந்திப்பொன்றை ஏற்படுத்தவே முனைகின்றனர். அதன்மூலம் தமக்கான தடைகளிலிருந்து விடுபடுதல் அவர்களது நோக்கம்.
இந்நிலையில் சிங்களத்தரப்புக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமிழர் தர்பபிலிருந்து தெளிவான பதிலொன்று சொல்லப்பட வேண்டும்.
புலிகளுக்கான பயண வசதிகளை மறுத்துக்கொண்டு,இந்தச் செய்தி உரத்துச் சொல்லப்பட வேண்டும். அதற்கான முதற்படியே இந்த கடற்படைமீதான தாக்குதல்.
புலிகளுக்கான கடல் இறைமையை மறுத்துக்கொண்டு, சிங்களத்தரப்பு புலிகள் பகுதியூடாக எப்படிப் பயணம் செய்ய முடியும்?
புலிகளுக்கான கடல் இறைமை மறுக்கப்பட்டால்
சிங்களத்துக்கான கடல் இறைமையும் மறுக்கப்படும்.
புலிகள் கடலில் பயணம் செய்ய முடியாவிட்டால் சிங்களப்படையும் கடலில் பயணம் செய்ய முடியாது.
தரையைப் போலவே கடலும் ஒரு பிரதேசம் தான். அதன்மீதான உரிமையும் இறைமையும் தரையைப் போலவே முக்கியமானது. என்ன விதப்பட்டும் அதன்மீதான ஆதிக்கத்தைத் தமிழர் தரப்பு இழந்துவிடக்கூடாது. இற்றை வரையான போராட்ட வெற்றிகளுக்கும் மீட்சிக்கும் கடற்பலமே முதன்மைக் காரணம். புலிகளைப் பார்த்துப் பயப்படுபவர்களும் அதன் கடற்பலத்தைத்தான் முதன்மைப்படுத்துகின்றனர்.
இதைவிடவும் சிறிலங்காக் கடற்படையை முடக்குவதற்கு முக்கிய தேவையொன்று இருக்கிறது. இன்று எடுத்ததுக்கெல்லாம் மக்களுக்கான போக்குவரத்துப் பாதையை மூடிவிடுகிறது இராணுவம். அதுமட்டுமன்றி அப்பாதையை வைத்துப் பேரம் பேசுகிறது இராணுவம். ஒரு கிழமைக்கு முன்னர், வவுனியா வழியாக யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை மூடிவைத்துவிட்டு, நோர்வேத் தரப்பு ஊடாக புலிகளிடம் பேரம் பேசியது இராணுவம். அதாவது யாழ்ப்பாணத்தில் மக்கள் கதவடைப்பு, எழுச்சி நடவடிக்கைகளைக் கைவிட்டால் தாம் பாதையைத் திறப்பதாக புலிகளுடன் பேரம் பேசியது இராணுவம். பாதை மூடியது தெளிவான யுத்தநிறுத்த மீறல் என்பதைவிட, அந்தப் பேரத்துக்கு நடுநிலையாளர்கள் தூது போனதுதான் ஆச்சரியம். புலிகளின் தெளிவான மறுப்புக்குப்பின் பாதையைத் திறந்துவிட்டார்கள்.
இந்நிலையில் சிங்கள இராணுவத்தின் கேவலமான இன்னொரு பேரம் பேசல் ஞாபகம் வருகிறது.
1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம். ஜெயசிக்குறு நடந்துகொண்டிருந்த காலம். வன்னிக்கான போக்குவரத்துப் பாதையை திடீரென மூடிவைத்தார் அப்போதைய இராணுவத்தளபதி லயனல் பலகல்ல. மூடிவைத்துவிட்டு அவர் பகிரங்கமாகப் பேரம் பேசினார். என்ன பேசினார் தெரியுமா?
"புலிகள் அப்போதைய தங்கள் நிலையிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்."
அடப்பாவி!
ஜெயசிக்குறு என்று பெயரிட்டு யாழ்ப்பாணம் வரையான பகுதியைப் பிடிப்பதுதானே உங்கள் இலக்கு?
நீங்கள் சண்டை பிடித்துக் கைப்பற்ற வேண்டியதை, இப்படி மக்களைப் பகடைக்காயாக்கி புலிகளிடமிருந்து இனாமாகப் பெற்றுவிடலாமென்று முடிவெடுக்க உங்களுக்கெல்லாம் வெட்கமேயில்லை.
ஆனால் புலிகள் இணங்கவில்லை. அந்தப் பேரம் நடந்துகொண்டிருந்தபோதே 'ஓயாத அலைகள் -2' என்று பெயரிட்டு கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
இப்படி மக்களின் போக்குவரத்துப் பாதையை மூடி பேரம் பேசுவது இராணுவத்துக்கு வழக்கமாகிவிட்டது. இன்றும் அதைத் தொடர்ந்துகொண்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் மக்களுக்கான போக்குவரத்தை நிறுத்திப் பேரம் பேசுவதற்குச் சரியான மாற்று, புலிகளின் கடற்பகுதியூடான சிங்களக் கடற்படையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான். எங்கே வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.
*******************************
கண்காணிப்புக் குழுவினர் சிங்களப் படையினருக்குப் பாதுகாப்பாக வலம் வருவது தொடர்பாக புலிகள் கேட்ட கேள்வி நியாயமானதே. கடற்படையினருடன் அவர்களின் கலங்களில் பயணம் செல்ல வேண்டாமென்றும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென்றும் கண்காணிப்புக்குழுவுக்கு ஏற்கனவே புலிகள் எழுத்து மூலம் அறிவித்துவிட்ட நிலையில் தொடர்ச்சியாக கண்காணிப்புக் குழுவினர் கடற்படையினருக்குப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புலிகளின் அடுத்த கடற்பயணத்தில் (அனுமதியற்ற பயணம்) தங்கள் படகுகளில் தங்களுக்குப் பாதுகாப்பாக வரும்படி கண்காணிப்புக் குழுவைப் புலிகள் கேட்டிருக்கிறார்கள்.
***************************
உரத்துச் சொல்வோம், எங்கள் கடல் எங்களுக்கானது.
Labels: அரசியற் கட்டுரை, இராணுவ ஆய்வு, சமர், சமர் நினைவு
Saturday, April 22, 2006
ஆனையிறவு
இன்று ஆனையிறவுப் படைத்தளம் தமிழர்களால் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் "வீழ்த்தப்பட முடியாத தளம்" என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.
1999இன் நடுப்பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, 'புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்' என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார். ஆனையிறவு மீதான புலிகளின் தாக்குதல் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், அது வீழ்த்தப்பட முடியாத தளமாகவே கருதப்பட்டது. வெளிநாட்டு இராணுவ வல்லுநர்களும் அதைச் சொல்லியிருந்தனர்.
1760 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தரால் Bascula என்று பெயரிடப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு காவற்கோட்டையே, அதன்பின் ஆள்மாறி ஆள்மாறி இறுதியாகச் சிங்கள இராணுவத்திடம் வந்துசேர்ந்த ஆனையிறவுப் படைத்தளமாகும். 'ஆனையிறவு' என்பதற்கான சரியான பெயர்க்காரணம் எனக்குத் தெரியவில்லை. யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படும் யானைகள் இரவில் தங்கவைக்கப்படும் இடமாக அது இருந்ததே அப்பெயருக்குக் காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு.
ஆனையிறவுப் படைத்தளம் தமிழரின் வாழ்வில் நீங்காத வடு. யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குச் செல்ல இருந்த பாதைகள் இரண்டு. புநகரி வழியான பாதையொன்று, ஆனையிறவு வழியான பாதை மற்றொன்று. இவற்றில் பூநகரிப் பாதை, மன்னார் மாவட்டத்துக்கான போக்குவரத்துக்காகப் பயன்பட்டது. ஏனையவற்றுக்கு ஆனையிறவுதான் ஒரேபாதை. அதிலிருந்த இராணுவ முகாமில் சோதனைகள் நடக்கும். அங்கு நிற்பவர்களின் மனநிலையைப் பொறுத்துக் காரியங்கள் நடக்கும். அந்தக் கொழுத்தும் வெயிலில் செருப்பைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கவிடுவார்கள். பலர் பிடிபட்டுக் காணாமலே போய்விட்டார்கள்.
அதுவொரு சித்திரவதைக் கூடமாகவும் இருந்ததாக மூத்தோர் பலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளோம். அப்பாதையால் போய் வந்த தமிழர் பலருக்கு நடுக்கத்தைத் தரும் ஓரிடமாக அது இருந்தது.
ஈழப்போராட்டம் முனைப்புற்ற பின் இத்தளம் தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டியது. சில முன்னேற்ற நடவடிக்கைளின் மூலம் அத்தளம் விரிவடைந்து பருத்தது. இத்தளம் மீது புலிகள் பலமுறை தாக்கதல் தொடுத்துள்ளார்கள். ஆனால் எல்லாம் கைகூடிவந்தது 2000 இல்தான்.
1990 இல் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், யாழ் குடாநாட்டுக்கான வெளியுலகத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டன. இருந்த பாதைகளான ஆனையிறவும் பூநகரியும் மூடப்பட்டன. கொம்படி - ஊரியான் பாதை எனச் சொல்லப்பட்ட ஒரு பாதைவழியே, ஏறத்தாழ 5 மைல்கள் நீருக்குள்ளால் செல்லும் பாதைவழியே பயணம் செய்தனர் மக்கள்.
உப்புவெட்டையையே பெரும்பகுதியாகக் கொண்ட இத்தளம்மீது 1991 நடுப்பகுதியில் "ஆகாயக் கடல் வெளிச் சமர்" என்ற பெயரிட்டு பாரியதொரு தாக்குதலைத் தொடுத்தனர் புலிகள். பெயரிட்டு நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்தது இத்தாக்குதல். சில முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தபோதும் ஆனையிறவு முற்றாக விழவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது அதைக் காக்கும் முகமாக கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பாரிய தரையிறக்கத்தைச் செய்தது அரசபடை. அதன்மூலம் ஆனையிறவைத் தக்க வைத்துக்கொண்டது இராணுவம். அச்சமரில் புலிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர். ஏறத்தாழ 600 வரையானவர்கள் புலிகள் தரப்பில் சாவடைந்திருந்தனர்.
அத்தாக்குதலின்பின் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு உட்பட பெரும்பகுதியைக்கொண்டு வீங்கயிருந்தது இப்படைத்தளம். மேலும் இயக்கச்சிவரை முன்னேறி தன்னை விரித்துக்கொண்டது இராணுவம். இதிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி "யாழ்தேவி" என்ற பெயரில் முன்னேறிய நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள். இப்போது கிழாலிக் கடல்வழிப்பாதை மட்டுமே யாழ்ப்பாண மக்களுக்கு இருந்தது. கிழாலிக்கடலிலும் பல படுகெலைகளைச் செய்தது சிங்களக் கடற்படை.
யாழ்குடாநாடு முற்றாக இராணுவ வசம் வந்தபின் போராட்டம் வன்னியை மையமாக வைத்து நடத்தப்பட்டது. இராணுவம் பரந்தன், கிளிநொச்சி என இடங்களைப் பிடித்து, ஆனையிறவை மையமாகக் கொண்ட பெரியதொரு இராணுவ வலையத்தை ஏற்படுத்திக்கொண்டது. இந்நிலையில் 09.01.1997 அன்று ஆனையிறவு மீது பெரியதொரு தாக்குதல் நடத்தப்பட்டது. 11 ஆட்லறிகள் அழிக்கப்பட்ட போதும் ஆனையிறவு முற்றாகக் கைப்பற்றப்படாத நிலையில் தாக்குதலணிகள் திரும்பின. பின் 27.09.1998 அன்று கிளிநொச்சி நகரை மீட்டெடுத்தனர். புலிகள்.
இந்நிலையில் ஆனையிறவை முற்றாகக் கைப்பற்றும் காலமும் வந்தது.
ஆனையிறவின் மீதான தாக்குதல் நேரடியாக நடத்தப்பட்டதன்று. அது பலபடிமுறையான நகர்வுகளின் தொகுப்பு. 11.12.99 அன்று ஆனையிறவைப் பிடிக்கத் தொடங்கப்பட்டதிலிருந்து 20.04.2000 இல் இறுதித்தாக்குதல் நடத்தப்படும்வரை, நான்கு மாதங்களுக்கும் மேலாக அனையிறவு மீது புலிகள் கைவைக்கவேயில்லை.
ஓயாத அலைகள் -3 இன் முதல் இரு கட்டங்களும், வன்னியின் தெற்கு, மேற்குப் பகுதிகளை மீட்டெடுத்தபின், ஆனையிறவு மீதான கவனம் குவிந்தது. அடுத்தது ஆனையிறவுதான் என்று எல்லோருமே நம்பிய நிலையில், 11.12.1999 அன்று கட்டைக்காட்டு - வெற்றிலைக்கேணி தளங்கள் மீது ஓயாத அலைகள் -3 இன் மூன்றாம் கட்டத் தாக்குதல் தொடங்கப்பட்டது. இப்பகுதி ஆனையிறவிலிருந்து கிழக்குப்பக்கமாக உள்ள கடற்கரைப்பகுதி. 91 இல் ஆனையிறவு மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது இராணுவத்தினர் தரையிறக்கஞ் செய்யப்பட்ட பகுதிதான் இது. அத்தளங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்தும் கடற்கரை வழியாக சில இடங்களைக் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். அப்போதுகூட ஆனையிறவு வீழ்ந்துவிடுமென்று இராணுவம் நம்பவில்லை.
பின் கண்டிவீதியில் ஆனையிறவுக்குத் தெற்குப்புறமாக இருந்த பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இது முக்கியமானதொரு தாக்குதல். அதுவரை பெரும்பாலும் இரவுநேரத்தாக்குதல்களையே நடத்திவந்தனர் புலிகள். முதன்முதலாக பகலில் வலிந்த தாக்குதலொன்றைச் செய்தனர் புலிகள். அதுவும் எதிரிக்குத் தெரிவித்துவிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு பரந்தன் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலுக்கு முன் புலிகளின் தளபதி கேணல் தீபன், இராணுவத்தின் பரந்தன் கட்டளைத் தளபதியோடு வானொலித் தொலைத்தொடர்பு வழி கதைத்தபோது, 'முடிந்தால் தாக்குதல் நடத்தி பரந்தனைப் பிடியுங்கள் பார்ப்போம். எங்களை ஒட்டுசுட்டான் இராணுவம் என்று நினைக்க வேண்டாம்' என்று தீபனுக்குச் சொன்னாராம். ஆனால் மதியம் தொடங்கப்பட்ட தாக்குதலில் பரந்தன் தளம் புலிகளிடம் வீழ்ந்தது. புலிகளின் கனரக ஆயுத வளத்தை எதிரிக்கு உணர்த்திய தாக்குதலென்று அதைச் சொல்லலாம்.
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, பரந்தன் உள்ளிட்ட முக்கிய முன்னணித்தளங்கள் வீழ்ந்தபின்பும் கூட, ஆனையிறவின் பலத்தில் எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. பரந்தன் கைப்பற்றப்பட்டதால் ஆனையிறவுக்கான குடிநீர் வழங்கல் வழிகளிலொன்று அடைபட்டது. சில நாட்கள் எந்த முன்னேற்றமுமின்றி களமுனை இருந்தது.

தரையிறக்கத்துக்குத் தயாரான புலியணியினர்.
பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'மாமுனைத் தரையிறக்கம்' புலிகளால் நடத்தப்பட்டது. தரையிறக்கப்பட்ட 1200 புலிவீரர்கள், ஆனையிறவிலிருந்து யாழ்ப்பாணப் பக்கமாக 15 கிலோமீட்டரில் இருக்கும் இத்தாவில் என்ற இடத்தில் கண்டிவீதியை மறித்து நிலையெடுத்தார்கள். அதேயிரவு பளை ஆடலறித் தளத்தினுள் புகுந்த கரும்புலிகள் அணி அங்கிருந்த 11 ஆட்லறிகளைத் தகர்ந்தது. அப்போதுதான் ஆனையிறவு மீதான ஆபத்து கொஞசம் புலப்பட்டது. ஆனாலும் தரையிறங்கிய புலியணிகள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார்களென்று சொல்ல முடியாத நிலை. மிகச்சிறிய இடம். சுற்றிவர ஏறத்தாள நாற்பதாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள ஆனையிறவு, யாழ்ப்பாணப் படைநிலைகள்.
முழுப்பேரையும் துவம்சம் செய்வதென்று கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கும் இராணுவத்தினர். மிகப்பெருமெடுப்பில் அந்நிலைகள் மீது எதிரி தாக்குதல் நடத்தினான். ஆனாலும் அவனால் அவ்விடத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

மாமுனையில் தரையிறங்கிய அணிகள் இத்தாவில் நோக்கிச் செல்கின்றன.
இதற்கிடையில் கடல் வழி மட்டுமே இத்தாவிலுடன் தொடர்பிருந்த நிலையில், தாளையடி, செம்பியன்பற்று போன்ற முக்கிய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிக் கைப்பற்றியதன் மூலம் நேரடித் தொடர்பை இத்தாவில் அணியினருடன் ஏற்படுத்திக்கொண்டனர் புலிகள். முப்பத்து நான்கு நாட்கள் வரை ஆனையிறவுக்கான முதன்மை வினியோகப் பாதையை மறித்து வைத்திருந்தனர், கேணல் பால்றாஜ் தலைமையிலான அவ்வணியினர்.
இதுவரை ஆனையிறவு மீது நேரடியான எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை. இவை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க ஆனையிறவு மீதான இறுதித்தாக்குலைத் தொடுத்தனர் புலிகள். இயக்கச்சிப் பகுதியைக் கைப்பற்றியதன் மூலம் ஆனையிறவை மிக நெருங்கியதுடன், ஆனையிறவுப் படையினருக்கான குடிநீர் வினியோகத்தையும் முற்றாகக் கட்டுப்படுத்தினர் புலிகள். இயக்கச்சி முகாம் வீழ்ந்த உடனேயே ஆனையிறவைக் கைவிட்டு ஓடத்தொடங்கியது சிங்களப்படை. அவர்களுக்கிருந்த ஒரே வழி, கிழாலிக்கடற்கரை வழியாகத் தப்புவதே. தப்பியோடிய இராணுவத்தினரும் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அப்பாதையில் வைத்து 152 mm ஆட்லறிப்பீரங்கியொன்று கைப்பற்றப்பட்டது. ஆனையிறவுப்படைத்தளம் முழுமையாகப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 22.04.2001 அன்று கேணல். பானு அவர்கள் ஆனையிறவில் புலிக்கொடியேற்றினார்.
மக்களுக்கு ஆனையிறவு வீழ்ந்தது கனவு போலவே இருந்தது.
ஆனையிறவு முகாம் மீதான இறுதித்தாக்குதல் வெகு சுலபமாக முடிவடைந்தது. புலிகள் தரப்பில் 34 போராளிகளே சாவடைந்தனர். ஆனால் அத்தளத்தைக் கைப்பற்ற, முற்றுகை நடத்திச் செய்த சண்டைதான் நீண்டதும், கடினமானதும்.
ஆனையிறவுக்காக ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக புலிகளின் குறிப்பு கூறுகிறது.
ஆனையிறவின் வீழ்ச்சியை சிங்களத் தரப்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மறுத்தது. இது வழமையான ஒன்றே.
****************************************
வெளித்தோற்றத்துக்கு, ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாகத் தோன்றுகிறது. அவ்வளவுக்கு அப்பெயர் மிகப்பிரசித்தம்.
தலைவர் பிரபாகரனின் பன்னாட்டுப் பத்திரிகையாளர் மாநாட்டில், வெற்றிகளில் எதை முதன்மைப்படுத்துகிறீர்கள் என்று கேட்கப்பட்டதற்கு, பெரும்பாலானோர் எதிர்பார்த்த பதில் 'ஆனையிறவு'தான். ஆனால் வந்த பதில், 'ஜெயசிக்குறு எதிர்ச்சமர்'.
***************************************
ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலிலும் அதன் துணைத்தாக்குதல்களிலும் மக்களின் பங்களிப்பு மிகப்பெரியது. குறிப்பாக இத்தாவில் பகுதியில் நடந்த சண்டையில் எல்லைப் படையினராக மக்கள் கலந்துகொண்டு முழுமையான பங்களிப்பைச் செய்தனர். நிறையப்பேர் களப்பலியாகினர்.
***************************************
ஆனையிறவு வெற்றியையொட்டி நிறையப்பாடல்கள், கவிதைகள் எல்லாம் வந்துவிட்டன. நீங்கள் ஒரு பாடலைக் கேளுங்கள். எனக்குப்பிடித்த பாடல்.
பாடலைப் பாடியோர்: சாந்தன், சுகுமார்.
"அந்த மாதிரி" என்று இப்பாடலில் வரும் சொல்லுக்கு விளக்கம் பலருக்கத் தெரியாமலிருக்கலாம்.
'சூப்பர்" என்று சொல்லப்படுவதற்கிணையாக எங்கள் வழக்கிலுள்ள சொல் இதுவாகும்.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, நட்சத்திரம், வரலாறு
Wednesday, April 19, 2006
மூன்றாம் கட்ட ஈழப்போர்
"ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத
இன்னொருநாள் இன்று.
தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை
நாசமாக்கி,இலட்சக்கணக்காண தமிழ் மக்களை அகதிகளாக்கிய ‘சூரியக்கதிர்-02’ எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் தொடக்கின. ஏற்கெனவே 'சூரியக்கதிர்-01' என்ற பெயரில் வலிகாமத்தைக் கைப்பற்றியிருந்த அரசபடை, யாழ்ப்பாணத்தை முழுவதும் கைப்பற்றவென தன் இரண்டாவது நகர்வைத் தொடங்கிய நாள் இன்றாகும். ஆயிரக்கணக்கான மக்கள் வன்னிவர கிழாலிக்கடற்கரையிற் காத்திருந்தும் பயனில்லை. அவர்கள் மீதும் வான்படை தாக்குதல் நடத்தியது."
*************************
இன்றைய நாளுக்கு இன்னொரு முக்கியத்துவமுண்டு. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 'மூன்றாம் கட்ட ஈழப்போர்' தொடங்கியதும் இன்றைய நாளில்தான்.
1995 இன் தொடக்கத்தில் சந்திரிக்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவந்த சிலசுற்றுக் கலந்துரையாடல்கள் (அவற்றைப் பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் பேசியதைவிட பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களில் ஓரளவு விசயமிருந்தது) முறிவுக்கு வந்தன. அப்போது யாழ்ப்பாணம் மீது இருந்த பொருளாதார, மருந்துத் தடைகளை நீக்குதவதற்கு இழுத்தடித்து, கடைசியாக ஒரு கப்பலை அனுப்புவதாகச் சொன்னது அரசு. வந்த கப்பலை பருத்தித்துறைக்கு அண்மையில் வைத்து அரசகடற்படை வழிமறித்துத் திருப்பி அனுப்பியது. மருந்துகளையும் அத்தியாவசியப் பொருட்களையும்கூட தரமுடியாத பேரினவாதச் சிந்தனையோடிருந்தது அரசு. யாழ்க்குடாநாட்டுக்கும் மற்ற நிலப்பரக்குமிடையில் போக்குவரத்து வசதிக்காக பாதைதிறக்கும் முயற்சிக்குக்கூட அரசு இணங்கிவரவில்லை.
இந்நிலையில் 19.04.1995 அன்று திருகோணமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த "ரணசுறு", "சூரயா" என்ற போர்க்கப்பல்கள் மீது நீரடி நீச்சற்பிரிவுக் கரும்புலிகள் தாக்குதல் நடத்திக் கலங்களை மூழ்கடித்தனர்.
கதிரவன், தணிகைமாறன், மதுசா, சாந்தா என்ற நான்கு கடற்கரும்புலிகள் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தனர்.
இவர்கள் பற்றிய நினைவுப்பாடலைக் கேளுங்கள்.
குரலுக்குச் சொந்தக்காரன் மேஜர் சிட்டு.




படங்களுக்கு நன்றி: அருச்சுனா.
Labels: இராணுவ ஆய்வு, களவெற்றி, சமர், சமர் நினைவு, நட்சத்திரம்
Sunday, January 08, 2006
ஆனையிறவுத் தாக்குதல் நினைவு.
1996 இன் இறுதிப்பகுதியில் கிளிநொச்சி நகரம் சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்டது. முல்லைத்தீவு இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ததாக அரசு நினைத்துக்கொண்டிருந்தது. (ஆனால் தமிழர்தரப்புக்கு முல்லைத்தீவு வெற்றிக்கு ஒப்பான வெற்றி இன்றுவரை வேறெதுவுமில்லை. அவ்வெற்றியின் வேரிலிருந்துதான் இன்றுவரையான எல்லாமே. முல்லைத்தீவு புலிகளிடம் இருக்கும்வரை அவர்களை எதுவும் செய்யமுடியாதென்பதும் எல்லோரும் அறிந்ததே) கிளிநொச்சியை இழந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே பாரியதொரு தாக்குதலைப் புலிகள் நடத்தத் திட்டமிட்டனர்.
1997 இன் ஜனவரி ஒன்பதாம் நாள் ஆனையிறவுப் படைத்தளம் மீது பலமுனைகளால் நகர்ந்த புலிகளின் படையணிகள் தாக்குதல் நடத்தின. இதில் ஆனையிறவின் பிரதான ஆட்லிறி எறிகணைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது. அதில் பதினொரு ஆட்லறிகள் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தன. அவற்றைவைத்து எதிரிமீதே தாக்குதல் நடத்தினார்கள்.
அவ்வேளை கிளிநொச்சி மீது எத்தாக்குதலும் நடத்தப்படவில்லை. ஆனையிறவிலிருந்து நேரடியான தரைவழிப்பாதை இருக்கவில்லை. பரந்தன் படைத்தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படைத்தளம் கைப்பற்றப்பட்டால் ஆனையிறவிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குத் தரைவழிப்பாதை கிடைக்கும். அனால் கடுமையாக முயற்சித்தும் அத்தளம் புலிகளிடம் விழவில்லை. உள்ளே ஊடுருவிய அணிகள் ஆனையிறவுத்தளத்தின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும் பரந்தன் கைப்பற்றப்படாதது பெரிய பிரச்சினையாக இருந்தது. கைப்பற்றப்பட்ட நீண்டதூர ஆட்லறி எறிகணை செலுத்திகளைக் கொண்டுவருவதற்குப் பாதையில்லை. பகல்நேரத்தில் ஆனையிறவு வெட்டையில் இழப்புக்கள் அதிகரிக்கத்தொடங்கின.
இந்நிலையில் கைப்பற்றிய ஆட்லறிகள் பதினொன்றையும் தகர்த்துவிட்டு கைப்பற்றிய இடங்களிலிருந்து பின்வாங்கினர் புலிகள். பாரியதொரு திருப்புமுனையாக நிகழ்ந்திருக்கவேண்டிய அச்சமர் பரந்தன் படைத்தளமொன்று கைப்பற்றப்படாமையால் எதிர்பார்த்த விளைவைத்தரவில்லை.
பின் ஜெயசிக்குறுசமர் தொடக்கம் பலகளங்களைக் கண்டபின்னர் 2001 இல் ஏப்ரல் மாதம் ஆனையிறவுப் படைத்தளம் புலிகளிடம் முற்றாக வீழ்ந்தது.
------------------------------------------
இன்று முன்னாள் யாழ். மாவட்டத் தளபதி லெப்.கேணல் பாண்டியனின் நினைவுநாளும்கூட.
தமிழ்ப்பதிவுகள்
Labels: களவெற்றி, சமர், சமர் நினைவு, படைபலம், வரலாறு
Subscribe to Posts [Atom]