Thursday, June 28, 2007

மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் நினைவுநாள்

மண்டைதீவு படைத்தளத்தின்மீது விடுதலைப்புலிகள் அதிரடித்தாக்குதலொன்றை நிகழ்த்தி சிறிலங்கா படைத்தரப்புக்குப் பாரிய ஆள் - ஆயுத இழப்பை ஏற்படுத்தியதன் பன்னிரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995 ஆம் ஆண்டு யூன் மாதம் இருபத்தியெட்டாம்நாள் அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

மண்டைதீவு என்பது யாழ்குடாநாட்டுக்கு மிக அண்மையிலிருக்கும் ஒரு தீவுப்பகுதி. அல்லைப்பிட்டியுட்பட்ட பெருந்தீவுப்பகுதியிடமிருந்து சிறுநீர்ப்பகுதியொன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கி இருமாதங்களே ஆகியிருந்தன. யாழ். குடாநாடு மீது மிகப்பெரும் படையெடுப்பொன்றை நிகழ்த்த சிறிலங்கா அரசு தயார்ப்படுத்திக்கொண்டிருந்த நேரமது. இந்நிலையில்தான் குடாநாட்டின் நகர்ப்பகுதிக்கு மிகமிக அண்மையாக இருக்கும் - குடாநாடு மீதான படையெடுப்புக்கு முக்கியமான தளமாக இயங்கப்போகும் மண்டைதீவுக் கூட்டுப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த புலிகள் தீர்மானித்தனர்.

மிகநுட்பமான வேவுத்தரவுகளுடன் திட்டம் வகுக்கப்பட்டு நல்ல தயார்ப்படுத்தலுடன் புலியணிகள் தாக்குதலைத் தொடுத்தன. பூநகரி படைத்தளம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' நடவடிக்கையின்பின் நிகழ்த்தப்பட்ட பெருமெடுப்பிலான ஈருடகத் தாக்குதல் முயற்சி இதுவாகும். அதிகாலை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சிங்கள இராணுவம் நிலைகுலைந்து ஓடியது. கூட்டுப்படைத்தளத்தை முற்றாகக் கட்டுப்பாட்டுள் கொண்டுவந்த புலிகள், கைப்பற்றிய ஆயுத தளபாடங்களுடன் அதிகாலையில் தளத்தைவிட்டுப் பின்வாங்கினர்.

இவ்வதிரடித்தாக்குதலில் பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குடாநாடு மீதான ஆக்கிரமிப்புக்காக வைக்கப்பட்டிருந்த நடுத்தர ஆயுதக் களஞ்சியமொன்று புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 125 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். அதேநேரம் புலிகள் தரப்பில் லெப்.கேணல் சூட்டி உட்பட பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.
திட்டமிட்ட வலிந்த முகாம் தகர்ப்புக்களைப் பொறுத்தவரை இருதரப்புக்குமிடையிலான இழப்பு விகிதம் (கிட்டத்தட்ட பத்துமடங்கு) மிக அதிகளவாக இருக்கும் தாக்குதற்சம்பவம் இதுதான்.
இதற்கு அடுத்தநிலையில் மண்கிண்டிமலை மீதான 'இதயபூமி' தாக்குதல் உள்ளது.

மண்டைதீவு படைத்தளம் மீதான தாக்குதல், அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிறந்தநாளை அண்மித்து நடத்தப்பட்டிருந்தது. இதுவும் சிறிலங்கா அரசியலில் அப்போது குறிப்பிட்டுப் பேசப்பட்டது.

************************
தற்போதும், மண்டைதீவும் அது உள்ளிட்ட தீவுப்பகுதியும் யாழ்.குடாநாடு மீதான படையெடுப்புக்கும் பாதுகாப்புக்கும் முக்கியதளமாகவே உள்ளது.

Labels: , ,


Comments:
மேலே வந்திருந்த சில விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள் எவையும் அழிக்கப்படவில்லை.
இவ்வளவு நாளும் நீக்கப்பட்டிருந்த மட்டுறுத்தலை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
 
நல்லதொரு பதிவு வன்னியன்.
ஈழத்தமிழரின் போராட்டத்தை ஆவணப்படுத்தும் உங்கள் முயற்சிக்கு நன்றி.
 
வன்னி,
நல்லதொரு வரலாற்றுப் பதிவு.
மிக்க நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]