Thursday, April 20, 2006

மக்களுக்கான ஆயுதப்பயிற்சி.

*******நட்சத்திரப் பதிவு -07*******

கடந்த பதிவொன்றில், வன்னியில மக்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டதையும், அதன் உடனடிப் பயனைப் பற்றியும் எழுதுவதாகச் சொல்லியிருந்தேன்.
முதலில் அத்தகைய பயிற்சிகள் தொடங்கப்பட்ட காலகட்டத்தைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

1997 மே 13 அன்று தொடங்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படிப்படியாக வன்னியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. நூறு நாட்களுக்கும் மேலாக முயன்றும் புளியங்குளம் என்ற கிராமத்தைக் கைப்பற்ற முடியாத இராணுவம் பக்கவாட்டுப்பகுதியால் காடுகளிற்பரவி புதியபுதிய போர்முனைகளைத் திறந்தனர். இறுதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றியதோடு ஜெயசிக்குறு முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. (இதற்குள் புலிகள் கிளிநொச்சியை மீட்டிருந்தனர்.) பின் ஒட்டுசுட்டானையும் இரகசிய நகர்வொன்றின்மூலம் சண்டையின்றியே இராணுவம் கைப்பற்றிக் கொண்டது.

இந்நிலையில் வன்னியில் மக்களின் வாழ்விடங்கள் நெருங்கின. முக்கியமான இரு இடங்களை மையமாகக் கொண்டு மக்கள் இருந்தனர். புதுக்குடியிருப்பை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதிக்கு ஒருபுறம். மல்லாவியை மையமாகக் கொண்டு அதைச்சூழ இருந்த மக்கள். இவர்கள் கண்டிவீதியின் மறுபக்கம். வன்னியின் நிர்வாகம் (மக்களினதும் புலிகளினதும்) இரண்டு பகுதியாகப்பிரிக்கப்பட்டு தனித்தனியே இயங்கத்தொடங்கின. மனரீதியாக வன்னி கண்டிவீதிக்கு இருபுறமென்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் முக்கிய இரு இடங்களான புதுக்குடியிருப்பும் மல்லாவியும் எந்தநேரமும் இராணுவத்தினராற் கைப்பற்றப்படலாமென்ற நிலை வந்துவிட்டது. இரு இடங்களுமே இராணுவத்தினரிடமிருந்து சொற்ப தூரத்திலேயே இருந்தன. புலிகளின் போராட்டத்துக்கான முதன்மைத்தளம் முல்லைத்தீவுதான். அதுபோய்விட்டால் போராட்டமேயில்லை என்றநிலைதான்.


படத்தைப் பெரிதாக்க, படத்தின்மேல் அழுத்தவும்.
படம் பற்றிய விளக்கம் இறுதியாக உள்ளது.


ஒட்டுசுட்டானிலிருந்து எட்டி ஒருகால் வைத்தால் புதுக்குடியிருப்பு. வெறும் பத்துமைல்கள் தான். மறுவளத்தால் நெடுங்கேணியிலிருந்தோ ஒட்டுசுட்டானிலிருந்தோ முள்ளியவளை நோக்கிக் கால்வைத்தாலும் அப்படித்தான். புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களவனிடம் போய்விட்டால் முல்லைத்தீவே தமிழர்களிடமில்லை.

அதுபோல்தான் மல்லாவியும் மிகமிக அதிகமான ஆபத்தை எதிர்கொண்டிருந்தது. இனிமேல் மக்கள் இடம்பெயர இடமில்லையென்ற நிலைக்கு வன்னி இறுக்கப்பட்டது. இனி இராணுவம் முன்னேறினால் இடம்பெயர முடியாதென்ற நிலைக்குப் பெரும்பாலானவர்கள் வந்துவிட்டனர்.
அதேநேரம் களமுனையில் இராணுவத்தினரின் கை ஓங்கியிருப்பதாகப்பட்டது. உண்மையும் அதாகத்தான் இருந்தது. முக்கிய பிரச்சினை ஆட்பலம்.

எதிரி கிழக்குக் கடற்கரையான நாயாற்றிலிருந்து மேற்குக் கடற்கரையான மன்னார் வரை வளைந்துவளைந்து செல்லும் முன்னணிக் காப்பரண் வரிசையைக் கொண்டிருந்தான். எந்த இடத்திலும் அவன் முன்னேறி எதையாவது கைப்பற்றலாமென்ற நிலைதான் அப்போது இருந்தது. ஏனென்றால் இதுதான் இலக்கு என்று சிந்திக்கும் நிலையை அரசு இழந்து நீண்டநாட்களாகிவிட்டது. நாயாற்றுக்குள்ளால் முல்லைத்தீவுக்கு வருவதுமுதல் பள்ளமடுவால் பூநகரி பிடிப்பது வரை எந்த இடமென்றாலும் போதும் என்ற நிலைதான் இராணுவத்தின் நிலை. நூற்றுக்குமதிகமான மைல் நீளம் கொண்ட சமர்முனையை எதிர்கொள்வது புலிகளால் இயலாத காரியமாகவே தென்பட்டது. அதைவிட வடக்குப்பக்கமாக இருக்கவே இருக்கிறது பரந்தன் ஆனையிறவுத் தளம். அதிலிருந்தும் முன்னேற - குறிப்பாக இழந்த கிளிநொச்சியை மீட்க இராணுவம் முனைப்பாகவே இருந்தது.

இனிமேல் புலிகளால் முழுவீச்சாக எல்லா இடத்திலும் எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது என்பதையும், மக்களால் இனியும் இடம்பெயர முடியாது என்பதையும் கணக்கிட்டது இராணுவம். மக்களைக் கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. (அதுவரை அது இடங்களை மட்டுமே கைப்பற்றியது) புதுக்குடியிருப்பையோ மல்லாவியையோ கைப்பற்றினால் பெருந்தொகை மக்கள் இராணுவப்பிடிக்குள் வந்துவிடுவார்கள், பின் புலிகளுக்கான ஆட்பலம் மிகமிகக் குறைந்துவிடும் என்றெல்லாம் கணக்குப்போட்டது. முக்கியமான லயனல் பலகல்ல பொறுப்பெடுத்தபின் பல முனைப்பான திட்டங்களைக் கொண்டுவந்தார். நடைபெற்ற சண்டைகளின் இழப்புக்களிலிருந்து மீள புலிகளுக்கு அவகாசமில்லாமல் தாக்கவேண்டுமேன்பதும் முக்கிய திட்டம்.

அழிவு நெருங்கிவிட்டது. மல்லாவியை விடவும் புதுக்குடியிருப்பு இருதரப்புக்குமே மிகமிக முக்கியமாயிருந்தது. ஏனென்றால் முல்லைத்தீவு விடுபட்டால் புலிகளின் கதை முடிந்துவிடுமென்பது தான்.

இந்தநிலையில்தான் மக்கள் பயிற்சி தொடக்கப்பட்டது. அது தொடங்கப்பட்டதை விட மிகமிக ஆர்ப்பாட்டமாக அது வெளியில் சொல்லப்பட்டது. உண்மையில் பயிற்சி தொடங்கப்பட்டபோது ஆண்கள் முன்னூறு அல்லது நானூறு மீட்டர்களும் பெண்கள் இருநூறு மீட்டர்களும் ஓடுவார்கள். பின் கையைச் சுற்றி, காலைச்சுற்றி கால்மணிநேரம் ஏதாவது செய்துவிட்டு திரும்புவதுதான் நடந்தது. பயிற்சிக்கான வரவுப் பதிவு கொண்டுவரப்பட்டது. இவ்வளவும் நடக்கும்போதே மக்கள் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்ற விம்பத்தைப் புலிகள் உருவாக்கி விட்டார்கள். தேர்ந்தெடுத்த சிலரை இராணுவ உடையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

கிழமையில் ஆறுநாட்கள்கூட சில இடங்களில் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆனால் சுழற்சி முறையாதலால் ஒருவருக்கு இருதடவைகள் முறைவரும். ஏற்கனவே அமைப்பிலிருந்து விலகியவர்களைக் கொண்டு சிறப்பணியொன்று உருவாக்கி அவர்களுக்கு முதலில் சூட்டுப்பயிற்சியைத் தொடங்கினார்கள். இவ்வளவும் ஒரு மாதத்துக்குள்ளாகவே நடந்தன. பின் படிப்படியாக மற்றவர்களுக்கும் சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டது. முதல்தரம் கொடுத்தபோது அவர்கள் சரியானமுறையில் துப்பாக்கி பிடிப்பதில் தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் மக்கள் எல்லோரும் சுட்டுப்பழகிவிட்டார்கள் என்ற கதை வெளியில் போகவேண்டுமென்பது முக்கியம். மக்களும் வஞ்சகமில்லாமல் ஒன்றைப் பத்தாக்கிக் கதைத்தார்கள்.

இராணுவம் என்னென்ன திட்டங்கள் போட்டு வைத்திருந்ததோ அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டது. சிலமாதங்களாக புதுக்குடியிருப்போ மல்லாவியோ ஏனைய மக்கள் வாழ்விடங்களோ எதிரியாற் கைப்பற்றப்படாமற் காப்பாற்றப்பட்டது. இராணுவம் இவற்றை நோக்கி சிறு முன்னேற்ற முயற்சியைக்கூட எடுக்கவில்லை. ஏற்கனவே முன்னேற்ற முயற்சிக்கென்று தயார்ப்படுத்தி வைத்திருந்த படைகளையும் கனரக ஆயுதங்களையும்கூட பழையபடி பின்னிலைகளுக்கு அனுப்பிவிட்டுப் பேசாமலிருந்தது. காரணம் இதுதான். ஆயுதப்பயிற்சி பெற்ற மக்கள் கூட்டத்தைக் கைப்பற்றி, அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் விரும்பவில்லை.

இந்தக் குழப்பங்களுக்குள் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்டுத்தித் தம்மைப் பலப்படுத்திக்கொண்டனர் புலிகள். கூடவே முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு துணை இராணுவக் கட்டமைப்பாக மக்களையும் தயார்படுத்திவிட்டனர். முறையானபடி பயிற்சி நிறைவு விழாக்களைச் செய்து, அதிலேயே மக்கள் படையைக் கொண்டு மாதிரி முகாம் தகர்ப்பு போன்றவற்றைச் செய்து ஒரு படைக்கட்டமைப்புத் தன்மையை ஏற்படுத்தினர். மூத்த தளபதிகள் நேரிலே கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் சிறுசிறு அணிகளுடனும் நேரடியாகக் கதைத்துக் கள யதார்த்தத்தைச் சொல்லினர்.

மக்கள் களத்தில் ஆயுதத்துடன் பங்களிப்பதற்கான சூழல் வந்தபோது எதிரி சில நடவடிக்கைகளைச் செய்தான். அதாவது மக்கள் வாழிடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தை முற்றாகக் கைவிட்டது இராணுவம். இடங்களைக் கைப்பற்றும் நோக்கத்தையும் முற்றாகக் கைவிட்டது. மாறாக புலிகளின் நிலைகள் மீது பாரிய தாக்குதலைச் செய்துவிட்டுப் பின்வாங்குவதுதான் அந்தத்திட்டம். (முன்பு புலிகள் செய்தது போல). வசந்த பெரேரா எனற தளபதி அப்போது பொறுப்பேற்று இரு நடவடிக்கைகளைச் செய்தார். அவைதாம், வோட்டர் செட் 1, 2.(watershed-1, -2)

இரண்டுமே திட்டமிட்டபடி இராணுவத்துக்கு வெற்றியளித்தன. புலிகளின் முன்னணிக் காப்பரண் வரிசையின் குறிப்பிட்ட பகுதியைத் தெரிந்தெடுத்து அதன்மீது ஆயிரக்கணக்கான ஆட்லறிக்குண்டுகளை ஏவித் தாக்குதல் நடத்திவிட்டு பின் தரைவழியால் தாக்கியழிப்பது. பின் பழையபடி தமது நிலைகளுக்கே திரும்புவதென்பது இத்திட்டம். அம்பகாமத்தில் நடத்தப்பட்ட வோர்ட்டர் செட்டின் இரு நடவடிக்கையுமே இராணுவத்துக்குப் பூரண வெற்றி. கணிசமான போராளிகள் அதில் கொல்லப்பட்டனர். அதுமட்டுமன்றி போராளிகளின் உடல்களை எடுத்துச் சென்று, பின் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக அனுப்பி வைத்தது இராணுவம். (உடல்களை எதிரி கைப்பற்றுவதென்பது தொடக்க காலத்திலிருந்தே மிகப்பெரிய தோல்வியாக ஈழப்போராட்டத்தில் கருதப்பட்டு வந்துள்ளது.) தொடர்ந்தும் அப்பிடியான தாக்குதலைச் செய்வது இராணுவத்தின் திட்டம்.

அந்தநேரத்தில் மக்களிடத்திலும் குழப்பம். களத்தில் புலிகளின் கை முற்றாக விழுந்துவிட்டதானதொரு தோற்றம் தென்பட்டது.

ஆனால் புலிகள் முந்திக்கொண்டார்கள். எதிரி மூன்றாவது நடவடிக்கை செய்யமுன்பே புலிகள் ஓயாத அலைகள் - 3 ஐத் தொடங்கிவிட்டார்கள். இனி புலிகளால் எழுந்திருக்க முடியாது என்று (புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களும்) நினைத்திருந்தபோது களமுனை ஒரேநாளில் முற்றுமுழுதாக மாறியது. இரண்டரை வருடங்களாக எதிரியிடமிழந்த இடங்களை மட்டுமன்றி பதினைந்து வருடங்களின் முன் அத்துமீறிய சிங்களக்குடியேற்றத்தினால் இழந்த பாரம்பரிய நிலங்கள் சிலவற்றையும்கூட ஐந்தே நாளில் மீட்டுவிட்டார்கள். இச்சமரிற்கூட மக்கள்படையின் பங்களிப்பு அளப்பரியது.
**************************
வன்னியும் புலிகளும் இத்தோடு முடிந்தார்களென்று எதிரி நினைத்திருந்த வேளையில் சாதுரியமாகத் தொடக்கப்பட்ட மக்கள் பயிற்சி ஈழப்போராட்டத்தில் முக்கிய மைல்கல். சண்டையேதுமின்றி, பயிற்சி கொடுத்ததன் மூலமே பெரியதொரு அழிவிலிருந்து ஈழப்போராட்டம் காப்பாற்றப்பட்டது. பின் பெரிய வெற்றிகளுக்கும் அப்பயிற்சியும் மக்கள் படையும் அளப்பரிய உதவியாயிருந்தன.
**************************
குறிப்பு: பெண்கள் பயிற்சியெடுக்கும் படங்கள் கிடைக்கவில்லை. பொறுமையாகத் தேடவில்லை.

படங்களுக்காக புதினத்துக்கு நன்றி.

***************************************
முல்லைத்தீவு வரைபடத்தில், நீலநிறத்தால் வட்டமிடப்பட்டிருப்பவைதான் புதுக்குடியிருப்பு, மல்லாவிப் பட்டினங்கள்.
சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு (மாங்குளத்திலிருந்த நாயாறுவரை) அன்றைய நேரம் இராணுவத்தினரின் முன்னணிக்காப்பரன் வரிசை.
இளஞ்சிவப்பு நிறத்தால் கீறப்பட்டிருக்கும் கோடு இராணுவக் காப்பரண் வரிசைதான். ஆனால் என்னால் சரியாக உறுதிப்படுத்த முடியாத கோடு. கிட்டத்தட்ட அவ்வாறுதான் வரும்.
இக்கோடுகளுக்கு வடக்குப்புறம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி.
இப்படம் சுனாமி சம்பந்தமான தளமொன்றிலிருந்து எடுக்கப்பட்டு என்னால் கோடுகள் கீறித் தரவேற்றப்பட்டது.
அனாமதேய அன்பரொருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்படம் சேர்க்கப்பட்டது.
இப்பதிவு சமரைப்பற்றிச் சொல்வதன்று. எனவே அதற்குள் அதிகம் செல்லவில்லை.
இவைபற்றி முன்பு எழுதிய சில பதிவுகள்:
ஓயாத அலைகள் மூன்று
வென்ற சமரின் எட்டாம் ஆண்டு நிறைவு.

Labels: , , , ,


Comments:
நல்ல பதிவு
//வன்னியும் புலிகளும் இத்தோடு முடிந்தார்களென்று எதிரி நினைத்திருந்த வேளையில் சாதுரியமாகத் தொடக்கப்பட்ட மக்கள் பயிற்சி ஈழப்போராட்டத்தில் முக்கிய மைல்கல். சண்டையேதுமின்றி, பயிற்சி கொடுத்ததன் மூலமே பெரியதொரு அழிவிலிருந்து ஈழப்போராட்டம் காப்பாற்றப்பட்டது.//

இக்கருத்தை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிங்களப் படைநிலைகள் அளவுக்கு மீறி வீங்கியிருந்தன.பலத்த அடிகளையும் தாங்கிக் கொண்டுதான் அரசியற் காரணங்களுக்காக அவர்கள் தற்கொலைக்கு ஒப்பான நகர்வுகளை செய்திருந்தார்கள். தாங்களாகவே புலிகளுக்கு நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

புதுக்குடியிப்பு, மல்லாவி மக்களை முற்றாக சிங்கள இராணுவம் கைப்பற்றியிருக்கக்கூடியமாதிரி வன்னியின் புவியியல் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.

மக்களின் துணைப்படை மிக உதவியாயிருந்தது என்பது உண்மைதான்.

இப்பதிவில் வன்னி வரைபடத்தினை இணைத்திருந்தால் இடங்களைப்பற்றி பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் வாசிக்க இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே.
உங்கள் கருத்துப்படி உடனடியாக ஒரு படம் தயார்பண்ணி இட்டுள்ளேன்.
உங்கள் கருத்துக்கு பின்பு ஆறுதலாக மறுமொழிகிறேன்.
 
அன்பின் நண்பரே,
ஒட்டுசுட்டானை இராணுவம் கைப்பற்றியது, 05.12.1998. ஓயாத அலைகள் -3 ஒட்டுசுட்டானைத் தாக்கியது 01.11.1999. பதினொரு மாதங்களாக இராணுவம் ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கியோ, முள்ளியவளை நோக்கியோ முன்னேறவில்லை, முன்னேற முயற்சிக்கவுமில்லை. தொடக்கத்தில் புதுக்குடியிருப்போ முள்ளியவளையோ சிங்களப்படைக்கு இலக்கில்லை என்பது உண்மை. அந்நேரத்தில் பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்துக்குப் பாதையமைப்பதே அவர்களின் நோக்கம். அதற்கான சண்டைகள் பள்ளமடுப்பகுதியில் மூர்க்கமாக நடந்து வந்தன. ஆனால் 1999 இன் நடுப்பகுதியில் பூநகரிநோக்கிய முன்னேற்ற முயற்சியும் கைகூடாதென்று தெரிந்துவிட்டது. முன்னேற்ற முயற்சிகளையும் அரசபடை கைவிட்டுவிட்டது.

அதன்பின்னான காலம்தான் நான் குறிப்பிட்ட காலம். யாழ்ப்பாணத்துக்கான பாதையமைப்பது இப்போதைக்குச் சரிவராது என்பது நன்கு தெரிந்த நிலையில்தான் நான் குறிப்பிட்ட "மக்களைப் பிடிக்கும்" திட்டம் போடப்பட்டது. அதற்கு முந்திய முன்னேற்றங்கள், ஏதாவதொரு குறிப்பிட்ட பகுதியில்தான் என்பது அறிந்தவிடயம். எந்தப் பகுதியில் எதிரி முன்னேற்ற ஆயத்தங்களைச் செய்கிறானென்று முன்னமே அறிந்துதான் புலிகள் முழுத்தயாரிப்போடு அதை எதிர்கொண்டார்கள்.

ஆனால் இப்போதோ, இராணுவத்துக்குப் பல இலக்குகள். எந்த இடத்தை நோக்கியும் முன்னேறலாம். ஆனாலும்
கிட்டத்தட்ட நாலு மாதங்களாக எந்த முன்னேற்ற முயற்சியுமின்றி இராணுவம் முடங்கிக்கிடந்ததுதான் உண்மை.

வோட்டர் செட் 1, 2 என்ற நடவடிக்கைகளில் இராணுவம் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றியது. அனால் உடல்களையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு உடனேயே பின்வாங்கிவிட்டது. அதாவது தாக்கிக் காவலரண் தொடரைக் கைப்பற்றக்கூடியதாக இருந்த நேரத்தில்கூட, புதுக்குடியிருப்பு நோக்கி முன்னேறாமல் இருந்தது. அதுமட்டுமன்றி வேறெந்த முனையில்கூட முன்னேற்றமுயற்சி நடக்கவில்லை. ஊடுருவி வந்து நடத்தும் தாக்குதல்களே நடந்தன.

நீங்கள் ஒன்றைக் கவனித்தால் தெரியும்.
ஒட்டுசுட்டான் இராணுவத்தாற் கைப்பற்றப்படும் வரைக்கும், இராணுவத்தை மறித்து நிரந்தரக் காப்பரண்கள் புலிகளால் அமைக்கப்பட்டதில்லை. எங்கு எதிரி முன்னேறுகிறானோ அங்கே மறித்துத் தாக்குவதுதான் நடைமுறையாயிருந்து. புலிகளால் அதுதான் இயலக்கூடியது. அப்படித்தான், கரிபட்ட முறிப்புவரை எதிரி சண்டையில்லாமலே வந்தான். ஒட்டுசுட்ட்ான்கூட சும்மா நடந்துவந்து் குந்தியவன்தான். மடுப்பகுதியும் அப்படியே. அப்போது இருந்த ஆட்பலத்தோடுதான் பிறகும் இருந்தார்கள். பிறகெப்படி நூறு மைல்களுக்கும் மேலான நீளத்தைக்கொண்ட, எந்த இடத்தாலும் முன்னேறலாமென்ற நிலையுடைய காப்பரண் வரிசையை புலிகளால் எதிர்கொண்டிருக்க முடியும்?

சந்தேகமில்லாமல், புதுக்குடியிருப்பு நோக்கிய முன்னேற்ற முயற்சி நடந்திருந்தால் கடுமையான சண்டை மூண்டிருக்கும். எப்படியும் முன்னேற விடுவதில்லையென்றுதான் புலிகள் போரிட்டிருப்பர். ஆனால் அது வேறோர் இடத்தில் இலகுவான முன்னேற்றத்தை இராணுவத்துக்குக் கொடுத்திருக்கும். புதுக்குடியிருப்பைக் காப்பாற்றுவது கூட எவ்வளவு காலத்துக்கு என்றும் பார்க்கவேண்டும். ஏனென்றால் அவ்வளவுக்குக் கிட்டவாக எதிரியிருந்தான்.
 
காடுகளிற் பரந்திருந்தது, அப்பகுதிகளைக் கைப்பற்றும்போது புலிகளுக்குச் சாதகமாயிருந்தது என்பது உண்மை. ஆனால் அப்படிக் கைப்பற்றப்படும்வரை, அப்பரம்பல் புலிகளுக்குப் பாதகமாகவே இருந்தது.

மக்களோடு இடங்கள் பிடிபடுவதற்குப் புவியியற்சூழலால் என்ன தடையென்று புரியவில்லை. அப்படி மக்களோடுதான் பிடிப்பதென்று இராணுவம் முடிவெடுத்தால் அதைத் தவிர்ப்பது சிரமம். புதுக்குடியிருப்பிலிருந்து தப்பியோட, புதுக்குடியிருப்பு -பரந்தன் வீதியை விட்டால் வேறு நாதியில்லை.
மக்களைப் பிடிக்க வேண்டுமென்று முடிவெடுத்தால், இரகசிய நகர்வில் அவ்வீதியை இராணுவம் தடுப்பதையும் தவிர்த்திருக்க முடியாது.
இதில் புவியியல் யாருக்கும் சாதகம்?
மல்லாவியென்றாலும் ஒப்பீட்டளவில் பரவாயில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]