Wednesday, February 16, 2005

அப்பா துவக்குச் செய்வார்...

வணக்கம்!
இப்போது நான் எழுதப்போவது எனக்கு ஏற்பட்ட அனுபவமும் அதுசார்ந்த சிந்தனைகளும். (அனுபவம், சிந்தனை என்றவுடன் ஏதும் முக்கியமாகவோ பயன்பாடானதாகவோ இருக்குமென்று எண்ணி விட்டால் அதற்கு நான் பொறுப்பல்லன்)

ஒருக்கா புதுக்குடியிருப்பில (இது வன்னியில் இருக்கும் ஒரு பிரதேசம்) எங்கட வீட்டில படம் ஓடினது. எங்கட சனம் படமோடுறது எண்டாத் தெரியுந்தானே எப்பிடியெண்டு. நாலு படம் ஒரே இரவில ஓடும். ஏன் பகலில ஓடலாந்தானே எண்டு நானும் யோசிச்சிருக்கிறன். ஆனா ஏன் அப்பிடி ஓடுறேல எண்டு எனக்கு இதுவர விளங்கேல. இருட்டில படம் பாக்கிறதெண்டது அப்பிடி ஊறிப்போச்சு. அனேகமா படம் முடியேக்க விடிஞ்சிடும். அடிபாடுகள் வந்தா எழுப்பி விடு எண்டுவிட்டு படுக்கிற பெடிபெட்டையள் (பெட்டையள் எண்டதால ஆருக்கும் கோவம் வருதோ?) பிறகு எழும்பிறதேயில்ல. பாட்டுக்காட்சியள் பாக்கிற கோஸ்டியள் பாடு பரிதாபம். அனேகமான படங்கள் பாட்டுக்காட்சிகள் இல்லாமல்தான் இருக்கும். ஒரு வீட்ட படமெண்டா கிட்டத்தட்ட அந்தக் குறிச்சியில இருக்கிற எல்லாரும் பாக்க வந்திருப்பினம்.

சரி, விசயத்துக்கு வாறன். அண்டைக்கு முதல்படமா சேரனின் "தேசியகீதம்" படம் போட்டாங்கள். (அதில ரம்பா ஆடுற ஆட்டம் வெட்டுப்படேல) அதில ஒரு கட்டத்தில முரளியும் அவற்ற சகாக்களும் முதல் மந்திரிய கடத்திறதுக்குப் போவினம். அப்ப முதல் மந்திரியின்ர பாதுகாப்புக்கு நிப்பினமே, கறுப்புப் பூனையளெண்டு அவயள சொல்லுறது, அவயள் வச்சிருக்கிற ஆயுதங்களப் பாத்த எங்கட வட்டனொண்டு சொல்லிச்சு “ஐ… எங்கட அப்பா இத விட நல்ல வடிவா துவக்குச் செய்வார்.” (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பு வந்திட்டுது)

அதுக்குப்பிறகுதான் நானும் அந்தக் காட்சிய உத்துப்பாத்தனான். அவனின் நையாண்டி புரிந்தது. பார்வைக்கு துவக்குப் போல் (கொமிக்ஸ் கதைகளில் வருவதைப்போல) ஏதோவொண்டை வச்சிருந்தீச்சினம். நிச்சயமாய் நாங்கள் பார்த்த எந்த ஆயுதங்களுக்கும் கிட்டவாகக் கூட அவை வரேல. (கிட்டத்தட்ட பாவனையிலுள்ள சிறுரக ஆயுதங்கள் அனைத்தையும் பார்த்து விட்ட எங்களுக்கு அது வேடிக்கையாகவே இருந்தது.) ஆகக்குறைந்தது ஆங்கிலப்படங்களைப் பார்த்தாவது ஏதாவது செய்திருக்கலாம். உத ஏன் பாக்கிறியள்? கதயப் பாருங்கோவன் எண்டு சொல்லிற ஆக்களும் இருக்கின தான். (“காசும் குடுத்துப் பாக்கிறேல இதுக்க நக்கல் வேறயோ” எண்டு என்னக் கேட்ட ஆக்களும் இருக்கினம்) எண்டாலும் ஒரு ஆதங்கம் தான். எங்கட ஆக்கள் உப்பிடியே குண்டுச்சட்டிக்குள்ள குதிர ஓட்டிக்கொண்டு இருக்கிறது எனக்கு பிடிக்கேல எண்டதத் தான் சொல்ல வாறன்.

சரி திரும்ப வாறன். எங்கட அப்பா நல்லா துவக்குச் செய்வார் எண்டு அந்தப் பெடியன் சொன்னது சரிதான். அவன்ர அப்பா ஒரு தச்சுத் தொழிலாளி. வன்னியில 1999 இல எல்லப்பட (எல்லைப்படை) பயிற்சி எல்லாருக்கும் குடுத்தது தெரியும் தானே. அறுபது வயது கிழவன் கிழவி கூட அந்தப்பயிற்சி எடுத்தவை. (கிழவன் கிழவியெல்லாம் விரும்பித்தான் எடுத்தவ) அப்ப முதலில வெறும் தடி (இத பொல்லு எண்டும் சொல்லிறனாங்கள்.) வச்சிருந்து அந்தப் பயிற்சி நடக்கும். பிறகு கொஞ்ச நாளிலயே ரெண்டொரு பேர் அந்தப் பொல்லுகள சீவி துவக்கு மாதிரி செய்து கொண்டு வரத் துவங்கீச்சினம். அதோட துவங்கினது தான் பாருங்கோ, அழகழகான துவக்குகள் நிறமெல்லாம் அடிச்சு புதுசு புதுசா எல்லாம் வரத்துவங்கீச்சு. அம்பது யாரிலயிருந்து பாத்தா வித்தியாசம் தெரியாது கண்டியளோ. பிறகு இது விற்பனைக்கெல்லாம் வரத்துவங்கி களகட்டுற நேரத்தில சண்டையும் மும்முரமானதோட பயிற்சியும் நிண்டுபோச்சு.

எங்கட சனத்துக்கு (நான் வன்னியில இருந்தாக்கள சொல்லுறன். மற்றாக்களுக்கு இப்பிடி சந்தர்ப்பம் கிடைக்கேல) ஆயுத விசயத்தில புருடா விடுறது கஸ்டம் தான். அதுகள் எப்பிடி இயங்குது, அத வச்சு என்ன செய்யலாம் எண்ட விவரங்களெல்லாம் நிறையவே தெரியுமெண்டு நினைக்கிறன். எறிஞ்ச கைக்குண்ட கச் பிடிச்சு திருப்ப எறிஞ்சு எதிரியள கொல்லுறப் பாத்துச் சிரிக்கிற ஆக்கள் ஒரு கைக்குண்டாலேயே பெரிய கட்டிடங்களத் தரமட்டமாக்கிறதப் பாத்தும் சிரிப்பினம்.
போன வருசம் கொழும்பில ஒரு தமிழ்ப்படம் பாத்தனான். ரஜனி நடிச்ச படம். அதின்ர கடைசிக் காட்சிதான் பாத்தனான். ரகுவரனும் ரஜனியும் சண்ட பிடிக்கிற காட்சி. (மனிதன் எண்டு நினக்கிறன்) அதில ரஜனி துவக்கொண்டு வச்சு சுடுவார். அவர் எப்பிடி சுடுகிறார் எண்டா துப்பாக்கியின் விசைவில்லுக்குள் (trigger) கைவைத்துச் சுட மாட்டார். மாறாக குண்டு ஏற்றும் தாழ்பாளை (cocking handle) இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருப்பார். குண்டு சரமாரியாகப் பாயும். இதையெல்லாம் பாக்கிற சின்னப்பிள்ளையள் கூட சிரிக்கும்.

அத விடுங்கோ சினிமா எண்டாலே புருடா விடுறது தான் எண்ட நிலம வந்திட்டுதெல்லே. இதுகள கதச்சு என்ன பலன்.
இதன் மூலம் நான் சொல்ல வரும் நீதி: ஒண்டுமில்ல.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கவனமாயிருக்கோணும். என்ர பதிவ உங்கட பிள்ளையள் பாக்காம இருக்கிறத உறுதிப்படுத்திப் போடுங்கோ.
இல்லையெண்டா உவயள் உங்க ஆயுதம் தூக்கிப் போடுவினம். பாட்டுக்கள் காரணமாயிருக்கிற மாதிரி என்ர பதிவும் காரணமாயிருக்கிறத நான் விரும்பேல கண்டியளோ.

நான் எழுதிறது விளங்குதே? வசன நடை விளங்கேல எண்டாச் சொல்லுங்கோ மாத்தி எழுதிறன். இதுகள் அப்பப்ப எனக்கு நேர்ந்த அனுபவங்கள் தான். அண்மைய காலம் வரை வன்னியிலே இருந்ததால் சொல்வதற்கு ஏராளமுண்டு. (இதயெல்லாம் கேக்க உங்களுக்கென்ன தலையெழுத்தா என்ன)
--வன்னியன்--(ஈழநாதன்!- நாச்சியார் இன்னும் கிடைக்கேல)

Labels:


Comments:
எழுதிக்கொள்வது: Dondu

இப்படித்தான் ஒரு பிரபல் ஓலிவுட் நட்சத்திரம் எந்திரத்துப்பாகிச் சுடும் காட்சியில் எசகேடாகப் பிடித்து தோள் எலும்பை முறித்துக் கொண்டு மாவுக் கட்டுப் போட்டுக் கொண்டார்.
அவர் நடித்த அப்படம் தியேட்டருக்கு வந்தது. இவரும் பார்க்கப் போனார். அவர் முந்தின வரிசையில் இரண்டு சிப்பாய்கள் உட்கார்ந்துக் கொண்டுக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். நம் நடிகர் துப்பாகிச் சுடும் காட்சி வந்தது. ஒரு சிப்பாய் சொன்னான்: "இம்மாதிரித் துப்பாகிப் பிடித்தால் தோள் எலும்புதான் முறியும்".
பின் வரிசையிலிருந்துக் கொண்டே நம் நடிகர் அச்சிப்பாயின் தோளில் தட்டி "நீங்கள் கூறுவது உண்மையே" என்றுச் சொல்லிப்போட்டு இடத்தைக் காலி செய்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

20.32 16.2.2005
 
இப்படித்தான் ஒரு பிரபல் ஓலிவுட் நட்சத்திரம் எந்திரத்துப்பாகிச் சுடும் காட்சியில் எசகேடாகப் பிடித்து தோள் எலும்பை முறித்துக் கொண்டு மாவுக் கட்டுப் போட்டுக் கொண்டார்.
அவர் நடித்த அப்படம் தியேட்டருக்கு வந்தது. இவரும் பார்க்கப் போனார். அவர் முந்தின வரிசையில் இரண்டு சிப்பாய்கள் உட்கார்ந்துக் கொண்டுக் கிண்டல் செய்துக் கொண்டிருந்தார்கள். நம் நடிகர் துப்பாகிச் சுடும் காட்சி வந்தது. ஒரு சிப்பாய் சொன்னான்: "இம்மாதிரித் துப்பாகிப் பிடித்தால் தோள் எலும்புதான் முறியும்".
பின் வரிசையிலிருந்துக் கொண்டே நம் நடிகர் அச்சிப்பாயின் தோளில் தட்டி "நீங்கள் கூறுவது உண்மையே" என்றுச் சொல்லிப்போட்டு இடத்தைக் காலி செய்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
எழுதிக்கொள்வது: -/-/பெயரிலி.

:-)

13.10 16.2.2005
 
எழுதிக்கொள்வது: -/-/பெயரிலி.

எழுதிக்கொள்வது: -/-/பெயரிலி.

:-)

13.10 16.2.2005

13.11 16.2.2005
 
Interesting :)
 
எழுதிக்கொள்வது: Eelanathan

வன்னியரே துவக்கு கதை நல்லாயிருக்கு(நான் நல்லாயிருக்குதெண்டு சொல்ல நீங்கள் நான் உங்களை ஏத்திவிட்டிட்டன் எண்டு அழ எனக்கேன் உந்த தேவையில்லாத தொளபாரம் எல்லாம்)இதியே தான் 13 வயசுப் பொடியன் துவக்குத் தூக்கிச் சண்டை பிடித்தான் என்று ரோசாவின் பதிவில் ஒருத்தர் சொல்ல நானும் விளங்கப்படுத்தினனான்.

13.5 17.2.2005
 
கோவியாதையும் ஈழநாதன். உம்மோட சும்மா ராத்திறதுக்குத் தான் (ராத்திறத விளங்கப்படுத்தோணுமோ) அப்பிடி எழுதினனான்.
 
யாழ்ப்பாணத்திலையிருந்து வந்திட்டு றாத்திறது தெரியாதெண்டு சொல்லலாமோ.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]