Wednesday, March 22, 2006

கப்டன் வாமகாந்தின் கவிதைகள் - 1.

"கப்டன் வாமகாந்த்" என்ற தென்தமிழீழப் போராளிக் கலைஞனின் கவிதைகள் "வீழுமுன் சில வரிகள்" என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. காலொன்றைச் சமர்க்களத்தில் இழந்தாலும் அயராது பணிசெய்த வீரன். வன்னியிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி சிலகாலமே ஆன நிலையில் மட்டக்களப்பில் பண்ணையொன்றில் தோழர்களுடன் இருந்போது எதிரிகளால் கொல்லப்பட்டவர்.
**********************************
வீழுமுன் சிலவரி..

என் கால்கள் வலியன.
நான்
வாழ்வையிழக்கலாம்.
என் பாதம் பதித்த சுவடுகள்
இந்த மண்ணில் நிலைக்கும்.

நாளைய தூண்களில்
நல்வழிகாட்டலாய்....
என் பாதம் பதித்த சுவடுகள்
தேசத்தின் நிலையாக
தீ சுமந்து நிற்கும்
புதியவேதமாய்.
புழுதி சுமந்த காற்றில்
மூச்சுக் கலந்துபோக
வலிய என் பாதங்களாக
முளைத்த இனமொன்று
முட்டி மோதியெழுந்து
தடையாக எழும்
கரங்களைத் தகர்க்கும்.
***
வாமகாந்தன், சமர்க்களமொன்றில் தனது காலை இழந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
****************

மனிதப்புதையல்கள்

அகழ்ந்தெடுக்கப்பட்டதாய்
செய்திகள் வரும்.
இவள்
என்றும்போலவே
கதறிப் புலம்புவாள்.
ஒட்டிய வயிறு கொண்ட
குழந்தைகள் தடுமாறும்.

நகர்க்கிணற்றில்,
தெருப்புதரில்,
மலக்குழியிலென
மனிதக் கூடுகள்
மீளும் போதெல்லாம்
இவள் ஓடுவாள்.

அடையாளம் இருக்காது
அவளவன் தானென
இனங்காடட
எதைக் காண்பிப்பாள்?
நாளையும்
இதயத்தில் இடியிறங்க
செய்திகள் வரும்.
அதிலும் இவள் துணைவன்
இல்லாதிருக்கலாம்.
********************
இதை வாசித்தபோது, கிளிநொச்சி நகரம் புலிகளால் மீட்கப்பட்டபின் நாளாந்தம் அங்கிங்கென்று கண்டுபிடிக்கப்படும் மனித எலும்புக்கூடுகளை அடையாளம் காணவெனக் காத்திருந்தவர்களைத்தான் ஞாபகம் வந்தது. நூற்றுக்குமதிகமான பொதுமக்கள் கிளிநொச்சி இராணுவத்தினரால் காணாமற்போகச் செய்யப்பட்டரென்பதும் அவர்களிற் பெருமளவானோரின் எலும்புக்கூடும் பின் மலசல கூடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டனவென்பதும் அனுபவங்கள்.


Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: Hartson

இனிது ஏன் என்பார்க்கு அல்லா விளக்கு

21.49 18.4.2006
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]