Friday, March 04, 2005

கூப்பிடு தூரம்… வன்னியின் முகம் ---1

வணக்கம்!
உங்களெல்லாருக்கும் 'கூப்பிடு தூரமெண்டா' என்னெண்டு தெரிஞ்சிருக்கும். எனக்கு அதின்ர அர்த்தம் விளங்கின கதயத்தான் இப்ப நான் சொல்லப் போறன்.

யாழ்ப்பாணத்திலயிருந்து இடம்பெயர்ந்து வன்னி வந்தப்பிறகு ஓரளவு வாழ்க்கை நிலைக்க வெளிக்கிட்ட சமயம். (இதுக்கிடையில கிளிநொச்சி இடப்பெயர்வும் நடந்து முடிஞ்சிட்டுது) இந்த நேரத்திலதான் ஜெயசிக்குறு துவங்கிச்சு. (இது வன்னியை ஊடறுத்து யாழ்ப்பாணத்துக்குப் பாதை சமைப்பது எனும் நோக்கோடு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கை). துவங்கினதெண்டா சும்மாயில்ல, பெரிய ஆர்ப்பாட்டமா, இதுதான் இறுதி யுத்தம் எண்ட அளவில துவங்கீச்சினம். ஜெயசிக்குறு எண்டா ‘வெற்றி நிச்சயம்’ எண்டு கருத்தாம். சனத்துக்கும் ஒண்டு விளங்கீற்றுது. இது சாதாரண சண்டையா இருக்காது; ரெண்டு தரப்புக்கும் இது முக்கியமான பிரச்சின; முந்தி மாதிரி பெடியள் லேசில பின்வாங்க மாட்டாங்கள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதுக்கேத்த மாதிரித்தான் பரப்புரையளும் நடந்தது.

இப்பிடியே எல்லாரும் ‘ஆவலோட’ எதிர்பாத்திருந்த அதுவும் துவங்கீட்டுது. மே.13.1997 இல தாண்டிக்குளத்தில சண்ட துவங்கீற்றுது. பெடியளும் பெரிய ஆர்ப்பாட்டமா ஆயத்தமாய் நிண்டீச்சினம். மட்டக்களப்பிலயிருந்து 1000 பேர் சண்டைக்கு வந்திருக்கினம் எண்ட கதையில எங்கட சனம் கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சுதுகள். (இதுகளப்பற்றி கதைக்க வெளிக்கிட்டா நிறையக் கதைக்கலாம். நான் இப்ப விசயத்துக்கு வாறன்) சண்டை கொஞ்சம் தாண்டிக்குளம், ஓமந்தை எண்ட அளவோட இழுபட்டுக்கொண்டிருக்கேக்க எங்களுக்கொரு ஆச வந்தீச்சுது. கண்டி வீதியப் பிடிச்சு சண்டை நடக்கப் போகுது. இனி நிறைய இடங்கள் தரைமட்டமாகப் போகுது. அதுக்கிடையில ஒருக்கா எல்லா இடத்தையும் பாத்திட்டு வந்திடுவம் எண்டு ஒரு ஆச. (வாழ்க்கையில் நானெடுத்த முக்கியமான முடிவுகளில் ஒன்றாக இதை இன்றுவரை கருதுகிறேன். இல்லாவிட்டால் இக்கிராமங்களின் உண்மை வனப்பை நான் பார்க்காமலே விட்டிருப்பேன்.)

எடுத்த முடிவின்படி ரெண்டு மூண்டு பெடியளாச் சேந்து மாங்குளத்திலயிருந்து சைக்கிளில வெளிக்கிட்டாச்சு. வன்னியில பாக்கப்போனா இது தூரமேயில்ல. (யாழ்ப்பாணத்தில பத்து மைல் சைக்கிள் ஓடுறது எண்டாலே பெரிய பிரயாணமுங்கோ. ஆனா வன்னியில 70 மைல் எண்டாலும் சாதாரண தூரம் தான்.) சைக்கிளில வெளிக்கிட்ட எங்களுக்கு அதிஸ்டம் அடிச்சுது. புலிகளின் வழங்கற்பிரிவைச் சேர்ந்த வாகனமொண்டு புளியங்குளத்துக்குப் போச்சு. அதில என்ர நண்பனுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் எங்களக் கூப்பிட்டார். அதிலயே போய் பின்னேரம் அதிலயே திரும்பி வாற திட்டத்தோட வாகனத்தில ஏறியாச்சு.. அந்த வாகனத்தில புளியங்குளம் வரைக்கும் போயாச்சு. இடத்த சுத்திப்பாத்திட்டு பின்னேரம் போல திரும்ப அந்த இடத்துக்கு வந்து அதே வாகனத்தில ஏறினாச்சரி.

புளியங்குளச் சந்தி சனநடமாட்டமில்லாமல் கிடந்திது. சந்திய மையமா வச்சி பலமான காவலரண்கள அமைக்கிற வேலையளில புலியள் இருந்தீச்சினம். அந்த நேரத்தில புளியங்குளத்திலயிருந்து 6 கி.மீ வரைக்கும் ஆமி வந்திருந்தான். புளியங்குள அணைக்கட்ட (புளியங்குளம் என்று குளமொன்று உள்ளது. அதனாலேயே இப்பெயர் அவ்விடத்துக்கு வந்தது என்று நினைக்கிறேன்) பிரதானமா வச்சு பலமான காப்பரண் வேலையள பெண்போராளியள் செய்து கொண்டு இருந்தீச்சினம். நாங்கள் அப்பிடியே குளக்கட்டால நடந்து இடங்களப் பாத்துக்கொண்டு வந்தம். உண்மையிலேயே அருமையான இடங்கள். இந்த இடமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில படப்போற பாட்ட நினச்சுப் பாத்தன். (இது இந்தப்பயண உணர்வுகள் பற்றிய பதிவில்லாததால் அப்பால் தாவுகிறேன்)

மதியமளவில் குளக்கட்டால திரும்பி வந்து கொண்டிருக்கேக்க திடீரெண்டு எங்களுக்கு நல்லாப் பழகிப்போன கூவல் ஓசை. அப்பிடியே பாஞ்சு விழுந்து படுத்திட்டம். வேறென்ன ஆமியடிச்ச செல் (எறிகணை) தான். எங்களிலயிருந்து 250 மீற்றரில முதலாவது விழுந்து வெடிச்சுது. மற்றதுகள் கொஞ்சம் விலத்தி விழுந்துது. அடி நிண்ட உடன எழும்பி வெளிக்கிட்டம். முதல் செல் விழுந்த இடத்தில கொஞ்சம் பரபரப்பு தெரிஞ்சுது. அது நாங்கள் கடந்து வந்த இடம் தான். அதில கொஞ்சப் பெண்போராளியள் நிண்டு பங்கர் வெட்டிக்கொண்டு நிண்டவை. என்ன நடந்திருக்குமெண்டு ஊகிக்க முடிஞ்சுது. ஆனா அதுக்குள்ள போகேல. அப்பிடியே சந்திக்கு வந்திட்டம். பாத்தது காணும் வெளிக்கிட்டுப் போவம் எண்டு முடிவெடுத்து எங்கள ஏத்தியந்த வாகனம் நிக்கிற இடத்துக்குப் புறப்பட்டாச்சு. அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது, அந்த எறிகணையில ஒராள் வீரச்சாவு, ரெண்டு பேர் காயமெண்டு. அதோட தள்ளி விழுந்த செல்லில ரெண்டு சனமும் காயம். இவையெல்லாரையும் ஏத்திக்கொண்டு போனது நாங்கள் போக நிண்ட வாகனம் தான்.

சரி, இனியென்ன செய்யிறது? வேற ஏதாவது வழி பாக்க வேண்டியதுதான். ‘உதுவழிய நிண்டா பெடியளின்ர வாகனம் வரும். கேட்டு ஏறிப்போகலாம்’ எண்டான் நண்பன். 'ஏத்துவினம் தான். அவங்களுக்கு சிலவேள அவசரமாயிருக்கலாம், இல்லாட்டி இடமில்லாமல் மட்டுமட்டா இருக்கலாம். ஏன் உதில கிட்டவாத்தானே கனகராயன்குளம். அதுவரக்கும் நடந்து போயிட்டா அங்கால வாகனம் கிடைக்கும்' எண்டு நான் சொன்ன யோசனைக்கு மற்றவங்களும் சரியெண்டு சொன்னதால நடையக் கட்டினோம். சத்தியமாச் சொல்லிறன் எனக்கு இடம் வலம் ஒண்டும் தெரியாது. இந்த றோட்டால நேர போனா மாங்குளம் வரும் எண்டதுமட்டும்தான் தெரியும். வரேக்கயும் உள்ளயிருந்துகொண்டு பம்பலடிச்சுக்கொண்டு வந்ததால இடங்களும் தூரமும் தெரியேல. ஏதோ கெதியா வந்த மாதிரித்தான் கிடந்தது. அந்த துணிவிலயே நான்நடக்க, நான் சொன்ன துணிவில நண்பரக்ளும் நடந்தீச்சினம். சன நடமாட்டமெண்டு பெரிசா இல்ல. இடக்கிட ஆராவது தென்பட்டீச்சினம். கொஞ்ச தூரம் போனப்பிறகு அதால வந்த ஒரு ஐயாவிட்ட கேட்டம்
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”

தொடர்ந்து நடந்தம். அந்தக் கூப்பிடு தூரம் வரேல.அதால வந்த இன்னொருத்தரிட்ட கேட்டம்.
‘ஐயா! கனகராயன் குளத்துக்கு இன்னும் கனதூரம் போகோணுமே?
“இல்லத்தம்பி, உதுல கூப்பிடு தூரத்தில தான்”

ஏதோ சிக்கலிருக்கிறதா மனசுக்குப் பட்டீச்சு. எண்டாலும் நடந்தம். கொஞ்ச தூரத்தில ஒரு சந்தி தெரிஞ்சுது. அடடா கனகராயன் குளம் சந்தி வந்திட்டுது எண்டு சந்தோசப்பட்டாலும் கூட ஒரு சந்தேகம். என்ன சந்தி பெரிசா ஆள்நடமாட்டமில்லாமல் கிடக்குது? கிட்ட வந்தோடன விளங்கீற்றுது உது கனகராயன்குளச்சந்தி இல்லயெண்டு. பின்ன என்ன சந்தி? எண்டு யோசிக்கேக்கயே அதில வந்த ஒருத்தரிட்ட கேட்டுத் தெரிஞ்சு கொண்டாச்சு அதுதான் புதூர்ச்சந்தியெண்டு. (இந்த இடங்களைப் பற்றித் தெரிந்தவர்கள் சற்று யோசித்துப் பாருங்கள் எங்கள் பிரதேச அறிவைப்பற்றி) என்ன பதில் கிடைக்குமென்று தெரிஞ்சிருந்தும் அவரிட்டயும் கேட்டம் கனகராயன்குளம் எவ்வளவு தூரமெண்டு. வழமையான பதில்தான்
“உதில கூப்பிடு தூரத்திலதான்”

இதுக்கிடையில சாமானுகள் ஏத்திக்கொண்டுவந்த லாண்ட் மாஸ்ரர் ஒண்டில எங்களோட வந்த ஒருத்தன் ஏறிப்போயிட்டான். ஒருத்துனுக்கு மேல அதில ஏறேலாது எண்டது தான் நாங்கள் தொடர்ந்து நடக்கிறதுக்கு காரணம். அதுக்குப்பிறகு ஒருத்தரிட்டயும் எவ்வளவு தூரமெண்டு கேக்கவேயில்ல. நடந்து வந்து ஒருமாதிரி கனகராயன்குளச்சந்திக்கு வந்திட்டம். பிறகு ஒரு வாகனத்தில ஏறி மாங்குளம் வந்தாச்சு.

அண்டையோட இந்தக் ‘கூப்பிடு தூரத்தை” பற்றி நான் வச்சிருந்த அளவீடுகளெல்லாம் அழிஞ்சு போச்சு. (வாயால கூப்பிட்டா கேட்கக் கூடிய தூரம் எண்டு நினச்சிருந்தது என்ர பிழ தானோ?) பிறகு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு, விசுவமடு எண்டு நான் திரிஞ்ச இடங்களிலயெல்லாம் நல்ல சுவாரசியமான முறையில இந்த ‘கூப்பிடு தூரத்த’ அனுபவிச்சிருக்கிறன். அதுவும் முத்தையன் கட்டு அனுபவம் சரியான மோசம். 4 மைல் தூரத்தக் கூட கூசாமல் கூப்பிடு தூமெண்டு சொல்லுவினம்.

இண்டைக்கும் வன்னியிலயிருந்த யாழ்ப்பாண ஆக்கள் ஆரக்கேட்டாலும் உந்தக் கூப்பிடு தூரப் பம்பல் சொல்லுவினம். ஏனெண்டா எல்லாரும் என்னப்போல இந்த விசயத்தில அடிபட்டிருப்பினம். ஆனா சமீபகாலமா இந்த அளிவட பாவிக்கிறது குறஞ்சு போச்சுது போல கிடக்கு. யாழ்பபாணத்தார் நக்கலடிச்சுத்தான் குறைஞ்சு போச்சோ தெரியேல. வன்னியிலயே இருந்த ஆக்களுக்கு அது பெரிசாத் தெரியாது. ஆனாப் பாருங்கோ அந்த ‘உக்குட்டி’ இடத்தில இருந்து வந்தாக்களுக்கு வன்னியின்ர விசாலம் பிடிபட நிறையக் காலமெடுத்திச்சு. அடுத்த முறை இன்னொரு அனுபவத்தச் சொல்லுறன்.

எதையோ சொல்ல வந்து வேற எதையோ சொன்ன மாதிரியும் தெரியுது. என்ன செய்யிறது? என்னத்த சொல்ல வெளிக்கிட்டாலும் போர் எண்ட ஒண்டு இல்லாம சொல்லேலாது. என்னால இயன்ற வரைக்கும் அதுகளத் தவிர்க்கவே பாக்கிறேன். உதாரணமாக இந்தப் பதிவில நான் புளியங்குளத்தில பாத்த இடங்களயும் ஆக்களையும் சம்பவங்களையும் சொல்லவேயில்ல.


குறிப்பு: புளியங்குளம் யாருக்கும் தெரியாத ஒரு இடமாக இருந்தது. பின் ஜெயசிக்குறு காலத்தில் ஒவ்வொரு நாளும் அனைத்துச் சர்வதேச செய்தி நிறுவனங்களிலும் இடம்பெற்ற ஓர் ஊர். (இவ்வூரைக் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரச வானொலிச் செய்திகள் அடிக்கொரு தரம் சொல்லிக் கொள்ளும். எப்படி போனவாரம் கைப்பற்றின இடத்தை அடுத்த வாரமும் கைப்பற்றலாம் என்று யோசிக்கக் கூட திராணியற்றவர்களாகவே மக்களை அது கருதியது.) அவ்வளவு தூரம் பிரபல்யமானது. புலிகளின் புரட்சிக்குளம் எனச் ‘செல்லப்’ பெயரிடப்பட்ட அந்த இடத்தை சிறிலங்கா இராணுவத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பலிகொடுத்தும் மாதக்கணக்கில் முயன்றும் (ஏறத்தாள 4 மாதம்) கைப்பற்ற முடியவில்லை. புளியங்குளச் சமரின் 100 ஆவது நாள் வெற்றிவிழா கூட புலிகளாலும் மக்களாலும் கொண்டாடப்பட்டது.

Labels: ,


Comments:
எழுதிக்கொள்வது: சயந்தன்

ம்.. ஐயா உடையார் கட்டு சந்தை எங்கையிருக்கு என்று கேட்டால்.. உதிலை தான் பதில் வரும். ஆனால் சந்தை வராது--- சயந்தன்

3.18 5.3.2005
 
ம்.. கூப்பிடு தூரத்துக்கு இப்படியொரு வரைவிலக்கணமோ...!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]