Thursday, April 07, 2005

வெலிக்கடை முகட்டிலிருந்து (கவிதை)

வெலிக்கடை முகட்டிலிருந்து வெள்ளை உலகத்திற்கு

நாடித் துடிப்புக்களின் விகிதம்
நாளுக்கு நாள் குறைவுற்று
என்றோ ஒருநாள்
முற்றாய்
முடங்குவது உறுதி.


வலிகளினால் அலறியலறி
வாய் உமிழ் நீரற்று
கண்ணர்ப் பெருக்கோடி
அதுவும் வற்றும்.
எனினும்
முடியாதது வதைகள்.

வதைகள்-
நாளிகை,
நாட்களெனக் கடந்து
விடாப்பிடியாயும்,
மாறா வினாக்களோடும்,
விசித்திரமாகவும்,
வித்தியாசமாகவும் தொடரும்.

காரணமற்ற கைதுக்குப் பின்னரான
காலப் பதிவுகளில்…
கலைந்து போன என் கூடு
கருகிப்போன உறவுகள்
கல்லாகிப்போன மனது.
இது ஞாபகமற்ற வருடத்து
நான்காவது தவணை நாள்.

நம்பிக்கையற்று,
நான்கு நபர்களுடன் பிணைக்கப்பட்டு
நான் போகிறேன்.

வெளியிலே...
வெலிக்கடைக் கூரையேறிக்
குரல் கொடுக்கிறான் ஒருவன்.

வெள்ளை உலகமே…
வெந்து போன இந்த உள்ளத்தையும்
வெளிறிய உடலையும்
ஒரு தடவை பாருங்கள்.

நான் மதிக்கப்படவில்லை.
நான்கு சுவருக்குள் இன்றும்
மிதிக்கப்படுகிறேன்.
ஏனெனில்,
நான் ஒரு தமிழன்.
----------------------------------------------------------------

நண்பன் நா.கானகன் எழுதிய கவிதையொன்று வெள்ளிநாதத்தில் கண்டேன். நண்பனின் கவிதையை இங்கே தந்துள்ளேன்.
நன்றி வெள்ளி நாதம்.

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: Vaa.Manikandan

நல்ல படைப்பு.இதனை போன்ற கவிதையினை படிக்கும் போது பாராட்ட தோன்றுகிறது.

இது இலங்கை யில் மட்டும் இல்லை.எல்லா இடத்திலும் தமிழனுக்கு இது தான் நிலை.

15.36 8.4.2005
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]