Tuesday, April 18, 2006

குறிதவறிய சூடும் திருவள்ளுவரும்.

***நட்சத்திரப் பதிவு -03***

"இன்றையநாள் ஈழத்தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆயுதப்போராட்டத்துக்கான வித்துக்களில் ஒன்று தூவப்பட்ட நாள்.
சிறிலங்காவின் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர் பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டாரநாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது."

வன்னியில நடந்த முசுப்பாத்தியொண்டைச் சொல்லலாமெண்டு நினைக்கிறன்.
நண்பர் வட்டத்துக்குள்ள நடந்த சம்பவம்.

1999 ஆம் ஆண்டு. வன்னியில இளந்தாரியள் எல்லாருக்கும் ஆயுதப்பயிற்சியள் நடந்த காலம். இளந்தாரியள் தானெண்டு இல்லாம கிழடுகட்டையள் கூட ஆர்வமா வந்து பயிற்சியெடுத்தவை. புலிகளின் அதிமுக்கியமான தந்திரமும், ஈழப்போராட்டத்தை மிகப்பெரிய தோல்வியிலிருந்தும் பொறியிலிருந்தும் காத்த உடனடி நடவடிக்கைதான் மக்களுக்கான ஆயுதப்பயிற்சி. (அதுபற்றிய சின்னதொரு பதிவை பிறகு எழுதுகிறேன். விரும்பியவர் வாசித்துச் செல்க. )

தொடக்கத்தில எல்லாச்சனத்துக்கும் பொதுவான சில உடற்பயிற்சியள் தான் நடந்தது. அப்ப கொட்டனுகளக் கொண்டு தொடங்கின பயிற்சி பிறகு துவக்கு வடிவுக்கு மெல்லமெல்ல மாறீச்சு. (இதுபற்றி அப்பா துவக்குச் செய்வார் எண்ட பதிவில எழுதியிருக்கிறன்)

பிறகு ஆக்களைத் தெரிஞ்செடுத்து சூட்டுப்பயிற்சியள்கூட குடுக்கத் துவங்கீச்சினம். அப்ப சனத்துக்குப் பேப்புழுகு, தாங்களும் துவக்குத் தூக்கிச் சுடுறமெண்டு. பயிற்சிக்குப் போட்டு வீட்ட வந்து அளக்கிற கதையள் தனிக்கணக்கு. உதில மனுசியும் பயிற்சிக்குப் போற குடும்பத்தாருக்குத்தான் புழுக வழியில்லை. பயிற்சியிடத்தில பீடி, சுருட்டுக்குத் தடையிருந்தாலும் நசுக்கிடாமப் பொத்திவச்சு அடிக்கிறவையும், பிடிபட்டபிறகு தண்டனையில கொட்டனைத் தூக்கிக்கொண்டு கத்திக்கத்தி ஓடுறவையுமெண்டு பம்பலாப் போகும் பொழுது.

'பிலாக்கன்' எண்டு புதுக்குடியிருப்பில ஒருத்தர் இருந்தவர். ஏன் அந்தப்பேர் வந்துதெண்டு தெரியாது. 'பிலாக்கண்ணை' எண்டுதான் கனபேர் கூப்பிடுறது. கிட்டத்தட்ட அம்பது வயசு வரும். நெடுங்கேணிப்பக்கத்து ஆள். ரெண்டு மூண்டு தரம் இடம்பெயந்து புதுக்குடியிருப்ப நிரந்தரமாக் கொண்டிட்டார். ஆள், தான் பெரிய வேட்டைக்காரன் எண்டு நிறையக் கதையள் சொல்லுவார். அவரைத் தெரிஞ்ச வேறயும் ரெண்டொருத்தர் அதை உறுதிப்படுத்தினதால நாங்களும் அவற்ற கதையள நம்புவம். ஆனா அவர் வேட்டையாடினதெல்லாம் நெடுங்கேணி, ஒதியமலைப் பக்கத்திலதான். கிட்டத்தட்ட அஞ்சு வருசமாச்சு அவர் வேட்டைய விட்டு. ஆள் தன்ர குறிவைக்கிற திறமையத்தான் பெருசாச் சொல்லுவார். எந்த அமாவாசை இருட்டிலயும் சரசரப்புச் சத்தத்துக்கே வெடிவச்சு விழுத்துவன் எண்டெல்லாம் சொல்லுவார். துப்பாக்கி குறிபாக்கிற பயிற்சியிலயெல்லாம் அண்ணர் தான் திறமையாச் செய்யிறவரெண்டு கூட்டாளிப்பெடியளும் சொல்லுவாங்கள்.

தொகுதி தொகுதியாத் தான் சூட்டுப் பயிற்சியள் நடந்தது. நூறு பேருக்குக் கிட்ட ஒரு தொகுதியில வருமெண்டு நினைக்கிறன். ஓரிடத்துக்போய் ரெண்டுநாள் நிண்டு எல்லாம் முடிச்சிட்டு வாறது. பிலாக்கண்ணையின்ர தொகுதியும் வெளிக்கிட்டிட்டுது. சனத்துக்கெல்லாம் குறிபிடிக்குதோ இல்லையோ நாலு வெடிவச்சாச் சரியெண்டதுதான் நோக்கம். இயக்கத்துக்கும் அதுதான் திட்டம். சனம் சுட்டுப்பழகுதாமெண்ட கதை வெளியில அடிபடவேணுமெண்டதுதான் திட்டம். அதால, சனத்துக்கு தாங்கள் சுடுற குண்டு எங்கபோகுதெண்டோ தாங்கள் என்ன புள்ளியள் எடுக்கிறமெண்டதோ கவலையில்லை. ஆனா வீ்ட்ட வந்து அவிக்கிறது கொஞ்சம் நஞ்சமில்லை. அதோட சுடுற ஆளுக்கு மட்டும்தான் அவரின்ர புள்ளியள் சொல்லப்பட்டதால வீட்ட வந்து நல்லா வண்டில் விடக்கூடியமாதிரியிருந்திச்சு. கூட வந்தவங்கள்கூட ஒண்டும் சொல்ல ஏலாதெல்லோ?

பிலாக்கண்ணையின்ர ரீம் சுடப்போகேக்க பயிற்சி தாற ஆக்கள் குறிதவறக்கூடாதெண்டதில கொஞ்சம் கவனமெடுக்கத் தொடங்கீட்டினம் போலகிடக்கு. முதல் அம்பது மீட்டரிலயோ என்னவோ வச்சு ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அதில செந்தில் எண்ட கூட்டாளியொருத்தன் ரெண்டும் நல்ல அடி அடிச்சிட்டான். வாத்திமார்கூடப் பாராட்டினவையளாம். பிறகு கொஞ்சப்பேரை மட்டும் கூப்பிட்டு முதலிருந்ததைப்போல ரெண்டு மடங்கு பெரிசான Target வச்சு இன்னும் ரெண்டு குண்டு குடுத்திருக்கினம். அவயள் முதல் சுட்ட ரெண்டும் வானத்துக்கோ பூமிக்கோ போயிட்டுதாம். இப்ப இலக்கைப் பெரிசாக்கி இன்னும் ரெண்டு குடுக்கினமாம். அப்பதான் பெடியள் பாத்திருக்கிறாங்கள், எங்கட பிலாக்கண்ணையும் அதுக்குள்ள சிரிச்சுக்கொண்டு நிக்கிறாராம்.

தாங்களும் பக்கத்தில நிக்கப்போறம் எண்டு கேட்டு பிலாக்கண்ணை சுடேக்க பக்கத்தில நிண்டிருக்கிறாங்கள். முதல்குண்டு சுட்டாச்சு. ரெண்டாவது குண்டு சுடேக்க இலக்குக்கு முன்னால புழுதி கிழம்பீச்சாம். பெடியளும் சேந்துபோய்த்தான் இலக்கைப் பாத்திருக்கிறாங்கள். ஒண்டும் பிடிக்கேல.

"என்ன பிலாக்கண்ணை. மரியாதை போச்சு. உவன் செந்தில் அந்த சின்ன ராக்கெற்றுக்கே ரெண்டு நைன் அடிச்சிருக்கிறான். நீங்கள் உந்தப்பெரிய ராக்கெற்றுக்கே அடிக்கேலாம நிக்கிறியள்"
எண்டு கடுப்பேத்தியிருக்கிறாங்கள். அதுக்கு பிலாக்கண்ணை அடிச்ச லெக்சர்தான் பகிடி.

"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
."
எண்டு ஒரு குறள் சொல்லிப்போட்டு,

"முயலைக் கொண்ட அம்பிலும் பாக்க யானைக்கு எறிஞ்சு குறிதப்பின ஈட்டிக்குத்தான் மதிப்பு அதிகமெண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். அதுமாதிரிதான் உவன் செந்தில் சின்ன டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிச்ச குண்டிலும்பாக்க நான் பெரிய டாக்கெட்டுக்கு அடிச்சுப்பிடிக்காத குண்டுக்குத்தான் பெருமை அதிகம் தெரியுமோ?"
எண்டுபோட்டு
"மாஸ்டர் நீங்கள் என்ன சொல்லிறியள்?" எண்டு பயிற்சி குடுத்த ஆசிரியரையும் கேட்டிருக்கிறார். அவரும் சிரிச்சுக்கொண்டே
"ஓமண்ணை, அதெண்டாச் சரிதான். உடம்பில கொழுவிற குண்டைவிட முன்னுக்குப் புழுதி கிழப்பிறதைப் பாக்கத்தான் பீப்பயம் வரும்"
எண்டாராம்.

"பிலாக்கண்ணை, உதின்ர சரியான கருத்தென்னெண்டா...."
எண்டு ஏதோ சொல்ல வெளிக்கிட்ட செந்திலை நிப்பாட்டி,
"டேய், உனக்குத் திருக்குறளைப் பற்றி என்ன தெரியுமெண்டு கதைக்க வந்திட்டா?"
எண்டுபோட்டு கதையளக்க வெளிக்கிட்டார்.

அதுக்குப்பிறகு பிலாக்கண்ணையோட கதைச்சு வெல்ல ஏலாது.
* * * * * * * *
*** *** *** *** *** *** *** ***
பிலாக்கண்ணை சொன்ன குறள் சரியோ பிழையோ தெரியாது. ஆனா அந்த இடத்தில ஒரு குறள் சொல்லிப்போட்டுத்தான் மனுசன் விளக்கம் குடுத்திருக்கிறார். நான் இப்ப பதிவெழுதேக்க குறளைச் சரியானபடி போட்டிருக்கிறன் எண்டதையும் சொல்லிறன்.

பிலாக்கண்ணை உப்பிடி எடுத்தோடன குறள் சொல்லிற ஆளில்லை. ஆனா அந்த இடத்தில குறள் சொல்லி விளக்கம் குடுத்ததை வைச்சு நாங்களா உய்த்தறிஞ்ச விசயம் இதுதான்:
"பிலாக்கண்ணை முந்தி தன்ர வேட்டைக்காலத்தில கனபேருக்கு உதே குறளைச் சொல்லியிருக்ககூடும்"

Labels: , , , ,


Comments:
எழுதிக்கொள்வது: kulakaddan

புலபெயர்ந்த பலருக்கும் கிடைக்காத அனுபவம் வன்னியன்...

19.17 18.4.2006
 
வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி குழைக்காட்டான்.
 
நீங்க ரெண்டு பேரும் ராக்கெட் எறிஞ்சவங்க தானே!?

அப்படி இருக்க, வேலும், அம்பும் எப்படி ஒண்ணாகும்?

அவரும் சொல்லிப் போட்டாருண்ணு, நீங்களும் கேட்டுட்டு வந்திட்டியளே!

பெருத்த அவமானமா இருக்கு!!

:-)

ஆனாலும், குறளென்னவோ அருமையான குறளல்லே!
 
குறள் விளக்கம் சொல்லுங்க!!
 
sk,
என்ன சொல்ல வாறியளெண்டு சரியா விளங்கேல.

ஷ்ரேயா,
ஐயோ ஐயோ!
பிலாக்கண்ணை சொன்ன விளக்கத்தைப் பாருங்கோ. அது சரியான விளக்கம்தான்.
நான் சொன்னது அந்தக் குறளை சரியானபடி முழுமையாச் சொன்னாரே தெரியாது எண்டதைத்தான்.

வருகைக்கும் கருத்துக்கும் ரெண்டுபேருக்கும் நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]