Wednesday, April 19, 2006

நாட்டுப்பற்றாளர்

******நட்சத்திரப் பதிவு -06******
ஒவ்வொரு வருடமும் அன்னை பூபதி நினைவுநாளையே 'தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்' என்று நினைவுகூரப்படுகிறது.

ஈழப்போராட்டத்தில் 'நாட்டுப்பற்றாளர்' என்று சொல்லப்படுபவர்களின், அவ்வாறு செயற்பட்டும் சொல்லப்படாதவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒருகாலத்தில் போராட்டத்தின் தூண்கள் அவர்கள்தான். போராட்டக் காலத்தின் தொடக்க காலத்தில் மட்டுமன்றி இன்றும்கூட முழுநேரப் போராளியாக இல்லாமலிருந்து கொண்டு பலபொதுமக்கள் அளித்த /அளிக்கும் பங்களிப்பு அளப்பரியது. போராட்டத் தொடக்க காலத்தில் இவர்களிலேயே போராட்டம் தங்கியிருந்தது என்று சொல்லலாம்.

உண்மையில் ஆயுதமேந்திய வீரனொருவனைவிட அதிகளவு ஆபத்தை எதிர்நோக்குவது இந்த ஆதரவாளர்களே. அதிகம் உழைக்கவேண்டியதும் இப்படியானவர்களே. அன்றைய காலங்களில் போராளிகளை மறைத்துக் காத்தவர்கள், உணவளித்துப் பேணியவர்கள், மருத்துவ உதவியளித்தவர்கள், தகவல்கள் தந்து உதவியவர்கள், ஆயுதங்களைத் தருவித்தவர்கள், படகோட்டிகள் என்று பலவாறான வழிகளில் போராட்டத்தைத் தாங்கியவர்கள் இவர்கள்.

கையில் ஆயுதத்தை வைத்துக்கொண்டிருப்பவனுக்கு எந்தச் சூழலிலும் நம்பிக்கையொன்றிருக்கும். தான் தனித்து நின்றாலும்கூட ஆயுதமொன்று கையிலிருப்பதால் வரும் மனவலிமை பெரியது. பிடிபடாமல் தன்னை மாய்த்துக் கொள்ளக்கூட அவனிடம் வழியிருக்கிறது. ஆனால் முழுக்க முழுக்க எதிரிகளுக்கிடையில் வாழ்ந்துவரும் ஓர் ஆதரவாளர், எந்தப் பாதுகாப்புமின்றித்தான் செயற்பட வேண்டியிருக்கிறது. எந்தநேரமும் விழிப்பாயிருக்க வேண்டியிருக்கிறது. அதிக நேரம் உழைக்கவேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பிடிபட்டால் முழுச்சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அவர்களது குடும்பமும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது.

கையில் எதுவுமில்லாமல் துப்பாக்கிக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு நிற்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். இது ஆயுதம் தூக்கிப் போராடுவதைவிடவும் பெரியது. இப்படியானவர்கள் ஈழத்தின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டத்துக்குத் தோள் கொடுத்துள்ளார்கள். நிறையப் பேர் மாண்டுள்ளார்கள்.

தொடக்க காலத்தில் அனைத்துத் துறையிலுமே போராளிகள் தேர்ச்சியுற்றவர்களில்லை. அவர்களுக்கு அனுபவம வாய்ந்த பொதுமக்களின் தேவையிருந்தது. அந்நேரத்துக் கடற்பயணங்கள் முக்கியமானவை. புலிகளிடம் சொந்தப் படகுகளில்லை. அனுபவமுள்ள படகோட்டிகளில்லை. பொதுமக்களே உதவிசெய்தார்கள். போராளிகளின் பயணங்கள், காயப்பட்பட்டோரை அனுப்புதல் முதல் வெடிபொருட்களின் வினியோகம் வரை அவர்களே செய்தார்கள். கடலின் காலநிலைச் சிக்கல்களைக்கூட ஒதுக்கிவிட்டுக் கடலோடியவர்கள் இவர்கள். "ஓட்டி" என்ற சொல் மக்களிடத்தில் படகோட்டியைக் குறிக்கும். புலிகளுக்காக ஓட்டிகளாகச் சென்று கடலில் மாண்டவர்கள் பலர்.

காடுகளில் வழிகாட்டிகளாகச் செயற்பட்டவர்களும் பொதுமக்களே. பலதாக்குதல்களுக்குக்குக்கூட இவர்களின் பங்களிப்பு முக்கியமானது. போராட்டம் மிகமிக வளர்ந்தபின்னும் இவ்வழிகாட்டிகளின் பங்களிப்பு இருந்துகொண்டேயிருந்தது.

99 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். மேஜர் மயில்குஞ்சு, மேஜர் சின்னவன் என்று இருவர் வேறுவேறு தாக்குதல்களில் வீரச்சாவடைந்தனர். மிகநீண்டகாலமாக திருமலை, மணலாற்றுக் காடுகளில் அவர்களின் வழிகாட்டுதலில்தான் நிறைய வேலைகள் நடந்தன. காடளந்த வல்லுநர்கள் அவர்கள்.

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று 'நாட்டுப்பற்றாளர்' என்ற கெளரவம் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதுவொரு நடைமுறைதான். அக்கெளரவம் வெளிப்படையாக அளிக்கப்படாதவர்கள் நிறையப்பேருண்டு. அது எல்லோருக்கும் தெரியும். அதை நிவர்த்தி செய்வதும் இயலாத காரியமாகவே படுகிறது. தொடக்க காலங்களில் செயலாற்றி மாண்டுபோனவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புக்கள் இருக்கப்போவதில்லை. நிறையத் தகவல்கள் விடுபட்டுப் போயிருக்கும். இன்றைய நிலையிற்கூட பலர் வெளித்தெரியாமலே இருக்கக்கூடும். முக்கிய புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் வெளிவரப்போவதில்லை.

போர்க்களப்பணி மட்டுமன்றி, சமூக முன்னேற்றம், கலையிலக்கியச் சேவை, ஆவணப்படுத்தல், போன்ற சமூகக் கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்தோருக்கும் இக்கெளரவம் வழங்கப்படுகிறது.

******************************
அன்றைக்கு சாப்பாடு கொடுத்தவரின், ஒழித்துவைத்துக் காத்தவரின், வழிகாட்டியவர்களின், தகவல் தந்தவர்களின், கடலோடிகளின் பங்கின்றி இன்றுவரையான போராட்ட வளர்ச்சி ஏதுமில்லை.
போராளிகளின் பங்களிப்பு எவ்விதத்திலும் சளைக்காத, சிலவேளைகளில் ஒருபடி மேலேகூட காத்திரமான பங்காற்றிய நாட்டுப்பற்றாளர்களின் நினைவுநாள் ஏப்ரல் 19. பட்டியலில் வெளியிடப்பட்டோர் என்றில்லாமல் பொதுப்படையாக 'நாட்டுப்பற்றாளர்' என்று நினைவுகூர வேண்டிய நாளிது.

******************************
படகோட்டிளை நினைவுகூர்ந்து பாடப்பட்ட பாடலொன்றைக் கேளுங்கள்.


அடைக்கலம் தந்த வீடுகளுக்கு நன்றி சொல்லிச் செல்லும் புலிவீரனின் உணர்வுகள் பாடலாக வருகிறது.

Labels: , , , ,


Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]