Monday, December 19, 2005

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இராணுவ வன்முறை

என்ன நடக்கிறது?

நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எனப் பலர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. பதினைந்து பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இது தனியொரு சம்பவமாக இன்றி பல சம்பவங்களின் தொடர்ச்சியே. கடந்த 3 நாட்களுக்குள் நடந்த பலசம்பவங்களின் கோர்வையே இது.
இதுபற்றிய செய்திகள்:

இரு தினங்களின் முன் "தர்சினி" என்ற இளம்பெண் புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு, கிணறொன்றினுள் வீசப்பட்ட சம்பவத்துடன் இது தொடங்குகிறது. இக்கிணறு சிங்கள இராணுவத்தினரின் முகாமருகே இருக்கும் கிணறு. இப்பாலியல் வன்புணர்வுக் கொலை இராணுவத்தால் தான் செய்யப்பட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். புங்குடுதீவில் இதுதான் முதல்தடவை என்றில்லை. ஏற்கெனவே இவ்வாறான பாலியல் வன்புணர்வுக்கொலைகள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டுள்ளன. 'சாரதாம்பாள்' என்ற பெண்ணின் கொலை நீதிமன்றம் வரைகூட வந்தது. அவ்வழக்கில் இராணுவத்தினருக்கெதிரான சாட்சிகள் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு இறுதியில் வழக்கு நீர்த்துப்போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போது தர்சினியின் கொலை. மருத்துப்பரிசோதனையும் பாலியல்வன்புணர்வுக்கொலையை உறுதிப்படுத்துகிறது.

இக்கொலையைக் கண்டித்து மக்களால் பல்வேறு போராட்டங்கள் செய்யப்பட்டன. சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன், பல்கலைக்கழக மாணவர்களுடன் புங்குடுதீவில் அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரால் வழிமறித்துத் திருப்பியனுப்பப்பட்டார். அவ்விடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு 25 வரையான பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.

இச்செயலைக் கண்டித்தும், எற்கெனவே பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட அட்டூளியங்களைக் கண்டித்தும், (பல்கலைக்கழத்துள் இராணுவப் பிரவேசம், அடையாள அட்டைகளைக் கிழித்தெறிந்தது, பல்கலைக்கழகச் சுற்றாடலில் என்னேரமும் இராணுவக் காவல்) யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு ஆட்சேபனை மனுவொன்றைக் கொடுப்பதற்காக மாணவர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எனப்பலரும் கண்காணிப்புக்குழுப் பணிமனையை நோக்கிச் சென்றனர். அப்போது இடைமறித்த 'சிங்கள' இராணுவம் இவர்கள்மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. முதலில் வானை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், பின் இவர்களை நிலத்துக்குச் சமாந்தரமாகவும் சுட்டுள்ளார்கள். தங்களை நோக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து மாணவர்கள் கலைந்து வந்துள்ளார்கள். இச்சம்பவத்தில் காயமடைந்த 15 பேர்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இதில் காயமடைந்த பேராசிரியர் பேரின்ப நாதனும் இன்னொரு மாணவரும் துப்பாக்கிச் சூட்டிலேயே காயமடைந்தனர் எனச் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தையிட்டு இராணுவம், 'அவர்கள் எங்கள்மேல் கல்லெறிந்தார்கள். அதனால்தான் நாம் வானைநோக்கிச் சுட்டோம்' என்கிறது.
இவர்கள் பின்னால் புலிகள் உள்ளார்கள் என்றும் சொல்கிறது.
ஆனால் இச்சம்பவத்தில் நேரடியாக நின்ற யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாஸ், 'அப்படி எதுவும் நடக்கவில்லை. நாங்கள் அமைதியாகத்தான் சென்றோம். இராணுவம் தாக்கியபோதும் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினரும் நானும் பேசினோம். ஆனால் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிச் சூட்டை நிலத்திலும் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து உயிர்க்கொலைகளைத் தவிர்ப்பதற்காக நாம் கலைந்துசென்றோம்' என்கிறார்.


புங்குடுதீவில் நடந்த பாலியல்வன்புணர்வுக் கொலையையடுத்துத் தொடர்ச்சியாகப் பலசம்பவங்கள் நடந்துள்ளன. இந்நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே 'பொங்கியெழும் மக்கள்படை' என்ற பெயரில் இராணுவத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தாக்குதல்கள் நடத்தப்பட்டு, இனியும் இராணுவம் எல்லை மீறினால் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டிருந்தன. கண்காணிப்புக் குழுவுக்கும் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இப்போது புங்குடுதீவுச்சம்பவமும் அதைத்தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினருட்பட மாணவர்கள், பேராசிரியர்கள, பொதுமக்கள் எனத் தொடர்ந்து இராணுவத்தினரால் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இனிவரும் சிலநாட்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாம். (ஏற்கெனவே, நடைபெற்றுவரும் உயர்தரத் தேர்வுக்கு இடையூறு விளைவிக்காதிருக்கவே தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகக் கதைகள் கசிந்ததுண்டு)


யாழ். பாராளுமன்ற உறுப்பினருக்கும் பல்கலைக்கழகத்துக்கும் நடக்கும் சம்பவங்கள், அரசியல் மட்டத்தில் தெளிவாகவே ஒரு செய்தியைச் சொல்கிறது.


பேரணி சென்ற பல்கலைக்கழகச் சமூகம்.



பேரணியை "எதிர்கொண்ட" படையினர்










-----------------------------------------

படங்கள்: சங்கதி

Labels: ,


Comments:
http://thamilsangamam.blogspot.com/2005/12/blog-post_19.html என்ற தளத்தில் இந்து என்ற பெயரில் அன்பரொருவர் தெரிவித்திருந்த ஐயத்துக்கு இட்ட மறுமொழி இங்கேயும்.

125 வருட பாரம்பரியமென்பதற்கும் நம்பகத்தன்மைக்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை.

வேண்டுமானால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிபிசிக்கு அளித்த செவ்வியையாவது கேட்கலாம். இதில் 3 இராணுவத்தினர் காயமடைந்ததாக யார் சொல்லி இந்து வெளியிட்டதென்று தெரியவில்லை. இராணுவப்பேச்சாளர்கூட அதைச் சொல்லவில்லை.

இதிலிருக்கும் படங்களிலொன்றில் இராணுவம் துப்பாக்கியை மாணவர்களை நோக்கி நீட்டியபடிதான் நிற்கிறது. பல்கலைக்கழகத் துணைவேந்தரும் மாணவர்களும் வானை நோக்கிச் சுட்டபின் தங்களைநோக்கியும் சுட்டதாகச் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில் இரண்டு தொடக்கம் மூன்று மீட்டர் உயரத்துக்குள் துப்பாக்கிச் சன்னங்கள் சுவர்களில் பாய்ந்துள்ளது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மோகனதாசும் தாக்கப்பட்டது தொடர்பாக நீங்கள் தந்த பத்தியில் எதையும் காணவில்லையே? பாராளுமன்ற உறுப்பினரும் அந்தக் கும்பலில் ஒருவரோ? இதே சம்பவத்தில் பேராசிரியர் பேரின்பநாதன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயமடைந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இப்படிச் சொல்பவர்களுக்கு 125 வருட பாரம்பரியமில்லையாதலால் (மாணவர்களுக்கு வெறும் 25 வருட பாரம்பரியம் மட்டுமேயுண்டு) இவர்கள் சொல்வதில் நம்பகத்தன்மை குறைவுதான்..
 
WHERE IS JANANAYAGAM, SRI RANGAN, KARUNANTHAN PARAMUVELLAN AND RAYAGARAN ARE THEY STILL BELIVE

SRILANKAN ARMIES ARE GOOD?
 
""என்னை நோக்கி வந்த சிப்பாய்களைப் பார்த்து நான் ஒரு பேராசிரியன் என்று சிங்கள மொழியில் அவர்களுக்கு புரியும்படியாகக் கத்தினேன். அவர்கள் விடவில்லை. துப்பாக் கிப் பிடிகளால் என்னைத் தாக்கினார்கள்...''

தமக்கு நேர்ந்த கதியை இப்படி விவரித்தார் யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.

அமைதிப் பேரணியில் கலந்துகொண்ட பேராசிரியர் சிவச்சந்திரன் படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். யாழ் ஆஸ்பத்திரி வார்ட்டில் தங்கியிருக்கும் அவரை "உதயன்' செய்தியாளர் சந்தித்து சம்பவம் தொடர்பாகக் கேட்டார்.

பேராசிரியர் அப்போது கூறியதாவது:
பேரணியில் நாங்கள் அமைதியாகவே சென்றுகொண்டிருந்தோம். பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் எங்களை வழிமறித்த படையினர் முன்னேற வேண்டாம் எனப் பணித்தனர். துப்பாக்கிகளை எம்மை நோக்கி நீட்டியவாறு தயார்நிலையில் நின்றனர். நாங்கள் அமைதி யாக முன்னே நகர்ந்து கொண்டிருந்தபோது திடீரென எங்களை நோக்கிச் சுடத் தொடங்கினர். பேரணியில் வந்தோர் செய்வதறியாது தலைதெறிக்க சிதறி ஓடினர். பலர் கீழே விழுந்து படுத்தனர். தரையில் படுத்து பாதுகாப்புத் தேடிய மாணவர்களை சிப்பாய்கள் ஏறி மிதித்து தாக்கத் தொடங்கினர். துவக்குப்பிடியால் கண்டபடி தாக்கினர். அப்போது நான் மெல்ல எழுந்து ""நாங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். மாணவர்களை அடிக்கவேண்டாம்'' என்று சிங்கள மொழியில் புரியும்படி கூறினேன். அதனைப் பொருட்படுத்தாது படையினர் என்னை நெருங்கி வந்து துப்பாக்கியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். தாக்குதலால் என் உடல் முழு வதும் பலத்த வலி ஏற்பட்டது. ஒருவாறு அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் உதவியுடன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டேன்
இப்படித் தெரிவித்தார் பேராசிரியர் சிவச்சந்திரன்.
 
"எதிரே நின்றிருந்த படையினர் திடீ ரென எம்மை நோக்கிச் சுட்டனர். நான் தரையில் வீழ்ந்து படுத்தேன். தொடையில் குண்டு பாய்ந்து குருதி வெளியேறுவது தெரிந்தது.''

நேற்று பரமேஸ்வராச் சந்தியில் படை யினரின் சூட்டுக்கு இலக்கான பொருளியல்துறை விரிவுரையாளர் நல்லதம்பி பேரின்பநாதன் (வயது 56) மேற்கண்டவாறு "உதயன்' செய்தியாளரிடம் தெரிவித்தார்.வலதுகால் தொடையில் குண்டுபாய்ந்த நிலையில் யாழ்.ஆஸ்பத்திரியின் 24 ஆம் வார்ட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் அவர் தனது திகில் அனுபவத்தை விவரித்தார்.

அவர் கூறியதாவது: வேட்டுக்கள் சரமாரியாகக் கேட்டபோது நான் தரையில் வீழ்ந்து படுத்துவிட்டேன். பலர் அங்கும் இங்கும் தாறுமாறாக தலைதெறிக்கஓடிக்கொண்டிருந்தனர். ஓடியவர்களை படையினர் மறித்துத் தாக்கிக்கொண்டிருந்தனர். எனக்கு அருகே மேலும் பலர் வீழ்ந்து கிடந்தனர். ஒழுங்கைகள் ஊடாகப் பலாலி வீதிக்கு வந்துகுவிந்த படையினர் எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அடித்துத் துரத்திக்கொண்டிருந்தனர். நிலைமை படுமோசம் என்பதை உணர்ந்துகொண்ட நான் மெதுவாக எழுந்துசெல்ல முற்பட்டேன். முடியவில்லை. எனது தொடைப்பகுதியில் சன்னம்பாய்ந்திருந்தது; இரத்தம் பீறிட்டது. என்னை ஒரு சைக்கிளில் ஏற்றி உருட்டி வந்த மாணவர்கள் பின்னர் ஓட்டோ ஒன்றின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர்.
இவ்வாறு தெரிவித்தார் விரிவுரையாளர் பேரின்பநாதன்.

-உதயன்-
 
யாழ்ப்பாணத்தில் இன்றும் இராணுவத்தினரின் அட்டகாசங்கள் நடந்துள்ளன. அவற்றைத் தனியொரு பதிவாகப் போடுகிறேன்.

நிற்க, மாணவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது உண்மையே. காயமடைந்த பேராசிரியர் செவ்வியளித்துள்ளார்.
 
துணைவேந்தர், பேராசிரியர்கள் எவரும் காயமடைந்தனர் என்று இந்து பத்திரிக்கை செய்தி வெளியிடவில்லை; இளம்பெண் கற்பழிக்கப்பட்டதாகவும் செய்தியில் தகவல் இல்லை. எனவே இந்தச் செய்திகளின் நம்பகத்தனமையை நீங்கள் பரிசீலனை செய்யவும். மேலும் அதிபரே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால் இதைப்பற்றி கதைப்பது அனாவசியம்.

ttp://www.hindu.com/2005/12/21/stories/2005122103481400.htm
 
Hidu is an anti Eelam Tamil news paper.What ever it gives it is feverable for the Sinhalees.For Ram's service to the Sinhalees he was rewarded with top award.As far as Eelam Tamils concerned his is a
Traitor.
 
இந்து தமிழுக்கு எதிரான வகையிலே செய்திகளைத் திரித்து வெளியிடும் ஒரு பத்திரிக்கை. அதற்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.
 
நண்பன், மற்றும் அனாமதேய நண்பர்களே,
கருத்துக்களுக்கு நன்றி,
மேலே நம்பகத்தன்மை பற்றிக்கூறிய அனாமதேய நண்பரின் நகைச்சுவையுணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்.
அடுத்த அனாமதேயத்தாருக்கும் நண்பனுக்கும்,
முக்கியத்துவம் கொடுக்காமல் விடலாம்தான். ஆனால் 125 வருட பாரம்பரியமென்ற ஒரு சொல்லோடு எதையும் எதிர்கொள்ளத் தயாராயிருக்கும் ஒரு கூட்டத்தின் கதையைக் கேட்டுக்கொண்டு போக மனம் ஒப்பவில்லை. மேலும் நான் பதிவிட்ட சம்பவங்கள் இன்னும்கூடப் பலருக்குத் தெரியாது. இப்பதிவுகள் எழுதப்பட்ட அடுத்த நாள்தான் டி.சே கவிதையெழுதினார். அதிலும் யாருக்கும் என்ன நடந்ததென்று தெரியாது.
என்னளவில் இவற்றைச் செய்தியாகவேனும் பதியும் எண்ணமேயுள்ளது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]