Sunday, April 16, 2006

பூராய நட்சத்திரம்.

உப்பிடி நட்சத்திரமேதும் இருக்குதோ எண்டோ நான் எழுத்துப்பிழை விட்டிட்டன் எண்டோ யோசிக்க வேண்டாம்.

தமிழ்மணத்திரட்டியில ஆளாளுக்குச் செய்யிற நட்சத்திர விளையாட்டைத்தான் நான் இந்தக் கிழமை செய்யப்போறன்.

சிலதுகள் திடீர்திடீரெண்டு வந்து அமையும். இதுவும் அப்பிடித்தான்.
இந்த முறை என்னட்ட அதிகம் எதிர்பார்க்காதையுங்கோ. நாளொரு பதிவு கட்டாயம் போடுவன். ஆனா அதுகள் எத்தினை பேருக்கு ரசிக்கத் தக்கதா இருக்கு, எத்தனை பேருக்குப் பிடிக்காமலிருக்கு, எத்தினை பேருக்கு எரிச்சலைத் தருது எண்டும் பாக்கவேணும்.

இந்த வலைப்பதிவு தொடங்கின காலத்தில அடிக்கடி எழுதினனான். இடையில குரற்பதிவுகள்கூடப் போட்டுக் கலக்கினனான். பிறகு ஏனோ தொய்வு வந்திட்டுது. [எத்தின சோலியத்தான் பாக்கிறது?;-( ] கிட்டத்தட்ட ஒண்டரை வருடங்களில வெறும் 77 பதிவுகள் மட்டும்தான் இந்த வலைப்பக்கத்தில எழுதியிருக்கிறன். எண்டாலும் துவங்கின நோக்கமோ திட்டமோ சரியாவரேல எண்டது மட்டும் உறுதி.
இனி உங்கள இந்தக் கிழமை நட்சத்திரப் பதிவுகளுக்கால சந்திக்கிறன்.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***

சரி. இந்த வலைப்பக்கத்தின்ர பேரைப்பற்றி ஒரு விளக்கம் தந்துவிடுறன். அதுக்கு முதல் 'வன்னியன்' எண்டது புனைபெயர்தான் எண்டதையும் சொல்லிக்கொள்ளிறன். கனபேருக்குத் தெரியுமெண்டாலும் (முந்தி என்ர ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திரட்டியில திரட்டப்படேக்க, "புனைபெயர்தான்" எண்டதும் சேத்துத்தான் என்ர பேர் வரும்) புதுசா வந்தவைக்குத் தெரியாமலிருக்கலாம். பலர் தெரிஞ்சும் தெரியாதமாதிரி நசுக்கிடாமலும் இருக்கலாம். (நான் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறமாதிரி. ஆனாலும் பாருங்கோ அதில ஒரு 'இது' இருக்கு.)

"பூராயம்" எண்டது ஈழத்து வழக்குச்சொல்லாகத் தான் நான் நினைச்சு வச்சிருந்தன். ஆனா வலைப்பதிய வந்தபிறகுதான் உந்தச் சொல் கனபேருக்குத் (யாழ்ப்பாணத்தாருக்குக் கூட) தெரியாது எண்டது விளங்கீச்சு. எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் சர்வசாதாரணமாக் கதைக்கப்படுற சொல். பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது. இப்ப உந்த "பூராயம்" எண்ட சொல் அருகிக்கொண்டு போயிருக்குமெண்டு தான் நினைக்கிறன். வன்னியில 1998 இல இதழியல் சம்பந்தமா ஒரு பட்டறை நடந்திச்சு. முறையான பாடத்திட்டதோட குறுகிய காலத்துக்குள்ள ஒரு பாடநெறி முடிச்சவை. (அதை முடிச்சவையில ஒருபகுதியினர் போராளிகள்.) அதிலயிருந்து வெளிவந்த ஆக்கள் ஓர் இதழ் நடத்தினவை. அதுக்குப் பேர் "பூராயம்" எண்ட தகவலையும் இங்க பதிஞ்சு வைக்கிறன்.

சரி, இனி பூராயமெண்டா என்ன எண்டு பாப்பம்.
விடுப்புக்கள் அல்லது விண்ணாணங்கள் எண்டு சொல்லப்படுறதுகளுக்கு இணையா இதைச் சொல்லலாம். தமிழகத்தார்க்கு விளங்கிறமாதிரிப் பாத்தா உந்த 'கிசுகிசு' எண்டதுக்கு இணையாகவும் வரும். மற்றவர்களைப் பற்றியே கதைப்பது, மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கதைப்பது, தேவையில்லாததுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து அலட்டுவது எண்டு தொடங்கி இல்லாத பொல்லாத கதைகட்டுறதுகள் வரைகூட இதுகள் போகும். இதுகளெல்லாம் சேந்து பூராயம் எண்டு சொல்லலாம்.
"பூராயம்" விளங்கீச்சோ இல்லையோ அதை ஏன் "பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது" எண்டு முதற்பந்தியில சொன்னனான் எண்டு கட்டாயம் விளங்கியிருக்கும்.;-)

எங்கட ஊர்வழக்கங்களில உந்தப் பூராயப் பண்பு மேலோங்கியிருக்கும். கிராமப்பக்கங்களில ஆரேன் ஒரு புதுமுகத்தை ஒழுங்கைக்குள்ள பாத்தால் அது வேலிவழியால விடுகளுக்குப் பரவீடும். அந்த முகம் எதுக்கு வந்தது, ஆற்றை வீட்ட வந்தது, அவர் ஆர் எண்டெல்லாம் ஆராய்ஞ்சு முடிவுஎடுக்காமல் எங்கட சனம் சாப்பிடாதுகள். எங்கட ஊர்ப்பக்கம் சந்ததைக்குப் போறதெல்லாம் பொம்பிளையள்தான். காய்கறிச் சந்தைக்கோ மீன்சந்தைக்கோ போனா அங்கயொரு அரைமணித்தியாலச் சமாவுக்குப்பிறகுதான் வீடுவருவினம். எங்கட விட்டுக்குப் பக்கதிலயிருக்கிற கிழவி சந்தையால நேர எங்கடவீட்ட வருவா. வரேக்கயே "எடி றோசுமலர்!" எண்டு கூப்பிட்டுக்கொண்டே அதோட ஏதாவதொரு புதினத்தைச் சொல்லிக்கொண்டே வருவா. "இந்தா பொடி, இதக்கொண்டே மோளுட்டக் குடு" எண்டு தாற பைய நான்தான் வேண்டிக்கொண்டே அவையின்ர வீட்டில குடுக்கிறது. மனுசியத் திட்டிக்கொண்டே ஓட்டமாப்போய் ஓட்டமா வருவன். வேறயென்னத்துக்கு? அம்மம்மாவோட மனுசி கதைக்கிறதுகளக் கேக்கத்தான்.

பொழுதுபட செவமாலை சொல்லவெண்டு ஒவ்வொரு குறிச்சீக்கையும் ஒவ்வொரு இடத்தில சனம்கூடும். எங்கட வீட்டுக்குப் பக்கத்திலயிருக்கிற புளியமரத்தடியிலதான் ஒரு மாதா சுருவம் வச்சு செவமாலை நடக்கும். எனக்கு அங்கபோக கொள்ளை விருப்பம். செவம் சொல்லுறதுக்கில்லை. அதுக்குமுதல் ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசம் நடக்கிற கூத்துக்களைக் கேக்கத்தான். ஆராற்றை பெடிபெட்டையள் ஆரோட சுத்துதுகள் எண்டது தொடக்கம் நிறைய விசயங்கள் அங்க அலசப்படும். அதவிட மாவிடிக்க வாற மனுசியோட நடக்கிற கதையள், செத்தவீடு, கலியாண வீடெண்டா கும்பலா இருந்து நடக்கிற கதையள் எண்டு எப்பவுமே எனக்கு இந்தப் பூராயப் பேச்சுக்கள் நல்லாப்பிடிக்கும்.

நான்கூட உந்தப் பூராயம் எண்ட பேர ஒருத்தரும் கண்டுகொள்ளிறாங்களில்லையே எண்டு கவலைப்பட்ட காலமும் இருந்திச்சு. ஆனா காருண்யன் கொன்பூசியஸ் எண்டு ஒருத்தர், கவிதைகளெல்லாம் நிறைய எழுதுவார், வலைப்பதிவாளராகவும் இருந்தவர், அவர் உந்தப் பேர் சம்பந்தமான ஆதங்கத்தைச் சொல்லியிருந்ததை அவரின்ர பதிவில பாத்தன். அவரும் பூராயமெண்டு தன்ர ஒரு வலைப்பதிவுக்குப் பேர் வைக்க விரும்பினதாயும், நான் அதைப்பாவிச்ச படியா 'விடுப்புக்களும் விண்ணாணங்களும்' எண்டு அதுக்குப் பேர் வச்சதாவும் சொல்லியிருந்தார்.
அடடா! ஒருத்தராவது பூராயத்தைப் புரிஞ்சிருக்கிறார் எண்டு பேச்சந்தோசம்.

இன்னொரு குறிப்பு: இது பூராயத்தையொட்டியதாக வரும் சில வினைச்சொற்கள் பற்றியது.
ஈழத்தில 'பறையிறது' எண்டும் ஒரு சொல்வழக்கிருக்கு. 'கதைக்கிறது' எண்டதுக்கு இணையாச் சொல்லிறது. கதைக்கிறது எண்டது 'பேசுறது' எண்ட கருத்தில வருது. ஆனா எங்கட பேச்சு வழக்கில இந்தச் சொற்களுக்கிடையில பொருள்ரீதியில வித்தியாசமிருக்கு.

'பேசுறது' எண்டா ஒருத்தருக்குத் திட்டிறது எண்டும் எங்கட பேச்சுவழக்கில பொருள். அச்சொல் சொல்லப்படும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து நாங்களே பொருளைத் தீர்மானிப்போம். 'மேடையில் பேசினார்' என்று வந்தால் அவர் உரையாற்றினார் என்ற பொருளை எடுத்துக்கொள்வோம். ஆனால் 'அப்பா பேசுவார்' என்றால் அப்பா திட்டுவார் என்று பொருள். இது "ஏசுதல்'" என்றும் வரும்.
'அப்பா பேசிப்போட்டார்', 'அம்மா பேசுவா', 'கொப்பரிட்ட பேச்சு வேண்டப்போறாய்' என்பவற்றில் திட்டுதல் என்ற பொருளில் வருகிறது.

அதேபோல 'கதைக்கிறது' என்றால் அளவளாவுதல், உரையாடுதல் என்று பொருள்படும். 'பறையிறது' என்பதும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தருகிறது. ஆனால் 'அரட்டையடித்தல்' என்ற பொருளிலும் இந்தப் 'பறைதல்' பாவிக்கப்படும்.
"உங்க என்ன பறைஞ்சு கொண்டிருக்கிறா?"

பூராயத்தோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லாக நான் பரிந்துரைப்பது 'பறைதல்'.

"உள்ளநாட்டுப் பூராயம் முழுக்கத் தெரியும், உதுமட்டும் தெரியாதோ?"
"எடியே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. உங்கயென்ன பூராயம் பறைஞ்சுகொண்டு நிக்கிறா?"

"மனுசீன்ர பூராயக்கதையக் கேக்க விசர்தான் வரும்"

சரி, பூராயத்தின்ர நட்சத்திரக் கிழமையில அடுத்தடுத்த பதிவுகளில சந்திப்பம்.
***ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது எண்டு மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.

நன்றி.

Labels: , , , ,


Comments:
இந்தப்பக்கத்தின்ர ரெம்பிளேற் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்கோ. கண்ணுக்க குத்துறமாதிரியிருக்கோ?
 
எழுதிக்கொள்வது: kulakaddan

வணக்கம் வன்னிய்யன்
அப்ப இந்தவாரம் நீங்க மின்ன போறீங்க......
உங்களிடம் இருந்து நல்ல கனதியான ஆக்கங்களை எதிர்பார்க்கி

8.27 17.4.2006
 
எழுதிக்கொள்வது: kulakaddan

பூரயம் எண்ட சொல்லு எனக்கு தெரிஞ்ச அளவிலை பரவலா இருந்தது.


10.3 17.4.2006
 
இவ்வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள். நல்லா மின்னுங்கோ. அதோட பின்னுங்கோ.
//ரெம்பிளேற் பின்னணியைப் பற்றி//டெம்ப்லேற் நல்லாத்தானிருக்கு. எழுத்து தான் நல்லாச் சின்னனா இருக்கு. கொஞ்சம் பெரிசாக்கலாம்.
 
எழுதுங்கள் வன்னியன்..வரவேற்கிறோம்
 
வாரும் வாரும்! அது சரி நட்சத்திர அறிமுகப்பக்கத்தில் ஒருத்தரின்ரை படம் போட்டிருக்கின்றீர்.....அந்த மாதிரி பலசாலியாயும் அவர் தெரிகிறார்...அவர் யார்? நீரோ அல்லது உமது மாமனாரோ?
 
எழுதிக்கொள்வது: மணியன்

இந்த வார(கிழமை) நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்களும் வரவேற்பும். உங்கள் பேச்சையும், கதைத்தலையும், பூராயம் பறைதலையும் கேட்க ஆவலோடு இருக்கிறோம்.

18.0 17.4.2006
 
எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

எல்லாப் பக்கத்தாலும் எழுதுவதில் நீங்கள் சரியானவொரு பேய்க் காய்தாம் வன்னியன்!பேய்ச் சந்தோசப்படுவதும்-பேய்க் காயாவதும் உங்களுக்கு வாய்த்தே இருக்கு!

14.37 17.4.2006
 
வாழ்த்துக்கள் வன்னியன்.
 
எழுதிக்கொள்வது: malainaaddaan

//ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது// சீச் சீ!! உங்களிட்ட அப்பிடி நினைப்பமா வன்னியன்?. நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

17.45 17.4.2006
 
நான் சொல்ல வந்ததை சிறிரங்கன் சொல்லீட்டார். :O)

பூராயம் பாக்கிறது என்டு புதினம் பாக்கிறதைச் சொல்லுற வழக்கமும் இருக்குத்தானே?
 
//**ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது எண்டு மட்டும் சொல்லிக்கொள்ளிறன்//
"பேய்க்" கவலை... :(
 
குழைக்காட்டான்,
சிறிதரன்,
முத்து,
மணியன்,
குமரன்,
வருகைக்கும் வரவேற்புக்கும் நன்றி.

டி.சே,
உண்மையிலயே உமக்குத் தெரியாதோ அது ஆரெண்டு?

சிறிரங்கன்,
ஷ்ரேயா,
என்னைப் பேக்காய் ஆக்கினதுக்கு நன்றி.

பொடிச்சி,
உங்களுக்குப் பேக்கவலை, மாநாடனுக்கு சந்தோசம்.
இந்தக்கிழமையில்லாமல் வேறயொரு கிழமையெண்டா சிலவேளை மாறியிருக்கலாம். தொடக்கமே நாவண்ணனோட தொடங்க வேண்டியதாப்போட்டுது.
இன்னும் இருக்கு பூபதியம்மா, மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடக்கம், ஆனையிறவு வெற்றி எண்டு.
 
டி.சே,
அடுத்த பதிவில செல்வனுக்குச் சொன்ன பதிலையே உமக்கும் சொல்லிறன்.

ஆருக்குத் தெரியும் அந்த அரசன் ஆரெண்டு?

கட்டாயம் ஏதாவதொரு படம் அனுப்ப வேணுமெண்டு நட்சத்திர அறிவிப்பு வரேக்க சொல்லீச்சினம்.
என்னட்டையும் ஒரு படமுமில்லை. கொஞ்ச அவகாசம் இருந்திருந்தாலாவது ஒரு கமரா ஒழுங்குபண்ணி என்ர படமெடுத்துப் போட்டிருக்கலாம். அதுக்கும் அவகாசமில்லை. (இதையெல்லாம் உமக்குச் சொல்லி எங்க விளங்கப்போகுது?)
அதால வலையில தேடி கிட்டத்தட்ட என்னைப்போல இருக்கிற ஒருத்தரின்ர படத்தையெடுத்து அனுப்பினன்.

வன்னியன் எண்டு தேடேக்க உந்தப்படம் கிடைச்சிது. உவரும் வன்னியராத்தான் இருக்க வேணும். பண்டார வன்னியனாக இருக்கலாம். (ஆர் கண்டது? காக்கை வன்னியனாவும் இருக்கலாம். அப்பிடியிருந்தா என்பாடு கந்தல்தான்)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]