Wednesday, November 29, 2006

தமிழீழ மாவீரர்நாள் - விளக்கமும் வீடியோவும்

தமிழீழ மாவீரர்நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந் மாவீர்களை நினைவுகூரும் நாள். இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் ஈரோஸ் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் இவர்களைவிட ஏனைய சிலரும் (குட்டிமணி, தங்கதுரை உட்பட) நினைவுகூரப்படுகிறார்கள்.
இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது.

புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று.

இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபாகரனின் உரையையும் அவரின் பிறந்தநாளோடு தொடர்புபடுத்தி எழுதி வருகிறார்கள்.
இவர்கள் தெரியாமற் செய்கிறார்கள் என்றில்லை, மாறாக வேண்டுமென்றே திரிபுபடுத்திச் சொல்லி ஒருவகை இன்பத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். புலியெதிர்ப்பைச் செய்ய கருத்துரீதியில் இவர்களிடம் இருக்கும் வங்குரோத்துத் தனத்தின் வெளிப்பாடே இவ்வகையான போக்கிரித்தனமான திரிப்புக்கள்.

இதற்கு முன்னாள் தளபதி கருணாகூட விதிவிலக்காகவில்லை.
அவரின் இவ்வருட உரையில் பிரபாகரனின் பிறந்தநாளைக்குரிய நிகழ்வாக மாவீரர்நாளைச் சித்தரித்திருக்கிறார்.

பிரபாகரின் பிறந்தநாள் நவம்பர் 26 ஆம் திகதி. அதாவது மாவீரர்நாளுக்கு முதல்நாள்.
பிரபாகரன் பிறந்ததையும் முதற்போராளி சங்கர் வீரச்சாவடைந்ததையும் மாற்ற முடியாது. அவை அந்தந்த நாட்களேதாம்.

தமது அமைப்பிலிருந்து வீரச்சாவடைந் முதற்போராளியான சங்கரின் நினைவுநாளையே மாவீரர்நாளாக புலிகள் பிரகடனப்படுத்தி இன்றுவரை அனுட்டித்து வருகின்றனர்.

முன்பு சிலவருடங்கள் நள்ளிரவில் தீபமேற்றி நடத்தப்பட்ட நிகழ்வு பின்னர் 27 ஆம் நாள் மாலை 6.05 க்கு மாற்றப்பட்டது. அது சங்கர் வீரச்சாவடைந்த நேரம்.
_____________________________________________
புலிகளின் முதற்போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் பற்றிய சிறு விவரணமும் அவர்பற்றியும் அவரின் சாவு பற்றியும் தலைவர் பிரபாகரன் வழங்கிய நேர்காணலும் சிறு வீடியோப்பதிவாக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள வீடியோவில் இவ்வாவணத்தைப் பாருங்கள்.




இங்குப் பார்க்க முடியவில்லையென்றால் நேரடியாக அந்தப்பக்கத்துக்குச் சென்று பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=0C-DzUdEpVw
_____________________________________________

Labels: , , , , ,


Sunday, April 23, 2006

வரலாற்றுக் குரற் பதிவுகள்.

குரற் பதிவுகள் போடாமல் எனது நட்சத்திரக் கிழமை முழுமை பெறாது. போதாததுக்கு அன்பர்கள் சிலரும் குரற்பதிவு போடச் சொல்லி ஒரே அரியண்டம். அதால பதிவு போடுறதெண்டு முடிவெடுத்திட்டன். ஒண்டில்ல, ரெண்டில்ல ஏழு ஒலிக்கோப்புக்கள். எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள்.

குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம்.
***********************************
பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.)




***********************************
முன்பு இயக்கத்துக்குரிய கொடியாகவும் இன்று தமிழீழத் தேசியக்கொடியாகவும் கருதப்படுகின்ற புலிக்கொடியை வடிவமைத்தது பற்றிய குறிப்பை அவரது குரலிலேயே கேளுங்கள். (அக்கொடியை வரைந்தவர் 'மதுரை நடராசன்' என்ற ஓவியர் என்ற குறிப்பு புலிகளின் ஆவணங்களிலுள்ளது)


***********************************
புலிகளின் முழக்கம் (கோசம்) "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்பது தோற்றம் பெற்றதைப் பற்றிச் சொல்கிறார். (பின்பு எல்லைப்படைப் பயிற்சியின்போதும், பொங்குதமிழ் நிகழ்வின்போதும் "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று மக்களால் முழங்கப்பட்டது)


***********************************
எழுபதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கத்தால் தமிழரின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கென்று நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியான பஸ்ரியர்பிள்ளை பற்றியும், அவர் தன்னைப் பிடிக்க வீடுதேடி வந்தது பற்றியும் சொல்கிறார்.


**********************************
அவர் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும் குரற்பதிவு


**********************************
தொடக்க காலத்தில் சொந்தத் தயாரிப்புக் குண்டுகள் செய்யும் முயற்சியின்போது ஏற்பட்ட விபத்தொன்று பற்றிச் சொல்கிறார். அது எரிகுண்டு என்றபடியால் அதிகசேதமின்றி பிரபாகரனின் காலில் மட்டும் எரிகாயங்கள் வந்தன. அதானாலேயே 'கரிகாலன்' என்ற பெயர் வந்துவிட்டது.

**********************************
இரத்மலானை விமானத்தளத்தில் அவ்றோ விமானத்தைத் தகர்த்தது பற்றிய குரற்பதிவு. இத்தாக்குதலில் முன்னணிச் செயற்பாட்டாளராயிருந்தவர் இன்று தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவைப் பொறுப்பாளர், பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன்.


*********************************
இவ்வொலிப்பதிவுகள் அனைத்தும் 'விடுதலைத் தீப்பொறி' என்ற தொடரின் முதலாவது இறுவட்டிலிருந்து பெறப்பட்டவை. அதன் மற்றப் பாகங்களிலும் நிறைய விசயங்களுள்ளன. இத்தொடர் தலைவர் பிரபாகரனின் போராட்ட அனுபவங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது.

இதில் பல சுவாரசியமான தகவல்களுமுண்டு.
முதன்முதல் ஆயுதம் வாங்கவென்று நினைத்த நேரத்தில், அருகிலிருக்கும் ஊரொன்றில் துப்பாக்கியொன்று விற்பனைக்கிருந்ததாக அறிந்து நண்பர்களிடம் கிழமைக்கு 25 சதம் என்ற அளவில் சேர்த்து நாற்பது ரூபாய்வரை வந்ததாகவும், அத்தோடு தமக்கையின் திருமணத்தன்று தனக்குப் பரிசாகக்கிடைத்த மோதிரத்தை விற்று எழுபது ரூபாய் திரட்டியதாகவும் ஆனாலும் அத்துப்பாக்கியின் விலை 150 ரூபாவாக இருந்தகாரணத்தால் அந்நேரத்தில் அதை வாங்க முடியாமற்போனதாகவும் முதலாவது தொகுப்பில் தகவல் உள்ளது.

சிறுவயதில் திரைப்படங்கள் தன்மீது செலுத்திய செல்வாக்கையும், சாண்டில்யன், கல்கி போன்றோரின் எழுத்துக்கள் தன்மீது கொண்ட செல்வாக்கையும் சொல்கிறார்.

இவற்றைவிட தனது சிறுவயது அனுபங்கள், வாசிப்புப் பழக்கங்கள், தனக்கு வழிகாட்டியவர்கள் பற்றிய தகவல்கள் வருகின்றன. அந்நேரத்தில் உலகில் நடந்த உள்நாட்டுப்பிரச்சினைகள், கிளச்சிகள், போராட்டங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தனக்கு விளங்கப்படுத்தியவர்களையும், அவற்றை வெளிக்கொணர்ந்த சஞ்சிகைகளையும் பற்றிச் சொல்கிறார்.
நைஜீரியப் போராட்டம் தோல்வியடைந்ததையும், அயர்லாந்துப் போராளிகள் ஒருகட்டத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்ததையும் குறிப்பிட்டு, அந்நிலைமை எமக்கு வரக்கூடாதென்ற வரலாற்றுப்பாடத்தின் அடிப்படையிலேயே தான் முந்திக்கொண்டதாகவும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பைச் சிதைப்பதையே முதலாவது செயற்றிட்டமாகக் கொண்டதையும் குறிப்பிடுகிறார்.

இன்றைக்கு தமிழகச் சஞ்சிகைகள் மட்டில் விசனமிருந்தாலும்கூட ஒருநேரத்தில் தலைவர் பிரபாகரனுக்கு உலகப்போராட்டங்களைப் பற்றியும் சுதந்திரப்போராட்ட வீரர்களைப் பற்றியும் நிறைய அறிந்து கொள்ள அவை உதவியிருக்கின்றன. ஆனந்தவிகடன் உட்பட சிலவற்றையும், அவற்றில் வந்த தொடர்கள், கட்டுரைகள் பற்றியும் இத்தொகுப்பில் குறிப்பிடுகிறார்.

Labels: , , , , , ,


Sunday, April 16, 2006

பூராய நட்சத்திரம்.

உப்பிடி நட்சத்திரமேதும் இருக்குதோ எண்டோ நான் எழுத்துப்பிழை விட்டிட்டன் எண்டோ யோசிக்க வேண்டாம்.

தமிழ்மணத்திரட்டியில ஆளாளுக்குச் செய்யிற நட்சத்திர விளையாட்டைத்தான் நான் இந்தக் கிழமை செய்யப்போறன்.

சிலதுகள் திடீர்திடீரெண்டு வந்து அமையும். இதுவும் அப்பிடித்தான்.
இந்த முறை என்னட்ட அதிகம் எதிர்பார்க்காதையுங்கோ. நாளொரு பதிவு கட்டாயம் போடுவன். ஆனா அதுகள் எத்தினை பேருக்கு ரசிக்கத் தக்கதா இருக்கு, எத்தனை பேருக்குப் பிடிக்காமலிருக்கு, எத்தினை பேருக்கு எரிச்சலைத் தருது எண்டும் பாக்கவேணும்.

இந்த வலைப்பதிவு தொடங்கின காலத்தில அடிக்கடி எழுதினனான். இடையில குரற்பதிவுகள்கூடப் போட்டுக் கலக்கினனான். பிறகு ஏனோ தொய்வு வந்திட்டுது. [எத்தின சோலியத்தான் பாக்கிறது?;-( ] கிட்டத்தட்ட ஒண்டரை வருடங்களில வெறும் 77 பதிவுகள் மட்டும்தான் இந்த வலைப்பக்கத்தில எழுதியிருக்கிறன். எண்டாலும் துவங்கின நோக்கமோ திட்டமோ சரியாவரேல எண்டது மட்டும் உறுதி.
இனி உங்கள இந்தக் கிழமை நட்சத்திரப் பதிவுகளுக்கால சந்திக்கிறன்.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***

சரி. இந்த வலைப்பக்கத்தின்ர பேரைப்பற்றி ஒரு விளக்கம் தந்துவிடுறன். அதுக்கு முதல் 'வன்னியன்' எண்டது புனைபெயர்தான் எண்டதையும் சொல்லிக்கொள்ளிறன். கனபேருக்குத் தெரியுமெண்டாலும் (முந்தி என்ர ஒவ்வொரு பதிவும் தமிழ்மணத்திரட்டியில திரட்டப்படேக்க, "புனைபெயர்தான்" எண்டதும் சேத்துத்தான் என்ர பேர் வரும்) புதுசா வந்தவைக்குத் தெரியாமலிருக்கலாம். பலர் தெரிஞ்சும் தெரியாதமாதிரி நசுக்கிடாமலும் இருக்கலாம். (நான் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறமாதிரி. ஆனாலும் பாருங்கோ அதில ஒரு 'இது' இருக்கு.)

"பூராயம்" எண்டது ஈழத்து வழக்குச்சொல்லாகத் தான் நான் நினைச்சு வச்சிருந்தன். ஆனா வலைப்பதிய வந்தபிறகுதான் உந்தச் சொல் கனபேருக்குத் (யாழ்ப்பாணத்தாருக்குக் கூட) தெரியாது எண்டது விளங்கீச்சு. எங்கட ஊர்ப்பக்கமெல்லாம் சர்வசாதாரணமாக் கதைக்கப்படுற சொல். பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது. இப்ப உந்த "பூராயம்" எண்ட சொல் அருகிக்கொண்டு போயிருக்குமெண்டு தான் நினைக்கிறன். வன்னியில 1998 இல இதழியல் சம்பந்தமா ஒரு பட்டறை நடந்திச்சு. முறையான பாடத்திட்டதோட குறுகிய காலத்துக்குள்ள ஒரு பாடநெறி முடிச்சவை. (அதை முடிச்சவையில ஒருபகுதியினர் போராளிகள்.) அதிலயிருந்து வெளிவந்த ஆக்கள் ஓர் இதழ் நடத்தினவை. அதுக்குப் பேர் "பூராயம்" எண்ட தகவலையும் இங்க பதிஞ்சு வைக்கிறன்.

சரி, இனி பூராயமெண்டா என்ன எண்டு பாப்பம்.
விடுப்புக்கள் அல்லது விண்ணாணங்கள் எண்டு சொல்லப்படுறதுகளுக்கு இணையா இதைச் சொல்லலாம். தமிழகத்தார்க்கு விளங்கிறமாதிரிப் பாத்தா உந்த 'கிசுகிசு' எண்டதுக்கு இணையாகவும் வரும். மற்றவர்களைப் பற்றியே கதைப்பது, மற்றவர்களின் அந்தரங்கங்களைக் கதைப்பது, தேவையில்லாததுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து அலட்டுவது எண்டு தொடங்கி இல்லாத பொல்லாத கதைகட்டுறதுகள் வரைகூட இதுகள் போகும். இதுகளெல்லாம் சேந்து பூராயம் எண்டு சொல்லலாம்.
"பூராயம்" விளங்கீச்சோ இல்லையோ அதை ஏன் "பெரும்பாலும் பொம்பிளையளுக்குள்ள அவயளக் குறித்துக் கதைக்கவே அதிகம் பாவிக்கப்படுறது" எண்டு முதற்பந்தியில சொன்னனான் எண்டு கட்டாயம் விளங்கியிருக்கும்.;-)

எங்கட ஊர்வழக்கங்களில உந்தப் பூராயப் பண்பு மேலோங்கியிருக்கும். கிராமப்பக்கங்களில ஆரேன் ஒரு புதுமுகத்தை ஒழுங்கைக்குள்ள பாத்தால் அது வேலிவழியால விடுகளுக்குப் பரவீடும். அந்த முகம் எதுக்கு வந்தது, ஆற்றை வீட்ட வந்தது, அவர் ஆர் எண்டெல்லாம் ஆராய்ஞ்சு முடிவுஎடுக்காமல் எங்கட சனம் சாப்பிடாதுகள். எங்கட ஊர்ப்பக்கம் சந்ததைக்குப் போறதெல்லாம் பொம்பிளையள்தான். காய்கறிச் சந்தைக்கோ மீன்சந்தைக்கோ போனா அங்கயொரு அரைமணித்தியாலச் சமாவுக்குப்பிறகுதான் வீடுவருவினம். எங்கட விட்டுக்குப் பக்கதிலயிருக்கிற கிழவி சந்தையால நேர எங்கடவீட்ட வருவா. வரேக்கயே "எடி றோசுமலர்!" எண்டு கூப்பிட்டுக்கொண்டே அதோட ஏதாவதொரு புதினத்தைச் சொல்லிக்கொண்டே வருவா. "இந்தா பொடி, இதக்கொண்டே மோளுட்டக் குடு" எண்டு தாற பைய நான்தான் வேண்டிக்கொண்டே அவையின்ர வீட்டில குடுக்கிறது. மனுசியத் திட்டிக்கொண்டே ஓட்டமாப்போய் ஓட்டமா வருவன். வேறயென்னத்துக்கு? அம்மம்மாவோட மனுசி கதைக்கிறதுகளக் கேக்கத்தான்.

பொழுதுபட செவமாலை சொல்லவெண்டு ஒவ்வொரு குறிச்சீக்கையும் ஒவ்வொரு இடத்தில சனம்கூடும். எங்கட வீட்டுக்குப் பக்கத்திலயிருக்கிற புளியமரத்தடியிலதான் ஒரு மாதா சுருவம் வச்சு செவமாலை நடக்கும். எனக்கு அங்கபோக கொள்ளை விருப்பம். செவம் சொல்லுறதுக்கில்லை. அதுக்குமுதல் ஒரு பத்துப்பதினைஞ்சு நிமிசம் நடக்கிற கூத்துக்களைக் கேக்கத்தான். ஆராற்றை பெடிபெட்டையள் ஆரோட சுத்துதுகள் எண்டது தொடக்கம் நிறைய விசயங்கள் அங்க அலசப்படும். அதவிட மாவிடிக்க வாற மனுசியோட நடக்கிற கதையள், செத்தவீடு, கலியாண வீடெண்டா கும்பலா இருந்து நடக்கிற கதையள் எண்டு எப்பவுமே எனக்கு இந்தப் பூராயப் பேச்சுக்கள் நல்லாப்பிடிக்கும்.

நான்கூட உந்தப் பூராயம் எண்ட பேர ஒருத்தரும் கண்டுகொள்ளிறாங்களில்லையே எண்டு கவலைப்பட்ட காலமும் இருந்திச்சு. ஆனா காருண்யன் கொன்பூசியஸ் எண்டு ஒருத்தர், கவிதைகளெல்லாம் நிறைய எழுதுவார், வலைப்பதிவாளராகவும் இருந்தவர், அவர் உந்தப் பேர் சம்பந்தமான ஆதங்கத்தைச் சொல்லியிருந்ததை அவரின்ர பதிவில பாத்தன். அவரும் பூராயமெண்டு தன்ர ஒரு வலைப்பதிவுக்குப் பேர் வைக்க விரும்பினதாயும், நான் அதைப்பாவிச்ச படியா 'விடுப்புக்களும் விண்ணாணங்களும்' எண்டு அதுக்குப் பேர் வச்சதாவும் சொல்லியிருந்தார்.
அடடா! ஒருத்தராவது பூராயத்தைப் புரிஞ்சிருக்கிறார் எண்டு பேச்சந்தோசம்.

இன்னொரு குறிப்பு: இது பூராயத்தையொட்டியதாக வரும் சில வினைச்சொற்கள் பற்றியது.
ஈழத்தில 'பறையிறது' எண்டும் ஒரு சொல்வழக்கிருக்கு. 'கதைக்கிறது' எண்டதுக்கு இணையாச் சொல்லிறது. கதைக்கிறது எண்டது 'பேசுறது' எண்ட கருத்தில வருது. ஆனா எங்கட பேச்சு வழக்கில இந்தச் சொற்களுக்கிடையில பொருள்ரீதியில வித்தியாசமிருக்கு.

'பேசுறது' எண்டா ஒருத்தருக்குத் திட்டிறது எண்டும் எங்கட பேச்சுவழக்கில பொருள். அச்சொல் சொல்லப்படும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து நாங்களே பொருளைத் தீர்மானிப்போம். 'மேடையில் பேசினார்' என்று வந்தால் அவர் உரையாற்றினார் என்ற பொருளை எடுத்துக்கொள்வோம். ஆனால் 'அப்பா பேசுவார்' என்றால் அப்பா திட்டுவார் என்று பொருள். இது "ஏசுதல்'" என்றும் வரும்.
'அப்பா பேசிப்போட்டார்', 'அம்மா பேசுவா', 'கொப்பரிட்ட பேச்சு வேண்டப்போறாய்' என்பவற்றில் திட்டுதல் என்ற பொருளில் வருகிறது.

அதேபோல 'கதைக்கிறது' என்றால் அளவளாவுதல், உரையாடுதல் என்று பொருள்படும். 'பறையிறது' என்பதும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தருகிறது. ஆனால் 'அரட்டையடித்தல்' என்ற பொருளிலும் இந்தப் 'பறைதல்' பாவிக்கப்படும்.
"உங்க என்ன பறைஞ்சு கொண்டிருக்கிறா?"

பூராயத்தோடு சம்பந்தப்பட்ட வினைச்சொல்லாக நான் பரிந்துரைப்பது 'பறைதல்'.

"உள்ளநாட்டுப் பூராயம் முழுக்கத் தெரியும், உதுமட்டும் தெரியாதோ?"
"எடியே பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. உங்கயென்ன பூராயம் பறைஞ்சுகொண்டு நிக்கிறா?"

"மனுசீன்ர பூராயக்கதையக் கேக்க விசர்தான் வரும்"

சரி, பூராயத்தின்ர நட்சத்திரக் கிழமையில அடுத்தடுத்த பதிவுகளில சந்திப்பம்.
***ஆனா என்ர வாரம் பூராயக்கதையளா இராது எண்டு மட்டும் சொல்லிக்கொள்ளிறன்.

நன்றி.

Labels: , , , ,


Sunday, June 12, 2005

சூகை தெரியுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தஞ்சமடைந்திருந்த காலம். வந்த புதுசில காடு சார்ந்த ஓரிடத்திலதான் இருந்தம். அப்ப காட்டுக்குள்ள போறதெண்டா கொள்ளைப் பிரியம்; கூடவே பயமும். சிலர் கரடி நிக்கும் எண்டு பயப்படுத்தியிருந்தினம். எண்டாலும் காடு பாக்கிற சந்தோசம் விடுமோ? காடு பாக்கிறதைப்பற்றி பிறகு ஒருக்கா எழுதிறன்.

நாங்கள் வந்து ரெண்டு நாளில சின்ன பத்தையள வெட்டி ஒரு வெளியாக்கி அதில கூடாரங்கள் போட்டு இருந்தம். என்ன இருந்தாலும் அதுவும் ஒரு இனிமையான வாழ்க்கைதான். அனுபவித்தவைக்குப் புரியும். அப்ப எங்களோட அந்த இடத்து ஆக்கள் ரெண்டுமூண்டுபேரும் தங்கிறவை. ஒருநாள் இரவு. ஒரு குறிப்பிட்ட இடத்தில சனம் துள்ளிக்குதிக்குது. ரெண்டு மூண்டு சின்னனுகளும் அழுகிதுகள். என்னெண்டா எறும்புக் கடிச்சுப்போட்டுதாம்.

பாத்தா நிறைய கட்டெறும்புகள் குவியலா நிக்குதுகள்.
"உங்க பார், எவ்வளவு கட்டெறும்புகள்!" எண்டேக்கதான் சொன்னாங்கள் அது கட்டெறும்பில்லையாம், சூகையாம் எண்டு. நாங்கள் கட்டெறும்பு எண்டுறத இவங்கள் சூகை எண்டுறாங்கள் எண்டிட்டு படுத்தாச்சு.

அடுத்த நாள் பாத்தா அந்த இடத்தவிட்டு அதுகள் போகேல்ல. எக்கச்சக்கமா நிக்குதுகள். அதுகளக் கலைக்கிற முயற்சியல நாங்கள் நாலைஞ்சு பொடிப்பிள்ளைகள் இறங்கினம். அப்பதான் தெரிஞ்சுது அதுகளின்ர பலம். முதல் கடியோடயே விளங்கீட்டுது உதுகள் கட்டெறும்பு வகைக்குள்ள வராதெண்டு. என்ன செய்ய? உதுகள் அந்த வகைக்குள்ள வராதுகள் எண்டு கணிக்கிறதுக்குள்ள உயிர் போயிட்டுது. அப்பிடிக் கடி. ஒரு பத்துச் செக்கன்கூட இல்ல, போர்க்களத்திலயிருந்து வெளியில வாறதுக்கு. அதுக்குள்ள முப்பது முப்பந்தைஞ்சு எறும்பு காலில ஏறீட்டுது. அண்டைக்கே ஊர் ஆக்களப்பிடிச்சு சூகையைப் பற்றி அறிஞ்சன்.

யாழ்ப்பாணத்தில இப்பிடியொரு எறும்பைப் பாத்ததில்ல. பாக்க கட்டெறும்பு மாதிரித்தான் இருக்கும். ஆனா செயற்பாடுகளில மாற்றம். சூகையெண்ட சொல்லையும் நாங்கள் அங்க கேள்விப்படேல. சரி, இது வன்னியில இருக்கிற ஒரு வகையெண்டு நினைச்சிருந்தன். முந்தநாள் இயக்குநர் சேரனின்ர நிகழ்ச்சியொண்டைத் தொலைக்காட்சியில காணுற சந்தர்ப்பம் கிடைச்சுது. அதுல பாத்தா, அட எங்கட சூகை!
அவரும் சூகை எண்டுதான் சொல்லுறார். அப்ப தமிழ்நாட்டிலயும் இந்தச் சூகை இருக்கு. ஆனா இதே மோசமான சூகை தானோ எண்டது சந்தேகம்.

இனி சூகை பற்றி சில அனுபவங்கள். இத நாங்கள் 'கொமாண்டோஸ்' எண்டும் சொல்லுறனாங்கள். ஏனெண்டா அவ்வளவு வேகம். சூகை வரிசையாப் போய்கொண்டிருக்கிற இடத்தால வேகமா நீங்கள் நடந்து போனாக்கூட எப்பிடியும் உங்கட காலில ஏறீடும். கண்ணிமைக்கும் நேரத்தில ஏறிக்கடிச்சிடும். அந்தக்கடியை அனுபவிச்ச ஆக்களுக்குத்தான் அதின்ர வலி தெரியும். எங்கட நெருப்பெறும்பு, கட்டெறும்பெல்லாம் பிச்ச வாங்கோணும். அதவிட அது ஒரு இரைச்சல் போடும் பாருங்கோ. இரவில நல்ல நிசப்தமா இருந்தா அந்த இரைச்சல் கேட்கலாம். அவயள் பவனி வந்தா அந்த இரைச்சல் கட்டாயம் வரும். இரவில கொட்டிலுகளுக்குள்ள எல்லாம் அதுகள் வந்திடும். முதல் கொஞ்சநாள் கொட்டிலச் சுத்தி நெருப்புத்தணல் கொட்டி விடுறனாங்கள். பிறகு பழகிவிடும்.

இரவில வெளிச்சமில்லாமல் நடந்தா, முன்னுக்குப்போறவர் வேணுமெண்டே ஒரு இடத்தில நாலைஞ்சுதரம் கால உதைஞ்சுட்டுப்போவார். (உண்மையில சூகை இருந்திருக்காது). பின்னால வாற ஆக்களும் அந்த இடத்தில வேகமா துள்ளிப் போவினம். பிறகு அங்கால போய் சிரிக்கிறது.

எங்கயாவது பதுங்குகுழிகள் வெட்டினா கட்டாயம் சூகையின்ர தொல்லையிருக்கும். நிறைய நேரத்தை அது மினக்கெடுத்தும்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்ர ஒரு வருட வெற்றிநாளுக்கு நாங்கள் சந்திச்ச களப்போராளியள் சிலரோட கதைச்சம்.
"இஞ்ச உங்களுக்கு ஆகக் கஸ்டமாயிருக்கிற விசயம் எது?"
எண்டு அவயளக் கேட்டம். (எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், குடிதண்ணியில இருந்து எதிரியின்ர சினைப்பர் தாக்குதல்கள், சாப்பாட்டுப்பிரச்சினை எண்டு நிறைய சிக்கல்கள்.) ஆனா அவயள் சொல்லீச்சினம்:
"உவன் ஆமியக்கூட சமாளிச்சிடலாம். ஆனா உந்த சூகையத்தான் சமாளிக்க எலாது."

இப்பிடி சூகையின்ர நினைவுகள் கனக்க இருக்கு. சேரனின்ர நிகழ்ச்சியைப் பாத்த உடன, தமிழகத்திலயும் இந்த சூகை இருக்கெண்ட உடன இந்தப் பதிவ எழுத வேணும்போல இருந்திச்சு. அவ்வளவு தான்.

Labels: , , , ,


Tuesday, February 15, 2005

வ.ஐ.ச.ஜெயபாலனும் ஜெயசிக்குறு காவியமும்...

வணக்கம்!
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை உங்களிற் பலபேருக்குத் தெரிந்திருக்கும். அவரை ஒருமுறை சந்தித்த அனுபவத்தையே இங்கே பதிகிறேன். அவர் வன்னி வந்து நின்றபோது புதுக்குடியிருப்பில் தற்செயலாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் எப்படியென்றால் எனக்குத் தெரிந்த ஒருவர் அவரோடு கதைக்க வேண்டும் (பேட்டியெடுத்தல் என்று சொல்ல முடியாது) என்று புறப்பட்டபோது அவரோடு ஒட்டிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

இருவருக்குமே ஜெயபாலனைத் தெரியாது. பத்திரிகைகளின் மூலமாக அறிந்திருக்கிறோமே தவிர அவரின் படைப்புக்களை அதிகம் வாசித்ததும் கிடையாது. (அவரின் பல படைப்புக்கள் பேசப்பட்டன என்பதும் குறிப்பாக “நெடுந்தீவு ஆச்சிக்கு” தமிழகத்திலே அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர் என்பதும் தெரிந்திருந்தன) அந்த நேரத்தில் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த இரண்டொரு கவிதைகளையும் அறிந்திருந்தோம்.

அவர் வந்திருக்கிறார் என்று அறிந்து ஒரு மணிநேரத்திலேயே சென்றுவிட்டோம். அச்சந்திப்பு சும்மா ஒரு படைப்பாளனைச் சந்திக்கும் ஆர்வம் தானேயொழிய வேறெதுவுமில்லை. இவ்வளவுக்கும் நாம் இருவரும் படைப்பாளிகளோ விமர்சகர்களோ இலக்கியவாதிகளோ அல்லர். குறிப்பாகச் சொல்லப்போனால் ஜெயபாலனின் படைப்புக்களை நாம் வாசித்தே இருக்கவில்லை. (அவர் எழுதிய நெடுங்கவிதை வடிவிலான ஒரு நாவல்; பெயர் தெரியவில்லை. பாலியாற்றையும் ஒரு காதலியையும் போராட்ட ஆரம்ப காலத்தையும் கலந்து வந்திருந்தது. 1986இல். அதை மட்டுமே படித்திருந்தோம். “செக்குமாடு” எனக்குப்பிடித்திருந்தாலும் அதை இவர்தான் எழுதினார் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.) எல்லோருக்கும் இருக்கும் பிரபல்யமான படைப்பாளியொருவரைச் சந்திக்கும் குறுகுறுப்பு மட்டுமே இதற்குக் காரணம்.

அரையடி நீளக்குடுமி வைத்திருந்தார். அன்பாக வரவேற்றார். பேச்சு இயல்பாகவே தொடங்கியது. ஈழத்து இலக்கியப் போக்குப் பற்றிக் கொஞ்சம் கதைத்தார். கவிதையில் முன்னேறிய அளவுக்கு பிற இலக்கியவடிவங்களில் முன்னேற்றமில்லை என்றார். புலம்பபெயர்ந்த இலக்கியச் சூழ்நிலை பற்றிச்சொன்னார். அடுத்த தலைமுறை தமிழ் தவிர்ந்த பிற மொழிகளில் இலக்கியங்களைப் படைக்கும்; அவற்றிற் குறிப்பிட்டளவு ஈழத்தைப்பற்றியதாக இருக்கும் என்றார். போராட்ட காலத்தில் வன்னியிலோ யாழ்ப்பாணத்திலோ உருவான படைப்புக்களை தான் படிக்கவில்லையாதலால் அவை பற்றிக் கருத்துக் கூற முடியாது; ஆனால் கருணாகரன் நிலாந்தன் போன்றோர் தரமான படைப்பாளிகளாக வெளியே அடையாளங் காணப்படுகிறார்கள் என்றார்.

இலக்கிய உலகில் அவரது தொடர்புகள், படைப்பாளிகளுடனான உறவுகள் என்று கதை மாறியபோது, சில படைப்பாளிகளைப்பற்றிச் சொன்னார். குறிப்பாக ஜெயக்காந்தனைப்பற்றி அதிகம் கதைத்தார். அவரின் படைப்புக்களைப் போலவே தலையிலும் கனம் அதிகம் என்றார். (தலைக்கனத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்). இலக்கியத்தைப்பற்றி எம்மோடு அதிகம் கதைக்க முடியாததால் சினிமா பற்றி கொஞ்சம் கதைத்தார். வன்னியில் சினிமாப்படங்கள் மீதான தணிக்கை சம்பந்தமாக விமர்சனம் செய்தார். நல்ல படங்களை வெளியிடுவதன் அவசியத்தைச் சொன்னதோடு சில படங்களை எடுத்துக்காட்டினார் (குட்டி, முகம், ஹேராம்) நல்ல சினிமா வன்னியில் உருவாக வேண்டுமென்பதைச் சொன்னார்.

நாம் அவரின் வன்னி வருகையை வழமை போல புலம்பெயர்ந்தவர்களின் வருகை போலவே நினைத்திருந்தோம். ஆனால் தான் வந்த காரணம் மிக முக்கியமானதென்று கூறினார். அதாவது தான் ஜெயசிக்குறு மீதான ஒரு காவியம் எழுதப் போவதாகவும் அதற்காகவே தான் வன்னி வந்துள்ளதாகவும் கூறினார். ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை தான் தமிழரின் மிகப்பெரிய வெற்றி என்றும் அது நிச்சயம் சரியான விதத்தில் பதியப்படவேண்டும் என்றும் கூறினார்.

பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. அவரின் முஸ்லீம் மக்கள் பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டோம். ஏனெனில் முஸ்லீம் பிரச்சினை பற்றி இவர் அதிகமாகவே கதைப்பவர் என்று முன்னரே கேள்விப்பட்டிருந்தோம். மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் கதைத்தார். “நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். எல்லாவற்றையும் மறந்து இனி நல்ல உறவைப் பேணுவோம் என்று எழுந்தமானமாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அது நீண்ட கால அடிப்படையில் பயன் தரப்போவதுமில்லை. இருதரப்புமே நடந்தவைகளைப்பேசி விமர்சனப்பாங்கோடு அணுகி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இருதரப்புமே தம்மால் மற்றவர்க்கு இளைக்கப்பட்ட தீமைகளை ஏற்றுக்கொண்டு பிரச்சினையை அணுக வேண்டும்” என்று சொன்னார். தமிழர் தரப்பிலேயே கூடுதல் தவறிருப்பது போன்ற பார்வை அவரிடமுள்ளதாகத் தோன்றுகிறது. (நேரடியாகக் கூறுவதில் அவருக்குள்ள சங்கடம் தெரிந்ததே)

யாழ்பாண மேலாதிக்க வாதத்தைப்பற்றிக் காட்டமான விமர்சனம் கொண்டிருந்தார். எனினும் அவர் எழுதிய காலப்பகுதிக்கும் தற்போதிருக்கும் காலப்பகுதிக்குமிடையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டியபோது, அதை ஏற்றுக்கொண்டார். எனினும் முழுமையான மனமாற்றத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். அவரின் வாதங்கள் புலம் பெயர்ந்த தமிழர்களை அடிப்படையாக வைத்தே இருந்தது.

அவர் படைப்பாளி என்பதற்கப்பால் விடுதலைப்புலிகளல்லாத மாற்றுப் போராட்ட இயக்கமொன்றின் முன்னை நாள் உறுப்பினர் என்ற வகையில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். இயன்றவரை பதிலளித்தார். ஆனால் இடையிலேயே தான் வெளியேறி விட்டதாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். மாற்றுக் குழுக்கள் மீதான விடுதலைப்புலிகளின் தடையும் அக்குழுக்கள் ஒழிக்கப்பட்டமையும் குறித்து கேட்டபோது, “இக்கேள்வி வெளிநாடுகளில் அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் கேள்வி. எப்போதும் என் பதில் இதுதான். இது தவிர்க்க முடியாதது. ஒரு நிலையில் ஏதோ ஒரு தலைமை தான் போராட்டத்தைப் பொறுப்பெடுக்க வேண்டிய நிலை வரும். அப்படி வந்த நிலையில் தான் புலிகள் முந்திக்கொண்டார்கள். இல்லாவிட்டால் ஏனைய இயக்கங்களும் இதையே தான் செய்திருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் முந்தியதால் இற்றை வரையான போராட்டம் நடந்தது. வேறெவரும் முன்னெடுத்திருந்தால் பாதியிலேயே திசை திரும்பியிருக்கும்.” என்று பதிலளித்தார்.

ஆரம்பத்தில் தனிநாடு தேவையில்லையென்ற சோசலிசப் பாதையில்தான் தான் இருந்ததாகவும் யாழ் நூல் நிலைய எரிப்பின் பின் தான் தனிநாடு ஆதரவு நிலைப்பாடு எடுத்ததாகவும் கூறினார். எனினும் ஆரம்பகால கதைகளின்போது சற்று இடறுப்படுவது போல தெரிந்தது.
விடுதலைப்புலிகளின் போர்த் தந்திரத்தையும் விமர்சித்தார். தான் ஒரு பூகோளவியலாளன் என்ற அடிப்படையில் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமென்று சொன்னதோடு மட்டுமன்றி, யாழ்ப்பாண பூகோள அமைப்புக்கு ஏற்றமாதிரி எப்படிச் சண்டை பிடிக்க வேண்டுமென்றும் மனிதர் விளக்க ஆரம்பித்துவிட்டார். அது எமக்குத் தேவையில்லாததால் அத்தோடு அவ்விடயத்தைக் கைவிட்டோம். அனேகமாக அவரிடம் மாட்டிய புலி உறுப்பினர் யாருக்காவது வகுப்பு நடந்திருக்கும்.

அவரிடம் அவரைப்பற்றி வேறு சில கதைகள் கேட்க இருந்தாலும் கேட்கவில்லை. இன்னும் இரண்டு மூன்று முறை சந்திப்பு நடந்திருந்தால் கேட்டிருப்போம். (அவர் பொட்டம்மானை விடுதலைப்புலிகள் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக சஞ்சிகையொன்றில் ஒருமுறை கூறியதாக கதைகள் அடிபட்டதுண்டு. மேலும் தனிப்பட்ட சில சம்பவங்கள்) பிரியும் போது என் நண்பன் அவனது ஞாபக் கையேட்டை நீட்டியபோது “ஈழம் என் தொட்டில்; இலங்கை என் முற்றம்; தெற்காசியா என் வீடு; உலகம் என் கிராமம்” என்று எழுதினார். (இவ் வசனத்தில் சில மாற்றங்கள் இருக்கலாம். நினைவில் வைத்து எழுதுகிறேன்.)

இச்சந்திப்பு 2002 நடுப்பகுதியில் நடந்தது. ஏறக்குறைய ஆறு மாதத்தின் பின்பு பளை முகாம் தகர்ப்பு வெற்றி விழாவில் இவரைக் கண்டேன். ஒரு குடும்பத்தோடு நின்றிருந்தார் (மனைவி பிள்ளைகளாக இருக்க வேண்டும்) அவரைக்கண்ட மகிழ்ச்சியிலும் ஜெயசிக்குறு காவியம் பற்றி அறியும் ஆவலிலும் அவரைச்சந்தித்து என்னைத்தெரிகிறதா என்று கேட்டபோது, உற்றுப்பார்த்து விட்டு “இல்லையே தம்பி நீங்கள் ஆர்” என்றார். எனக்குச் சீ... என்று விட்டது. எனினும் என்னை அறிமுகப்படுத்தாமல் சாமாளித்து விட்டு வந்து விட்டேன். பிறதொரு நாளில் நோர்வேயைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அவரைப்பற்றிச் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது.
அதாவது அவரும் ஜெயபாலனும் ஒன்றாக பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள் (பேருந்து என்று தான் நினைக்கிறேன்.) அப்போது ஜெயபாலன் அவர் இறங்க வேண்டிய தரிப்பிடத்துக்கு முன்னருள்ள தரிப்பிடத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார். பின்னொரு நாள் அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது சிரித்த படியே சொன்னாராம்: “இது கனதரம் நடக்கிறது. ஏதேனும் யோசினையில நாலஞ்சு தரிப்பு தாண்டி இறங்கி நடந்து வாறத விட கிட்டவாகவே நினைப்பு வாற இடத்திலயிருந்து இறங்கி நடக்கிறது பிரச்சினையில்லத் தானே

இப்போது நான் அறிய நினைப்பவை: ஜெயபாலன் ஜெயசிக்குறு காவியம் எழுதுகிறாரா? அவர் அதை எழுதுவதற்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்புக் கிடைக்கிறது. ஏனெனில் விடுதலைப்புலிகளின் தயவில்லாமல் அவரால் எதுவுமே எழுதமுடியாது. ஆனால் அவர்கள் என்ன நினைக்கிறார்கள். அவர் அக்காவியத்தை எழுதுவதைப்பற்றி கடுமையான சர்ச்சை நிலவக்கூடும். வேறு யாராவது அதை எழுத முயல்கிறார்களா? என்ன இருந்தாலும் பதிவாக்கப்பட வேண்டிய மிகமுக்கிய காலப்பதிவு அது.

Labels: , ,


This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]