Friday, March 11, 2005

வன்னியின் முதுகெலும்பு...வன்னியின் முகம்-3.


வணக்கம்!

முந்தைய பதிவொன்றில் இரணைமடுக்குளம் பற்றிச் சிறிது எழுதியிருந்தேன். அதுபற்றி மேலும் எழுதுவதாகவும் தெரிவித்திருந்தேன். சென்ற பதிவில் 'தி.தவபாலன்' அனுப்பிய இரணைமடுக்குளம் பற்றிய வரலாற்று ஆக்கத்தை வெளியிட்டிருந்தேன். சர்ச்சைக்குரிய விடயமொன்றையும் அதில் இணைத்திருந்தேன். அதாவது “125000 ஆண்டுகளின் முன்னரான மனித மூதாதைகள் இரணைமடு படுகையில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக ஸ்ரீலங்காவின் முன்னாள் தொல்லியல் ஆணையாளர் சிரான் தெரனியகலை கல்லாயுதங்களை எடுத்தார்.” என்ற தகவலே அது. அதுபற்றிக்கூட எவருமே கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. நிறையப் பேர் வாசிக்கவில்லையென்றே நினைக்கிறேன். எனக்கும்கூட ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதனால்தான் அதனை அப்பதிவில் முதலில் சேர்க்கவில்லை. பின்னர்தான் அதனைச் சேர்த்தேன். இதுபற்றி விசயமறிந்தவர்கள் சொன்னால் நன்று. குறிப்பாகக் கண்ணன் போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

சரி, இக்குளத்தின் அணைக்கட்டு மட்டுந்தான் ஒரு நேரத்தில் வன்னியின் இரு பகுதிகளை இணைக்கும் ஒரே பாதையாக இருந்தது; மக்களுக்கான ஒரே பயணப்பாதையாகவும் இது இருந்தது என்றும் அதைப்பற்றிப் பின்னர் எழுதுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். அதன்படி இப்போது எழுதுகிறேன்.

வன்னியென்று இன்று சொல்லப்படும் பிரதேசம் யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையில் உள்ள பிரதேசம். கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் தொடங்கி வவுனியா ஊடாக மன்னார் வரை ஒரு கோடு கிழித்தால் அக்கோட்டிலிருந்து தெற்குப் பக்கமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம். ஏறத்தாள இன்றிருக்கும் நிலைபோலவே 1997 இற்கு முன்பும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் இருந்தது. பக்கத்தில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப்பிரதேசமாகவே இருந்தது (1998 வரை).

இந்த நிலையில் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலுள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குமிடையில் தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் நோக்கோடு கண்டிவீதியைக் கைப்பற்றவென்று நடத்தப்பட்ட படைநடவடிக்கைதான் ஜெயசிக்குறு. (அந்நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு தரைவழித்தொடர்பேதும் தென்னிலங்கைக்கு இருக்கவில்லை. கடல்வழி மட்டும்தான். அதுகூட கடற்புலிகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.) கண்டிவீதி வன்னியை ஏறக்குறைய நடுப்பகுதியால் ஊடறுத்துச் செல்வதால், இப்பாதை கைப்பற்றப்பட்டால் வன்னி மேற்கு கிழக்கு என இரண்டு துண்டாகும் வாய்ப்பு உள்ளது.

சண்டை தொடங்கி விட்டது. மெதுவாக முன்னேறிய இராணுவம் புளியங்குளத்தில் கடுமையான சவாலை எதிர்கொண்டது. என்ன விலைகொடுத்தும் புளியங்குளத்தை இழப்பதில்லை எனப் புலிகள் திடமாகவே நின்றனர். இச்சண்டை ரஸ்யாவின் ஸ்டாலின்கிராட் போன்றது என அப்போது சிலரால் வர்ணிக்கப்பட்டது. மாதக்கணக்கில் முயன்றும் அரச படை கடும் தோல்வியைச் சந்தித்தது. கவசப்படை பாரியளவில் பயன்படுத்தப்பட்டது போலவே பாரியளவில் இழப்பையும் சந்தித்தது. நிறைய டாங்கிகள் நொருக்கப்பட்டன. நேரடியாக முன்னேறாமல் காடுகளுக்குள்ளால் இரகசிய நகர்வாக புளியங்குளத்தைச் சுற்றி வந்து கனகராயன்குளப்பகுதியில் கண்டிவீதியைக் கைப்பற்றினர் இராணுவத்தினர்.

இந்நிலையில் புளியங்குளத்தில் நின்ற அவ்வளவு போராளிகளும் முழுமையான முற்றுகைக்குள். உணவுகூட வினியோகமற்ற நிலை. ஆனால் இரண்டு நாட்கள் கூட இந்நிலை நீடிக்கவிடாமல். தம்மீதான முற்றுகையைத் தகர்த்ததோடல்லாமல் இராணுவத்தை அவர்களது பழைய நிலைகளுக்கே துரத்திவிட்டனர்.


எவ்வளவு முயன்றும் சரிவராததால் வேறோரு நகர்வாக முழுவதும் காடுகளுக்குள்ளால் நகர்ந்து ‘கரிப்பட்ட முறிப்பு’ என்ற இடத்தை சண்டையெதுவுமின்றிப் பிடித்தார்கள். இந்த இடம் கண்டிவீதியிலிருந்து கிழக்குப் பக்கமாக முல்லைத்தீவை நோக்கி வரும் (மாங்குளம்-ஒட்டுசுட்டான்) பாதையிலுள்ளது. இந்தப் பாதை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதால் வன்னியின் கிழக்கிலிருந்து கண்டி வீதிக்குச் செல்லும் பாதையொன்று மூடப்பட்டது. ஏற்கெனவே நெடுந்தீவு-புளியங்குளப் பாதை மூடப்பட்டதால் இது நெருக்கடியை உருவாக்கியது.


வரைபடத்தில் பார்த்தீர்களானால் மாங்குளம் சந்திக்கும் கிளிநொச்சிச் சந்திக்குமிடையில் வன்னியின் கிழக்குப்பகுதிக்குப் பாதையெதுவும் பிரியவில்லை. அதாவது கண்டி வீதியிலிருந்து முல்லைத்தீவு சார்ந்த கிழக்குப் பகுதிக்கு பாதையெதுவுமில்லை. அத்தோடு மாங்குளத்திலிருந்து இரணைமடுக்குளம் வரை அடரந்த காடுகளைக்கொண்ட பகுதி. இந்நிலையில் ஒரேயொரு பாதை மட்டுமே வன்னியின் இரு பகுதிகளையும் இணைப்பதற்கு இருந்தது. அதுதான் இரணைமடுக்குளப் பாதை. (இது வரைபடத்தில் வராது. குளத்தின் அணைக்கட்டுத்தான் அந்தப் பாதை.)



கிளிநொச்சி இராணுவத்துக்கு மிக அண்மையாகவே இப்பாதை செல்கிறது. அதுவும் உயரமான அக்குளக்கட்டில் ஏறிநின்றால் ஆபத்தான இடமுங்கூட. ஆனால் இதைவிட்டால் வேறு பாதை எம்மக்களுக்கு இல்லை. வாகனப்போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான பாதையாகவே இது இருந்தது. குளக்கட்டின் இரு பக்கமும் எந்தவித தடுப்புக்களுமில்லை. ஏறக்குறைய இரண்டு கி.மீ. நீளமுள்ள இவ் அணைக்கட்டில் ஒரு நேரத்தில் ஒரு வாகனம் மட்டுமே. செல்ல முடியும். குளக்கட்டில் வாகனத்தை ஏற்றும்போது பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிவிட்டுத்தான் தனிவாகனமாக மேலே ஏற்ற வேண்டும். பின் இறக்கும் போதும் அவ்வாறே பயணிகள் இல்லாமல் வெறும் வாகனத்தை இறக்க வேண்டும். இந்தக் குளக்கட்டில் சில தடவைகள் பயணிகள் பேருந்து உட்பட சில வாகனங்கள் உருண்டு விழுந்துள்ளன. பலர்
காயமடைந்துள்ளனர். இரண்டொருவர் இறந்துமுள்ளனர். மிக ஆபத்தான இப்பாதையை விட்டால் வேறு மார்க்கமில்லாததால் மக்களும் இதனூடாகவே பயணத்தை மேற்கொண்டனர்.

மாங்குளம் வரை இராணுவம் வந்துவிட்ட சந்தர்ப்பத்தில் வன்னி நிர்வாக ரீதியாக இரண்டாகப் பிரிந்தே விட்டது. “றோட்டுக்கு அங்கால, றோட்டுக்கு
இஞ்சால
” என்று இரண்டு பிரிவாகவே மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டதுமல்லாமல் அந்தச் சொற்களாலேயே இடங்களை அடையாளப் படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். அனைத்துச் சேவைகளும் இரண்டு பிரிவாக பிரிந்தே இயங்கத்தொடங்கின.


இதற்கிடையில் இருக்கும் இந்த ஒரே பாதையையும் மூடிவிடுவதென்ற நோக்கோடு கிளிநொச்சியிலிருந்து இராணும் பல முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டது. எப்படியும் பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நின்றது. எல்லா முயற்சிகளும் மூர்க்கமான முறையில் முறியடிக்கப் பட்டாலும் இராணுவம் விடுவதாயில்லை.

இதற்கிடையில் புலிகள் முந்திக்கொண்டு கிளிநொச்சி நகரையே இராணுவத்திடமிருந்து கைப்பற்றிவிட்டனர். அதன்பின் இப்பாதைக்கு இருந்த ஆபத்து நீங்கிவிட்டது. பின் ஜெயசிக்குறுவில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட அனைத்துப்பகுதிகளும் புலிகளால் மீட்கப்பட்டபின் வன்னிக்கிருந்த ஆபத்து நீங்கிவிட்டது.

ஒரு நேரத்தில் யாழ்ப்பாணத்துக்கு எப்படி கிழாலி நீரேரி இருந்ததோ, அதேபோல் சிலகாலம் இரணைமடுக்குள அணைக்கட்டு இருந்தது. ஆம், அதுமட்டுமே இருந்தது. அந்தவகையில் எம்வாழ்வின், போராட்டத்தின் அசைக்கமுடியாத ஒரு பாத்திரம்; சாட்சியம் தான் இந்த இரணைமடுக்குள அணைக்கட்டு.

Labels: , ,


Comments:
பரிசோதனை 1
 
எழுதிக்கொள்வது: வன்னியன்

பரிசோதனை 2


2.57 12.3.2005
 
எழுதிக்கொள்வது: -/பெயரிலி.

நல்ல தொடர்.

14.27 11.3.2005
 
எழுதிக்கொள்வது: Thangamani

undefined

12.24 11.3.2005
 
எழுதிக்கொள்வது: Thangamani

thodarnthu ezuthunga. nalla thodar
-Thangamani

எழுதிக்கொள்வது: Thangamani

undefined

12.24 11.3.2005

12.25 11.3.2005
 
எழுதிக்கொள்வது: பொடிச்சி

இரணைமடு-திருவையாறு: பால்யகால நினைவுகளைக் கொணர்ந்தது!
தொடருக்கு நன்றி.


17.39 11.3.2005
 
எழுதிக்கொள்வது: பொடிச்சி

இரணைமடு-திருவையாறு: பால்யகால நினைவுகளைக் கொணர்ந்தது!
தொடருக்கு நன்றி.


17.47 11.3.2005
 
எழுதிக்கொள்வது: பொடிச்சி

இரணைமடு-திருவையாறு: பால்யகால நினைவுகளைக் கொணர்ந்தது!
தொடருக்கு நன்றி.

18.5 11.3.2005
 
எழுதிக்கொள்வது: டிசே

தொடர்ந்து எழுதுங்கள் வன்னியன். இரணைமடுக்குளத்தின் முக்கியத்துவம் பற்றி ஜ்யசுக்குறு காலகட்டத்தில் நீங்கள் எழுதியிருந்ததை சில போராளிகள் சொல்லக்கேட்டிருக்கின்றேன். அந்த அணைக்கட்டைத்தாண்டி தாண்டி மற்ற ரோட்டிற்கு போவதற்க்காய எவ்வளவு தூரத்திகு எல்லாம் நடந்திருக்கிறார்கள் எனப்துவும், எவ்வளவு இழப்பைச் சந்திந்திருக்கின்றார்கள் என்றும் ஓரளவு அறிந்துகொண்டேன். பெண் போராளிகளின் வரலாற்றைச் சொல்லும், விழுதுமாகி, வேருமாகி, ஈழப்போராட்டத்தின் முக்கிய ஆவணம் என்று நினைக்கின்றேன். 600,700 பக்கங்கள் என்று விரியும் நூல் நாம் நினைத்தே பார்க்கமுடியாத சணடைக்களங்களை விவரிக்கின்றது. ஈழத்தில் நின்றபோது தோழியொருத்தியிடம் இரவ்ல் வாங்கி அரைவாசிவரைக்கு கிட்டவாய் மட்டும் அதை வாசித்து இருந்தேன்.



17.19 11.3.2005
 
எழுதிக்கொள்வது: குழைக்காட்டான்

உலகுக்கு தெரியவேண்டிய பதிவு.

0.32 12.3.2005
 
எழுதிக்கொள்வது: DJ

I just have found out lotz of spelling n sentence mistakes in my previous posting. Sorry abt dat.

18.41 11.3.2005
 
எழுதிக்கொள்வது: வன்னியன்

நன்றி தங்கமணி, டி.சே, குழைக்காட்டான், பெயரிலி, பொடிச்சி. தங்கமணி நீங்கள் பல பக்கங்களில் தொடர்ச்சியாக ஒரே தவறை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது எழுத்துரு வகையைத் தெரிவு செய்யாமல் அடிக்கிறீர்கள். தயவுசெய்து கவனிக்கவும்.



11.55 12.3.2005
 
எழுதிக்கொள்வது: வன்னியன்

எழுதிக்கொள்வது: வன்னியன்

நன்றி தங்கமணி, டி.சே, குழைக்காட்டான், பெயரிலி, பொடிச்சி. தங்கமணி நீங்கள் பல பக்கங்களில் தொடர்ச்சியாக ஒரே தவறை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது எழுத்துரு வகையைத் தெரிவு செய்யாமல் அடிக்கிறீர்கள். தயவுசெய்து கவனிக்கவும்.



11.55 12.3.2005

12.15 12.3.2005
 
எழுதிக்கொள்வது: வன்னியன்

மேலும் சென்ற பதிவில் நான் சர்ச்சையான விசயமென்று சொன்ன விசயத்தைப்பற்றி எவருமே எதுவுங்கதைக்கவில்லை. உங்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

12.20 12.3.2005
 
எழுதிக்கொள்வது: மகிழன்

சுவாரசியமான கதை. நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்


21.26 12.3.2005
 
பட உதவிகள் தி.தவபாலன்
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]